Skip to main content

விலக்கப்பட்ட கனி...!






















விலக்கப்பட்ட கனியை
புசித்து முடித்திருக்கையில்
வக்கிர புன்னகையை
மெலிதாய் துடைத்துக் கொண்டான்
சாத்தானுக்குள் இருந்த கடவுள்..!

மறுக்கப்பட்டதின் விதிகளை
படைப்புகள் எப்போதும்
அத்துமீறும் என்பதாலேயே
மீறலுக்காய் மறுத்து வைத்த
பாவ பரிமாற்றமாய் மாறிப் போனது
பிரபஞ்சத்தின் மைய முடிச்சு...!

எட்டாவது படிக்கையில்
எதிர் வீட்டு ஜெயஷ்ஸ்ரீ அக்காவுக்கு
முத்தம் கொடுத்த
பக்கத்து வீட்டு அண்ணனுக்குள்
ஒளிந்திருந்து...
அது எட்டிப் பார்த்தது;

கீதா டீச்சரிடம் சேட்டைகள்
செய்த முருகேசன் வாத்தியாரின்
மூளைக்குள் பிடிவாதமாய்
சம்மணக் காலிட்டு..
அமர்ந்திருந்தது;

நெரிசலான பேருந்தில்
ஒரு பெரியம்மாவை
இடித்துப் பார்த்த தடியனுக்குள்
கம்பீரமாய் நின்று கொண்டும்;
நாடார் கடையில் சாமான் வாங்கையில்
செல்வி அத்தையின் இடுப்பை
முறைத்துப் பார்த்த
பொட்டணம் போடும் கணேசனின்
விழிகளில் கள்ளத்தனமாய்...
எட்டிப் பார்த்தும்...

ஆதியில் விலக்கப்பட்டதாய்
கற்பிதம் கொண்ட ஒன்று
எப்போதும் பல் இளித்து
இருப்பினைக்காட்டி விட்டு ....
இல்லை....இல்லை...இல்லை
என்று பொய்யாய் கை விரித்து
கட்டுப்பாட்டு விதிகளுக்குள்
கபடமாய் ஒளிந்தே கொள்கிறது!

திருமண பந்தமென்ற
ஒப்பந்தங்களின் போது
கடவுள் முகமூடியை...
சைத்தான்கள் அணிந்து கொண்டு
விலக்கப்பட்டதை விழுங்குவதற்கு
நியாய பதாகைகளையும்
தூக்குவதுமுண்டு...!..!

என்னதான்...
ஒழுக்கத் துணிகளை
இறுக்க இறுக்க கட்டிக் கொண்டாலும்
புத்திக்குள் வந்து
ஆடை விலக்கிப் பார்க்கும்
ஆதி உணர்வினை காதலென்று
மார்க்கெட்டிங்க் செய்து விட்டான்
இல்லாத ஒரு கடவுள்...!

நிஜ உணர்வுகளை மடக்கிப் போட்டு
வண்ண வண்ண வர்ணம் தீட்டி
புனிதம் என்ற போர்வை போர்த்தி
நாளும் நடக்கும்
நல்லொழுக்க நாடகங்களின்
ஓரங்களில் ஒட்டிக் கிடக்கும்
காமமே பிரதானாமாய்...
சுற்றிக் கொண்டிருக்கிறது
எப்போதோ இல்லாமல் இருந்த
இந்த முரட்டு பூமி....!

தேவா. S




Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...