
எப்படி பார்த்தாலும் சுதந்திர தினத்தோட ஏற்பட்டிருந்த பிணைப்பு சம காலத்தில் கொஞ்சம் நீர்த்து போயிருக்கோன்னு எனக்கு ஒரு டவுட்....! சரி... சரி சமீப காலமா ஒரு 10 வருசமா சுதந்திர தினம் அன்னிக்கு எக்ஸாட்டா ஊர்ல இருந்தது இல்ல அப்டீன்றதால இதை எப்டீ நீ சொல்லலாம்னு கேக்குறீங்களா...? நாம டெய்லி ஊரோட டச் பேஸ்ல இருக்கோம்ல பாஸ் அந்த ஒரு புரிதல்ல சொல்றேன்....! சரி அதை விடுங்க...
சின்ன வயசுல ஸ்கூல்ல கொடியேத்தி மிட்டாய் கொடுப்பாங்க...அன்னிக்கு ஸ்கூல் லீவு இந்த ரேஞ்ச்ல அறிமுகப்படுத்திகிட்ட நம்ம தேசத்தின் சுதந்திர தினம், வசீகரிக்கும் நம்ம நாட்டு தேசியக் கொடிய பாக்குறப்ப இன்னும் கொஞ்சம் த்ரில்ல அதிகமாக்கி கொடுக்கும். எனக்கு எப்போ ரொம்ப சந்தோசமா இருக்கும்னு கேட்டீங்கன்னா...
கொடியை முடிச்சு போட்டுக் கட்டி அது உள்ள பூ (எங்க ஸ்கூல்ல காகிதப் பூ போடுவாங்கனு வச்சுக்கோங்களேன்...) எல்லாம் போட்டு ஹெட் மாஸ்டர் கயித்த மெல்ல மெல்ல இழுக்கும் போது அந்த கொடி மேல ரீச் ஆகி பூ எல்லாம் கீழ கொட்டும் பாருங்க....ச்சும்மா எல்லோரும் சேந்து கை தட்டி.. ஆரவாரமா இருக்கும்...
தேசிய கீதத்தை தனியா எல்லாம் உக்காந்து மனப்பாடம் பண்ணியது இல்லங்க நானு....அது ஸ்கூல் முடியறப்ப எல்லோரும் கோரஸா பாடுறத கேட்டு, கேட்டு வார்த்தைகள் புத்திக்குள்ள ஆட்டோமேட்டிக்கா ஏறி உக்காந்துடுச்சு...! இப்பவும் சுதந்திர தினம்னா தட்டு நிறையா கலர்க் கலரா பரவிக் கிடக்கிற ஆரஞ்சு மிட்டாய்தான் நினைவுக்கு வருது....ஆரஞ்சு பழ கலர் மாதிரி இல்ல ஆரஞ்சு சுளை மாதிரி...
5வது படிக்கிற வரைக்கும் எனக்கு ஸ்கூல்ல கொடி ஏத்தி முடிஞ்ச உடனே தப தபன்னு எங்க அப்பா ஆபிசுக்கு ஓடி வருவேன் (ஊராட்சி ஒன்றிய அலுவலகம்........நான் எங்கப்பா ஆபிசுன்னுதான் சொல்லுவேன்....என்ன பண்ணுவீங்க...?) அங்க கொடி ஏத்துற அந்த இடம் செம சூப்பரா இருக்கும். ஆக்சுவலா இந்தியாவோட முழு ஷேப்பையும் சிமிண்ட்ல கட்டி சுத்தி ரவுண்டா...சின்ன சுவர் திண்டு மாதிரி வச்சு இருப்பாங்க... அந்த இந்தியா டைப்ல இருக்குற சிமிண்ட் செட்டப்ல (ரொம்ப பெரிசாவே இருக்கும்ங்க...) நடு மத்தியில அதாவது நம்ம புது டில்லி இருக்குற இடத்துல இருந்து பெரிய இரும்பு கொடி மரம் இருக்கும்....
ஆபிஸ் ஸடாஃப் எல்லாம் வரிசயா நிக்கறதோட கூடவே என்னய மாதிரி விடுத்தான்களும் ஊர்ல இருக்க சிறுசு பெருசுகளும் நிக்கும்...ஆபிஸ் பிடிஓ...பெரும்பாலும் கொடி ஏத்துவாங்க சில நேரங்கள்ல ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் (சேர்மன்) கொடி ஏத்துவாங்க....
சோ...மறுபடியும் " தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து " ன்னு கோரஸ் பாட்டு பிறகு..." ஜன கண மன....." மறுபடி ஆரஞ்சு மிட்டாய்....நம்ம பாக்கெட் இன்னும் கொஞ்சம் பெரிசாயிடும்....
ரெண்டு கடவாயிலயும் மிட்டாய ஒதுக்கி வச்சிகிட்டு....சட்டைய இழுத்து இழுத்து கால்சட்டை பைய மறச்சுகிட்டு..மெதுவா வீட்டுக்கு வரும் போது கேப்பேன்........" ஏன்டா பாபு.....எதுக்குடா டெய்லி கொடி ஏத்தி மிட்டாய் கொடுக்க மாட்டேங்குறாங்கன்னு...." பாபு எங்க பக்கத்து வீட்டு என்னுடைய பால்யத்தின் ரொம்ப திக்கான நண்பன். இந்த கேள்வி கேக்குறப்ப எனக்கு ஒரு 10 வயசும் பாபுவுக்கு 11 வயசுன்னும் வச்சுக்கோங்களேன்....
" ஏம்பி ....டெய்லி கொடி ஏத்துவோ, அதுல பெரச்சினை இல்ல....முட்டாய்க்கு யாரும்பி காசு கொடுப்போ.... காசு செலவாவும்ன...அதான் வருசத்துக்கு ஒரு தடவ ஏத்துறவோ..." கூலா சொல்லிட்டு அவன் பாக்கெட்ல இருந்து இரண்டு கைப்புடி முட்டாய எடுத்து வாயில போட்டுகிட்டு.......அடுத்து எங்க என்ன வெளையாட போகலாம்னு மோகன், சாகுல், பார்த்திபன், சுடர்மணி, சுரேஷ் இப்டி எல்லா பசங்களையும் ஒண்ணு சேத்து...
வெள்ள கலர் சட்டை தெருப்புழுதி கலர் ஆவுற வரைக்கும் ஆடிப்புட்டு மத்தியானம் பசிக்கிற நேரத்துல வீட்ல போயி சாப்டு புட்டு மறுபடி வெளிய கெளம்பிடுவோம்.........அட லீவு இல்ல...எப்புடி வீட்ல இருக்கறது....
காலம் காலமா இப்படி போயிட்டு இருந்த சுதந்திர தினம். ஆறாவது படிக்கும் போது கொஞ்சம் மாறிப் போச்சு,......பாரதியின் பாடல்களில் விஞ்சி நிற்பது நாட்டுப் பற்றா? அல்லது மொழிப்பற்றா?ன்னு ஒரு பேச்சுப் போட்டி...சுப்பிரமணி சார், கருப்பையன் சார், குஞ்சு சார், துரைராஜ் சார் அப்புறம் கொடியேத்த கூப்டு இருந்த ஊரு பெரியவங்க எல்லோரு முன்னாடியும் பேசணும்...ஊருச் சனமே காந்தாரியம்மன் கோவில் திடல்ல உக்காந்து பார்க்கும்....இப்டி எல்லாம் ஒரு மிகப்பெரிய பில்டப் ஓட.... நான் இந்த தலைப்புல எழுதிக் கொடுங்கன்னு சொல்லி பானுமதி டீச்சர் கிட்ட கேட்டு வாங்கி டிம்மி சீட்ல ரெண்டு சீட் புல்லா எழுதிக் கொடுத்ததை மொத்தம்...8 பக்கம்....பொட்ட தட்டு தட்டி வரி விடாம மனப்பாடம் பண்ணி....பேசி பேசி ....
அப்போ, அப்போ கைய மேலதூக்கி பேசணும்டா...எல்லோரையும் பாத்து பேசணும் பயப்படக்கூடாது...இப்டி எல்லாம் அப்பா சொல்லிக் கொடுத்ததை உள் வாங்கிக் கிட்டு...என்னை எதுத்து போட்டியா பேசுற மிச்ச எல்லோரும் சீனியர் என்பதையும் பட படபோட உணர்ந்து கிட்டு..(என்ன சீனியர்...........அவுங்க எல்லாம் எட்டாப்பு நான் ஆறாப்பு அம்புட்டுதேன்..)பேச்சுப் போட்டிக்கு ரெடியாயிட்டேன்.
எனக்கு அதுதான் பர்ஸ்ட் பேச்சுப் போட்டி அப்டீன்றதாலா இன்னமும் பசுமையா நினைவுல இருக்கு......! சுதந்திர தினம் அன்னிக்கு வழக்கம் போல கொடியேத்தியாச்சு.....மிட்டாய் கொடுத்தாச்சு...நானும் வாங்கியாச்சு ஆனா டென்சன்ல சாப்பிட முடியலை....
திடல்ல செம கூட்டம்.. ஸ்டூடண்ட்ஸ், ஊர் சனங்க...எல்லோரும் உக்காந்து கிட்டு இருக்காங்க..! எனக்கு என்னவோ மகனே நீ பேசுடி ? என்னத்த பேசி கிழிக்கப்போறன்னு எல்லோரும் என்னையே பாக்குற மாதிரி ஒரு ஃபீலிங்கு....! தலைய குனிஞ்சுகிட்டு.. கையில டீச்சர் கொடுக்கையில நல்லா இருந்த பேப்பரு என் கையில நொஞ்சு தொஞ்சு போயி...தொடக்க கல்வி அலுவலர், ஊர் தலைவர், தலைமை ஆசிரியர், கொடியேத்த வந்த கெஸ்ட் எல்லாம் பேசி முடிச்சு....
போட்டி தொடங்குச்சு....
காந்திமதி, கவிதா, செந்தில் குமார், விக்னேஷ்....இப்டி எல்லோரும் போய் பேசிட்டு வந்து உக்காந்துட்டாங்க....இதே ஸ்பீட்ல என் பேரையும் கூப்டுட்டாங்க....நான் வேணா இப்டியே ஸ்டேஜ் பின்னால ஓடிப்போய்டவான்னு கேக்காத குறையா..1986 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முத முறையா மைக் கிட்ட போயி நின்னேன்....
துரைராஜ் சார் ஒரு வார்த்தை மறக்காம என்ன நினைவுல வச்சுக்க சொன்னாரு....உன் எதித்தாப்ல இருக்க எவனுக்கும் ஒண்ணும் தெரியாதுடா... உனக்குதான் தெரியும், நீ அவுங்களுக்குச் சொல்ற..இதை மட்டும் மனசுல வச்சுக்க....அவ்ளோதான் நீ ஆட்டோமேட்டிக்கா பேசுவன்னு சொன்னத அப்டியே புத்தில கொண்டு வந்துகிட்டென்...
எனக்கு ஒரு கோபம் வந்துச்சு...என்ன பேசுறேன்னு வேடிக்கை பாத்து சிரிக்க வந்தா இருக்கீங்க.....அப்டீன்ற மாதிரி....
" துலாக் கோல் போல் நடு நிலை தவறாத மாண்பு மிகு நடுவர் அவர்களே......."
அப்டீன்னு ஸ்டார்ட் பண்ணி............" பாரதியின் பாடல்களில் விஞ்சி நிற்பது நாட்டுப் பற்றே.....!!!! நாட்டுப் பற்றே...!!! நாட்டுப் பற்றே....!!!" இப்டி முடிக்கிற வரைக்கும் ஏனோ ஒரு கோபம் எனக்குள்ள பரவிக் கிடந்தது.
பேசி முடிச்சு எல்லோரும் கைதட்டியும் நான் ஒரு பயத்தை கடந்த நிலையில் போயி மறுபடியும் ஸ்டேஜ்ல உட்கார்ந்துகிட்டேன். அதுக்கப்புறம் துரை ராஜ் சார்..நான் தான் ஃபர்ஸ்ட் பிரைஸ்னு சொல்லி அறிவிச்ச போதுதான் தெரியும்...ஓ.கே..நமக்கு பேச வருது.. நாம பேசலாம்னு....
அந்த போட்டியில பரிசா கொடுத்த ஒரு எவர் சில்வர் தட்டும், பாரதியாரோட கவிதைகள் புக்கும் என்னால மறக்க முடியாத ஒண்ணு. பாரதியார் கவிதைகள் இன்னும் என்கிட்ட இருக்கு ஆனா...எவர் சில்வர் தட்டு என்னாச்சுன்னு எங்க அம்மாவதான் கேக்கணும்...
இதை ஏன் சொல்றேன்னா.. பால்யப்பருவத்தில ஏதோ ஒரு ரீதியில நமக்குள்ள நுழைஞ்சுடுற தேசப்பற்று சரியான வழியில ஒரு பதின்மத்துல எல்லாம் வழி நடத்தப்படுறது இல்லை. நான் எட்டாவது படிக்கிற வரைக்கும் ஸ்கூல் பிரேயர்ல உறுதி மொழி என்னைய தான் சொல்ல சொல்லுவாங்க..!
"இந்தியா என் தாய் நாடு; இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்..என் தாய் திரு நாட்டை நான் உளமாற நேசிக்கிறேன் "
இப்டி சொல்லி சொல்லி ஒரு வித பிடிப்பு அதிகமாவே இருக்கும் நாட்டு மேல..! ஆனா +1, +2 படிக்கும் போது சுதந்திர தினம் வந்தா ஸ்கூலுக்கே போறது இல்ல அன்னிக்கு கட் அடிச்சிட்டு சினிமா பாக்கப் போறது, காலேஜ் டைம்ல சுதந்திர தினம்னா காலேஜ்க்கே போறது இல்லை இப்டி ஒரு அலட்சியம் வந்ததுக்கு காரணம் வயசா? புறச் சூழலா? அல்லது ஒரு கண்டிப்பு இல்லாம இருந்ததா? என்னனு எனக்குத் தெரியாது....
ஆனா சின்ன வயசுல இருந்து இந்தியான்னு சொன்னா ரொம்ப க்ளியரான ஒரு ஹீரோவத்தான் மனசுல ஏத்தி வச்சு இருந்திருக்கோம். வெள்ளை புறாவையும் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் கொண்ட ஒரு தேசமா மனசுல உருவேத்தி வச்சி இருக்கோம்.
மகாத்மா காந்தி பத்தின படம் பாத்ததுக்கு அப்புறம் இந்திய சுதந்திரப் போராட்டம் எவ்வளவு வலி மிகுந்ததுன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. இப்போ எல்லாம் ஸ்கூல் பசங்கள இப்டி சினிமாக்களுக்கு கூட்டிட்டு போறாங்களான்னு எனக்குத் தெரியாது பட்.........இப்டி சுதந்திரப் போராட்டத்தப் பற்றிய சினிமா பாக்கும் போது ரொம்ப பவர் புல்லா நம்ம மனசுல உண்மைகள் தெரிய ஆரம்பிக்கும் மற்றும் தேடலை ஊக்குவிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்தியன் அப்டீன்னு சொல்றதுல எவ்ளோ பெருமைப் படுவேனோ அதே மாதிரி தமிழன் அப்டீன்னு சொல்லிக்கிறதுல பெருமை + திமிர் இருக்கும் எனக்குள்ள...! அது என்னவோ தெரியலை.. அது தப்பான்னு கூட எனக்குத் தெரியாது. .தமிழன் அப்டீன்னு சொன்னா ரொம்ப அறிவாளி, பாரம்பரியம் மிக்கவன், அட்டகாசமான மொழிக்கு சொந்தகாரன், இலக்கியம் கலைன்னு கொடி கட்டி பறந்தவன், வெளி நாடு எல்லாம் போய் அடிச்சு ஜெயிச்சு நம்ம கலாச்சாரத்த பரவ விட்டவன், திருக்குறளுக்கும், ஐம்பெருங்காப்பியங்களுக்கும் சொந்தகாரன், அக நானூறு புற நானுறு கொண்டவன்.....,
ஆன்மிகத்தில் உலகத்துக்கே தெரியாத விடயங்கள் எல்லாம் கண்டு தெளிந்தவன்...அப்டீன்ற ஒரு திமிர் எதார்த்தமாவே எனக்குள்ள இருக்கு.......அது எப்பவுமே இருக்கும்னு வச்சுக்கோங்களேன்..!
இந்தியா அப்டீன்னு விழுந்து, விழுந்து நான் நேசிக்கிறது ஒரு தமிழனா இருந்துதான்னும் சொல்லலாம். அப்டி விழுந்து விழுந்து நேசிக்க அப்ப இருந்த தலைவர்கள் கட்சிகள் எல்லாமே ஒரளவிற்கு ஒழுங்கா இருந்ததும் ஒரு காரணம். கார்கில் வார் வந்த போதும் சரி......பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் சரி.....மும்பை குண்டு வெடிப்பு போதும் சரி........இந்தியா அணு குண்டு வெடிச்ச போதும் சரி ஒரு இந்தியனா நின்னுதான் யோசிச்சு இருக்கேன்....
இந்தியா பாகிஸ்தான் கூட சண்டை போட்டு பங்களாதேச பிரிச்சு கொடுத்துச்சுன்னு படிச்சப்ப ஒரு சூப்பர் ஹீரோவதான் பாத்து இருக்கேன்...! ராஜிவ் காந்திய தமிழ்நாட்ல படுகொலை செஞ்சப்ப...அதுவரைக்கும் வீட்ல பீரோல்ல வச்சிருந்த பிரபாகரன் சின்ன சைஸ் காலண்டர் (ஸ்கூல்ல வித்தாங்க...)எடுத்து கிழிச்சுப் போட்டு இருக்கேன்...
ஆனா...ஈழப் போர் நடக்கும் போது அங்க கொத்துக் கொத்தா பொதுமக்கள, பெண்கள, குழந்தைகள, வயசானவங்கள அரக்கன் ராஜபக்சேயின் அரசு கொன்னு குவிச்சுட்டு இருந்தப்ப அதுக்கு பின்னால பலமா இந்தியாவோட கைகள் இருந்துச்சுன்றத இன்னமும் என்னால ஜீரணிக்க முடியலை...
(நடை மாத்தியே....ஆகணும் நான்....)
என் தேசம் அனியாயத்துக்குப் போகாது....! என் தேசம் குற்றங்களையும் தவறுகளையும் நேருக்கு நேர் நின்று கேட்குமேயன்றி கபடமாய் சுற்றி வளைத்துப் போய் பழி வாங்காது..என்றெல்லாம் எண்ணியிருந்த போது ஈழத்தில் அதுவும் அப்பாவிகளை கொல்வதில் இந்தியாவின் பெரும்பான்மையான மூளைகள் ஈடுபட்டிருந்ததும் உதவிகள் செய்ததும் ஏற்றுக் கொள்ளவே இயல வில்லை.
விட்டுக் கொடுத்தலும் சகிப்புத்தன்மையும், அன்பும் நேசமும், நமது தேசத்தின் அதிமுக்கியமான் கொள்கைகளாய் இருந்த போதிலும் இப்படியான செயல்களை நிகழ்த்தப்பட்டு இருப்பதின் பின்னணியில் கபட மூளைகள்தான் இருந்திருக்கின்றன, சுயநல அரசியல்தான் இருந்திருக்கிறது. இவர்களே என் தேசமல்ல.....இவர்கள் தற்காலிகமாக அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு.....தமது பழிவாங்கும் அரசியலை செய்திருக்கிறார்கள் என்றும் உணர முடிந்தது.
கோபம் எல்லாம் தேசத்தை ஆளும் கட்சியின் மீதுதான் வந்ததே தவிர என் தேசத்து மீது அல்ல....! எவ்வளவு அற்புதமான தேசம் இந்தியா...! எவ்வளவு வேறுபட்ட மக்கள்......எத்தனை மொழிகள்...! எப்படிப்பட்ட கலாச்சாரம்...! எப்படிப்பட்ட உன்னதமான வரலாறு.....எவ்வளவு புத்திக் கூர்மையுள்ள மக்கள்....எவ்வளவு படித்த இளைஞர் கூட்டம்.....
விட்டு விடக்கூடாது என் தேசத்தை, விட்டு விடக் கூடாது நமது பெருமைகளை....! தேசத்தில் இருக்கும் அத்துனை நடுநிலை வாதிகளும், நியாயவான்களும் முற்போக்கு இளைஞர் கூட்டமும் சேர்ந்து சரியான அரசுகளை நிர்மாணிக்க தெளிவுகளை மக்களுக்கு புகட்டல் வேண்டும். காழ்ப்புணர்ச்சி அரசியலை வேரறுக்க வேண்டும்....
செங்குருதிகளைக் கொடுத்து..... அடி உதைகளை வாங்கி...போராடிப் பெற்ற சுதந்திரம் என் தேசத்தின் சுதந்திரம். எமது விடுதலையை, எம் மூதாதையரை நினைத்து நாங்கள் எப்படி பெருமைப் படுகிறோமோ அதே போல எம்மை நினைத்து எம்பிள்ளைகள் பெருமைப்பட வேண்டும். எம் பிள்ளைகள் வாழ நல்லதொரு தேசமாகவும் எந்த கறைகளுமற்ற ஒரு உன்னத தேசமாகவும் போற்றப்பட வேண்டும்....
இந்தியா என்பது தேசம் மட்டுமல்ல...உலக மக்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு......! பல தரப்பட்ட மக்களோடு ஒன்று பட்டு விட்டுக் கொடுத்தலை கற்றுக் கொண்டு வாழ கற்றுக் கொண்ட நாடு.....! காஷ்மீரில் இருக்கும் ஒருவனும் தென் கன்னியா குமரியில் இருக்கும் ஒருவனும் சரளமாய் எங்கு வேண்டுமானலும் சென்று வரலாம்.......யாரேனும் கேட்டால்.......நம்மிடம் இருக்கும் ஒற்றை பதில்....
" இந்தியன் " என்ற ஒரு பெருமைக்குரிய அடையாளம்...!
சரியில்லாத அரசியல்வாதிகளால் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளால் சீற்றம் கொண்ட சிலர் மாநிலங்கள் எல்லாம் சிதறுண்டு தனி தனியாய் இருந்தால்தான் நல்லது என்று கூற்று உணர்ச்சியின் அடிப்படையில் சரியானது போன்று தோன்றினாலும் சற்றே அபத்தமானது. சேர்ந்து வாழ்தல் மட்டுமே சிறப்பு...!
நேர்மையில்லாத அரசியல்வாதிகளால் நமது தேசத்தின் பிடிப்புக்கள் வழுக்கிக் கொண்டு போகாமல்....இந்தியா என்ற ஒற்றை வார்த்தையில் ஒப்பற்ற குடிமக்களாய் சரியான தலைவர்களை தேர்ந்தெடுப்போம்........ஒப்பற்ற தேசத்தின் உயரிய குடிமக்கள் ஆவோம்...!
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...!
தேவா. S
Comments
ஆன்மிகத்தில் உலகத்துக்கே தெரியாத விடயங்கள் எல்லாம் கண்டு தெளிந்தவன்...அப்டீன்ற ஒரு திமிர் எதார்த்தமாவே எனக்குள்ள இருக்கு.......அது எப்பவுமே இருக்கும்னு வச்சுக்கோங்களேன்..!//
அருமை!
எனக்கும், சுதந்தரதினம் அன்னைக்குப் பள்ளிக்கூடத்துல ஆரஞ்சு வில்லை முட்டாய் வாங்கிச் சாப்பிட்டது நினைவுக்கு வந்துருச்சி.. :)
அருமையான பதிவு.
கண் கலங்க வைத்து விட்டீர்கள்.
உறுதியாக இருப்போம்.
வாழ்த்துக்கள்.