Skip to main content

அது அப்படித்தான்...!


அது அப்படித்தான். அதிகம் அலட்டிக் கொள்ளாது. வியாக்கியானங்கள் பேசி தன்னை புகழ்ந்து கொள்ளாது. சோகமாய் தலை சாயும் போது அதுவே தோள் கொடுக்கும். கீழே விழும் போது மடி கொடுக்கும். ஆதரவாய் எப்போதும் கரம் பற்றிக் கொள்ளும், பற்றும். கவிதையாய் பேசிக் கொண்டு உரைநடையாய் வாழும் மனிதர்களுக்கு நடுவே பேச வார்த்தைகளின்றி அது மெளனமாய் நடந்து கொண்டிருக்கும்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படும். கோபத்தில் ஊரையே தீக்கிரையாக்கும். நேசித்து நேசித்து பிரளயம் உண்டாக்கும். பிடிக்கும் என்று சொல்லும். பிடிக்காது என்றும் முகம் திருப்பிக் கொள்ளும். பட்டாம் பூச்சியாய் எப்போதும் பட படக்கும், அந்த படப்டப்பினை கண்டும் மகிழும். அதற்கு தேவைகளென்று ஒன்றுமே கிடையாது. ஒரு கோப்பை தேநீரோடு ஆகாயத்தை வேடிக்கப் பார்த்தபடியே கண் சிமிட்டும், மழை பெய்யும் பொழுதினில் வேண்டுமென்றே குடை மறந்து நடை பயில வா என்று அழைக்கும்.

பேசிக் கொள்ள உலகமே அதனிடம் இருக்கும். பேசாமல் இருக்கவும் அதே உலகம் அதனிடம் இருக்கும். நெகிழ்ச்சியாய் உச்சிமுகந்து, ஆழமாய் நெற்றி வழி தன் அன்பினை செலுத்தும், வாங்கியும் கொள்ளும். கவிதை எழுதுகிறேன் என்று ஏதேதோ எழுதிக் கிறுக்கும். எழுதிக் கிறுக்கியதை பெருங்கவிதை என்று அதுவே வாசித்து விழிகள் விரித்து வாய் பிளக்கும். இருக்கும் போது உதாசீனப்படுத்தும். இல்லாத போது ஏங்கி அழும்.....

ஆமாம் காதல்தான் எத்தனை வலியது. எத்தனை இனியது.

இதோ..
இங்கே உனக்காக ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதில் நாம் சந்தித்த நாளில் தொடங்கி
ஒவ்வொரு கணத்திலும் நிகழ்ந்தவற்றை
ஒரு பொக்கிஷத்தை அடைத்து வைப்பது போன்று
என் வார்த்தைகளுக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறேன்...
மழைநாளில் நீ எனக்கு கம்பளி போர்த்தியதும்
கடுங்குளிரில் நீ நடுங்கிக் கொண்டிருந்த போது
உனக்கு நான் கால் பிடித்து விட்டதும் 
இந்த கவிதையில் கவிதையைப் போல தோற்றமளிக்க முயன்றாலும்
நிஜத்தில் அந்த நாட்கள்தான் எத்தனை சுகமானவை...
ஒரு நாள்...
என்னால் நடக்க முடியாமல் மூச்சிறைத்து நின்றபோது
நான் அறியாதபடி கண் கலங்கி எனக்காக
மெதுவாக நடந்து சென்றதை நான் கவனித்து...
கலங்கிப் போனது உனக்குத் தெரியுமா?
காலத்தின் மாற்றத்தில்
நாம் வலுவிழந்து கொண்டே இருந்தோம்...
ஆனாலும்...
உனக்கு மட்டுமே வயதாகிறது என்பாய்
எனக்கு வயதே ஆகதென்று கூறி உன் காதலால்
என்னை எப்போதும் இளைஞனாகவே வரைந்து கொள்வாய்...
 உன் நெஞ்சினில் காது வைத்துக் கேட்கச் சொல்லி
அங்கே துடிப்பது இதயமல்ல உன் மீதான காதலென்பாய்...
மிச்சமில்லாமல் வாழ்ந்து விட்டோம் என்று அடிக்கடி நீ சொல்வாய்
இதோ மிச்சமிருக்கும் உன் நினைவுகளோடு
வழக்கம் போல கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
இதை நீ கவிதை என்று சொன்னாலும் சரி
அல்லது
காதல் என்று சொன்னாலும் சரி...



தேவா சுப்பையா..




Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...