ருத்ரையா போன்ற படைப்பாளிகள் மீது விழாத வெளிச்சங்கள் எல்லாம் வெளிச்சங்களே அல்ல, அவை, அடர் இருட்டு என்றே நாம் கற்பிதம் கொள்ள வேண்டும். 1978களின் வாக்கிலேயே திரைப்படங்கள் பொழுது போக்க மட்டுமல்ல அதையும் கடந்த வாழ்வியல் பார்வைகளைப் பதிவு செய்பவை என்று உணர்ந்து, அதைப் புரியவைக்க முயன்ற ஒரு மாபெரும் கலைஞன்தான் இந்த ருத்ரைய்யா. எதார்த்தத்தை பதிவு செய்ய முயல்பவர்களை வெகுஜனம் எப்போதுமே புறக்கணித்தான் செய்திருக்கிறது. அது எழுத்துலகாய் இருந்தாலும் சரி, திரையுலகாய் இருந்தாலும் சரி, அரசியல் வாழ்க்கையாய் இருந்தாலும் சரி...!
பிரமாண்டங்களைப் பற்றிய கனவினில் எப்போதுமே பரம ஏழையாய் வாழ பழக்கப்பட்டுக் கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு " அவள் அப்படித்தான் " என்னும் படத்தை புரிந்து கொள்ள காலம் அப்போது வாய்ப்பளித்திருக்கவில்லை. அதனாலேயே அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவி இருக்கக் கூடும். தற்போது தொழில்நுட்ப வசதிகள் பெருகிப் போயிருக்கும் சமகாலத்தில் கூட மாஸ் என்டெர்டெய்னர் என்று சொல்லக்கூடிய பொழுது போக்குச் சித்திரங்களை மட்டுமே ரீமேக் செய்யத் தமிழ் தயாரிப்பு உலகமும் இயக்குனர் உலகமும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. காலங்கள் கடந்தும் கலைப்படைப்புக்களை ரசிக்க முன் வராத வறட்சியான ரசிப்புத் தன்மையிலேயே இந்த சமூகம் இன்னமும் இருப்பதற்கு இதற்கு மேலொன்றும் சாட்சி தேவையில்லை.
மூன்று மணிநேரம் நான் காணும் சினிமாவில் நிறைய பொய்கள் எனக்கு வேண்டும், அந்த மூன்று மணி நேரமும் நான் என்னை மறந்து திரையில் நிகழும் அசாகாய சூர நிகழ்வுகளில் வாய் பிளந்து லயித்திருக்க வேண்டும்..அதாவது ' என் பணம் என் என்ஜாய்ன்மெண்ட்... ' என்ற சுயநலத்துக்குள் நாம் விழுந்து கிடப்பதாலேயேதான்...ஆகச் சிறந்த கலைப் படைப்புக்களை நாம் பெரும்பாலும் ஆதரிப்பதில்லை.
நான் என்னை மறக்க வேண்டும் என்று போதை ஊசிப் போட்டுக் கொள்வதும், மூன்று மணி நேர சினிமாவில் நான் சந்தோசமாய் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைப்பதும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான மனோபாவங்கள்தான். நிதர்சனத்தை உற்றுப் பார்க்க எல்லோருக்கும் பயம். உண்மையைப் ஒளித்து வைத்துவிட்டு அரிதாரம் பூசிக் கொண்டு பொய்யான புன்னகையோடு வலம் வரும் மனப் பிறழ்ச்சி கொண்ட வாழ்க்கையை நாமே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டோம். அதனாலேயே திரையில் மஞ்சுக்கள் " அவள் அப்படித்தானு" க்காய் பேசும் போது நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போகிறது.
வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் காதல் படிக்கட்டுகளில் ஏறி வந்து ஒரு பெண்ணின் கையைத் தொட்டவனுக்கு வசதியான வேறு ஒரு பெண் கிடைத்தவுடன் அவன் குடும்ப சூழலுக்காக காதலை துறக்க முயல்கிறான். சமூகத்தின் பார்வையில் அவனும் தியாகி, அவளும் தியாகி என்றாகிறது ஆனால் இழப்பு பெண்ணின் மீது மட்டுமே நிழலாய் படிந்து கொள்கிறது.
தாம்பத்யம், கற்பு, வாழ்க்கை, தாலி, ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதையெல்லாம் ஒரு தாய் இச்சைகளுக்காக உடைத்தெறிவதும், பின் தகப்பன் முன்பு பத்தினி என்று பொய் சொல்லி அழுவதும், எல்லாம் தெரிந்தும் சமூகத்திற்கு பயந்து அந்த தகப்பன் நடத்தை சரியில்லாத தன் தாயோடு ஒண்டிக் கொண்டு வாழ்வதும் என்று பார்க்குமொரு சிறுமி என்ன யோசிக்க முடியுமென்று சொல்லுங்கள்....?
திருமணம் என்னும் போலியான கட்டமைப்பையும் கட்டுப்பட்டு வாழும் வாழ்க்கையையும் அவள் நடிப்பாகத்தானே பார்க்க முடியும்...? யாரும் பார்க்கவில்லை...எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் பிடித்தவர்களுக்காக எல்லை தாண்ட யாரும் இங்கே தயங்கமாட்டார்கள்...என்று நான் அடிக்கடி சொல்வதைத்தான்...மஞ்சு என்னும் கதாபாத்திரம் உணர்ந்து நகர்வதாக எனக்கு படம் பார்க்கும் போது புரிந்தது.
புரிதல் இல்லாமல் திருமணமென்னும் சடங்கினுள் அகப்பட்டுக் கொண்டு நித்தம் இங்கே சங்கடங்களை அனுபவித்துக் கொண்டே கலாச்சாரம் பற்றி பேசும் அறியாமைகள் கிழித்தெறியப்படத்தானே வேண்டும்...? விட்டு கொடுத்தல் என்பது தியகமாய் இங்கே பார்ப்படுகிறது. விட்டுக் கொடுத்தல் என்பது தன்னை கஷ்டப்படுத்திக் கொண்டு தனது விருப்பங்களை மறைத்து வாழும் ஒரு நடிப்பு என்று சொல்லப்படும் போது...இங்கே மிகைப்பட்டவர்கள் அதை எதிர்க்கிறார்கள். ஏனெனில் நடித்து நடித்து இங்கே நடிப்பே இயல்பாகிப் போயிருக்கிறது.
மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடாய் கட்டியமைக்கப்பட்டிருக்கும் அவள் அப்படித்தானில் அவள் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் அரிதாரம் பூசிக் கொண்டவர்கள். மற்றவர்கள் முன்பு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நடிக்கும் நடிகர்கள். இப்படியான போலி மனிதர்கள் நிறைந்த நம் சமூகத்தால் மஞ்சுக்கள் பேசும் எதார்த்ததை எதிர்க் கொள்ள முடியாமல் போவதால் இயல்பான மஞ்சுக்கள் வித்தியாசமானவர்களாகிப் போய் விடுகிறார்கள்... . வித்தியாசமான போலிகள் இயல்பானவர்களாய் பார்க்கப்படுகிறார்கள்.
இது ஒரு மனித முரண்.
' முழு வானில் ஒரு பாதை ' என்று பெண்களின் பிரச்சினையை ஆவணப்படம் எடுக்கும் அருண், அருணுக்கு உதவி செய்ய மஞ்சுவை அனுப்பும் அவன் நண்பன் தியாகு என்று இயக்குனர் செதுக்கி இருக்கும் பாத்திரங்களின் நிஜப் பெயரை சொல்லவே எனக்கு தயக்கமாயிருக்கிறது. நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு அந்த கலைப்படைப்பை நான் களங்கப்படுத்த விரும்பவும் இல்லை, ஆதாலால் பாத்திரத்தின் பெயர்களுடனேயே நாம் பயணிப்போம்.
தியாகுவிற்கு வாழ்க்கை கொடுத்திருக்கும் பாடம் வேறு....! அவனை பொறுத்தவரைக்கும் பெண் என்பவள் சந்தோசத்திற்கு மட்டுமே...அப்படியாய் அனுபவிப்பதற்காகவே பெண்ணை போற்றவேண்டும் என்று அந்த பாத்திரம் பேசுவதும் இயல்பு, அழகு. ஒரு கட்டத்தில் தனியறையில் மஞ்சுவை சந்திக்கும் போது ' எனக்கு ஆண் தேவைதான் ஆனால் அந்த ஆண் நீ இல்லை..' என்று கூறி மஞ்சு தியாகுவை தனது மேனேஜர் என்று பார்க்காமல் கன்னத்தில் அறையும் இடம் எதார்த்தம் என்றால்....
அதற்கு அடுத்த காட்சியில் தியாகு பாத்திரம்....தனது அலுவலக அறையில், ' ஒரு ஆண் தனிமையில் ஒரு பெண்ணை சந்திக்கும் போது பெரும்பாலும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படித்தான் நான் நடந்து கொண்டேன்.....ஒரு பெண் அந்தச் சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நீ நடந்து கொண்டாய்....இட்ஸ் ஓ.கே....' என்று கூறிவிட்டு எதார்த்தமாய் நகரும் இடம்....அட்டகாசம்...!
கூடப்படுத்து படுக்கையைப் பகிர்ந்து கொண்ட நாய் ஒன்று சமூகத்தின் முன்பு அவளை தங்கை என்று அடையாளப்படுத்தும் போது அதற்கு பதிலாய் தன்னை தேவடியா என்றே கூறியிருக்கலாம் என்று...மஞ்சு சீறி எழும் இடத்தில் பெண்களை போகத்திற்காய் பயன் படுத்திக் கொள்ளும் பெரும்பாலான ஆண்களை தூக்கிலேற்றுகிறார் படத்தின் இயக்குனர்.
நிஜத்திற்கு அரிதாரம் தேவையில்லை அது எப்போதும் இயல்பாகவே நகர்கிறது. பெண்களைப் பற்றிய புரிதல் கொண்ட மென்மையான கதாபாத்திரமாய் வரும் அருண் மிகவும் பாதுகாப்பானவன் தான் என்றாலும், கடந்த காலம் கொடுத்திருக்கும் வடுக்கள் அருணையும் மஞ்சுவிடம் நெருங்கவிடாமல் சுட்டுப் பொசுக்கி விடுகிறது. அந்த வடு எழுப்பியிருக்கும் பாதுகாப்பு சுவரே அவளை மீண்டும் தனிமையில் தள்ளியும் விடுகிறது.
குறைந்த பட்சம் இன்னும் ஒரு மாதத்திற்கு என் தூக்கத்தை இந்த திரைப்படம் பறித்துக் கொள்ளப் போவதோடு பல பரிமாணங்களில் சிந்திக்கவும் வைக்கப் போகிறது. பெண்ணை போகமாக பார்க்கும் மனோபாவம் இன்னமும் இந்த சமூகத்திலிருந்து போய்விடவில்லை. அது நவீன சமூக இணைவுத்தளங்களின் வழியே நாகரீகமாய் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதே போல பெண்களும் முழுமையாக தங்களை அறிவு சார்ந்து வெளிப்படுத்திக் கொள்வதும் இல்லை...பெரும்பாலும்க் அழகு சார்ந்தே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
ஒரு பெண், ஆணிடம் ஏமாந்து போகும் அளவிற்கு இன்னமும் இருப்பது அவள் பலவீனம் அல்ல....அவள் நம்பிக்கையின் ஆழம் அத்தகையது. ஆணும், பெண்ணும் அறிவு சார்ந்த பார்வைகளோடு....பழகி காமம் என்னும் ஒரு உணர்வினைக் கடந்து நிற்கும் காலம் இன்னும் நம் சமூகத்திற்குள் அடியெடுத்து வைக்கவில்லை. இன்னமும் பெண்ணின் புகைப்படத்தைப் போட்டு அவயங்களைக் கிண்டலடித்துக் கொண்டு அது இயல்புதான் என்று சப்பைக்கட்டுக் கட்டிக் கொள்ளும் மேதாவிகளாலும், பாரதி கண்ட புதுமைப் பெண்கள் தாங்கள் என்று கூறிக் கொண்டு எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் பெண்களாலும் இந்த சமூகம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கறைகள் எல்லாம் களையப்படவேண்டுமெனில் இந்த சமூகம் ருத்ரையாக்கள் போன்றவர்களுக்கு ஆதவளித்து ' அவள் அப்படித்தான்..' போன்ற படங்களை வெகு விமர்ச்சையாக வரவேற்கவும் வேண்டும். மீண்டுமொரு முறை....அவள் அப்படித்தான்...மீள் உருவாக்கம் செய்யப்படவேண்டும். தமிழின் கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படமான அவள் அப்படித்தான்....வண்ணங்களில் ஜொலிக்க வேண்டிய வைரம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை....!
எரிந்து போன வீடு,
முறிந்து போன உறவு,
கலைந்து போன கனவுகள்,
சுமக்க முடியாத சோகங்கள்,
அவள் மீண்டும் இறந்து போனாள்,
அவள்...
இறப்பாள், பிறப்பாள், இறப்பாள். . . .
....
....
....
....
' அவள் அப்படித்தான்....'
தேவா. S
Comments
ரசனையான விமர்சனத்திற்கு நன்றி...
tm4