Skip to main content

நான் உனக்கு யாருமில்லை...!



நீ எழுதி வைத்த
பழைய கவிதைகளை
மீண்டும் எடுத்து வாசிக்கிறேன்
கடந்து போன வாழ்க்கையை
மீண்டுமொரு முறை பார்க்கும்
ஒரு புகைப்படத் தொகுப்பை போல
ப்ரியங்களை நாம் சுமந்து திரிந்த
அந்தக் தருணங்களை மீண்டும்
மீட்டெத்துக் கொடுக்கும் வரிகளை
வாசித்துக் கொண்டிருக்கையில்
என்னை மீறி வரும் கண்ணீரில்
ஒளிந்திருப்பது உன் மீதான காதலா
இல்லை
உன்னை பிரிந்த ஏக்கமா
என்ற கேள்வியொன்று எட்டிப்பார்த்தது....
நான் அதன் முனை ஒடித்து எறிந்து விட்டு
மீண்டும் உன் வரிகளுக்குள் மூழ்குகிறேன்...

உன்  வார்த்தைகளுக்குள் முதல் முதலாய்
நான் உன்னைத் தேடாமல்
என்னைத் தேட ஆரம்பித்திருந்தேன்
நீ விட்டுச் சென்றிருக்கும் இந்த நீண்ட நெடிய
மெளனத்தில் என்னையே நான் பார்க்க
நீ....கற்றுக் கொடுத்திருப்பதாய் எனக்கு தோன்றுகிறது;
ஒரு பெருமூச்சுடன்.....
என் வீட்டுச் ஜன்னலைத் திறக்கிறேன்....
அப்போதுதான் பெய்து முடித்திருந்த
மழையை சேகரித்து வைத்திருந்த
மல்லிகைச் செடியொன்று....
ஒவ்வொரு துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது...,

ஜன்னல் கம்பிகளில் முகம் புதைக்கிறேன்
வேகமாய் உன் ஞாபகங்கள் ஓடி வந்து
என்னை சூழ்ந்து கொள்கின்றன....
மிட்டாய் விற்பவனைச் சூழும்
சிறுபிள்ளைகளைப் போல....;
யாரோ ஒரு பெண்ணொருத்தி
கையில் காய்கறிக் கூடையுடன்
பிள்ளையை இடுப்பில் சுமந்து
என் ஜன்னலைக் கடந்து செல்கிறாள்
அவள் உன்னைப் போலவே இருக்கிறாள்..
நீயாகவும் இருக்கக் கூடும்...,

என் நினைவுகளைக் கலைத்துப் போட்டு
அதிரடியாய் என் அறைக்குள் நுழைந்த காற்றொன்று
உன் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறது...
எதேச்சையாய் ஏதோ ஒரு பக்கத்தில்
நான் உனக்கு யாருமில்லை என்று
தலைப்பிட்டு நீ எழுதியிருக்கும் கவிதை ஒன்று
நீ எனக்கு யாருமில்லை என்று சொல்கிறது....
என் வீட்டு மல்லிகைச் செடி இன்னமும்
சொட்டிக் கொண்டிருக்கிறது...
சேமித்து வைத்திருந்த பெரு மழையின்
சிறு துளிகளை....!


தேவா. S



Comments

நல்ல கவிதை ......


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Shankar M said…
நான் உனக்கு யாருமில்லை என்று என்றோ எழுதிய கவிதையை வாசித்தாலும், எனக்கு நீ யாதுமாகிவிட்டாய் என்றும் சொல்கிறாயோ ?? கண்ணீரில் எட்டிப் பார்ப்பது பிரிந்த ஏக்கம்... அந்த ஏக்கமே காதல். ஏதோ ஒன்றில்லை ; இரெண்டுமே!! வார்த்தையே நீ ஆனதால், வார்த்தைக்குள் 'என்னை' தேடுகிறாயோ ? பார்க்கும் இடங்களிலெல்லாம் என்று பாரதியையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறாய்.... அதிரடியாய் களவாடுப்பட்டாய் என்பதை கடைசியில் சொல்லி, அதை எதிர்ப்பார்த்தோ என்னவோ, 'நான் உனக்கு யாருமில்லை' என்று கவிதையில் சொன்ன விதம் அற்புதம்...
ஆத்மா said…
சில நொடிகளில் வாசித்து முடிக்கும் கவிதை தான் ஆனால் உள்வாங்கிய விடயங்கள்.. வார்த்தைக் கோர்ப்புக்கு பயன்படுத்திய வரிகள் அத்தனையும் யுகங்கள் பலதின் அனுபவமும் ஏக்கமுமாககத் தெரிகிறது...

அழகான கவிதை
//என் வீட்டுச் ஜன்னலைத் திறக்கிறேன்....
அப்போதுதான் பெய்து முடித்திருந்த
மழையை சேகரித்து வைத்திருந்த
மல்லிகைச் செடியொன்று....
ஒவ்வொரு துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது...,//

அதுவோ என்று நினைக்க வை
த்தது

//என் வீட்டு மல்லிகைச் செடி இன்னமும்
சொட்டிக் கொண்டிருக்கிறது...
சேமித்து வைத்திருந்த பெரு மழையின்
சிறு துளிகளை....!//

அதுவே என்று உணர்த்தியது....

மல்லிகையின் வாசனையை மழை அதிகப்படுத்துகிறது.

சோகங்களால் இழையோடிய காதல்க் கவிதை வரிகள் மிகவும் சிறாப்பாக உள்ளது .வாழ்த்துக்கள் சகோதரரே .
உங்கள் கவிதையினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம்
செய்துள்ளனர் .மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .மிக்க நன்றி பகிர்வுக்கு .

http://www.kousalyaraj.com/2012/10/2.html
மனதில் அடைத்து வைக்கப்பட்ட காதல் மடை திறந்து வெளிபடுகிறது
தனிமை பெரு வெளியில் அற்புதமான படைப்பு சூழலுக்கு அழைத்து செல்கிறது படிப்பவர்களை .........உங்கள் தளம் தோழி கௌசல்யா மூலம் அறிமுகம் .....தொடருகிறேன்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த