Skip to main content

சாமி....!


ஒரு மிகப்பெரிய இழப்பிற்கு பின் நான் சிவன் கோயிலுக்கு வந்திருந்தேன். படைத்தவன் இல்லாத போது படைப்புகளே படைத்தவன் இருந்தான் என்பதற்கு  சாட்சியாக எஞ்சி நிற்கின்றன. என்னை படைத்தவன் அன்று கோயிலுக்கு நான் சென்ற போது இல்லை. நான் என்னைப் படைத்தவனையும் படைத்தவனை பார்த்துக் கொண்டிருந்தேன். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. சிவலிங்கம் எப்போதும் போல மெளனமாயிருந்தது. அந்த கோயில் மிகப்பழமையானது அல்ல. மிக புதியதும் அல்ல. மத்திம காலத்தில் அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னது.

பழைய மதுக்கூர் சுற்றிலும் வயல்கள் நிறைந்த அழகிய கிராமம். வேளாண்மை செய்து வாழும் மக்கள் நிறைந்த ஊர். இயற்கையோடு தொடர்பில் இருந்து இருந்து மிகப்பெரிய பக்குவ நிலைக்கு வந்திருக்கும் மக்கள் நிறைந்த இடம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை  வாழ்க்கையின் நிலையாமையை எளிதாக போதித்து விடுகிறது. மழை பெய்ய வேண்டும், ஆற்றில் தண்ணீர் வரவேண்டும், இன்ன பிற காலச் சூழல்கள் பொருந்தி வரவேண்டும், பல மனிதர்களின் கூட்டு உழைப்பு வேண்டும். ஆமாம் விவசாயம் மனித வாழ்வின் சூட்சுமத்தை மனித தொடர்புகளின் அவசியத்தை, விட்டுக் கொடுத்தலின் தாத்பரியத்தை மனிதர்களுக்கு  எளிதாக புகட்டி விடுகிறது. ஆடு, மாடுகள், கோழிகள், போன்ற சிற்றுயிர்களோடு ஒர் தினசரி வாழ்க்கை வாழும் போது வாய் பேசா அந்த ஜீவன்களை தங்கள் வீட்டில் ஒருவராய் எண்ணி, அவற்றோடு பேசவும், அவற்றின் அசைவுகளை வைத்து தேவைகளை புரிந்து கொள்ளவும் முடிகிறது.

மாடுகளோடும் ஆடுகளோடும் மனிதர்களைப் போல புரிந்துணர்வோடு தங்களின் சோகங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்து வாழும் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்கை ஒரு விவசாயிக்கு கிடைத்து விடுகிறது. ஒரு விவாசாயி நிலத்தோடு தொடர்பில் இருப்பவன். நிலம் மாதிரியேதான்...அவனது பொறுமையும் கோபமும். அடங்கிக் கிடந்தால் அடங்கிக் கிடப்பான் வெகுண்டு எழுந்தால் சுற்றி இருக்கும் யாரும் அவனை எதிர்கொள்ள முடியாது.

கோயிலுக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரர் என்று எழுதி இருந்த பிளக்ஸ் போர்டை வாசித்தேன்.எனக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரரும் கருவறைக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரரும் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிவலிங்கத்தைப் பற்றி பல்வேறு கதைகளைச் சொல்வார்கள். ஆண்குறியும் பெண்குறியும் போன்ற ஒரு அமைப்பு என்றெல்லாம்...

என்னைப் பொறுத்தவரை பல உருவங்களை வழிபாடு செய்து, செய்து  கடைசியில்சிவனை வணங்க வரும் இடம் அதி ரகசியமானது. என்னதான் இறைவனுக்கு உருவம் இல்லை என்று பயிற்றுவித்தாலும் மனம் அதை கேட்காது. உருவம் இல்லை என்பதை அறிய உருவத்தைப் பார்த்தே பழகியவர்கள் எப்படி அறிவார்கள்...? உருவம் இல்லை என்பதை அறிய உருவத்தைதான் பழக வேண்டி இருக்கிறது. எது வேண்டாமோ அதை அழிக்க அதன் அருகில் செல்வீர்களா இல்லை அதை விட்டு திரும்பி வேறெங்கோ முகம் திருப்பிக் கொள்வீர்களா?

நம்மைச் சுற்றி இயங்கும் வாழ்க்கைதான் கடவுள். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான் கடவுளின் தோற்றங்கள். பெரு மழையும், சிறு நதியும், யானையும், தேரையும் கடவுளரின் தோற்றங்கள்தான் என்று அறிய ஏதோ ஒன்றை  கடவுள் என்று விழுந்து விழுந்து கும்பிட வேண்டி இருக்கிறது. நான் ஏன் இப்படி விழுந்து விழுந்து கும்பிட வேண்டும், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தது எப்படி இதுவாய் இருக்க முடியும்..? அல்லது அதுவாய் இருக்க முடியும் என்று ஒரு புள்ளியில் யோசிக்க வைக்க இவ்வளவு வேடிக்கை செய்ய  வேண்டி  இருக்கிறது.

மிகவும் களைப்பானால் என்ன செய்வோம். எல்லாவற்றையும் விட்டு விட்டு முதலில் உறங்க வேண்டும் என்று உறங்கச் செல்வோம். எனக்கு ஓய்வு தேவை என்று எல்லா செயல்களையும் நிறுத்தி விட்டு கண்களை மூடி படுத்துக் கொள்வோம். சிவலிங்கம் ஓய்வைப் போன்றது. அங்கே இங்கே ஓடி ஓடி பல தெய்வங்களை வணங்கி களைத்துப் போய் சிவன் என்று ஏதோ ஒரு உருவத்தைக் காட்டி பின் இதுவும் சிவன்தான் என்று ஒரு சிவலிங்கத்தை காட்டும் இடத்தில்...

இது எப்படி சிவன் ஆக இருக்க முடியும்...? இது ஏதோ ஒரு உருவம் போன்று தோன்றுகிறது ஆனால் என்ன உருவம் என்று தெரியவில்லையே என்று யோசித்து யோசித்து சிவலிங்கத்தோடு முட்டி மோதி அந்த உருவத்தை பார்த்து பார்த்து அது மூளையில் அதுவே பதிந்தும் போய் விடுகிறது. சிவம் தான் கடவுள் அதுவும் சிவலிங்கமே சிவம் என்று  உணரும் போது ஏற்கெனவே மூளையில் ஏறி உட்கார்ந்து இருக்கும் எல்லா கடவுள் உருவங்களும் மெல்ல மெல்ல அழிந்து போய்....உருவ அருவமான சிவலிங்கத்தை சிவமாய் பாவிக்கும் ஒரு பக்குவ நிலை நமக்கு வந்து விடுகிறது. சிவலிங்கத்தையும் மனதில் இருந்து அழிக்கத்தான் அதற்கு அடுத்த நிலையான பஞ்ச பூதங்களும் சிவம் என்று போதனை நமக்குப் புகட்டப்பட்டது. அப்போது சிவம் என்பது உருவமும் அல்ல, உருவம் அருவம் இரண்டும் சேர்ந்த சிவலிங்கமும் அல்ல என்று சொல்லி நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த பஞ்சபூதங்கள்தான் சிவம்...இந்த பஞ்ச பூதங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அவை எல்லாம் சிவம் என்று...ஒரு மெல்லிய திறப்பின் வழியே நாம் ஒரு மிகப்பெரிய பேருண்மைக்குள் மெல்ல நகர்த்தி வைக்கப்படுவோம்.

அமிர்த கடேஸ்வரர் ஞான மூர்த்தியாய் மெளனித்திருந்தார். பிரதோஷ தினத்தில் அல்லோல கல்லோலப் படும் அமிர்த கடேஸ்வரர் முன்னாள் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். என் தந்தையின் மரணத்தால் ஏற்பட்டிருந்த லெளகீக வலிகள் கண்ணீராய் பல்கிப் பெருக... ஏன்.. இப்படி எல்லாம் நிகழ்கிறது என்ற ஒரு பெரும் கேள்வியை அந்த பிரபஞ்ச  பேரிறுப்பிடம் வைத்து விட்டு எந்த வித அபிப்ராயமும் கொள்ளாமல் அமர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லியாயிற்று, வாழ்வின் சூத்திரம் புரிந்தாலும், நம்மைச் சுற்றி நிகழும் யாவற்றையும் மறுக்க இயலாது ஏற்றுதான் ஆகவேண்டும் என்று அறிந்தாலும், வலிக்கின்ற போது அது வலிதானே?  என் மன பாரத்திற்கு ஒரு பதிலும் சொல்லாமல் அமிர்தகடேஷ்வரர் மெளனமாய் இருந்தார்.

நாளை என் பிள்ளை இப்படி ஏதேனும் ஒரு கோயிலில் போய் அமர்ந்து கேள்வி கேட்டு தன் மனபாரம் குறைக்க முயலலாம் என்ற ஒரு எண்ணம் எனக்குள் எட்டிப் பார்த்தது. ஒரு வேளை அப்பாவும் இப்படியாய் ஏதேனும் கோயிலில் வந்தமர்ந்து அவர் தந்தையின் இறப்பினை நினைத்து அந்த வலியை இறக்கி வைக்க முயன்றிருக்கலாம். இன்று அவர் எங்கிருக்கிறாரோ அங்கு நானும் நாளை இருப்பேன். இது சுழற்சி, பொருட்களை கை மாற்றி விட்டு விட்டு கரைந்து போகும் ஒரு வித்தை. இங்கே ஜனித்தது சிறப்பும் அல்ல, மரித்தல் வலியும் அல்ல. ஒரு காட்சியாய் தோன்றி மறு காட்சியாய் ஒடுங்கும் ஒரு நிகழ்வு.

மனதில் இருந்த வலி நிறையவே குறைந்திருந்தது. ஒரு பேரமைதி மனதில் சூழ்ந்திருந்தது. கோயில்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பாதிக்கு மேற்பட்ட மனிதர்கள் ஒன்று பைத்தியம் பிடித்துப் போயிருப்பார்கள் அல்லது மன அழுத்தம் வந்து கடும் நோய்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. இந்தியா முழுதும் பரவலாய் எழுப்பப்பட்டிருக்கும் ஆலயங்கள் எதற்காக எழும்பி இருக்கின்றன என்று உணர முடிந்தது.  கடவுளை தன்னையும் உள்ளடக்கிய ஒரு ஒட்டு மொத்த சக்தியை, ஒரு தாயாய், தந்தையாய், பிள்ளையாய், தன்னைப் போலவே ஒரு உருவத்தில் படைத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் பேசி பேசி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளும் ஒரு ராஜ வைத்தியத்தை சூட்சுமமாய் செய்து வைத்த அந்த ஆதியோகியை எனக்குள் மனம் குவித்து வணங்கினேன்.

கோயிலைச் சுற்றி விட்டு பிரகாரம் தாண்டிய போது எப்போதும் பார்க்கும் கோயிலை சுத்தம் செய்யும் வயதான தாத்தாவை பார்த்தேன். வணக்கம் சொன்னவரின் அருகில் சென்று அமர்ந்து என்ன தாத்தா  நீங்க எந்த ஊர் என்று கேட்டேன்.....மன்னார்குடி பக்கம் இருக்கும் ஏதோ ஒரு கிராமத்தின் பெயர் சொன்னார். பதினாறு வயதில் அவருக்கு திருமணம் ஆனதையும், முதல் மனைவி வயதுக்கு வந்த மறுநாள் இறந்ததையும் வெற்றிலை பாக்கு சீவலோடும் கண்ணீரோடும் சொல்லிக் கொண்டிருந்தார்...இரண்டாம் மனைவியை சொந்தங்கள் எல்லாம் கூடி அவருக்கு மணம் முடித்து வைத்த கதையையும் முதல் மனைவி போல் அவள் இல்லை என்றாலும் ஆதரவாய்தான் இருந்தார் என்று சொன்னார். இரண்டாவது மனைவி மாடு மேய்க்கச் சென்ற போது நாகம் தீண்டி இறந்து போனதைச் சொல்லி விட்டு அப்போ எனக்கு 22 வயசி என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

அதன் பிறகு அவருக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் ஏதேதோ செய்ய அவர் மனநிலை தப்பிப் போனதாம். 6 வருடமோ இல்லை ஏழு வருடமோ வேலூரில் மனநிலை காப்பகத்தில் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, வாயால் மட்டுமே உணவருந்தி நீர் குடித்து அவஸ்தைப் பட்டாராம். அதன் பிறகு வெளி உலகுக்கு மீண்டும் வந்த போது இருந்த ஒரு ஓட்டு வீடும் கொஞ்சம் நிலமும் உறவுகளால் சூறையாடப்பட்டு விட...தனிமையை தனது துணையாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆங்காங்கே வேலை செய்து பழையமதுக்கூர் அமிர்த கடேஸ்வரரை வந்து சேர்ந்தாராம்...

" என்னா சாமி வாழ்க்கை  எல்லாமே இம்புட்டுட்டூண்டு வவுத்துக்கு....." என்று ஒட்டிப் போயிருந்த வயிற்றில் அடித்துக் காட்டினார். 

" ஒரு நாளைக்கு அய்யர் பத்து ரூவா கொடுப்பாரு....நான் காலையில எந்திரிச்சு கோயில திறந்து சுத்தம் பண்ணி தண்ணி எல்லாம் எடுத்து வச்சி....அந்தா அங்க கிடக்கு பாருங்க தேங்காய்... அது எல்லாம் சிதறு காய் அடிச்சது...எடுத்து கழுவி வச்சேன்... இங்க பாருங்க புல்லு அது எல்லாம் நான் சீத்தி வச்சதுதான்... எட்டு மணிக்கு பெரமையா கோயில்கிட்ட போயி ரெண்டு இட்லி சாப்டுவேன்....மத்தியானம்....5 ரூபாய்க்கு சோறு கொடுப்பாவோ சாப்டுவேன்...சாங்காலத்துக்கு ஒரு டீ...அவ்ளோதான்...ஏதோ என் பொழப்பு ஒடிக்கிட்டு இருக்கு.. கோயிலுக்கு போறவோ வர்றவோ உங்களாட்டம் ஏதாச்சும் காசு கொடுத்துட்டு போவாவோ...

அதை வச்சிக்கிட்டு பொழப்பு ஓடுது சாமி....ஒடம்பு கிடம்பு சரிப்படலேன்னா அறிவழகன் டாக்டர்கிட்ட போவேன்...ஊசி கீசிய போட்டு மாத்திரையும் வாங்கிக் குடுத்து அனுப்புவாவோ...காசு வாங்க மாட்டாவோ..." கொடுத்த பத்துரூபாயை படக்கென்று வாங்கி கைக்குள் சுருட்டிக் கொண்டு நல்லா இருங்க சாமி என்றார். நான் இல்ல சாமி...அங்க உள்ள இருக்கு பாருங்க அதான் சாமி...நான் சிவலிங்கத்தைக் கை காட்டினேன்....

எனக்கு எல்லாமே சாமிதான்.. அதுஞ்சாமிதான், நீங்களும் சாமிதான், அய்யரும் சாமிதான், அறிவழகன் டாக்டரும் சாமிதான், கோயிலுக்கு வர்றவோ, போறவோ எல்லாரும் சாமிதான்...இங்க இருக்குற எல்லாராலயும் தானே சாமீ நான் பொழச்சு கிடக்குறேன்...

கோயில் விட்டு வெளியில் வந்தேன். 

கோயிலைச் சுற்றி இருந்த மரமும், கோயிலுக்கு எதிரே இருந்த குளமும் மனசை குளிரவைத்திருந்தன. ஏதோ ஒன்று விளங்கியும் விளங்காமலும்... வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தேன்...

கோயிலில் பூஜைக்காக மணி அடித்துக்  கொண்டிருந்தது.



தேவா சுப்பையா...


Pic Courtesy: Isha 




Comments

Anonymous said…
வணக்கம்

இரண்டாவது மனைவி மாடு மேய்க்கச் சென்ற போது நாகம் தீண்டி இறந்து போனதைச் சொல்லி விட்டு அப்போ எனக்கு 22 வயசி என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்

சாமி பற்றிய பதிவை படிக்கும்போது மனதில் ஒருவித உணர்வு தூண்டியது பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனக்கு எல்லாமே சாமிதான்.. அதுஞ்சாமிதான், நீங்களும் சாமிதான், அய்யரும் சாமிதான், அறிவழகன் டாக்டரும் சாமிதான், கோயிலுக்கு வர்றவோ, போறவோ எல்லாரும் சாமிதான்...இங்க இருக்குற எல்லாராலயும் தானே சாமீ நான் பொழச்சு கிடக்குறேன்...

உங்கள் மன அமைதி பெற, உங்கள் அப்பா பிரிவை தாங்க உங்கள் மனவலிமை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

வாழ்த்துகள் தேவா.
Anonymous said…
manathai ennavo seikirathu ungal pathivu!
subbu
என் தந்தை மிகவும் வயதாகி இறந்தபோதும் நான் ரொம்பவே மனதளவில் கஷ்டப்பட்டேன் . உணர்வை புரிந்துகொள்ளமுடிகிறது.
எனக்கு எல்லாமே சாமிதான்.. அதுஞ்சாமிதான், நீங்களும் சாமிதான், அய்யரும் சாமிதான், அறிவழகன் டாக்டரும் சாமிதான், கோயிலுக்கு வர்றவோ, போறவோ எல்லாரும் சாமிதான்...இங்க இருக்குற எல்லாராலயும் தானே சாமீ நான் பொழச்சு கிடக்குறேன்...

இவரைப் போல பலருக்கு எல்லாரும் சாமிதான்...

இறைவன் இருக்கிறான் என்று பிரார்த்திப்பவர்களை அவன் ஒரு போதும் கைவிடுவதில்லை...

அப்பாவின் இறப்பு கொடுத்த வலியை அந்த அமிர்தகடேஸ்வரர் குறையச் செய்யட்டும் அண்ணா....

நல்ல பகிர்வு.
இதோ போல தொடர்ந்து எழுதுங்க. என்னைப் போன்றவர்கள் எழுத்துக்கலையை ரசித்து எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களை தேடிக் கொண்டிருப்பதால் காலை வேளையில் வாசிக்கும் போது நாமும் இப்படி எழுத வேண்டும் என்று எண்ணத் தூண்டிய பதிவு இது.
Unknown said…
intha idangalai naanum kadanthu vanthathu pola oru unarvu...

sila kelvigal eraivanidam ketu vitaal pothum..manathin paaram kuraium..

nalla erukku devanna..

paasathudan
siva
//இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்க்கையின் நிலையாமையை எளிதாக போதித்து விடுகிறது.//

ரெம்பச்சரியா சொன்னீங்க ...! இயற்கையோடு இயைந்த வாழ்வை புறந்தள்ளியதால்தான் பேரழிவுகளின் மூலம் தன் இருப்பையும் , மனிதர்களின் மீதான தன் வெறுப்பையும் இயற்கை காட்டுகின்றதோ ....!

//பேரிறுப்பிடம் // அப்டின்னா என்னங்கண்ணா ...?

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல