Skip to main content

கோச்சடையான்....ஒரு பிரம்மாண்டத்தின் வருகை...!


ஆடிப்போய் கிடக்கிறது தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை. இந்திய சினிமாவோ இன்னும் வரப்போகும் காலத்திலும் அசைக்க முடியாமல் உலாவப்போகிறதே இந்த உருவம் என்று அதிர்ந்து போய் கிடக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தங்களைத் தாங்களே அழைத்துச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்த நாயகர்கள் எல்லாம் பேயறைந்தது போல நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் இப்போது. காரணம் ரஜினி என்ற பிம்பம் முதுமை என்னும் காலச் சக்கரத்திற்குள் கரைந்து போய்விடும் என்று மனப்பால் குடித்தவர்களுக்கெல்லாம் நவீனத்தின் உதவியோடு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டாரின் புதல்வி செளந்தர்யா அஸ்வின்.....

                                   ....கோச்சடையான்......

இது ஒன்றும் பத்தோடு பதினோராவதாக வரும் ஒரு தமிழ் சினிமாப்படம் கிடையாது. மோஷன் கேப்சரிங் என்பது உயரிய தொழில்நுட்பத்தை வைத்து குறிப்பிட்ட நடிக நடிகையர்களின் உடல் சலனத்தை துல்லியமாய் பதிவு செய்து அதை கணிணிப் படுத்தி விரும்பியபடி ஒப்பனையிட்டு, விரும்பிய இடத்தை எல்லாம் கற்பனையாய் வடித்தெடுத்து அதில் ரத்தமும் சதையுமாய் அவர்களை உலாவவிடுவது, கோச்சடையான் அப்படித்தான் ஒவ்வொரு ப்ரேமாக செதுக்கப்பட்டிருக்கிறது.  எந்திரன் படம் செய்த துவம்சத்தையே இந்திய சினிமா தாங்கிக் கொள்ள முடியாமல் ஆடிப்போயிருந்த போதுதான் சூப்பர்ஸ்டார் ராணா படத்தை அறிவித்து பூஜையும் போட்டார். ரஜினி இருக்கும் வரை அவருக்கு அடுத்து இரண்டாவது, மூன்றாவது ஏன் இன்னும் சொல்லப்போனால் நான்காவது ஐந்தாவது இடத்தில் கூட யாரும் நிற்கமுடியாது என்பதை தமிழ் சினிமா ரசிகர்களை விட தெளிவாய் அறிந்து வைத்திருப்பவர்கள் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இயக்குனர்களும்தான்....! ஏனென்றால் அவர்களுக்குத்தான் தெரியும் ரஜினி என்னும் மாஸ் என்ன செய்யும்? ரஜினிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் எத்தகையது? வசூல் என்றால் என்ன? ரெக்கார்ட் ப்ரேக் என்றால் என்ன? பாக்ஸ் ஆபிஃஸ் கணக்கீடுகளை ரஜினி என்னும் நடிகன் எப்படி தூள் தூளாக்குவான் என்பதெல்லாம்...

அதனால்தான் ரஜினி படம் வெளிவரும் போது அதற்கு இணையாக வேறுபடத்தை வெளியிட எல்லோரும் அரண்டு போகிறார்கள் தமிழ் சினிமா வியாபாரிகள் அத்தனை பேரும். ஏனென்றால் ரஜினியின் படுதோல்விப் படம் என்று தமிழ் சினிமா கூறும் பாபா படத்தின் வசூலே இன்றைக்கு முன்னணி நடிகர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நடிகரின் சூப்பர் ஹிட் வெற்றிப் படத்தின் வசூலுக்கு இணையானதுதான் என்பதை யாராலும் நம்பமுடிகிறதா? ராணா பூஜை போட்ட உடனேயே உடல் சுகமில்லாமல் போய்விட்டார் சூப்பர்ஸ்டார். இனி அவர் மீண்டு வருவாரா என்ற கேள்விகளை எல்லாம் கடந்து அவர் உயிரோடே இல்லை என்றெல்லாம் புரளிகள் கொடியவர்களால் பரப்பப்பட்டதை கேட்ட ரஜினி ரசிகர்கள் எல்லாம் துடிதுடித்துதான் போனார்கள்.

ஏதாவது செய்வான் என்று எதிர்ப்பார்த்து ஒரு அரசியல் தலைவனுக்கு கொடிபிடித்து கோஷமிடும் ஒரு கலாச்சார வாழ்க்கைக்கு நடுவே ரஜினியிடம் எதையுமே எதிர்ப்பார்க்காத அவரது கோடாணு கோடி ரசிகர்கள் ரஜினி நலம் பெற வேண்டும் என்று அன்பின் மிகுதியில் அப்போது தீமிதித்தார்கள், காவடி எடுத்தார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், தமிழகமெங்கும் மதமாச்சர்யங்களைக் கடந்து ரஜினி மீண்டும் வரவேண்டும் என்றெல்லாம் வழிபாடுகள் நடத்தப்பட்டது. 


எம்.ஜி.ஆர் என்ற கலைப் பிம்பம் அரசியல் வாழ்க்கைக்கு வந்து முதல்வராய் அதிகாரபலத்தோடு வலம் வந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டது ரஜினி மீது தமிழக மக்கள் வைத்திருந்த பாசம். ரஜினி அரசியலுக்கு வந்து நின்றால் தெரியும் அவரது பலம் என்று சவால் விட்டு அறைகூவல் விடுக்கும் பலதரப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நடுவே ரஜினியின் ரசிகர்கள் இப்போதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது என்று நினைக்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

அரசியல் பிரவேசம் பற்றிய தனது நிலைப்பாட்டை மிகத் துல்லியமாய் ரஜினி கூறியதைப் போல இந்த நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் இன்ன பிற  நடைமுறை சட்டங்களும் மக்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு அவர்களை இயங்கவிடாது. தண்டிக்க ஒரு சட்டமும் தப்பிக்க பதினாறு வழிகளும் இருக்கும் சட்டங்களை வைத்துக் கொண்டு யாராலும் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவும் முடியாது. இதை நாம் இந்தியா சுதந்திரமடைந்த தினத்திலிருந்து இன்று வரை நம் கண்கூடாகவே கண்டுகொண்டுதானிருக்கிறோம்.

ரஜினி சொன்னது போல அரசியல் புரட்சி ஒன்று ஏற்பட்டு நவீனகால சர்வதேச சமூகத்திற்கு இணையாய் நாம் திகழ வேண்டுமெனில் அடிப்படையில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். அது ஏற்படாமல் தலைமைப் பொறுப்புக்கு வரும் யாராலும் மிகப்பெரிய சமூக மாற்றத்தை கொண்டுவர இயலாது என்பதாலும் இத்தகைய நெருக்கடியான ஒழுங்குகள் கொண்ட ஒரு வரையறைகள் கொண்ட அரசியல்வாதியாய் இருந்து மனநிம்மதியை இழந்து அலைவதை விட தனக்கு கிடைத்திருக்கும் பணத்தையும் புகழையும் கொண்டு மனதிருப்தியோடு உதவிகள் செய்து வாழ்ந்து முடிக்கலாம் என்று ரஜினி நினைத்ததின் விளைவே அவரை அரசியலில் ஈடுபடாமல் இருக்க வைத்தது. பணம், புகழ், அதிகாரம், குடும்ப வாழ்க்கையில் வெற்றி என்று எல்லாவற்றிலும் சாதனைகள் புரிந்த ஒரு மனிதன் இது எல்லாம் எதுவும் கிடையாது என்று ஆன்மீகத்தின் மூலம் அறிந்து தான் யார்? இந்த வாழ்க்கை எவ்வளவு நிலையானது என்றெல்லாம் புரிந்த பின்பு.... ஆதாய அரசியல் சூழ் உலகிற்குள் நுழைய விரும்புவாரா என்ன...?

அரசியல்வாதிகள் அவர்கள் செய்யும் அரசியலால் எதை எதை அடைய விரும்புகிறார்களோ அல்லது விரும்பினார்களோ அதை எல்லாம் தன் காலுக்கடியில் போட்டு மிதித்து விட்டு இயல்பாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியை சகாப்தன் என்று கூறாமல் வேறு யாரை சகாப்தன் என்று கூற முடியும்?

கோச்சடையானில் ரஜினி நடிக்கவே இல்லை வேறு யாரோ நடித்து ரஜினி போல முகமாற்றம் செய்யப்பட்டது, ரஜினி கோச்சடையான் படம் ஓடவேண்டும் என்பதற்காகத்தான் ட்விட்டருக்கு வந்திருக்கிறார், ரஜினிக்கு கோச்சடையான் படத்தை வெளியிட பயம் என்றெல்லாம் அவதூறு பேசும் பதர்களே... ரஜினி என்ற ப்ராண்ட்டை வைத்துக் கொண்டு அவர் இல்லாமலேயே இன்றைக்கு சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரஜினியைப் பற்றி பேசுவதால் உங்களை சலிப்புடன் பார்த்துக் காறித் துப்புவதற்கு கூடும் கூட்டம்  மட்டும் பார்த்தாலே அவரது படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

இதோ இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுதும் கோச்சடையான் ஜுரம் பிடித்து ஆட்ட ஆரம்பித்து விட்டது. மே 9 ரிலீஸ் என்று கேள்வி பட்டு பதினைந்து நாட்கள் முன்னதாகவே தியேட்டர்களைச் உலகமெங்கும் சூழ ஆரம்பித்து விட்டனர் அவரது ரசிகர்கள். கோச்சடையானைப் பற்றி பேசாத இந்தியர்கள் யாருமே கிடையாது. இந்திய மீடியாக்கள் அதிர்கின்றன..... தியேட்டர்கள் விழாக்கோலம் பூணத் தொடங்கி விட்டன...ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்..... 

சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகு ரஜினி என்னும் மாஸிவ் ப்ளாஸ்ட்டை தியேட்டரில் அனுபவித்து ரசிக்கும் சுகத்திற்காக கிறங்கிப் போய் கிடக்கும் இத்தனை கோடி ரசிகர்களையும் எப்படி வசியப்படுத்தினார் ரஜினி என்பது படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கோச்சடையான் என்னும் சலன வரைகலையில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரஜினிக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல்லாவதோடு மட்டுமில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு தீராத வரப்பிரசாதமாய் அமையப்போகிறது. நாம் கண்டு அனுபவித்த ரஜினி என்னும் காந்தத்தின் ஸ்டைல் மேஜிக்களை நவீன தொழில்நுட்பம் காலங்கள் கடந்தும் நம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இருக்கிறது....


ரஜினி என்ற பிம்பம் காலத்தால் அழியாததாய் நிலை நிறுத்தப்பட்டு இதே மோஷன் டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பத்தால் ஓராயிரம் கோச்சடையான்கள் உருவாக்கப்பட்டு இந்திய சினிமா வரலாற்றின் இதிகாச நாயகனாய் ரஜினி என்றென்றும் வாழத்தான் போகிறார். அதோடு மட்டுமில்லாமல் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் மனிதன் ஒரு கண்டக்டராய் தன் வாழ்க்கையை ஆரம்பித்து எவரின் உதவியுமின்றி இந்திய சினிமாவில் அழிக்க முடியாத ஒரு சக்தியாய் நின்றதற்குப் பின்னால் அவர் கடந்து வந்த வேதனைகளும் வலிகளும், அவமானங்களும், கடுமையான உழைப்பும் கோடாணு கோடி பிள்ளைகளுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாய் நின்று வாழ்வின் பல உயரங்களை அவர்கள் தொடவும் உதவத்தான் போகிறது....


மே 23 வரை காத்திருங்கள் கோச்சடையானின் அதிரடிக்காக....



தேவா சுப்பையா...




Comments

Anonymous said…
welcome superstar.
Anonymous said…
There is big doubt release on this film, because soundarya's greediness

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த