Skip to main content

செல்லரிக்கும் கனவுகள்..!


















தொன்மத்தின் வாசனைகள்
துருத்தும் எலும்பாய்
எட்டிப்பார்த்த ஒரு இராத்திரியின்
வானத்திலிருந்து வழிந்த
நியான் ஓளியின் வெளிச்சத்தில்
மரணித்துக் கொண்டிருந்தேன் நான்..!

உயிரின் பிசிறுகள் விசிறியடிக்கப்பட்ட
அகண்ட வெளியில் கரித்துக் கொண்டிருந்த
கூக்குரல்களினூடே பயணித்துக்
கொண்டிருந்த ஏதேதோ
அதிர்வுகள் என் உயிர் நகர்த்தும்
ஆசையில் இச்சையோடு
என்னை புணர்ந்து கொண்டிருக்கையில்
மூளை மடிப்புகளிலிருந்து
சாயம் போய் வழிந்து கொண்டிருந்த
நினைவுகளின் எச்சத்தில்
மெலிதாய் எதிரொலிக்கிறது
ஒரு மெல்லிய தாலாட்டு..!

அடர்த்தியான இரவினை
கெட்டியாக்கிக் கொண்டிருந்த
கருமையினூடே மெல்ல நகர்ந்து
அரவமாய் உடல் நெளித்து
நகர்ந்து நகர்ந்து ஜென்மங்களில் ஏந்தி வந்த
உணர்வோடு நியூரான்களை
கடந்து செல்லும் கலர்க் கனவுகளை
அரிக்கும் கரையான்கள்!

மெலிதாய் இழையோடும்
புழுக்களோடு மட்கத் தொடங்கியிருந்த
உடலருகே திப்பி திப்பியாய்
இறைந்து கிடக்கும் சில காதல்களும்
காமங்களும், இச்சை தாண்டிய
கடவுள் தேடு கனவுகளும்
சூட்டில் பட்ட நீராய் ஆவியாகி
மறைதலோடு மறைந்தே போகிறது
எல்லாமும்...!


தேவா. S

Comments

Nice one !!! Pls write about THIRUPOONTHURUTHI after UDAIYAAR
தேவா அண்ணா...
கவிதை அருமை. வார்த்தைகள் மிகவும் அழகு.