இலக்குகள் மாற்றி
நாம் பயணிக்கப் போகும்
இந்தக் கணத்தில்தான்
என் நினைவுகளை நீயும்
உன் நினைவுகளை நானும்
ஏந்திச் செல்லப் போகிறோம்...!
இனி...
காற்றின் கடிவாளம் சொடுக்கி
என்னிடம் நீயும்...
உன்னிடம் நானும்
சடுதியில் வந்து போகலாம்;
கடந்த காலத்தை...
மெளனத்தோடு உரசி உரசி...
ஏதேனும் கவிதைகள் கூட
செய்து பார்க்கலாம்...!
பெரு விருப்பங்களை நெஞ்சுக்குள்
பூட்டிக் கொண்டு
பிரிந்து போன கணத்தை
சுகமாய் ஒரு முறை அழுது பார்க்கலாம்!
இன்னுமொருமுறை எங்கேனும்
இணையலாம் என்றெண்ணிக் கொண்டே
தினசரிகளில் ஒளிந்து கிடக்கும்
அந்த கணத்தை தேடித் தேடி
லயிப்பிலேயே ரசித்துக் கிடக்கலாம்..
ஆமாம்....
இலக்குகள் மாற்றி
நாம் பயணிக்கப் போகும்
இந்தக் கணத்தில்தான்
என் நினைவுகளை நீயும்
உன் நினைவுகளை நானும்
ஏந்திச் செல்லப் போகிறோம்...!
தேவா. S
Comments