Skip to main content

மேகமாய் வந்து போனவள்....!




















இப்போது எல்லாம் உன் நினைவுகளோடு வாழப் பழகி விட்டது எனக்கு. குறைவில்லாத அந்த நாளின் இன்ப உணர்வுகள் நித்தம் என்னை தொட்டிலில் ஒரு குழந்தையைப் போல போட்டு எப்போதும் சீராட்டுகிறது. முதன் முதலாய் உன்னை பார்த்த அந்த காலை ஏழு மணியில் மெலிதான ஒரு ரெடிமேட் சிரிப்போடு உன்னை உமா என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்டாய். ஒரு வாரம் விடுமுறையிலிருந்து திரும்பி வந்த நான் என் முதல் ஷிப்டுக்காக உள்ளே நுழைகையில் சற்றும் உன்னை நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை..

வரவேற்பாளன் உத்தியோகத்தில் ஒரு வருடமாய் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த அன்றைய தினம் உன் அறிமுகத்தோடு அட்டகாசமாய் வரவேற்றது அந்த நான்கு நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பரை. புன்னகையோடு நகர்ந்து விட்ட உன்னிடம் பேச வேண்டும் என்ற ஆசையில் நான் பேசாமலேயே இருந்தேன். பெண்களைக் காணாதவனாய் நான் இருக்க சென்னை என்னை மட்டும் இல்லை வேறு யாரையுமே அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடாது.

ரங்கநாதன் தெருவின் பரபரப்புக்கு நடுவே நான் தங்கி இருந்தது எனக்கு வரமா அல்லது சாபமா என்று கூட நான் பலமுறை நினைத்திருக்கிறேன். கல்லூரி முடித்து ஒருவன் அடுத்த கட்ட வேலைக்காக நகரும் பருவம் என்பது இளமையை ஒரு கூலியைப் போல சுமந்து கொண்டு திரியும் பருவம். உத்தியோகம் சம்பாத்தியம் என்று ஒரு பரபரப்பு உடலுக்குள் மத மதவென்று அலைந்து கொண்டிருக்கையில் பற்றிக் கொள்ளும் ஒரு நெருப்புதான் காதல்.

கல்லூரியின் காதல்களில் ஒரு பதட்டமும் பயமும் இருக்கும் ஏனென்றால் அங்கே வாழ்க்கை என்னும் பொருளாதயப் பேருலகு தொடங்கி இராது. வேறு ஒருவரின் சம்பாத்தியத்தில் வரும் அந்த ஒரு துணிச்சல் போலியானதுதான்...பயந்து பயந்து....ஈர்ப்பில் ஒருவரை ஒருவர் பார்த்து பயந்து நகர்கையில் செமஸ்டர், அரியர்ஸ், பாஸ், பெயில், சொந்தம், பந்தம், மரியாதை என்று பல சுமைகள் சுற்றி நின்று கொண்டிருக்கையில் அது எப்படி ஒரு சுதந்திரக் காதலாக இருக்க முடியும்....?

சம்பாதிக்கும் போது வரும் காதலில் இருக்கும் திமிரின் அளவு அதிகம் என்றாலும் அது சுகமானது. ஏனென்றால் கல்லூரி தாண்டி வெளி வந்து மீசை திருத்தி, நடை, உடை பாவனை மாறி ஒரு ஆண் பூரணத்தை நோக்கி நகரும் ஒரு மிடுக்கான வேளை அது. இப்போது அவன் எப்படி இருந்தாலும் அவன் அவனுக்கு கதாநாயகன் தான்....எதிர்ப்படும் எத்தனை வயது பெண்ணாய் இருந்தாலும் பார்க்க லட்சணமாய் இருந்தால் இவனுக்காகவே வந்து பிறந்தவள் என்ற மமதையை மனம் சொக்கட்டான் போட்டு சொல்லிக் கொடுக்கும்.....

ரெங்கநாதன் தெருவினை விட்டு வெளியே வேலைக்காக வரும் போது மனசு விசிலடிக்கும், மணியடிக்கும், இறக்கை முளைத்து சிறகடிக்கும், ஒவ்வொரு பெண்ணின் முகத்தையும் பார்த்து ஒரு குறு குறுக்கும் சிரிப்போடு நகர்ந்து, நகர்ந்து இவளா? அவளா? இல்லை அதோ.......அவளா...? என்று விழிகளால் தூண்டில் போட்டு சுடிதார்களுக்கு மார்க் போட்டுக் கொண்டே செல்லும்....

காதலின் கன பரிமாணங்களை சென்னையும், சென்னை நகரத்து வெயிலும், பாண்டி பசாரை சுற்றி வரும் கிறக்கமான நிமிடங்களும், சுற்றி இருக்கும் எல்லா விமன்ஸ் காலேஜ்களும் குறையில்லாமல் சொல்லிக் கொடுக்க, என்னைப் போன்ற கிராமப்புற இளைஞர்களுக்கு அது பம்பர் குலுக்கல்தானே....ஹேய் யா.....ஹவ் ஆர் யூ......மேன்......? ஐயம் ஃபைன் டூட்.........? வாட்ஸ் அப்.....? வாட்ஸ் யுவர் வீக் என்ட் ப்ளான்யா....? என்று ஆங்கிலம் வேறு மூர்க்கமாக புத்திக்குள் ஏறிக் கொண்டு ஒரு கலாச்சார மாற்றம் சட்டென நிகழ்ந்து விட....

பிறகென்ன கதாநாயகனேதான்....கூடவே இன்ஸ்ட்டால்மென்டில் காசு கட்டிக்கலாம் என்று சொல்லி வாங்கிக் கொண்ட ஒரு பைக்கோ அல்லது வேலைக்காக கம்பெனி கொடுத்த ஒரு பைக்கோ இருந்து விட்டால்...நல்ல ஒர் செல்லுலார் போனோடு செமையாய் செட்டில் ஆகிவிட முடியாதா என்ன? அவ்வளவுதான் மிச்சத்தை சென்னை பார்த்துக் கொள்ளும் என்ற ரீதியில்....

வீக் எண்ட்களின் இரவு பதினோரு மணிகளில் கிழக்கு கடற்கரைச் சாலைகளிலோ அல்லது மேற்கு சென்னையின் ஏதோ ஒரு இருட்டு தார்ரோட்டிலோ, இல்லை குண்டும் குழியுமான வட சென்னை ரோடுகளுக்குள்ளோ........என்று ஏதோ ஒரு திசையில் பறக்க வேண்டியதுதானே.....

அப்படித்தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது அதிரடியாய் உமாவை நான் காணும் வரை. அன்று உமா என்னிடம் பேசாமலேயே பர்ஸ்ட் ஷிப்ட் முடித்து சென்று விட்டாள்....அடச்சே குறைந்த பட்சம் என் பெயரைக் கூட கேட்கவில்லை. அன்று முழுதும் என் தலை பரபரவென்று இருந்ததும், அப்படி அவள் பேசாமல் சென்றதே எனக்குள் அவளைப் பற்றிய கிறக்கத்தை அதிகப்படுத்தியதும்.....எங்கே கொண்டு விட்டது தெரியுமா?

ஸ்பென்சர் பிளாசாவின் உள்ளே இருக்கும் கேஃப் காபி டேல தான்ன்னு நீங்க நினைச்சு இருந்தா ஐயம் சாரி....தி.நகர் நார்த் உஸ்மான் ரோட்ல போத்தீஸ் பக்கதுல ரைட்ல வளைஞ்சீங்கன்னா வெங்கட் நாரயணா ரோடு டச் பண்றதுக்கு முன்னாடி ஒரு மலையாளியோட ஸ்நாக்ஸ் பார்லதான் அது கொண்டு போய் விட்டுச்சு....!!!

ஒரு மழை வர்ற மாதிரி இருந்த சென்னையின் மாலை 5 மணி வாக்கில ஆளுக்கொரு பட்டர் பிஸ்கெட்டை கடிச்சுகிட்டு டீயை ஒரு உறிஞ்சி உறிஞ்சி குடிச்சுக் கிட்டு இருந்தோம்.....சரியா அது உமாவுக்கு நாலாவது ஷிப்புன்னு நினைக்கிறேன் அவ குனிஞ்சு டீ குடிக்கிறப்ப என்னை வெறுப்பேத்தனும்னே அவ முன் நெற்றியில வந்து விழுந்த அந்த ரெண்டு முடியும் என்னை அவகிட்ட ஐ லவ் யூன்னு உடனே சொல்ல வச்சுது....

" யூ.....யூ.....நான் உன்னை நல்ல ப்ரெண்டாதான் நினைச்சு பழகினேன்...என்னை போய் இப்டி சொல்லிட்டியே .....யூ டாமிட்...நான் ஒண்ணும் நீ நினைக்கிறமாதிரி பொண்ணு இல்லை....கெட் லாஸ்ட்....."

அப்டீன்னு சொல்லிட்டு அவ போயிருந்தான்னா அது எனக்கு சப்பை மேட்டர்.....பட் அவ எதுவுமே சொல்லாம 5 வது ஷிப்பையும் குடிச்சுட்டு அந்த டீ தொண்டைக்குழியில இறங்கும் போதே ஐ டூ லவ் யூ மகேஷ்னு சொன்னப்ப......எனக்கு தலைகால் புரியலைன்றத புரிஞ்சுகிட்டு வெளில மழை அடிச்சு பெய்ய ஆரம்பிச்சுது.....

மணி ஏழு ஆனபோதுதான் உமாவுக்கு வீடுன்னு ஒண்ணு இருக்கு அவுங்க அப்பா, அம்மா, தங்கைனு ஒரு குடும்பம் இருக்குதுன்னு அவ செல் போன் சிணுங்கி ஞாபகப்படுத்திச்சு....! அவ அயனாவரம் போகணும்...நான் பைக்ல போலாம்னு நினைச்சா ம்ம்ம்ஹும் விடுவேனான்னு மழை தம் கட்டிப் பெய்தது...

' ஏய் ஆட்டோ...' ன்னு மரியாதை இல்லாம கூப்பிட்டாலும் சென்னை மாதிரி ஊருங்கள்ளதான் ' இன்னாபா' ன்னு சொல்லி பக்கத்துல வந்து மரியாதையா கேப்பாங்க...தெரியாத புது ஊர்க்காரங்கள அவுங்க ஆப்படிக்கிறது வேற விசயம் ஆனா ரூட் தெரிஞ்சா நீங்கதான் சென்னையில ராஜா...!

ஆட்டோ நகர...நகர....குளிர் அதிகமாக ரெண்டு பக்கம் ரெக்ஸின் சீட்டையும் எடுத்து விட்டாச்சு. ஐ லவ் யூ சொன்ன முதல் நாளே இவ்ளோ நெருக்கமா உமா கூட உட்கார்ந்து போவேன்னு நான் சத்தியமா நினைக்கலேன்னு சொல்ல நினைச்சேன்...அவ என்கிட்ட சொல்லியே விட்டாள்..உங்க கூட இவ்ளோ நெருக்கமா...ப்ளா..ப்ளா..ப்ளா....! மனிசனோட மனசு எல்லாமே ஒரே மாதிரிதான் திங்க் பண்ணும் போல....

அந்தக் குளிருக்கு அவளோட கைகளை இருக்கமா பற்றிக் கொள்ளும் அனுமதிய அவ கொடுத்து இருந்தாலும் எனக்கு அதுவே பயமாத்தான் இருந்துச்சு....! என்னாதான் ஹீரோத்தனமா பேசினாலும் மொத மொதல்லா ஒரு பெண்ணோட அருகாமை கொடுத்த பயம் ரொம்ப பதட்டமானதுதான்...! எக்மோர்ல உமாவை இறக்கி விட்டுட்டு 23C ல ஏத்தி பத்திரமா போய்ட்டு வாம்மானு விட்டுட்டு நான் அங்க இருந்து ட்ரெயின் பிடிச்சு....

மாம்பலம் வந்து நார்த் உஸ்மான் ரோட்ல அனாதையா நின்ன என் பைக்க குற்ற உணர்ச்சியோட எடுத்து உதையும் போது....பிறை தேடும் இரவிலேன்னு......என்னோட செல்போன் ரிங்க ஆரம்பிச்சுது....உள்ளுக்குள் உமா பாடலாய் என்னை தேட ஆரம்பிக்கும் முன்பே

போன எடுத்து பேசும் போது ஆயிரம் தடவை சொல்லிட்டா...பத்திரம்டா....பத்திரம்டா...பாத்து போடா...ன்னு...!அட நீ போன வைச்சுரு தாயி....பேசிகிட்டே போனா நான் எங்க பத்திரமா போறதுன்னு சொல்லிட்டு போனை மடக்கிப்போட்டேன்....

மெரீனா பீச்சுக்கு மட்டும் போகாம சென்னையையின் எல்லா பாகத்தையும் உமா கூட சுத்தினதுக்கு இரண்டு காரணம் ஒண்ணு அவுங்க அப்பா செகரட்ரியேட்ல வேலை பாத்தது, ரெண்டு அவுங்க சின்னமா மகன் அதாங்க உமவுக்கு தம்பி பிரசிடன்ஸி காலேஜ்ல படிச்சது.....

எனக்கு கவிதையே எழுத வராது. உமா கவிதாயினி...சிரித்துக் கொண்டே ஏதோ நாலு வரியைச் சொல்லுவாள். எனக்கு ஆரம்பத்தில் புரியாமல் இருந்துச்சு போகப் போக கவிதைய ரசிக்க கத்துக்க மகேஷ்னு சொல்லி அவள் வாங்கிக் கொடுத்த ' இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல' அப்டீன்ற வைரமுத்து எழுதின கவிதைப் புத்தகம், இதோ அந்த செல்ஃப்ல இன்னும் வச்சு இருக்கேன் பாருங்க...

உன்னோடு நானிருக்கையில்
எவ்வளவு திமிராய்
உன் கேசம் கலைக்கிறது
இந்தக் காற்று...?

செல்லமாய் ஒரு பெசண்ட் நகர் கடற்கரைக் காற்றை கவிதையா முறைத்திருக்கிறாள்....! உமாவை கடைசி வரை நான் வர்ணிக்கப் போறது இல்லைங்க....வர்ணித்து பார்த்து அழகு என்று யோசிக்கவே முடியாமல் நான் இருந்ததற்கு காரணம் அவளின் எல்லா செயல்களிலும் நான் லயித்துக் கிடந்ததுதான்..!

ஆயிரம் சொல்லுங்க..நரகத்துல நாம் வாழ்ந்தாக் கூட...சரியான ஆளு கூட வாழணுங்க...அப்பதான் அது சுகம். சொர்க்கத்துல இருந்தாலும் சிடு மூஞ்சிங்க கூட இருந்தா அந்த சொர்க்கம் கூட நரகம்தான்..

காதலை எனக்கு காதலாய் பார்க்கச் சொல்லிக் கொடுத்தவள்......, ஏதேதோ சூழல்கள், மற்றும் முரட்டுத் தந்தையின் வ்றட்டுப் பிடிவாதம், அம்மாவின் கெஞ்சல் மற்றும் அழுகை இவற்றுக்கு நடுவே என்னோடான காதலை ஜெயிக்க வைக்க முடியாமல் அவள் கண்ணீர் விட்ட நாட்கள் எனக்கு இரணமானவை என்று நான் உஙக்ளிடம் சொல்லத் தேவையில்லை...

எனது 25 வயதில் 23 வயது உமாவின் நுனி நாக்கு ஆங்கிலமும், தமிழ்ப் புலமையும் தாண்டி அவளின் கம்பீரமும் என் மீதான அதீத காதலும் அவள் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பினை வைத்திருந்தன.....! உமா வெள்ளை வெளெரென்று இருக்கமாட்டாள் அவள் ஒரு புது நிறம்தான்...

என்றாலும் எனக்கு பிடித்த அழகு என்பதையும், நான் விரும்புவதைப் போல இரு புருவ மத்தியில் குங்குமம் இடுபவள் என்பதையும், அழகுக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதற்கு ஏற்றார் போல ஒரு நாள் கூட அவள் அதிக மேக் அப்பில் குளித்துக் கொன்டு வருபவளில்லை என்பதையும்,இயல்பான உதடுகளை லிப் கார்ட் போடுவதோடு விட்டு விடுபவள் என்றும் அவள் என்னை விட்டு பிரிந்து போன பின்புதான் எனக்குப் புரிந்தது....!

வெறுப்பாய் சண்டையிட்டு நாங்கள் பிரியவில்லை....உடல் ஈர்ப்புகள் கடந்த ஒரு காதலை சுகித்தவர்கள் என்ற நிறைவோடு அவளின் சுற்றங்களின் சந்தோசத்திற்காக அவளின் சந்தோசச் சானலை திருப்பி வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று நாங்கள் இருவருமே முடிவெடுத்தோம்...! ஆனால் அது அவளுக்கு சந்தோசமாய் இருக்காது என்று அவள் சொன்ன போதிலும், சந்தோசமாய் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தித்தேன்.

வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யாவிட்டால் இறந்து விடுவதாய் சொன்ன வழக்க்காமான தமிழ் அப்பா, அம்மாவை நாங்கள் ஏமாற்றி ஓடிப் போய் வேறு எங்கோ இருந்து திருமணம் செய்து கொண்டு அவர்களின் இறப்பைக் கடந்த ஒரு வாழ்க்கையை வாழ நான் முயலவில்லை, அவளும்தான்..

எனது வீட்டில் முரண் இருந்தாலும் ஒத்துக் கொள்வார்கள்...ஆனால் உமாவின் வீட்டில் பிடிவாதம் கடுமையாய் போய் அவளது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து உயிருக்குப் போராடி மீண்டெழுந்தார்....! சாதி என்னும் சாக்கடை எங்களுக்குள் முதன் முதலாய் எட்டிப் பார்த்து இரண்டு பேரும் வேறு, வேறு சாதி அதனால் என்னால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று ஒரு பிரஸ்டீஜ் பத்மநாதனாய் என் காலில் விழ வந்த உமாவின் அப்பா எனக்கு பாவமாய் தெரிந்தார்.....

அவ்வளவுதான்..... ஒரு அழுத்தமான முத்தத்துக்குப் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம்....! நான் சென்னையிலிருந்து நகர்ந்து பெங்களூர் வந்து விட்டேன்....வருடங்கள் கடந்து விட்டன...இதோ எனக்கு 29 வயது ஆகிவிட்டது....

எனக்கும் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.....! வாழ்க்கை நகர்ந்து கொண்டுதான் இருக்கும் ஆனால் நினைவுகளும், சுகமான அனுபவங்களும், நிஜமான காதல்களும் எப்போதும் நம்மைச் சுற்றிப் பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டுதானே இருக்கும்....

உமா என்னை பற்றி நினைப்பாளா என்று தெரியவில்லை.......பட்...........ஷி வாஸ்.....வெரி இன்ட்ரஸ்டிங்..... & கிரேட்...!

ரொம்ப நேரம் உங்ககிட்ட பொலம்பிட்டனாங்க......சரி விடுங்க....ஊர்ல இருந்து அம்மா போன் பண்றாங்க ஏதாச்சும் பொண்ணு மேட்டராத்தான் இருக்கும்.......அப்புறம் பார்க்கலாங்க......டேக் கேர்...பை....!

ஹலோ.......அம்மாவா........? ம்ம்ம்ம் சொல்லுங்கம்மா...பொண்ணா?...... சரி போட்டோவ மெயில் பண்ணுங்கம்மா.......


தேவா. S


Comments

AltF9 Admin said…
intha pathivu arumai , unkalukkulla kadhal udra uruthunnu theriyuthu avvvvvvvvv...
Anonymous said…
touching........one

Suresh
பொருத்தமான பாடலுடன்...
அழகான மலரும் நினைவு...

"தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்..." உண்மை தான்!

பகிர்வுக்கு நன்றி! :)
நீண்ட நாட்களுக்குப்பின் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கத் தூண்டிய மிகவும் நேர்த்தியானப் படைப்பு தேவா . நிகழ்வுகளை கண்முன் காட்டியது எழுத்து நடை . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

நேசத்துடன்,
பனித்துளி சங்கர்
அட்டகாசம்..
sulthanonline said…
நீங்கள் சொன்ன கதை ஆரம்பம் முதல் இறுதி வரை கண் முன்னே வந்து சென்றது. அருமையான ஒரு மலரும் நினைவு.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த