Skip to main content

ப்ரியப் பெரும் பொழுது....!


எதைப் பார்க்கிறோமோ அதை எப்படி பார்த்தோமோ அப்படியே விளங்கிக் கொண்டு, அது எதுவாக இருக்கிறதோ அதாக புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு கலை. அபிப்பிராயங்களோடுதான் நாம் ஒவ்வொரு விசயத்தையும் அணுகுகிறோம், ஒன்றை பற்றி விமர்சிக்க அல்லது அதை பற்றி கருத்து சொல்ல நமது விருப்பு வெறுப்புகளையும், ஏமாற்றங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் நம்மை அறியாமல் திணித்தே அது பற்றி ஒரு அபிப்பிராயம் கொள்கிறோம்.

நிஜத்தில் எது எதுவாக இருந்ததோ அல்லது இருக்கிறதோ அது பற்றிய யாதொரு அக்கறைகளுமின்றி தத்தமது மனதில் வரைந்து கொள்ளும் பிம்பங்களாகவே மிகைப்பட்டவர்களின் வாழ்க்கை இங்கே இருக்கிறது. நாம் வெளியே காண்பதும், அது பற்றிய அபிப்பிராயங்களைச் சொல்வதும், நமது சொந்த யோக்கியதையே அன்றி வேறு ஒன்றுமே அல்ல...

எதை அறிந்தோமோ
அது அறிந்ததன்று....
சத்தியத்திடம் போதனைகளென்றே
ஒன்று இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
வெகுளியாய் பூத்துச் சிரிக்கும்
பூக்களிடம் சொல்வதற்கு மலர்ச்சியைத் தவிர
வேறொன்றுமில்லைதானே....?!
மலர்தலும்...காய்ந்து சருகாகி வீழ்தலும்
முழுமையில்தானே நிகழ்கிறது...?
யார் எழுதி வைத்தார்கள்...
இந்த வாழ்க்கைச் சமன்பாட்டை...
இது இது இப்படித்தான் என்று 
ஏதேனும் விதி ஒன்று இருக்கிறதா என்ன
இந்த இயற்கை பெரும் இயக்கத்தில்...?
வாழ்க்கை மீதிருக்கும் ப்ரியத்தைதானே...
பொழுதெல்லாம் கூவிக் கொண்டிருக்கின்றன
வனத்துக் குயில்கள்...?
சலசலப்போடு ஓடாவிட்டால்...
ஓடையென்று கூறுவீர்களா அந்த
நீர் தேக்கத்தை...?
கடும் வெயிலுக்குப் பிறகான
அந்தியில் நதிக்கரையோரம் வீசும்
தென்றலை மலர்ச்சியோடு முகம் குளிர வாங்கிப் பாருங்களேன்...
அப்போது.... தெரியும்...
வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதா... இல்லையா என்று...?!
பெருமழை பெய்வது போல இடித்துப் பெய்தே விடாதா...
அபிப்ராயமற்ற வாழ்க்கை நமக்குள்ளும்....?




தேவா சுப்பையா...





Comments

அருமையாச் சொல்லியிருக்கீங்க அண்ணா...
அழகு...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல