Skip to main content

சுவடுகள்...!


திசைக்கொன்றாய்
என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன்
எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின்
குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்க
அதனை கொன்று முடிப்பதற்கு முன்பாக
நெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன்,
இனி எப்போதும் நான் முன்பு போல்
இருக்கப் போவதில்லை..என்று
என் கடைசி சொட்டு இரத்தம் மண்ணில் விழும் போது
எனக்கு தோன்றியதுதான் எனது கடைசி ஞாபகம்,

முன்பொரு நாள் நான் நானாயிருந்த போது
யார் யாரோ வந்தார்கள்,
ஏதேதோ கேட்டார்கள்,
பேசிச் சிரித்தார்கள்,
பூக்களை சிலர் பரிசளித்தார்கள்,
புன்னகையை சிலர் என்னிடமிருந்து பறித்துச் சென்றார்கள்,
கோபித்துக் கொண்டார்கள், ஏமாற்றினார்கள்,
ஏமாந்தேன் என்றார்கள்....
சில பிணந்தின்னி கழுகுகள் என் மீது வந்தமர்ந்தன
என் கண்ணில் ஒளி இருப்பதாய் சொல்லி
ஒரு கழுகு என் கண்ணைக் கொத்திய போது
என் உதடுகளிலிருக்கும் புன்னகை பிடித்திருப்பதாகக்கூறி
இன்னொரு கழுகு என் உதடுகளைக் கொத்தியது...
அப்போதும் துடித்துக் கொண்டிருந்த
என் இதயத்தில் நிரம்பிக் கிடந்த காதல்
யாருக்கானதாய் இருக்கும் என்று
இருவர் வாதிட்டுக் கொண்டே சராலென்று
என் இதயத்தைப் பிடுங்கி நெருப்பிலிட்டார்கள்...

பூக்களால் தன்னை நிரப்பிக் கொள்ளும்
அதே பூமியின் இன்னொரு பக்கத்தில்
வெடித்துப் பிளந்து கிடக்கும் நிலத்திற்குள்
வேர் நாக்குகளை செலுத்தி தாகம் தீர்த்துக் கொள்ள
முயன்று முயன்று தோற்றுப் போய் கோபமாய்
நிற்கின்றன முள் மரங்களுக்கு எப்படித் தெரியும்
துரோகத்தையும், நியாயத்தையும்
ஒரே பாத்திரத்திலிருந்துதான் இந்த வாழ்க்கை
எடுத்து பரிமாறிக் கொண்டிருக்கிறது என்று....

யாருக்கோ என்னைப் பிடித்தது,
யாரையோ எனக்குப் பிடித்தது,
இரண்டுமே இப்போது ஒன்றுமில்லை
அறுபடாத இந்த மனதின்  கன்னத்தில்
தீக்குளம்பாய் வழிந்து கொண்டிருக்கும்
தகிக்கும் கண்ணீரை துடைக்க முடியாமல்...
அமீபாவாய் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...நான்...
எங்கு போவது...?
யாருக்காய் போவது..?என்றெழும் கேள்வியை மட்டும்
அறுத்தெறிந்து விட்டால் போதும்....



தேவா சுப்பையா...









Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...