Skip to main content

மரம்...!



















யாருமற்ற ஒரு பொழுதில் அந்த மரத்தடியில் நான் நின்று கொண்டிருந்தேன். என்ன மரம் என்று மனம் ஆராயவில்லை. மரத்தின் வேர்களில் பார்வையை ஊன்றி அதன் பிடிப்புகளுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி வெகு ஆழத்தில் சென்று அதன் மையவேரினை மனம் பற்றி முடிச்சிட்டுக் கொண்ட சற்று நேரத்தில் நான் மரமாகிப் போனேன்.

முதல் முறையாய் மனமற்ற ஒரு உணர்வு நிலையில் மண்ணின் ஆழத்தில் இருந்த ஈரப்பதத்தை சுகமாய் உறிஞ்சி உறிஞ்சி என் உடலின் பாகங்களுக்கெல்லாம் பரவ விட்டுக் கொண்டிருந்தேன். சலனமில்லாமல் ஒற்றைக் காலில் நிற்பது ஒரு சுகானுபவம். சுகத்தை உடலுக்குள் தேக்கிக் கொண்டு என் நீட்சிகளை மெல்ல மெல்ல உணர்தலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். விழிகள் இல்லை ஆனால் பார்வை இருந்தது.

மண்ணுக்கடியில் எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன. ஒவ்வொன்று குறு குறுப்பாய் அங்கும் இங்கும் ஒரு ஓட்டத்தில் இருப்பதை தெளிவாக உணர முடிந்தது. அவைகளுக்கெல்லாம் நினைவுகள் பல மையப்புள்ளிகளளில் இருக்கவில்லை. ஒரே புள்ளியில் அவற்றின் மனம் குவிந்து கிடப்பதை அதிர்வுகளாய் அறிய முடிந்தது. அந்த ஒற்றைப் புள்ளியில் உயிர் வாழும் ஆசை தேங்கிக் கிடப்பதும், அந்த ஆசையின் இரண்டு முகங்களாய் பசியும், காமமும் ஒடுங்கிக் கிடந்ததும் தெரிந்தது.

உணவு தேடுதலும் உண்ணலும், இனப்பெருக்கம் செய்தலும் மட்டுமே அவற்றின் வேலையாயிருந்தன. உயிர்ப்பயமும் எல்லாவற்றுக்குள்ளும் இருந்தன. ஏன் பயப்பட வேண்டும் என்ற கேள்விக்குப் பின்னால் எந்த ஒரு பதிலும் இல்லாமல் வெற்றுக் கூடாகவே இருந்தது. பூமின் ஆழத்தில் அதன் நடு மையம் கனன்று கொண்டிருந்தாலும் அதன் அடுத்த அடுத்த அடுத்த கட்டங்களில் நீர் கசிந்து கசிந்து ஒரு மாதிரியான குளுமையாய்த்தான் பூமி எப்போதும் இருக்கிறது.

மெல்ல என் வேர்களை பரப்பி....ஒரு உற்சாக கூடலாய் பூமியை அழுத்தி அந்த சுகத்தை அனுபவித்து நான் விடாமல் நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தேன். தனிமைதான் அது ஆனால் சுற்றிலும் எல்லாம் அதன், அதன் அழகில் இயங்க நானே நானாய் நானும் இயங்கும் ஒரு தனிமை. ஆழமான ஆனால் எல்லாமே அழகான ஒரு தனிமை. பல காலச் சூழல்களிலும் நான் இங்கே நின்றிருக்கிறேன். ஒரு பறவை எங்கிருந்தோ வந்து இந்த காட்டுப் பகுதியில் எச்சமிட அதன் எச்சத்திலிருந்த ஒரு பழத்தின் கொட்டையாய் நான் இருந்தேன் முன்பு...

விதையாய் நான் இருந்த போதும் எனக்குள் ஒரு இயக்கம் இருந்தது, மெல்ல மெல்ல என் பிஞ்சுக்கால்களை மண்ணில் பதித்தேன். மெல்லிய சவ்வுகள் எல்லாம் விதையாய் இருந்த எனக்குள் மெல்ல அறுபட மண்ணில் ஒரு சிறு வேராய் நான் இறங்கிய அந்த தினம் எனக்கு மறக்க முடியாத தினம்தான்...., ஒரு மாதிரி கூச்சத்தோடு மண்ணை தொட்ட என்னை வாரி இழுத்துக் அணைத்துக் கொண்டது இந்த பூமித் தாய்.  மனிதர்களின் வாழ்க்கையில் சிசுவினை பிறப்பித்து விட்டு தாய் நகர்ந்து விடுவாள்....

ஆனால் இங்கே....

சிசுவினை தன்னிடம் இழுத்துக் கொண்டு காலெமெல்லாம் கூடவேதான் இந்த தாயிருப்பாள். அவளின் தொடர்பின்றி நான் இல்லை. நான் பரப்பிய வேர்கள் மண்ணுக்குள் நுழைய சிரமப்பட்ட காலங்களில் எல்லாம் ஒரு மழையோ இல்லை இரவு நேர பனியோ பூமித்தாயோடு கூடிக் கலந்து மெல்ல அவளை இலகுவாக்கி நான் உட்செல்ல இடம் கொடுத்து இருக்கின்றன.

பிஞ்சாய் நான் கண் மூடிய படியே மண்ணுக்குள் அமிழ்ந்து முதன் முதலாய் என்னுள் முலைப்பாலாய் என்னுள் செலுத்திய நீர்தான் என் உயிரின் முதல் வித்து. ஒரு துளியினை எனக்குள் அனுப்பி...உற்சாகமாய் தாய் பசுவின் முலை முட்டும் ஒரு கன்றினைப் போல பூமியை மெல்ல மெல்ல முட்டி, முட்டி மோதி சிலிர்ப்பாய் சிறு துளிர்ப்பினை இலைகளாக்கி தலை தூக்கி நான் பூமியை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த போது சடாரென்று சூரியனின் ஒளி எனக்குள் ஊடுருவ எனக்கான உணவு செய்யும் ஒருவித்தையை நானே புரிந்து கொண்டேன்....

அங்கும் இங்கும் அலையும் காற்றினை சுவாசித்து, சுவாசித்து பிராணனை என்னுள் ஆழமாய்  நிரப்பிக் கொண்டேன்..! நான் உயிர்வாழ ஒரு கூட்டுக் கலவையான காற்றும், உணவு செய்ய ஒரு கூட்டுக் கலவையான காற்றும் என்னைக் கேட்க்காமலேயே எனக்கு உதவி செய்ய...நானே நானாய் இருக்க...என்னைச் சுற்றி இருந்த எல்லாமே உதவின..

நான் தனிதான் இருந்தாலும் கூட்டினால் கிடைத்த தனிமை இது. நான் மெளனமாய் இருப்பதற்கு என்னைச் சுற்றி இருக்கும் நிறைய சப்தங்கள் எனக்கு உதவி இருக்கின்றன. தட்டுத் தடுமாறி மெல்ல மெல்ல வேர்பிடித்து நிதானமாய் நான் வளர வளர நான் பலமானேன்....

கிளைகளானேன்...பல இளைகளானேன்....பருவம் எய்தி மெல்ல மொட்டுக்களாய் என் பருவத்தின் எழுச்சியினை வெளிப்படுத்தினேன்....பூவானேன்....வண்டுகளோடு கூடிக் கூடிப் பின் காயானேன்...பின் பழுத்த பழமானேன்...! தனித்திருந்த நான்  ஒரு கட்டத்தில் பெரும் கூட்டத்திற்கு சொந்தமாயும் ஆகிப்போனேன்....

எங்கெங்கிருந்தோ பறவைகளும், பல்லிகளும், பாம்புகளும், பூச்சிகளும், பல ஜீவராசிகளும் என்னிடம் வரும்..! நான் முழு உறக்கமோ அல்லது விழிப்போ இல்லாத மத்திமத்தில் எப்போதும் ஒரு மோன நிலையில் இருக்கும் ஒரு உயிர் ஆனால் என்னிடம் வரும் யாவும் இரவுகளில் உறங்கும், பகற் பொழுதில் சண்டையிடும், தத்தம் அலகு கொண்டு பழங்களாய் பரவிக் கிடக்கும் என்னை குத்திக் கிழித்து தன் பசி தீர்க்கும்.......

சில விலங்குகள் என் மீது உராய்ந்து உராய்ந்து ஏதோ ஒரு சுகம் தேடும்...! சில தன் கூடு கட்ட என்னை துளையிடும்...., எல்லாம் வலிதான் ஆனால் அதுவும் சுகம்தான். நான் என்ற என்னை எனக்காக மட்டும் வைத்து கொண்டு நகர்தல் இந்த பிரபஞ்ச இயக்கத்திற்கு முரணானது...

சார்புடைமை என்பது பிரபஞ்ச நியதி. நான் வாழ நான் நிறைய பேரைச் சார்ந்திருந்தேன்....இருக்கிறேன்....இருப்பேன்...! அப்படித்தான் தான் வாழ என்னைச் சார்ந்து மற்றவை இருக்கின்றன...! கூட்டமாய் கோடி பேர் வந்தாலும், ஆடிப்பாடி சிரித்தாலும், உண்டு களித்து சென்றாலும், நிழலில் ஓய்ந்து உறங்கி மகிழ்ந்தாலும் நிகழ்வுகளாய் பகிர்தலாய் மட்டுமே பயணிக்கிறது எங்கள் உறவு...

நிபந்தனைகளோடு யாரும் வருவதுமில்லை. நிபந்தனைகளோடு யாரும் செல்வதும் இல்லை. நான் இருக்கிறேன்... .என்னைச் சுற்றி எல்லாம் நிகழும், செல்லும்...எங்களுக்குள் எந்த உறவுப் பரிமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் கிடையாது.

நிலத்தில் நீர் வற்றிப் போய், மழை பெய்யாமல் போன காலங்களும் உண்டு, அப்போதெல்லாம் தண்ணீர் இல்லாமல் நான் கருகி இலைகளெல்லாம் உதிரிந்து உயிர்ப் போராட்டம் கூட நடத்தி இருக்கிறேன். எனக்கு வலிக்கிறது என்று அதை நான் வேறு யாருக்கும் மாற்ற நினைத்ததில்லை....

செழித்து இருக்கும் போது என்னோடு கொஞ்சிக் குலாவிய குயில்களும், கோட்டன்களும், காகங்களும், இன்ன பிற பறவைகளும், நிழழுக்காய் என்னிடம் ஒதுங்கிப் பாராட்டிய மனிதர்களும், மனம் மகிழ்ந்த விலங்குகளும் என்னிடம் நெருங்கக் கூட இல்லை....

நான் செழித்திருந்தேன்..அவை என்னை இருப்பாக்கிக் கொண்டன. நான் பட்டுப் போக ஆரம்பித்தேன் அவை இடம்பெயர்ந்து விட்டன. நாளை மீண்டும் செழிப்பாவேன் அவை மீண்டும் வரும்.  இது நியதி.....இதில் சந்தோசமும் இல்லை துக்கமும் இல்லை...!

உறவுகளை உரிமைகளாக எடுத்துக் கொள்ளும் போது வலியும் கூடிப் போகிறது வாழ்க்கையும் வெறுத்துப் போகிறது. உறவுகளும் இன்ன பிற சுக துக்கங்களும் வெறும் நிகழ்வுகள்தான்! நானும் ஒரு நிகழ்வு....இங்கே வருத்தப்பட ஒன்றுமில்லை...!

வாழ்க்கையின் நகர்வோடு நான் நகர்கிறேன் என்னைச் சுற்றியும் எல்லாமும் நகர்கின்றன.....! இதோ இன்று வேர் பிடித்து பிரமாண்டமாய் ஒரு அரசனாய் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.....நாளை வேரோடு சாய்ந்து வீழவும் செய்வேன்.... ஆழமான புரிதல்களோடு எப்போதும் பரஸ்பரம் அன்பை மட்டுமே பகிரத் தெரிந்திருக்கும் ஒரு உயிர்...அவ்வளவே..!

என்னைப் பொறுத்த மட்டில் என் வாழ்க்கை ஒரு தவம். புலன்கள் இல்லாமல் உடலே உணர்வாய், உணர்வே புத்தியாய், புத்தியே புரிதலாய் ஆழமான சுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது என் தவம்.....

" எலேய்...........கிறுக்குப் பயலே....பர்மாக்காரரோட மரத்தடியில நின்னுகிட்டு என்ன ரோசிச்சுக்கிட்டு இருக்க....மாட்டப் பத்துடா கூதற....."

யாரோ வேகமாய் கத்த சட்டென்று முடிச்சுக்கள் அவிழ்த்து நான் மனிதனானேன்....மரம் பர்மாகாரருக்கு சொந்தமாகிப் போனது......!


தேவா.  S



Comments

che karu said…
arputham vazha valamutan valarga tamizhudan

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த