Skip to main content

மொழியற்றவனின் வார்த்தைகள்....!



நவீனத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு நான் ஆன்மீகம் பேசுவது கொஞ்சம் பிற்போக்காகத்தான் இருக்கும். அறிவியலை அடையாளமாக்கிக் கொண்டு, இருப்பதை இல்லை என்று மறுப்பவர்களுக்கு கடவுள் என்ற பதமும், ஆன்மா என்ற சொல்லும் மிகுந்த கேலிக்குரியதாய் கூடத் தெரியலாம். எந்த இடத்தில் ஆன்மீகம் பாமரனைச் சென்றடைய யுத்திகள் செய்ததோ அந்த யுத்திகளைக் கொண்டு மேலேறி வராமல் அந்த யுத்திகளுக்கு யுத்திகள் செய்து மூடநம்பிக்கைகளை தங்களின் பைத்தியக்காரத்தனத்தில் இருந்து மேலேற்றிக் கொண்டு வந்து விட்டார்கள் மிகைப்பட்ட மனிதர்கள். மூடநம்பிக்கைகளும், பகட்டு பக்திகள் மட்டுமே புறத்தில் தெரிய....

ஆன்மீகம் என்ற சொல் பகுத்தறிவுக்கு வெகுதூரமாய் போய்விட்டது...!

கடவுளை மறுப்பது பகுத்தறிவு என்று சிந்தனையின் உச்சத்தில் மனிதனின் மனமொரு செய்தியைப் பகிர அதையே அறிவின் உச்சம் என்று நம்பி விட்டான் ஆனால் கடவுள் என்றால் என்ன என்று கூடுதல் கேள்வியொன்றை எழுப்பி மறுப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஆராய இருப்பதெல்லாம் இருப்பதாகிப் போக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயத்தை  நாம் எட்டிப்பிடிக்க முடியும். இந்த எட்டிப்பிடித்தலை நான் ஆன்மீகம் என்று சொல்லலாம், நான் ஆன்மீகம் என்று சொல்கையில் அந்தச் சொல்லை எடுத்துக் கொண்டு போய் ஏதோ ஒரு மதத்திற்குள்ளோ அல்லது கொள்கைக்குள்ளோ அடைத்துப் போட்டு விட்டு நான் சொல்ல வரும் ஆன்மீகத்தை நீங்கள் மறுதலிக்கவும் செய்யலாம்.

என் கேள்வி எல்லாம் என்ன தெரியுமா? எதை நீங்கள் மறுக்க முடியும் இந்த உலகத்தில் என்பதுதான்? உங்களின் பிறப்பு நிகழவே இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா? இறக்கவே மாட்டேன் என்று மறுக்க முடியுமா? பசியை, கோபத்தை, தாகத்தை, காமத்தை எதை மறுக்க முடியும் நம்மால்? நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ஏற்று நகரத்தான் நம்மால் முடியுமே அன்றி எதையும் மறுத்து நகர முடியாது. அடிப்படையில் நிறைய முரண்களும், பித்தலாட்டங்களும் சர்வதேச சமூகத்தில் அரங்கேறி விட்டன கடவுளின் பெயரால்....

பாவம் கடவுள் என்னும் பதம். 

அது ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் எப்போதும் பந்தாடப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. கடவுள் என்ற பெயரை புரிதலில்லாத மூடர்கள் முறையற்ற தங்களின் சுயலாபத்திற்காய் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும் மானுட வாழ்க்கையில் கடவுள் என்னும் பதம் முரண்களை விட அதிக அளவு நன்மைகளையே செய்திருக்கிறது. கடவுள் என்பது தனி மனித திருப்தி என்ற ஒரு உரிமையை எப்போதும் சமூக சீர்திருத்தவாதிகள் என்று சொல்லும் முற்போக்கு வாதிகள் பறித்து விடவே முடியாது. கடவுளின் பெயரைச் சொல்லி இங்கே நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் வன் கொடுமைகளை தடுக்கவேண்டிய கண்டிக்கவேண்டிய எல்லா சமூகப் பொறுப்புகளும் ஆன்ம ரீதியான புரிதல் கொண்ட எல்லா மனிதர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இங்கே ஆன்மீகம் என்பதின் பெயரால் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் மனோதத்துவ முரண்களை முறியடிக்கவேண்டிய கடமையும் உண்மையான ஆன்மப் புரிதல் கொண்டவர்களுக்கே இருக்கிறது.

கடவுள் மறுப்பாளர்கள் கடவுளை மறுப்பதிலும், மூடநம்பிக்கைகளை ஏளனப்படுத்திவதிலுமே நேரத்தை செலவழித்து விடுகிறார்களே அன்றி....தனி மனித ஒழுங்கு, ஆன்மப்புரிதல் போன்றவற்றைப் பற்றி அதிகம் பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் சூட்சுமம் என்னும் புலன் உணர்வுக்கு அப்பாற்பட்டதை நம்பத்தயாரில்லை. பூமி சுற்றுவதை இவர்கள் நம்புவார்கள். சூரியனை அது சுற்றி வருவதையும் இவர்கள் நம்புவார்கள். சூரியனுக்கும் பூமிக்க்கும் இருக்கும் ஈர்ப்பு எப்படிப்பட்டது அல்லது ஏன் ஈர்க்க வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் பேசமாட்டார்கள்.

எப்படி நடந்தது என்று கூறுவார்கள் ஆனால் ஏன் நடக்கவேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு வாழும் வரை வாழ்க்கை இருக்கிறது என்பது வரை மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. மரணமும் ஜனனமும் சும்மா ஒரு உல்ல்லுலாய்க்கு இங்கே ஏற்படுகிறது பிறகு ஒன்றுமே இல்லை என்று இவர்கள் கூறுவதை அறிவின் பார்வையாக ஏற்றுக் கொண்டு என்னால் நகர முடிவதில்லை. என் மனம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறது..? ஏன்....ஏன்..? என்று கேட்டு கேட்டு....கேள்வி கரைந்து போக ஏற்படும் வெற்றிடத்தில் எல்லா ரகசியத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது என்ன ரகசியம்..?

பூமிக்கும் சூரியனுக்கும், சூரியனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இருக்கும் ஈர்ப்பினை ஒத்த ரகசியம் அது. சொல்லிவிட்டால் அது ரகசியம் அல்ல.....!

எந்த ஒரு நாளில் கடவுள் என்பது தனி நபரல்ல என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டதோ, எந்த ஒரு நாளில் சரியான சுமூக இயங்குதலோடு மனதினால் நான் நான் என்று செய்யும் செயல்கள் எல்லாம் என் மரணத்தின் போது என்னை துன்புறுத்தும் என்று புரிந்து கொண்டேனோ..., எந்த ஒரு கணத்தில் உறவுகள், இரத்த பாசம், நட்பு என்னும் தொடர்புகள் எல்லாம் சூழல்கள் உருவாக்கும் மாயஜாலங்கள் என்று எனக்குப் புரிந்ததோ..., எந்த ஒரு நாளில் நான் வெறுமையான ஒரு கூடு, என்னைச் சுற்றி நிகழும் யாவும் என் கடந்தகாலத்தின் தொடர்ச்சிகள், என் எதிர்காலம் என்பது கடந்த காலமும், நிகழ்காலமும் புணர்ந்து ஜனிக்கும் ஒரு சூழல் என்பது விளங்கியதோ.... 

அந்த நாளில் எனக்கு யாரிடமும் எதுவும் சொல்லப் பிடிக்கவில்லை. யாரிடமும் எதுவும் கேட்கவும் பிடிக்கவில்லை. இந்தப் போலி சுழற்சியின் தர்மநியாங்கள்  மீண்டும் மீண்டும் இங்கே பிறப்பதோடு தொடர்புடையது. என் எண்ணங்கள் எனக்கு விளைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பிறந்து, உலகத்துக்கே சக்கரவர்த்தியாகி, இன்பம் துன்பம் எல்லாம் நுகர்ந்து, புகழையும் பணத்தையும் சேர்த்து நான் என்ன செய்யப் போகிறேன்...? எனக்குப் பிறகு யார் யாரோ என்னைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற என் மரணபயத்தின் நீட்சிதான் நான் இந்த சமூகத்தில் ஓடும் ஓட்டம்.

என்னைப் பற்றி நல்லவிதமாய் கோடி பேர்கள் பேசிப் பேசி....அவர்களும் மரித்து...இறுதியில் இந்த சுழற்சி வேறொன்றாய்த்தான் மாறும். நம்மைச் சுற்றி நிறைய வலைகள் பின்னப்பட்டு விட்டன. இந்த நொடியில் இறக்கி வைக்கும் வார்த்தைகள் கூட என் பெரும் பயணத்தை கடக்கும் ஒரு சிறு செயல்தானே அன்றி.. எதையும் விளக்கவோ நிறுவவோ முற்படும் கருத்துக்களின் கோர்வை அல்ல. இவை எல்லாமே வெற்றுக் குமிழிகள்.

நகர்ந்து கொண்டே இருக்கும் நீர்க்குமிழிகள் ஏதோ ஒரு கணத்தில் உடைபட்டுப் போகும். இந்த வார்த்தைகள் உங்களுக்குள் கரைந்து போகவேண்டும் என்பதே எனது ஆசை. இங்கே வாசித்து சிலாகிக்க ஒன்றுமில்லை. ஆச்சர்யப்பட்டு கூக்குரலிட்டு உற்சாக நடனமிட என்னிடம் கவர்ச்சியான லெளகீகம் இல்லை. ஏதேதோ விசயங்களை இணையத்தில் தேடி எடுத்துக் கொடுக்கும் புள்ளி விபரங்களோ, இல்லை எதைப் படித்ததின் தாக்கமோ என்னிடம் இல்லவே இல்லை...

ஆனால்...

என் வார்த்தைகள் உங்களின் அந்திமத்திற்கு உங்களை ஒரு வேளை கூட்டிச் செல்லக் கூடும். தனியே வந்து தனியே செல்ல வேண்டிய பயணத்தினூடே இருக்கும் இறுக்கங்களை உடைத்துப் போடக்கூடும், உங்களின் பெயர் கடந்து, தொழில் கடந்து, பாலினம் கடந்து, உலகத்தின் எல்லா கோட்பாடுகளையும் கடந்து, தடைகளை எல்லாம் உடைத்துப் போட்டு உங்களுக்குள் இருக்கும் என்னையும், எனக்குள் இருக்கும் உங்களையும் அடையாளப்படுத்தக் கூடும். அப்படியான அடையாளப்படுத்துதலில்...

என் பரிசுத்த அன்பும் உங்களின் பரிசுத்த அன்பும் நான், நீ என்னும் எல்லைகளை உடைத்து விட்டு அன்பு என்னும் பெரும் உணர்வாய் அலை அலையாய் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியெங்கும் பரவி சிவமாய் விசுவரூபமெடுத்து நிற்கக்கூடும். இந்த அன்பு சிவமாக, சிவம் அன்பாக...பேரானந்தத் தாண்டவமொன்று இந்த பிரபஞ்சமெங்கும் நிகழக் கூடும்.

சிவம் என்னும் வார்த்தை உங்களின் எனதின் ஆதி உணர்வைக் கிளறக்கூடியது.சிவம் என்பது பெயர் அல்ல. சிவம் என்பது பொருள் அல்ல. சிவம் என்பது உருவம் அல்ல. சிவம் என்பது மனிதரல்ல....சிவம் என்பது கடவுள் அல்ல....

சிவம் என்பது இந்தப் பிரபஞ்சமெங்கும் பரவிக் கிடக்கும் ஒரு உணர்வு நிலை. பிரபஞ்சத்தோடு நமக்கு தொடர்பு இல்லாமல் எப்படி இருக்கும். இந்த பேரியக்கத்தின் ஒரு நிலைத்தோற்றம் தானே நாம்...! சிவம், சிவம் என்று சொல்லி சொல்லி...ஒற்றை முனையில் நினைவினை மடக்கி உள்ளுக்குள் செல்ல புறத்தின் தொடர்பறுந்து போகிறது. வாழ்க்கையை வாழ எத்தனை முரண்களைச் சந்திப்பது? இருப்பவனாக இருப்பதற்கு ஓடிக் கொண்டே இருக்கும் போது ஏற்படும் அயற்சியின் முடிவில் ஏற்படும் விரக்தியை மிகச்சரியாய் இப்படி எழுதி முடித்த பின்பு மறுபடியும் என் ஓட்டம் தொடங்கியாக வேண்டும்...

என் கடவுள் தேடலும், நான் புரிந்த வாழ்க்கையும் எனக்கு நிம்மதியை பெரும் மோட்சத்தைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்க...என்னை பக்குவப்படுத்த என் லெளகீகமும் வெறித்தனமாய் காத்துக் கொண்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என் உள்ளமை...., இங்கே நான் நான் என்று எழுதிக் கொண்டிருக்கும் உணர்வு...உடல் மரணித்த அடுத்த நொடியில் என்னாகும்? யோசித்துப் பார்த்தால் நிறைய பதில்கள் உங்களைப் போல எனக்கும் கிடைக்கின்றன...

ஆனால்....மெளனமும், நிதானமும், தெளிவும்....மட்டுமே என்னோடு இப்போது மிச்சமிருக்கின்றன. நான் யாதொரு மதத்தையும் சாராதவன் இப்போது... எனக்கு எந்த ஒரு அடைப்புகளும் இல்லை, இந்த சமூகத்தின் எல்லா கோட்பாடுகளையும், அறிவுகளையும், தத்துவங்களையும் நான் புறக்கணிக்கிறேன்....

நான் சுதந்திரமானவன்!!!!

ஆமாம்....அடித்தால் அழும், அணைத்தால் சிரிக்கும் குழந்தையின் சுதந்திரத்தை ஒத்தது என் சுதந்திரம். புத்தகத்துக்குள் நான் இனி வாழ்க்கையை தேடப்போவதில்லை, சக மனிதர்களின் வாயிலிருந்து எனக்கான சந்தோசத்தை இனியும்  திருடப் போவதில்லை...

நான் இருக்கிறேன்....அவ்வளவுதான்...!!!!!


தேவா. S



Comments

அண்ணா...
உங்கள் எழுத்தில் படிக்கும் போது இலக்கியம் இனிக்கிறது...
அலுவலக வேலை காரணமாக தொடர்பில் வரமுடியவில்லை...
நாளை பேசுகிறேன்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த