Skip to main content

உடையாரின் அதிர்வலைகள்...!


















எழுதிக் கொண்டே இருக்கையில் வந்து விழும் வார்த்தைகளோடு தொடர்பற்று எங்கிருந்தோ வரும் வீச்ச்சினை வாங்கி வாங்கி இறைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று அவை அழிந்து போயிருக்கிறதா உங்களுக்கு...?

முழுப்பக்கம் எழுதி முடித்து விட்டு விசைப்பலகையின் ஏதோ ஒரு சுட்டியை தவறாக தட்ட இணையத்தில் இருந்த எல்லாம் போயே போய் விட்டது. போனால் போனதுதான் அதை திரும்ப எடுக்க முடியாது.....என்ற நிலையில் சிறு கோபமும் இயலாமையும் வரத்தானே செய்கின்றன.

திட்டங்கள் மனித மனங்களுக்குச் சொந்தமனவை தன்னிச்சையாக கிளர்ந்தெழும் ஒரு இசையும், கவிதையும், கதையும், ஒரு கருவிக்கான செயல் வடிவங்களும் பிரபஞ்சத்திற்கு சொந்தமானவை. போனால் போனதுதான். அதே போல திரும்ப கிடைக்காமல் போகலாம் இல்லை அதை விட தெளிவான ஒன்றும் கிடைக்கலாம்......

எழுத்து என்பது ஒரு வரப்பிரசாதம் என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அடிக்கடி கூறுவது உண்டு. பாலாவின் நாவல்களுக்குள் முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்த காலங்களில் இருந்து இன்று வரை பாலா மீது இருக்கும் ஒரு காதல் என்னுள் இருந்து மறையவே இல்லை. தோழமைகளும், உறவுகளும் பல நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் என்று அறிமுகம் செய்தும் எனக்கு பாலாவின் மீதிருக்கும் பிரேமை குறையமலிருப்ப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்...

1) ஏனைய எழுத்துக்களில் இருக்கும் கருத்துக்கள் பிடிபட்டலும் ஒரு வேளை அதை ஏற்றுக் கொள்ள முடியாத அறிவு எனக்கு இருக்கலாம்.

2) பாலாவினை ருசித்து ரசித்து அந்த இன்பத்தில் இருந்து மனம் வெளிவர முடியாமல் அதையே சுற்றிக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

சென்னையில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது பாலவின் நாவல்கள் எல்லாம் பல்சுவை நாவல்களில் வரும். சென்னை தி. நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் நார்த் உஸ்மான் சாலை செல்லும் முனையில் ஒரு பங்க் கடையில் டீ, சமோசா மற்றும் எல்லா மாத,வார, நாளிதழ்களும் வைத்திருப்பார்கள்.

ரெங்கநாதன் தெருவில் தங்கியிருந்ததால் அடிக்கடி அங்கே செல்லும் வழக்கம் கொண்டிருப்பேன். கையில் டீயை ஏந்திக் கொண்டு கண்களால் கடைக்குள் தேடிக் கொண்டே இருப்பேன், நான் வாசிக்காத அல்லது புதிய பாலகுமாரன் நாவல்கள் வந்திருக்கின்றவா...என்று, ஒரு கட்டத்தில் கடைக்காரரே தம்பி வேறு ஒன்றும் புதியாய் வரவில்லை வந்தால் எடுத்து வைக்கிறேன் என்று சொல்லி விரட்டுமளவிற்கு கூட ஆகியிருக்கிறது.

பல்சுவை நாவல் பத்து ரூபாய்தான் என்பதால் அதைத்தான் வாங்குவேன், அதற்குள் பதுங்கிக் கிடகும் அமுதை உண்ட கிறக்கத்தில் அதை பதிப்பித்து வெளியிடும் திரு. பொன் சந்திரசேகர் ஐயா மீது கூட எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. பொதுவாக பாலாவின் எழுத்து மீது இருக்கும் மரியாதையால் அவரின் புத்தகத்தை வாங்கிய உடன் அதை முகர்ந்து பார்த்து அழுத்தமாய் அதன் இருப்பை உணர்ந்து வருடி அதன் தடிமன் பார்த்து முன் அட்டைப் படம், பலாவின் போட்டோ இப்படியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருப்பேன் அதற்குப் பின் பதிப்புரை, ஆசிரியர் உரை, கேள்வி பதில் இப்படி...

திருப்பத்தூர் கல்லூரியில் நான் பயின்று கொண்டிருந்த காலத்தில் எங்கள் தமிழ்ப் பேராசிரியர் திரு. அய்க்கண் அவர்கள் கூறுவார்கள்...." டேய் தம்பி ஒரு புத்தகத்தை வாங்குனா முதல்ல அதோட அட்டைப் படத்தை பாரு, அதன் தலைப்பை பாரு...இப்போ அந்த கதை எப்படி இருக்கும்னு மனசால அனுமானிச்சு பாரு....ஓரளவிற்கு ஏதாச்சும் பிடிபட்ட உடனே....உள்ள போய் படி...! இரண்டு பக்கம் படிச்ச உடனே மீண்டும் கதைய நீ உன் அனுமானத்தோடு ஒத்து வருதான்னு பாரு.....வந்தா சரி வரலேன்னா ...அது வரைக்கும் படிச்ச இரண்டு பக்கத்துல இருந்து கதைய கெஸ் பண்ணி மேல படி..." என்பார்.

இப்படி கதையையும், நாடகத்தையும், சினிமாவையும் மனிதர்களையும் அனுமானித்து அனுமானித்து அனுமானங்கள் பல ஆயிரம் முறைகள் தோற்று தோற்று....ஆச்சர்யமாய் ஒரு நாள் சைக்கிள் ஓட்டக் கற்று கொண்டு எந்த கணத்தில் ஓட்டினோம் என்று சொல்ல முடியாத மாதிரி கணித்தல் ஒரு நாள் வசப்பட்டு போயிற்று. அதுவே பிரச்சினையாகவும் போய் விடுவது தனிக்கதை.

மனிதர்களின் வார்த்தைகள், வார்த்தைகளுக்கு கொடுக்கும் அழுத்தங்கள், ஏற்ற இறக்கங்கள், பேசும் போது ஏற்படும் முக மாற்றங்கள், முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கண்களில் ஏற்படும் அசைவுகள், கண்களின் நிறம், விசயத்தை உள்வாங்கும் தன்மை, பேச வரும் கருத்து, அங்க அசைவுகள், பேசும் காரணம் இவை எல்லாம் மிக வேகமாய் புத்தி கணக்குப் போட்டு உடனே, உடனே ஒரு சில அதிர்வுகளை நமக்குள் பரவ விடுகிறது.

ஆனால்.....இப்படியெல்லாம் அனுமானிக்க நாம் பரபரப்பாய் இருந்துவிடக் கூடாது. மனம் அமைதியாய் எதிராளியை உள்குவிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சாந்தமான ஊடுருவல் வேண்டும். இவையெல்லாம் சர்வ நிச்சயமாய் சாத்தியப்பட....நாம் அவராய் மாற வேண்டும்....!

பாத்தீங்களா டாப்பிக் மாறி போய்கிட்டு இருக்கேன்.....மீண்டும் இலக்கிற்கு வருவோம்....

இப்படி....ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும் போதும் அதை உணர்ந்து மடியில் ஒரு குழந்தையைப் போல வைத்துப் படிக்கும் ஒரு போக்கு வந்து விட்டது. அதுவும் யாரேனும் பக்கங்களை மடித்தாலோ அல்லது அதில் பென்சில் வைத்து கிறுக்கினாலோ ஒரு கோவிலின் கருவறைக்குள் செய்யும் அசிங்கமாகவும், ஒரு குழந்தையின் கையை முறிப்பது போலவும் உணர்ந்திருக்கிறேன்.

எல்லா நாவல்களும் இப்படி என்றால் பாலாவின் நாவல்கள் வாசிக்கப்படாமலேயெ சில மணிகள் என் கைகளுக்குள் இருக்கும். முழு மூச்சாய்.....140கிலோ மீட்டர் வேகத்தில் வாசிக்கும் ஒரு வாசிப்பாளன் நான் கிடையாது. வாசித்து.....வாசித்து உள் வாங்கி, அதை மென்று, அசை போட்டு ஜீரணித்து , மீண்டும் அதை நினைத்து நினைத்துப் பார்த்து என்னுள் முற்றிலும் கரைந்து போகுமளவிற்கு அதை ஊடுருவச் செய்து மெல்ல, மெல்ல இரண்டு இரண்டு பக்கங்களாய் முன்னேறுவேன்.....

ஆமாம்..நல்ல புத்தகங்கள் சட்டென முடிந்து விடக் கூடாது என்று மெதுவாய் வைத்து வைத்துதான் வாசிப்பேன். வாசித்த இரண்டு பக்கங்கள் பற்றிய கற்பனையில் ஒரு வாரம் கூட தாக்கங்கள் கொடுத்த நாவல்களும் உண்டு. ஆனால் பாலவின் மிகுதியான நாவல்கள் அந்த வேலையைச் செய்து இருக்கின்றன....பாலாவை விட்டு வந்தால் வெகு சில நாவல்கள்தான் அப்படி....குறிப்பாக....சிறுவயதில் நான் படித்த தேவி பாலாவின் " மடிசார் மாமி " மற்றும் வைரமுத்துவின் " கள்ளிக்காட்டு இதிகாசம் & கருவாச்சி காவியம்" தி.ஜாவின் "மரப்பசு " இப்படிக் கூறலாம்....

சமகாலத்தில் நான் குலுங்கிப் போய் நிற்பது, இந்த கட்டுரையை எழுத தாக்கம் கொடுத்தது " உடையார் ". ஸ்ரீ இராஜ ராஜத் தேவர் என்னும் மிகப்பெரிய புருசன் பற்றிய நாவல் அதுவும் எனக்குப் பிடித்த எழுத்துச் சித்தர் செதுக்கியிருக்கிறார். எனக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கொஞ்சமேனும் கற்பனை செய்து பார்க்க இயலா அளவிற்கு பிரமாண்ட மூர்த்தியாய் என்னுள் விசுவரூபமெடுத்து நிற்பது யார்...?

உடையார் ஸ்ரீ இராஜ இராஜத் தேவரா? இல்லை அவரை இரத்தமும் சதையுமாய் மனதிற்குள் பிசைந்து அமர வைத்த பாலகுமாரனா?

எனக்குத் தெரியவில்லை. ஒரு பேரரசன், அவனது வீரம், அவனது காதல், அவனது கொடை, அவனது பக்தி, அவனது அரசியல் சாதுர்யம், அவனது குரு நம்பிக்கை, அவனுடைய சாந்தம்...என்று பரந்து விரிந்து வியாபித்து மனமெல்லாம் உடையாராய்.....எங்கும் தெரிய...மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது தஞ்சையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் புரிதலோடு சுற்றி வர...!

பிறந்து வளர்ந்தது தஞ்சாவூர்தான் என்றாலும், பல முறை தஞ்சை கோவிலுக்கும் திருவையாற்றுக்கும், கும்பகோணத்திற்கும், பட்டீஸ்வரம் எனப்படும் பழையாறைக்கும் சென்றிருக்கிறேன் என்றாலும்....அது வேறு.....!!!! இனி வேறு....

இனி...தஞ்சைப் பேரிய கோவிலுக்குள் செல்லும் போது உடையார் ராஜ ராஜத் தேவர் வருவார், அதை கட்டிய ராஜ ராஜ பெருந்தச்சன் வருவார், பிரம்மராயரான கிருஷ்ணன் ராமன் வருவார், பஞ்சவன் மாதேவி வருவார், கருவூர்த் தேவர் வருவார், பிரம்மராயரின் புதல்வன் அருண்மொழி வருவார், இளவரசன் இராஜேந்திரன் வருவார், பட்ட மகிஷிகளும், தேவரடியார்களும் அத்தனை சிற்பிகளும், படை வீரர்களும் அதிகாரிகளும், அதிகாரிச்சிகளும் வரத்தான் போகிறார்கள்...நானும் பித்தனாய் அந்த கற்றளி கோவிலுக்குள் கிறங்கிக் கிடக்கத்தான் போகிறேன்....!

கோவிலின் இடதிசையும், வல திசையும் பார்த்து பார்த்து வியக்கப் போகிறேன், கருமார்களும், சிற்பிகளும் நின்ற இடங்களையும், யானை குதிரை அடைக்கப்பட்டிருந்த இடங்களையும் பார்த்து பார்த்து தஞ்சைக்குள் வேறொரு மனோநிலையோடு அலையப்போகிறேன்.

இன்னமும் நினைவு வருகிறது....தஞ்சைக் கோவிலுக்குச் சென்று ஒரு அபிசேகம்செய்து விட்டு கண் மூடி மூலவரிடம் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டு விட்டு ஒரு இயந்திரமாய் அந்த கோவிலைச் சுற்றி விட்டு....ஏதோ ஒரு விலங்கு மனத்தோடு அதை ஒரு சிறு அம்புலியாய் பாவித்து வெளிவந்த என் செயல் அறியாமை என்று கொள்ள மனமின்று வரவில்லை அது ஒரு விலங்கு மனம். புரிதல் இல்லா கண் கட்டு வாழ்க்கை என்று உணர இயலுகிறது.

மனிதர்கள் பொதுவாக அப்படித்தான் மேலோட்டமாக வாழும் போது...வெவ்வேறு உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கின்றன...! உடையாருக்குள் ஊர்ந்து கொண்டிருக்கிறேன் இப்போது....மனோ நிலையால் தஞ்சையில் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த தொகுப்பில் நான் கூறப்போவது புத்தக விமர்சனம் அல்ல. இராஜ இராஜனின் கதையும் அல்ல ஆனால் இந்த மிகப்பெரிய சக்தி கொடுக்கும் தாக்கத்தை என்னளவில் வைத்துக் கொள்ள முடியாது. அதை பரிமாறியே ஆக வேண்டும். நான் வாசிக்க வாசிக்க என்னுள் ஏற்படும் மாற்றங்களையும், தெளிவுகளையும், உணர்தல்களையும் குறிப்பாக தாக்கங்களை பகிர்கிறேன். தொடர்ந்து பகிர்வேன்!!!!

சோழம்...!!!!! சோழம்..!!!! சோழம்....!!!


தேவா. S


Comments

Jeyanthi said…
//ஆச்சர்யமாய் ஒரு நாள் சைக்கிள் ஓட்டக் கற்று கொண்டு எந்த கணத்தில் ஓட்டினோம் என்று சொல்ல முடியாத மாதிரி கணித்தல் ஒரு நாள் வசப்பட்டு போயிற்று //

அருமையான வரிகள். நீங்க அனுபவித்து எழுதுரிங்கன்னு இந்த வரிகள் உறுதி படுத்துகின்றன !!
வாழ்த்துக்கள் :)
எழுதுங்க எழுதுங்க .வெயிட்டிங்:)
புத்தகத்தின் சாராம்சத்தை உங்கள் எழுத்தின் மூலமாக தெரிந்து கொள்ளப்போவதில் மகிழ்ச்சி..!!
அருமையான பதிவு.
உங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்; நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
Anonymous said…
நான் (?) படித்த முதல்நாவல் காதற்பெருமான் ,பிறகு சென்று கொண்டே இருந்தது .,திருவண்ணமலை சென்று வந்ததிற்கு முதற்காரணம் காதற்பெருமான் நாவல். பிறகு தேடி தேடி படித்தேன் பாலாவை ..,பிறகு திருபூந்துருத்தி படித்த பிறகு..,அவரின் வேறு எந்த நாவலையும் அவ்வளவு ஆழமாக படிக்கவில்லை ..,பதிவை படித்ததும் மறுபடியும் உடையார் படிக்க எத்தனிக்கிறேன் .,
அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
Anonymous said…
Neenga bala voda ezhuthula feel pannadha nan deva kitta feel Panraen, get going...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...