Skip to main content

அது அப்படித்தான்...!


அது அப்படித்தான். அதிகம் அலட்டிக் கொள்ளாது. வியாக்கியானங்கள் பேசி தன்னை புகழ்ந்து கொள்ளாது. சோகமாய் தலை சாயும் போது அதுவே தோள் கொடுக்கும். கீழே விழும் போது மடி கொடுக்கும். ஆதரவாய் எப்போதும் கரம் பற்றிக் கொள்ளும், பற்றும். கவிதையாய் பேசிக் கொண்டு உரைநடையாய் வாழும் மனிதர்களுக்கு நடுவே பேச வார்த்தைகளின்றி அது மெளனமாய் நடந்து கொண்டிருக்கும்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படும். கோபத்தில் ஊரையே தீக்கிரையாக்கும். நேசித்து நேசித்து பிரளயம் உண்டாக்கும். பிடிக்கும் என்று சொல்லும். பிடிக்காது என்றும் முகம் திருப்பிக் கொள்ளும். பட்டாம் பூச்சியாய் எப்போதும் பட படக்கும், அந்த படப்டப்பினை கண்டும் மகிழும். அதற்கு தேவைகளென்று ஒன்றுமே கிடையாது. ஒரு கோப்பை தேநீரோடு ஆகாயத்தை வேடிக்கப் பார்த்தபடியே கண் சிமிட்டும், மழை பெய்யும் பொழுதினில் வேண்டுமென்றே குடை மறந்து நடை பயில வா என்று அழைக்கும்.

பேசிக் கொள்ள உலகமே அதனிடம் இருக்கும். பேசாமல் இருக்கவும் அதே உலகம் அதனிடம் இருக்கும். நெகிழ்ச்சியாய் உச்சிமுகந்து, ஆழமாய் நெற்றி வழி தன் அன்பினை செலுத்தும், வாங்கியும் கொள்ளும். கவிதை எழுதுகிறேன் என்று ஏதேதோ எழுதிக் கிறுக்கும். எழுதிக் கிறுக்கியதை பெருங்கவிதை என்று அதுவே வாசித்து விழிகள் விரித்து வாய் பிளக்கும். இருக்கும் போது உதாசீனப்படுத்தும். இல்லாத போது ஏங்கி அழும்.....

ஆமாம் காதல்தான் எத்தனை வலியது. எத்தனை இனியது.

இதோ..
இங்கே உனக்காக ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதில் நாம் சந்தித்த நாளில் தொடங்கி
ஒவ்வொரு கணத்திலும் நிகழ்ந்தவற்றை
ஒரு பொக்கிஷத்தை அடைத்து வைப்பது போன்று
என் வார்த்தைகளுக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறேன்...
மழைநாளில் நீ எனக்கு கம்பளி போர்த்தியதும்
கடுங்குளிரில் நீ நடுங்கிக் கொண்டிருந்த போது
உனக்கு நான் கால் பிடித்து விட்டதும் 
இந்த கவிதையில் கவிதையைப் போல தோற்றமளிக்க முயன்றாலும்
நிஜத்தில் அந்த நாட்கள்தான் எத்தனை சுகமானவை...
ஒரு நாள்...
என்னால் நடக்க முடியாமல் மூச்சிறைத்து நின்றபோது
நான் அறியாதபடி கண் கலங்கி எனக்காக
மெதுவாக நடந்து சென்றதை நான் கவனித்து...
கலங்கிப் போனது உனக்குத் தெரியுமா?
காலத்தின் மாற்றத்தில்
நாம் வலுவிழந்து கொண்டே இருந்தோம்...
ஆனாலும்...
உனக்கு மட்டுமே வயதாகிறது என்பாய்
எனக்கு வயதே ஆகதென்று கூறி உன் காதலால்
என்னை எப்போதும் இளைஞனாகவே வரைந்து கொள்வாய்...
 உன் நெஞ்சினில் காது வைத்துக் கேட்கச் சொல்லி
அங்கே துடிப்பது இதயமல்ல உன் மீதான காதலென்பாய்...
மிச்சமில்லாமல் வாழ்ந்து விட்டோம் என்று அடிக்கடி நீ சொல்வாய்
இதோ மிச்சமிருக்கும் உன் நினைவுகளோடு
வழக்கம் போல கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
இதை நீ கவிதை என்று சொன்னாலும் சரி
அல்லது
காதல் என்று சொன்னாலும் சரி...



தேவா சுப்பையா..




Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த