Skip to main content

ஏதேனும் ஒரு ஜென்மத்தில்.....!




















கடக்க முடியாத தூரங்களை
உடைத்துப் போடும் முயற்சிகளில்
தெறித்து விழும் கண்ணீர் துளிகள்
உன்னை தேடியே வருகின்றன.

கனவுகளை கொடுத்தவள்
என்னை நினைவற்றவனாய் போவதற்கு
சபித்து விட்டு பொய்யாய்
தொலைகிறேன் என்றாள்...
மெய்யாய் என்னைச் சுற்றிக் கொண்டு!

மெளனத்தால் மெளனத்தை மோதவிட்டு
நிசப்தங்களில் கலவரத்தை பரவ விட்டு
நெஞ்சுக்குள் அமிலமாய் சுரக்கிறது
கடந்த கால நினைவுகளில் கரைந்து கிடக்கும்
ஒரு தோற்றுப் போன காதல்!

நமது நேசிப்புகளை அழித்துப் போட்ட
சூழலை எரித்துப் போட
பதத்துப் போன என் உணர்வுகளை
உரசி உரசி உயிரைக் கரைக்கும்
முயற்சிகளில் கழிந்து கொண்டிருக்கிறது
சம காலப் பொழுதுகள்!

அகண்ட வெளியின் நாக்குகளில்
பரவிக் கிடக்கும் மதுரசமென
வழிந்து பெருகும் காதலை
ஏடன் தோட்டத்து ஆப்பிளென
நான் சுவைக்க நினைக்கையில்
ஒரு சாத்தானாய் காலம்
உடைகளை பிடுங்கிய நம் பிரிவின்
வெற்றியில் நகைத்து நகர்கிறது!

ஒரு தண்ணீரில்லா கிணறின்
விளிம்பு வரை பயணித்த
ஒரு சொறித்தவளையின் தோல்வி போல
உன்னை மறக்க முயலும் விளிம்புகளில்
சறுக்கி சறுக்கி விழுகிறேன்
உன் நினைவுக் கேணிக்குள்!

வாராய் என்றறிந்தும்; உனை காணேன்
என்றுணர்ந்தும்; ஐந்தெழுத்து மந்திரத்தை
ஓதி ஓதி பேரிறையக் காணும் முயற்சி போல
நானும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்
உனக்கான கவிதைகளை....
ஏதேனும் ஒரு ஜென்மத்தில்
உன்னோடு ஒன்று சேரும் ஆசையோடு!


தேவா. S

Comments

அழகாக, ஆழமாக பேசியது வலியை - கவிதை.
Chitra said…
ஒரு தண்ணீரில்லா கிணறின்
விளிம்பு வரை பயணித்த
ஒரு சொறித்தவளையின் தோல்வி போல
உன்னை மறக்க முயலும் விளிம்புகளில்
சறுக்கி சறுக்கி விழுகிறேன்
உன் நினைவுக் கேணிக்குள்!


.... உவமைகளும் - உணர்வுகளும் கை கோர்த்து சரளமாக வந்து இருக்கும் கவிதை.
sakthi said…
வெகு நாட்களுக்கு பின் ஒரு முழுமையான கவிதை படித்த திருப்தி

பதத்து போன உணர்வுகள்

புதிய சொல்லாடல்

நிசப்தங்களில் கலவரத்தை பரவ விடல்

வெகு அருமையான உவமை

நன்று தேவா

நல்ல முன்னேற்றம்

தொடருங்கள்