Skip to main content

தொடரும் கற்பழிப்பு கொலைகள்...தலை குனிந்து கொள் இந்தியாவே!

















கடைசியில் அவள் இறந்து போய்விட்டாள். எப்படியாவது பிழைத்து எழுந்து வந்துவிடமாட்டாளா என்ற என்னைப் போன்றவர்களின் ஏக்கம் இன்று அதிகாலையில் தோற்றுப் போய்விட்டது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை தூக்கிலேற்றி கொன்று விடலாம், தெருவில் நிற்கவைத்து கல்லால் அடித்தே கொல்லலம், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாய் பொதுவில் நிற்க வைத்து அறுத்து எரியலாம், கூட்டத்துக்குள் நிற்கவைத்து அடித்து கொல்லலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செய்வார்கள் செய்யவேண்டும்...!!!!!!

ஆனால்...

தாமினி போன்ற எங்கள் பெண் பிள்ளைகளை எங்கள் தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்து அம்மா, தாயே பெண்ணே என்று கொஞ்சிய எங்களின் ஈரக்குலைகளில் தலை தூக்கி இருக்கும் பயத்தை எப்படி போக்கும் இந்த தேசம்...? பெண்களை எப்போதும் செக்ஸ் அப்பீலாய் பார்க்கும் காட்டுமிராண்டி மனிதர்களை மொத்தமாய் அழித்தொழுக்க ஏதேனும் யுத்தி உள்ளதா...அதிகாரவர்க்கமே...? பகுத்தறிவுள்ள என் சமூகமே...????

23 வயதில் பொசுக்கப்பட்ட என் குழந்தையே...! எத்தனை வேதனையோடு நீ மரித்துப் போயிருப்பாய் அம்மா...? உன்னை போன்ற பிள்ளைகள் இந்த தேசம் முழுதும் வயது வித்தியாசம் பாரமால் காமவெறி பிடித்த மூளை பிறழ்ச்சிக்குட்பட்ட மிருகங்களால் சிதைக்கப்படும் அவலம் என்று தீரும் என்று நீ கலங்கி உயிர் விட்டாயா பெண்ணே...? நான் பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்திற்காய் சிதைக்கப்பட்டு  விட்டேனே ....என்று கூனிக் குறுகி வலியோடு போய்ச் சேர்ந்தாயா என் மகளே...? வாழ வேண்டும் என்ற என் ஆசையை ஏன் நிராகரித்தாய் காலமே... என்று தேம்பலோடு நீ உடல் விட்டாயா தாயே? ஏ தேசமே உன்னை நம்பித்தானே நான் வீதியில் இறங்கினேன் என்னை ஏன் தின்று போட்டாய் என்ற கோபத்தைக் கேள்வியாக்கியபடியே மரணித்துப் போனாயா என் குழந்தையே....?????...?

உன் உடலில் சொருகப்பட்ட இரும்புத்தடி இந்த தேசத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் மனித நேயத்தின் மீதும் பெண்கள் உரிமையின் மீதும் விழுந்த அடி.....! மன நலமில்லாத மனிதர்களை உள்ளடக்கி உப்பிப் பெருத்துக் கொண்டிருக்கும் இந்த தேசத்தின் எல்லா பகுதிகளிலும் அலையும் இந்த மிருகங்களை யார் அழித்தொழிப்பது...? 

காமத்தைப் பற்றி பேசினாலே தவறு என்று போதிக்கும் எல்லா தத்துவங்களையும் தூக்கிலேற்றி விட்டு....சாதாரண மனிதனுக்கு காமத்தின் வேர்கள் பற்றி போதிக்க சரியான வழிமுறை இங்கே கிடையாது. பெண்ணை போகத்திற்கான வஸ்துவாய் வர்ணிக்கும் வழிமுறைகளை கொளுத்திப் போட திரணியுள்ள மனிதர்கள் இங்கே கிடையவே கிடையாது.

வேலை வாய்ப்பின்மை, வறுமை, எரிச்சல், விரக்தி என்று எல்லாம் ஒரு இடத்தில் நின்று உந்திக் கொடுக்க காமம் பற்றிய புரிதலின்றி மூன்று வயது குழந்தையையும் சின்னாபின்னப் படுத்துகின்றன பகுத்தறிவு செத்துப் போன மிருகங்கள். இந்த சமூகம் கட்டி எழுப்பப்படுவது பெற்றோர்களால்,  பெற்றோர்களின் பிள்ளைகள் பற்றிய கவனம் சிதறிப்போவது முறையற்ற வாழ்க்கை முறையினால், முறையற்ற வாழ்க்கை முறைக்கும், போட்டிக்கும், பொறாமைக்கும், சூழல் காரணாமாகிறது. சரியில்லாத சூழலுக்கு நம்மை வழி நடத்துபவர்கள் காரணமாகிறார்கள். வழி நடத்துவார்கள் என்று நாம் நம்புபவர்கள் பேராசைப் பிசாசாய் இருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள்.. இந்த முரணின் முடிச்சு விழுந்த முதல் இடம் எதுவென்று...?

ஒழுக்கம் என்று இங்கே போதிக்கப்பட்டிருப்பது எல்லாமே புரையோடிப்போன தவறுகள்..! நள்ளிரவில் பெண் வெளியே வருவது தவறு என்று  இன்னமும் நம்பும் பேசும் புரையோடிப் போன மூளைகள் பல கோடிகளை எளிதாய் தாண்டிவிடும். அவள் உடுத்துவது தவறு என்று போதிக்கும் மடையர்கள் தன் சகோதரியையும் தாயையும், உடுத்துவதில் தவறு இருந்தது, அதனால் இச்சை கொண்டு புணர்ந்தேன் என்று சொல்ல முடியுமா?

புனிதா என்ற சிறு பூவை கொன்றழித்த சுப்பையா என்னும் கொடியவனின் வாக்கு மூலத்தில் அவனின் செயலுக்கு காரணமாய் மதுவைச் சொல்கிறான்...? மதுவை பொதுவாக்கி தெருவெங்கும் ஓடவிட்ட அரசியல்வாதிகளை எதுவும் செய்வதற்கு இங்கே சட்டம் ஏதும் இல்லைதானே...?

கொலைகளுக்குத் தண்டனைகள் கொடுப்பது நமது கோபத்தின் வெளிப்பாடு. கோபத்தை மிச்சம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதை தீர்த்துக் கொள்ள கொடியவர்களை தண்டித்தே ஆகவேண்டும் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துகளும் இருக்க முடியாது....என்று நாம் சொல்லும் அதே நேரத்தில் மன நலம் குன்றிய மிருங்கங்கள் நிறைந்த இந்த சமூகத்தின் வேரினை எப்படி சரி செய்வது என்றும் யோசிக்க வேண்டும்...!

பெண்ணின் புகைப்படத்தைப் எடுத்துப் போட்டு அதை விமர்சித்து விளையாடும் இணையப்புத்திகளுக்கு கீழே ஒளிந்து கிடப்பது இந்த வக்கிர மிருகத்தின் குட்டிகள்தான். இவை பதுங்கிக் கிடந்தே வக்கிர புத்தியோடு செத்தும் போகலாம்....இப்படி டெல்லி பேருந்தில் பாய்ந்து தாமினியை அழித்தது போல  அழிக்கவும் செய்யலாம். சூழல் செயலை தீர்மானிக்க வக்கிர மிருகம் இச்சைகளோடு பதுங்கியே கிடக்கிறது.

பெண் என்பவள் ஆணைப் போல இன்னொரு ஜீவன். அவ்வளவுதானே...!  ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயல்பான பரிமாற்றங்கள் ஏற்பட்டு புரிதல் ஏற்படத்தான் இருபாலாரும் பயிலும் பள்ளிகளும், கல்லூரிகளும் கொண்டு வரப்பட்டன. இதை ஆரம்பப்பள்ளிகளில் இருந்து மேற்படிப்புகள் படித்து முடிக்கும் வரை உறுதியான சட்டமாக்க வேண்டும்.

ஏதேதோ கருத்துக்களை எனது ஆற்றமையில் நான் பேசிக் கொண்டே செல்லலாம். இங்கே மாறவேண்டிய மனிதர்களை மாற்ற வேண்டிய சமூகக் கடமை அரசு இயந்திரங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இருக்கிறது. குற்றம் புரிபவன் காட்டிலிருந்து நாட்டுக்குள் திடீரென்று நுழைந்தவன் அல்ல.. அவன் நம்மைச் சுற்றி வாழும் சக மனிதன். யாரோ பெற்ற பிள்ளைகள், யாருக்கோ சகோதரர்கள், யாருக்கோ நண்பர்கள், யாருக்கோ உறவினர்கள்...யாருக்கோ மாணவர்கள்...

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இது போன்ற மனிதர்கள் உருவாவதின் முதல் முடிச்சு எங்கே விழுகிறது என்று யோசியுங்கள்...! விளையாட்டுக்காய் பேசுகிறோம் என்று பெண்ணைக் கிண்டல் செய்து உடல் ரீதியாகவும், பாலினம் சார்ந்தும் பேசும் பேச்சுக்களை வக்கிரமான பார்வைகளாக கருதி தவிர்த்துவிடுங்கள். அறிவு சார்ந்து ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் பார்க்கும் ஒரு பக்குவ நிலைக்கு நாம் நகர்வதோடு, நமது பிள்ளைகளுக்கும் அதை சரியாக போதிக்கவும் செய்வோம்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் அது டெல்லியோடு நின்றுவிடாமல் தேசத்தின் எல்லா பகுதியிலும் சமமாய் உற்று நோக்கப்பட்டு இப்படியான மிருகங்களை களை எடுக்கவேண்டும்.

நாட்டின் தலைநகருக்கு ஒரு தர்மத்தையும் தென் கோடி புனிதாக்களுக்கு ஒரு தர்மத்தையும் இந்திய தேசத்தின் ஊடகங்கள் கடை பிடிக்காமல் அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி தேசம் முழுமைக்கும் விழிப்புணர்வினை நேர்மையாய்க் கொடுக்கவேண்டும்...

சில நேரங்களில் ஏன் பிறந்தோம் என்று நமக்குத் தோன்றும்தானே....அது போலத்தான் இன்று ஏன்  இப்படியான இழிவான மிருகங்களை சுட்டிக் குறிக்கும் ஒரு இனமாய் பிறந்தோம் என்று கூனிக் குறுகிக் கொள்கிறது என் பகுத்தறிவு புத்தி....!


கண்ணீர் அஞ்சலிகள்...!!!!!!


தேவா. S



Comments

கண்ணீர் அஞ்சலிகள்........,கண்ணீர் அஞ்சலிகள்........,கண்ணீர் அஞ்சலிகள்.......,
ஒவ்வொருவரும் வன்புணர்வு செய்து கொண்டு தான் இருக்கிறோம் வேறு வேறு சந்தர்பக்கங்களில்....கண் மூடி ...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த