Skip to main content

வெட்டுடையாள்.....!


















நிகழ்வுகளை எல்லாம் உணவாய் உட்கொண்டு எப்போதும் போல காலம் இயங்கிக் கொண்டிருந்த தென் தமிழகத்தின் சற்றேறக் குறைய 350 வருடங்களுக்கு முந்தைய ஒரு அந்தி நேரம்...இரவு கருமைப் போர்வையை மெல்ல போர்த்தி விட்டு பூமியை உறங்கச் செய்ய எல்லா முஸ்தீபகளோடும் இருந்தது....

சிவகங்கைச் சீமையில் காளையார்கோவில் தாண்டி நமது மேனியைக் கிழிக்கும் கருவேலங் காட்டு முட்களையும், கரடு முரடான முட்புதர்களையும், செம்மண் சரளைக் கற்களையும் தாண்டினால் அரியக்குறிச்சியை அடைந்து விடலாம்...!

மாலை சற்று தாண்டி இரவினை அடைந்த உடனேயே இரவு உணவு முடித்து சிறார்கள் எல்லாம் தத்தம் வீட்டுக்கு முன்னிருக்கும் பொட்டலில் காண்டா விளக்கு வெளிச்சத்தில் விளையாட, காண்டா விளக்குகளைச் சுற்றி சிறு சிறு பூச்சிகளும், வண்டுகளும் விளையாட, பெருசுகளும், சிறுசுகளும், பெண்டுகளும், எல்லாம் சேர்ந்து ஊர்க்கதையை பேசிக் கொண்டிருக்கையில்....

தனியாக அமர்ந்திருந்த படி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு ஊர்ப் பெருசுகள் கூறிக் கொண்டிருந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தாள் 14 வயதான உடையாள்.....

" யப்பே.....ராசாவ கொன்னு புட்டாய்ங்க அப்பே....! பத்து பேரு சேந்து நின்னாலும் வெட்டி சாச்சு புடும் மவராசன குண்டு வச்சி கொன்டு புட்டாய்ங்கே மண்ணா போறவங்கே...." சீனிச்சாமி அய்யா சொல்லிக்கிட்டு இருக்கறது உடையாளுக்கு தெளிவா கேக்குது....

" நிமிந்து நடக்கையில
நெஞ்சழக பாத்திருக்கேன்...
பாஞ்சு கத்தி வீசையில
கையழக பாத்திருக்கேன்...
மீசை முறுக்கிலயே...
கொள்ளை சனம் சொக்கிடுமே
தர்ம மகராசா ஆவி பிரிஞ்சு
போயிருச்சே...!

பொழுதெல்லாம் மானம் பாத்த பூமியில நாத்து நட்டுப்புட்டு வந்த ஒடம்பு வலியும், ராசாவ கொன்னுப் புட்டாங்களே அப்டீங்குற வேதனையிலும் கேவி கேவி அழுதுகிட்டே ஒப்பாரி வக்கிற பொன்னத்தாவ மெல்ல திரும்பிப் பாக்குறா உடையாள்...

ஏட்டி... எதுக்குடி கொன்னாய்ங்க ராசாவ....????? எடுபட்ட பொறுக்கி நாய்ங்க...? யாரு அவெங்க......? பொண்டுக சேலைக்குள்ள போயி ஒளிஞ்சுகிட்டாய்ங்களா சீமைக்கார வீராதி சூராய்ங்க அல்லாரும்....? சிறுக்கிப் பயலுக ஒருத்தனுமா கூட நின்னு அம்ம ராசாவ காக்கல...?....செவந்து போன கண்ணோடா.. அள்ளிக் கட்டுன முடியோட சீறீ நின்னு உமையாள் கேக்குற கேள்விய பாத்து பயந்து நடுங்குதய்யா சனம்....

" ஏ புள்ள ஒமையா....செருக்கி மவனுவ நேரா வந்து மல்லுக்கு நின்னாய்ங்கன்னா ராசாவோட ஒத்த ஓங்குல ஒம்பொது தல உருளும் புள்ள...காளீஸ்வரர கும்பிட போனவர ஒளிஞ்சு குண்டு போட்டு சுட்டு கொன்னுருக்கான் வெள்ளக்கார நாய் பய....

ஒத்தைக்கு ஒத்த வந்த அம்ம வூட்டு எருமைக் கண்ணுக்குட்டிக்கு பதில சொல்ல முடியாத பக்கிப் பயலுக பதிங்கி கொன்னுருக்காய்ங்க.....! ராச வடுக நாதரு ஒடம்புல குண்ட வாங்கிக் கிட்டு வேங்கையா சரிஞ்சுட்டாரு புள்ள......" கண்ணத் தொடச்சிக்கிட்டு கதருறாரு வண்ணான் வீட்டு மாசானம் அண்ணன்....

கேட்டுக்கிட்டே.. இருந்த உடையாள்...வெலம் வந்தவ போல " ஏய்யா அய்யனாரு கோயிலு கோடங்கி....அம்மூரு அய்யனாரு 400 வருசமா இங்கன இருக்காரு...காப்பத்தறாருன்னு தலைய விரிச்சுப் போட்டுகிட்டு குறி சொல்றீகளே....? எவனோ ஒரு எடுபட்ட பய வந்து அம்மூரு ராசாவ அம்மூரு கோயில்ல வச்சி கொன்னுபுட்டு போயிட்டான்...எங்க இப்ப போச்சு அய்யனாரு சாமி...?

வெதைக்கிறோம், உழுகுறோம், வெள்ளாமை வெளைக்கிறோம், ஆடு மாடுகளோட சேந்து மண்ணோட மண்ணா கருகுறோம்....ஒறைக்கிறய வெயிலையும் உப்புக் காத்தையும் ஒடம்புல வாங்கிக்கிட்டு கருவ காட்டுக்குள்ளையும் ஈச்சம் புதருக்குள்ளையும் நாம பொழச்சு கடக்கறதுக்கு காரணமே வடுக நாத ராசாதேன்....

எந்த கெடவுல இருந்தோ வந்த கண்டார....பயலுக அம்ம மண்ணுல வந்து மானங்கெட்ட பொழப்பு பொழைக்கிறாய்ங்க....! பெத்த தாய கூட்டிக் கொடுக்குறது போல வேற சீமையில இருக்க ராசக்களும் கூட சேந்திகிட்டு நம்மளதானா காட்டிக் கொடுக்கிறாய்ங்க....

ஒருத்திக்கு முந்தான விரிச்சு பெத்த புள்ளைக எல்லாம் இப்புடி ஊரு பேரு தெரியாத செறுக்கி மவனுககிட்ட கையக்கட்டி நிக்கிறாய்ங்களே....???? சாமி பூதம் காத்து கருப்பு எல்லாம் எங்க போயிருச்சுக இப்ப....

நாச்சியா தாயிக்காச்சும் நல்ல உசுர கொடுத்து ஆயிச கொடுத்து சீமைய காப்பத்தலேன்னா இருக்குல்ல சேதி....அய்யனாரு கோயிலாச்சும் ஆட்டுக் குட்டி கோயிலாச்சும் அடிச்சு ஒடைச்சுப் புடுவேன் ஒடைச்சு எல்லாத்தையும்....

ஏட்டி பொண்டுகளா! ஏய் ஆம்பளையளா! வெவசாயம் பாக்குறேன்...வேலைய பாக்குறேன்னு மூணு வேலை திண்டுபுட்டு, பொண்டாட்டியள கட்டிப் புடிச்சு தூங்குனா மட்டும் ஒங்க பொழுது போயி சேந்துடும்னு நினைக்காதிய....ஆளுக்கொரு சுருளு கத்திய இடுப்புல எப்பவும் வச்சிகிறுங்க... எடுபட்ட வெள்ளைக் காரப்பய... வந்து என்னமாச்சும் கேட்டாக்கா....உசுரு மசுறுக்கு சமானம்னு கத்திய அவன் நெஞ்சுல எறக்கீருங்க...அப்பு...."

மொத்தமா 50 வீடுகளே இருக்குற அரவக்குறிச்சி ராத்திரி எட்டு மணியில அப்பத்தான் கண்ண மூடி ஒறங்க போனிச்சி....ஒடையாளோட சத்தத்துல இரண்டு முணு புள்ளைக்குட்டிய தூக்கத்துல எந்திரிச்சு யம்ம்மேன்ன்னு கத்தயிலயே....சுப்பிரமணி வீட்டு மாடுகளும் பஞ்சாரத்துல கடந்த சேவலு கோழியளும்....இப்பத்தானே கண்ணசந்தோம் அதுக்குள்ளயுமா விடிச்ஞ்சுறுச்சுன்னு நெனைச்சு கத்திக்கிட்டெ எந்திரிச்சுருச்சுக....

" ஏ புள்ள ஒடையா...ஒனக்கு எப்பவும் நாயம்தான் நேர்மதான் புடிக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்டி ஆத்தா....! எங்களுக்கு எல்லாம் சூட்ட போட்டு இழுத்து விட்ட மாறி நல்லாசொன்னே சேதி.....! ஏப்பா வேலை வெட்டிக்கி போகயில.....வெவகாரமா எவனாச்சும் வந்தா அவிங்கள வெட்டிப் போடுங்கப்பா....ஒடையா சொல்றதுலயும் நெசம் இருக்கு...

அம்ம மண்ணுல வந்து அம்ம ராசாவ அடக்கணும்னு நெனச்சா அவன் எவனாயிருந்தாலும் அவன் மசுர அத்து புடுவோம் அத்து....! சரி எல்லோரும் போயி படுங்க....பொழுது ஆயி போச்சு....! ஏன் புள்ள ஒடையாள் என்ன நட்ட நடு ராத்திரில இப்படி நிக்கிற போயி படு தாயி...கோழி கூப்புட நீ ஆடு மாடு பத்திட்டு போற புள்ள....நேரத்துல போயி படு....

ஏய் கல்யாணி ஒம் மக ஒடையாள கூட்டிகிட்டு போயி தூங்கு...." அப்புடீன்னு கைம்பொண்டாட்டி கல்யாணிய பாத்து ஊரு பெருசு மாரிமுத்து வேலார் சத்தமா பேசங்காட்டியும் கூடியிர்ந்த சனம் எல்லாம் மனச கனக்க வச்சிக்கிட்டு மெல்ல மெல்லமா தூங்க போயிடுச்சுக....

ஒடையாளுக்குத் மாத்திரம் தூக்கம் வரலை. கண்ண பொத்துறா...ராசவ கொன்ன பாவிங்க ராணி நாச்சியாரயும், மருது ஐயாங்களையும் டமார் டாமர்னு வெடிய வச்சி கொல்றதும்...செவகங்க சீமையே தீயில எறியறதும்....! மண்ணுக்கு சொந்தமான மனிசங்க எல்லாம் பிச்சைக்காரய்ங்களப் போல அலையிறதும் வெள்ளக்காரப் பயலுக சிரிக்கிறதும் குடிக்கிறதும், சின்ன பொம்பளப் புள்ளைகள கொண்டு போயி சீரழிக்கிறதும்...அவிங்க கூட கூட்டமா சிரிச்சிகிட்டே கூட்டிக் கொடுத்த அம்ம சீமை பய புள்ளைக அலையிறதும்னு ஒரே...இரத்தக்காடா அம்புட்டும் நெனவுல வருது....

நேர்மை இல்லாத மனிசங்க எவனா இருந்தாலும் அவங்கள கொன்டா என்ன? கழுத்த கடிச்சி துப்பி இரத்தத்த குடிச்சா என்ன? இடுப்பு எலும்ப ஒடைச்சா என்ன? பொய் சொல்றவன் குடல கிழிச்சு பல்லுல வச்சி கடிச்சு இழுத்தா என்ன? ஒழிஞ்சு நின்னு ஏமாத்தி அடிக்கிறபய குடிய எல்லாம் கெடுத்தா என்ன....?

துரோகம் பண்ற பயலுக எல்லாம் துரோகத்தாலயே சாகணும்! அனியாயம் செய்றவன் எல்லாம் அனியாயமா போகணும்...! பொய்யச் சொல்லி ஏமாத்துரவன் வாழ்க்கை எல்லாம் நாசமா போகணும்...., மனிசப்பய அடுத்த மனிசன மதிக்காம எகத்தாளமா பேசுனான்னா அவ பொழப்பு எகத்தாளமா போயிடணும்....

காசுக்குதானே இம்புட்டு வெறியாட்டம்...., காசு, காசுனால மண்ணு, மண்ணுனால பொண்ணு, பொண்ண மயக்க புகழு.........புகழுக்காண்டி பித்தலாட்டம்....ஏய்..............ட்ட்ட்ட்ட்டேய்.................ஒங்கள கொன்னு இரத்ததக் குடிக்கிறேன்டா......

கத்திகிட்டு முத்ததுல படுத்துக் கிடந்த ஒடையா கண்ணு மூடி தூங்கியே போனா...ஆனா கண்ணுல இருந்து கொடம் கொடமா ஊத்துதய்யா கண்ணீரு..!

எப்ப விடிஞ்சுச்சு...எப்ப ஒறங்குனான்னு ஒடையாளுக்குத் தெரியாது....! எந்திரிச்சு எல்லா சோலியவும் முடிச்சுப் புட்டு....ஊருல இருக்க ஆடு மாடுகள பத்திக்கிட்டு..அய்யனாரு கோயிலு பொட்டலு தாண்டி விட்டனி கம்மாக் கரை இறக்கத்துல ஆடு, மாடுக அம்புட்டையிம் எறக்கி மேச்சலுக்கு விட்டுப் புட்டு..கம்மாக்கரை நெடுகுலயும் இருக்குற மண்டிப்போன ஈச்சம் பொதறு ஓரமா...மண்ண கெளச்சு குச்சில கெளறிக்கிட்டு இருந்தவளுக்கு மொத நா ராத்திரி நடந்த அம்புட்டும் மனசுல ஓட ஆரம்பிச்சிரிச்சு....

வெலம் வந்தவ மாறி ஓடி அய்யானரு கொயிலு பொட்டலுக்கு வந்து நின்னா ஒமையா...., அங்கிட்டும் இங்கிட்டும் தேடி கூரன கல்லு ஒண்ண கொண்டாந்து....அய்யானாரு க்க்கு முன்னாடி இருக்குற பெரிய சரள கல்லு மேல வச்சி....காதுல போட்ருந்த இரட்டை வளையத்துல ஒண்ண கல்லு மேல வச்சி...இன்னொரு கூரான கல்லால அவ ஒங்கி அடிச்சிதலுல தங்க வளையம் ரெண்டா ஒடைச்சி விழுந்துச்சு அங்கிட்டு ஒண்ணு இங்கிட்டு ஒண்ணா...

" தப்பு பண்ணுறவன்....கெடும்பு நினைக்கிறவன்...சூது வாது பண்றவன் எல்லாம் கெட்டுச் சீரழியணும்....அய்யானாரேன்னு ஒங்கி ஒடையாள் கத்தும் போதே...காத்த கிழிச்சிக்கிட்டு....பறந்து வந்திச்சி...அஞ்சாறு குதிரைங்க...

ஒண்ணுல நாச்சியா தாயி.....! இன்னும் ரெண்டு குதிரையில மருது சாமிங்க....அப்பறம் ரெண்டு மூணு ஆளுக....ஒடையாளுக்கு யாருன்னு தெரியள...குதிரைங்க வேகமா போகயில நாச்சியா தாயி ஒடையாள பாத்து மெல்ல சிரிக்கையில.... ஒடையாளுக்குள்ள மனசுல கெதக்குன்னு பட்டிச்சி இது நாச்சியா அம்மாவத்தான் இருக்கணும்னு....! அவுக குதிரைங்க போன தெசைய பாத்து கையெடுத்து கும்பிட்டுக்கிட்டே...

நாட்டரசன் கோட்டை பக்கட்டு பரிஞ்சு போற குதிரைகள பாத்த மேனிக்கு நின்னவ அய்யனாரு கோயிலயும்...மறு கண்ணால பாத்துக்கிட்டே அவளயே மறந்து நின்னுகிட்டு இருந்தவளுக்கு எம்புட்டு நேரம் போச்சுன்னே தெரியல....

மறுபடிக்கும் குதிரைங்க சத்தம் கேக்க ஆரம்பிச்சத்தும் திடுக்குனு புத்தில என்னமோ ஒறைக்க மெல்ல திரும்பி பாக்குறா...ஒரு இருவது, முப்பது குதிரைகல்ல ஆளும் பேருமா சட சடன்னு ..அவ கிட்டக்க வந்துட்டாக

வந்தவெங்கள்ள பாதி ஆளுக வேற நாட்டு ஆளுக...மிச்ச ஆளுக எல்லாம் நம்ம ஆளுகன்னு உடையாள் யோசிச்சிட்டு இருக்கும் போதே....அவள சுத்தி வளைச்சிட்டாக அம்புட்டு பேரும்....

சுத்தியும் ஆளுக நிக்கயில முதல்ல தெகைச்சுப் போன உடையாளுக்கு அப்பறம பயம் விட்டுப் போச்சுது..." ஏய் யாரு நீங்க எல்லாம் வழிய விட்டு வெலகுங்க சோலி கெடக்குனு"ன்னு சொல்லிட்டு நகரப் போனவள....

"ஏய் நில்லுன்னு " தடுத்து நிறுத்தினான் ஒரு தடியன்....

"இந்தப் பக்கம் வேலு நாச்சியார், சின்ன மருது, வெள்ளை மருது போனத பாத்தியா? " கரகரன்னு கேள்விய கேட்ட உடனே வந்துச்சு கோவம் உடையாளுக்கு...." அட பொசகெட்ட பயலே...! எங்கிட்ட எதுக்கு கேக்குற....? நீயெல்லாம் ஒரு செம்மம்....வெள்ளைகாரப் பயலுக கூட சேந்து கிட்டு நம்ம ராணிய தேடுறியே கொல்றதுக்கு.......ஒங்காத்தாள போயி காட்டிக் கொடுடா...நாயே..."அப்டீன்னு கத்திக்கிட்டே....அந்த தடியன் நெஞ்சுல கைய வச்சி தள்ளிகிட்டு கூடி நிக்கிற ஆளுகள விட்டு வெலகப் போனா...உடையாள்...

வெரசா வந்த இன்னொருத்தன்....இடுப்புல இருந்த கத்திய கொண்டாந்து...உடையாளோட முகத்துக்கிட்ட வச்சு..மறு கையாள அவ தலை முடிய புடிச்சி இழுத்து நங்குன்னு....சரளைக் கல்லா கிடந்த பொட்டல்ல தூக்கி வீசினான். "ஏய் இப்ப சொல்ல போறீயா இல்லையா...? இந்த பக்கம் குதிரையில ஆளுக போனத பாத்தியா? பொட்டப் புள்ளேன்னு பாக்குறேன்...அந்தா அங்கிட்டு குதிரையில உக்காந்திர்க்கறது யாரு தெரியுமா வெள்ளைக்கார துர ஐயா....நீ சொன்னியினா...ஒனக்கு என்ன வேணுமோ அம்புட்டையும் கொடுப்பாரு....! இந்த ஊரையே ஒனக்கு கொடுப்பாரு ம்ம்ம்ம் சொல்லு...." கத்திய எடுத்துக் கிட்டு உடையாள் கிட்ட போகயில.

சிங்கம் மாதிரி எந்திருச்சு நின்னா உடையாள்...

" எடுபட்ட நாய்ங்களா....கத்திய காட்டி மெரட்டினா பயந்துடுவேன்னு நெனைச்சீகளா...! பயக்க மட்டேன்ப்பு...,ஆளுக நடமாட்டம் இல்லாத காட்டுக்குள்ள பொம்பளப் புள்ளைய அடிக்கிறீகளே....த்த்து...தூ.........! சீமையையும் காட்டிக் கொடுத்துப் புட்டு அக்கா தங்கச்சியா நெனைக்க வேண்டிய என்னைய மாறி பிள்ளைகளையும் அடிக்கவா செய்றீக.....? ஓன் வீட்டுப் புள்ளைகள....யாரச்சும் அடிச்சு மிதிச்சா என்னாட செய்வீக...! கூறு கெட்ட மொட்டயா போயிருவாய்ங்களா.....எல்லோரும் நல்லா கேட்டுக்கிடுங்க....

வீரம் வெளஞ்ச சிவசங்க சீமையோட செம்மண்ணுல பொறந்தவ இந்த ஒடையா....! இப்ப கூட என் இடுப்புல சூரி கத்திய வச்சி இருக்கேன்... எடுத்து ஒங்க நெஞ்சுல எறக்க இம்புட்டு நேரம் கூட ஆகாது....! நானெல்லாம் பொறந்த பொறப்புல எந்த குத்தமும் இல்லை...! ஊர கட்டி ஆண்ட சீமான ஒளிஞ்சு நின்னு கொன்ன பயலுகள பாத்து எனக்கு என்ன மசுத்துக்குடா பயம் வரணும்....ஒண்ணு சொல்றேன்....எல்லோரும் கேட்டுக்குறுங்க....

வேலு நாச்சியா தாயிம், மருது அய்யாங்களையும் நான் என் ரெண்டு கண்ணால பாத்தேன்...ஆனா ஒங்க கிட்ட எங்கிட்டு போனாகன்னு சொல்ல முடியாதுப்பே....

ஒங்க சோலி மசுர பாத்துக்கிட்டு எங்குட்டாச்சும் போய் தொலைங்க....! நாங்க எல்லாம் வேயில்லயும் வெக்காலத்திலயும் ஆடு மாட்ட பத்தியாந்து நல்ல பொழப்பு பொழச்சு வாழ்றவங்க.......ஒங்கல மாறி ஊரான் வீட்டு சொத்த ஏச்சு பொழைச்சு திங்கிற பலசாதி ஆளுக நாங்க இல்ல...."

கோபமா பேசிக்கிட்டு இருந்த உடையாள கழுத்த பிடிச்சு கீழ தள்ளி கொத்தா முடிய புடிச்சு தூக்கி....கன்னத்துல பளார் பளார்னு அறையுறான் இன்னொரு எடுபுடி...ஆளாளுக்கு அடிச்சு தள்ளி, முகமெல்லாம் ரத்தமா..கையெல்லாம் இரத்தமா...துணியெல்லாம் கிழிஞ்சு....கெடக்குற ஒடையாளா காப்பத்த வராம எல்லாத்தையும் மெளனமா வேடிக்கை பாத்துகிட்டு இருக்காரு...அந்த ஊரு அய்யனாரு...!

" என்ன வேணா பண்ணிக் கேளுங்கடா....என்னைய........எனக்கு நாச்சியா போன வழி தெரியும்...! ஆன ஒங்க கிட்ட சொல்ல முடியாதுடா....எடுபட்ட நாய்களா....! " மறுபடிக்கும் வேகமாக அடித்தொண்டையில இருந்து கத்தி சொன்னா உடையாள்....

பொன்னுக்கும், பொருளுக்கும், மண்ணுக்கும் ஆசப்பட்டு பெத்த தாயி மாறி இருக்க அம்ம மண்ண காட்டிக் கொடுக்குற நீங்களும் சரி....எந்தக் கடவுல இருந்தோ வந்து எங்க வூட்டு உப்பை திங்க வந்த எச்சக்கலை நாயி வெள்ளக்காரனும் சரி...... என் மசுறுக்கு சமானமுடா....! நெசம் என்னிக்கும் அழியாதுடா...அநியாயம் பண்றவங்கே எல்லாம் சீரழிஞ்சு சின்னா பின்னமா வம்சக்கூறு இல்லாம அழிஞ்சு போவியடா...."

மண்ணை அள்ளி தூத்திகிட்டே.....இரத்தம் வடியிற உடம்போட, கிழிஞ்சு போன மேல் சட்டையும் பாவடையுமா நின்னுகிட்டு பேசிக்கிட்டே இருந்தா ....!

இப்ப உம்மைய சொல்லல உன்ன கொன்னு புட்டுதான் மத்த சோலிய பாக்க போவோமுடி....ன்னு சொல்லிகிட்டு ஒருத்தன் கத்தியோட உடையாள் கிட்ட பாஞ்சு போகவும்...! அவள கொல்லச் சொல்லி வெள்ளைக்காரன் ஒருத்தன் அவுக பாசையில சொல்லவும்.....

" என்னைய கொல்லுங்கடா.... கொல்லுங்கடான்னு............ஆனா தப்பு பண்ணுறவனெல்லாம் மொட்டியா போவியடா....பச்சப்புள்ள நானு என்னைய அடிச்சவென் எல்லாம் கெட்டு சீரழிஞ்சு போவியடா...! தப்பு பண்ணிட்டு அலையுறவங்கெ எல்லாம் அழிஞ்சே போவியடா......

என்னிய கொல்லுங்கடா...........நான் செத்தாலும் சீவன் பிரிஞ்சாலும் அனியாயத்த செய்யிறவன் குடிய அழிச்சு நாசமாக்குவேன்.......நல்லவங்க கண்ணுத்தண்ணி எப்பவும் பாழாப்போகாதுடா......"ன்னு அடித்தொண்டையில உடையாள் கத்திகிட்டு வரையிலயே..........கழுத்துல ஓங்கி வீசிப்புட்டானாய்ய வாளு கத்திய ஒரு தடியன்..கழுத்து வேறமுண்டம் வேறாயா போயி விழுந்து கடக்குறா உடையாள்.....

தலையையும் முண்டத்தையும் காலால எத்திப்புட்டு சீறிப்பாஞ்ச்சு வேலு நாச்சியா மகராசிய தேடிக்கிட்டு கெளம்பிட்டாய்ங்க வெள்ளக்கார கூட்டத்தோட கலந்து இருக்க சீமைக்கார ஆளுகளும்...

வெட்டுப்பட்ட உடையாள் ஒடம்பு கெடந்து துடிக்க..கண்ணு ரெண்டும் தெறந்த மேனிக்கு தலை தனியா கெடக்க....

பெரிய காத்து அடிக்க....சுத்தி வந்து நின்னு கதறுதக அவ மேச்சு வந்த ஆடுக மாடுக எல்லாம்....! வெட்டுபட்ட உடையாள்.....வெட்டுடையாள்......உடம்பு மெல்ல மெல்ல அடங்கி ஒடுங்கி செத்தே போனா......!

உடையாள் இறந்து கண நேரத்தில் பெரும் சக்தி சீற்றமாய் வெளிப்பட்டது அவளின் உடலில் இருந்து உயிர் என்னும் சக்தி.....பெரும் சீற்றமாய் மண்ணை வாரித்தூற்றியது.....! அங்கும் இங்கும் அலைந்தது.....!

" நான் இங்கேதான் இருப்பேன்.........இந்த அய்யனார் கோயில் வாசல்லயேதான் இருப்பேன்.....தர்மம் அழிஞ்சு போயி அனியாயம் நடக்குதுன்னு எவன் என்கிட்ட வந்தாலும் தப்பு பண்ணியவனை தண்டிப்பேன்..!குடி கெடுத்தவன் குடிய சக்தியா நின்னு நானும் கெடுப்பேன்...! சத்தியத்த எவன் எவன் ஏசுறானோ அவனையெல்லாம் ஏதோ ஒரு ரூபத்துல ஏசிப் பார்ப்பேன்....!

நான் இப்ப உடையாள் இல்லை.., நான் இப்போ உடம்பு இல்லை..! நான் இப்போ மனசு இல்லை...! நான் சக்தி.....நான் அங்கும் இங்கும் எங்கும் பரவிக் கிடக்கிற பெருஞ்சக்தி...! நான் தனித்தவள் இல்லை.....எல்லாமே நான்...! நானே எல்லாம்.....வேலு நாச்சியார தேடிக்கிட்டு போயிருக்க அத்தனை பேரும் நாசமா போவானுக.....! என் மண்ண எடுக்கவ் வந்த அத்தனை பேரும் வேண்டாம் நீங்களே வச்சுக்கங்கன்னு கொடுத்துட்டு போயிடுவாங்க....

அந்தா.....அந்த ஈச்சம் பொதருதான் நான் ஒரு அடையாளத்துக்காக ஒதுங்கப் போற இடம். அய்யனாருக்கு பூசை பண்ற பூசாரிங்களே....காலம் காலத்தும்..என்ன பத்தி அல்லோருக்கும் சொல்லுவாங்க....!

நீதி என்னடா...நீதி...? நான் கொடுக்குறேன் நீதி இங்க...! பிரபஞ்ச சுழற்சியில அசைக்க முடியாத சத்தியமா நின்னு...சரி பண்றேன்......! இந்த மண்ண மிதிச்சுட்டு எவன் போனாலும் அவன் என் கதைய கேப்பான்....! என் கதைய கேட்டாலே அவனுக்குள்ள மனோதைரியமா நான் உடனே குடியேறுவேன்....

ட்ட்ட்ட்ட்டேடேய்ய்ய்ய்ய்......நான் வெட்டுடையாள்டா.....! தப்பு பண்ணிட்டு தைரியமா திரியற அத்தனை பேரையும் வெட்டும் உடையாள்டா...........! "

சீற்றமான சக்தி அங்கேயே ஈச்சம் புதர் மண்டிக்கிடந்த.....அய்யனார் கோவிலிலேயே நின்று கொண்டது. பின்னாளில்...எட்டு வருடங்கள் கழிந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் இவர்களின் உதவியோடு சிவகங்கைச் சீமையை இராணி வேலு நாச்சியார் மருது பாண்டியருடன் மீட்டெடுத்த போது, மருது சகோதர்களால் உடையாளின் கதையை கேள்விப் பட்டு....வெட்டுடையாளுக்கு அய்யனார் கோவில் திடலிலேயே கோவில் கட்டச் செய்து....தங்களைக் காட்டிக் கொடுக்காத உடையாளின் கோவிலுக்குத் தன்னின் வைரப் பதக்க தாலியை நன்றிக் காணிக்கையாகவும் செலுத்தியிருக்கிறார். இது உண்மை. இன்னமும் இராணி வேலு நாச்சியாரின் தாலி சிவகங்கை தேவஸ்தானம் வெட்டுடையார் காளி கோவிலில் இருக்கிறது.

சில இடங்களில் விவரனை வசதிக்காக புனையப்பட்டிருக்கிறதேயன்றி இது வெறும் கதை அல்ல.....வரலாறு....!

(சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் வழியாக தொண்டி செல்லும் எல்லா பேருந்துகளும் கொல்லங்குடி என்னும் நிறுத்ததில் நிற்கும். கொல்லங்குடியில் இருந்து ஒரு 4 கிலோ மீட்டர் என்று நினைக்கிறேன்..உள்ளாக இருக்கிறது அரியாக் குறிச்சி வெட்டுடையார் காளி திருக்கோவில். பக்தி ஆன்மீகம் என்பதை எல்லாம் விட்டு விட்டாலும்...ஒரு வரலாறு நிகழ்ந்தேறிய இடம் என்ற அளவிலாவது இயன்றால் போய் பார்த்து வாருங்கள்.....! உடையாள் உங்களோடு பேசலாம்...மன பாரங்கள் தீரலாம்...உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்...)



தேவா. S




Comments

Kousalya Raj said…
இமைக்க மறந்து ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்...!

படிக்க படிக்க காட்சிகள் கண் முன் விரிந்தன, இந்த உணர்வை கொண்டு வந்த உங்களின் எழுத்திற்கு என் வணக்கங்கள் தேவா.

இந்த உணர்வை நேரில் அனுபவிக்க அந்த இடம் என்றாவது செல்லவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

'உடையாள்' வெட்டுடையாளாக மாறிய அத்தருணம் புல்லரிக்க வைத்துவிட்டது. மறைக்க பட்ட இது போன்ற பல வரலாறுகள் நம் மண்ணில் புதைந்து இருக்கலாம்.

அதில் ஒன்றை இங்கே எனக்கு அறிய செய்தமைக்கு என் நன்றிகள் !

சிறந்ததொரு அற்புத படைப்பு. பாராட்டுகள்
சிறந்ததொரு அற்புத படைப்பு. பாராட்டுகள்.
//நிகழ்வுகளை எல்லாம் உணவாய் உட்கொண்டு எப்போதும் போல காலம் இயங்கிக் கொண்டிருந்த//
நிச்சயமான உண்மை தேவா..
உண்டு செரித்த நிகழ்வுகளில் செரிக்காத சில பகுதிகள் மட்டுமே இங்கு நம் வரலாறுகளாய்..
நம் கண்டு கேட்டு கற்று வந்த நிகழ்வுகள் எல்லாம் சில பெரிய மனிதர்களாலேயோ
அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களால் நடைபெற்றவை..
இங்கு நீங்கள் பகிர்ந்த உடையாளின் கதை போல்
சாமானியர்களின் பங்களிப்புகள் எல்லாம் நம் மண்ணில்
புதைந்து போனவைகள் ஏராளம்.
அதில் ஒன்று வெளிப்பட்டிருக்கிறது தங்களால்.
இன்னும் பல வெளிவர காத்திருப்போம்.
தென் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை வரலாற்றை
தொன்மை மாறாமல் அந்த வட்டார மொழியிலேயே படைத்தது வழங்கியது
இன்னும் அருமை.. நன்றி தேவா..

உங்களின் பதிவுகளை நான் வசிக்க தொடங்கியது மிக சமீபத்தில் தான்..
அதற்குள் என்னை முழுமையாய் ஆட்கொண்டுவிட்டது
உங்களின் பதிவுகள். உங்களின் பதிவுகள் மூலம் தங்களை எனக்கு அறிமுகம் செய்த
என் கல்லூரி நண்பன் விஜய்க்கு என் நன்றிகள்..
உங்கள் பழைய பதிவுகளை வாசிக்க தொடங்கியிருக்கிறேன்.
மீண்டும் சிந்திப்போம்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த