Skip to main content

கோணல் மாணலாய் ஒரு கதை....!


கரடு முரடா சில விசயங்கள எழுதணும்னு தோணிட்டே இருக்கு எனக்கு. ஏதோ கணக்குக்கு எழுதி வச்சமா, வார்த்தைகளால விளையாடினமான்னு இல்லாம வாழ்க்கைக்குள்ள ஒரே பாய்ச்சல்ல பாய்ஞ்சு முங்கி முங்கி ஏதேதோ எழுதணும் பாஸ். கதைக்கான எந்த ஒரு வரையறையும் இல்லாம ஒரு கதை இருக்கணும். கோட்பாடுகளை எல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு கொஞ்சம் ஓரமா உக்காருங்க அண்ணாச்சிகளா டீ வாங்கியாறேன்னு சொல்லிட்டு...., முழுப்பரீட்சை லீவு விட்ட முத நாள் சாங்காலம் பைக்கட்ட வீட்டுக்குள்ள தூக்கி எறிஞ்சுப்புட்டு....

ஹோ......லீவு விட்டாச்ச்ச்ச்ச்ச்சு டோய்ன்னு....... தெருவே அதிர்ர மாதிரி ஓடுவோம்ல அந்த மாதிரி தப தப தன்னு எங்கிட்டாச்சும் ஒரு திசை பாத்து பிச்சிக்கிட்டு பறக்கணும்னு ஆசையா இருக்கு.  நம்ம சொந்த அனுபவங்கள பிரதி எடுத்துக் கொள்ளும் போது கிடைக்கிற சந்தோஷம்....தண்ணிக்குள்ள முங்கி,எந்திரிச்சு அப்புறம் மறுபடி முங்கி எந்திரிச்சு... அங்கிட்டு இங்கிட்டு ஓடி....தாவிக் குதிச்சு உடம்பு முழுசும் ஊறிப் போய் கிடக்குறப்ப ஒரு போதை வருமே...அந்த போதை ....அந்த போதைதான் எழுதுறப்ப கூட எனக்கு கிடைக்குது. 

நான் ஆரம்பப்பள்ளியில படிச்சப்ப பள்ளிக்கோடத்துக்கு எதித்தாப்ல இருந்த துக்குணூண்டு பூவரச மர நிழல்ல பயிறு, சோளம், நாவற்பழம்  எல்லாம் கூறு கட்டி வித்த ஆத்தாவுக்கு அப்டி அந்த வயசுலயும் வியாபாரம் செய்ய காரணமா இருந்தது உழைக்கணும்ன்ற ஆசையா இல்லை வறுமையான்னு தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு நடு ராத்திரியில எந்திரிச்சு உக்காந்து யோசிச்சு இருக்கேன்.  உடம்பெல்லாம் மாவு பறக்க அந்த முதுமையிலயும் ஒரு ஓட்ட சைக்கிள்ள சாக்குப் பையில கோல மாவு வச்சு இழுத்துக்கிட்டு கோல மாவு...கோல மாவேன்னு அவர் போட்டிருக்க மூக்கு கண்ணாடில படிஞ்சு கிடந்த மாவு தூசியை துடைக்க கூட நேரமில்லாம வேகாத வெயில்ல வந்து போன அந்த அழுக்கு மனுசன் எங்க போனான் இப்போ? சாகுற வரைக்கும் மூட்டைத் தூக்குறவனாவும்,  அவன் பொண்டாட்டி வீட்டு வேலை செய்றவளாவும் இருந்துட்டு செத்துப் போன நாகர்கோயில் தாத்தா குடியிருந்த புறம் போக்கு இடத்துல கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வந்துருச்சு இப்போ....

அண்ணே கஞ்சா குடிக்காதீங்கண்னேன்னு சொல்லிட்டு இருக்கும் போதே....கேக்காம அதை உள்ளங்கையில கொட்டிக்கிட்டு புகையில பிரிச்சுக் கொட்டின காலிசிகரட்டை பொறுமையா நிரப்பிக்கிட்டே.....போடா தம்பி போய் வேலைய பாரு...நீ வரவேணாம்னு சொன்னா நான் வரலைன்னு என் காலேஜ் டைம்ல ஹாஸ்டலுக்கு வந்து போற சிக்கந்தர் அண்ணன்....நான் ஏன் கஞ்சா குடிக்கிறேன் தெரியுமான்னு கஞ்சா குடிச்சுக்கிட்டே சொன்ன விசயங்கள....என்னோட நான் புதைச்சுக்கிட்டு செத்துப் போய்டுறதா அப்டியே...?

மாப்ள...ரம்பா..ரோஜா, ஐஸ்வர்யா ராய் எல்லாம் பத்து நாள் குளிக்காம பல்லு விளக்காம ஈறும் பேனுமா வந்தா அப்புடியே பாத்து ரசிப்பியளா மாப்ள...?அழகுன்னா என்னாண்டு நினைக்கிற நீய்யி? ஊளைப் பிண்டங்கள், நாறும் சவங்கள்னு சொல்லிட்டு பட்டினத்தார் பாட்ட ராகமாவே பாடிக்காட்டுற செல்வமணி மாமா சொல்லித்தான் மரப்பசு நாவலையும் ஒரு புளிய மரத்தின் கதை நாவலையும் நான் படிக்கவே ஆரம்பிச்சேன்...! அந்த நாவல்கள்தான் ராஜேஸ்குமாருக்கு அப்புறம் பாலகுமரனுக்கு முன்னாடி நான் படிச்ச நாவல்கள். இப்போ யோசிச்சுப் பாத்தா... 

எவ்ளோ நாவல்கள் என்னைச் சுத்தி நடந்து இருக்கு, எத்தனை கதைகளை நான் கடந்து வந்து இருக்கேன்றது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. கதைகளும் கவிதைகளும் வாழ்க்கைக்குள் இருந்தே கிடைக்கின்றன. சொந்த அனுபவங்கள் இல்லேன்னா சுத்தி இருக்கவங்களுக்கு நடந்த விசயங்கள் இது கூட ரெண்டு டீஸ்பூன் கற்பனை, ஒரு டீஸ்பூன் பைத்தியக்காரத்தனம், ஒரு கைப்பிடி எதார்த்தம், ரெண்டு சிட்டிகை விருப்பங்கள், கால் ட்யூஸ்பூன் எரிச்சல்  கொஞ்சம் சந்தோசம், கொஞ்சம் துக்கம் போட்டு இறக்கினா சுட சுட கதை ரெடி.

கவிதை எழுதணும்னா....முழுக்க முழுக்க கற்பனையை 10 லிட்டர் ஊத்தி, முட்டாள்தனத்தையும், எதார்த்தத்தையும் சரிசமமா கரைச்சு தாளிக்காம இறக்கி வச்சோம்னா ஆச்சு....! எல்லோருக்கும் நடக்குற விசயங்கள் அப்போ அப்போ அது சாதரணமாத்தான் தெரியும் ஆனா அதை விட்டு கொஞ்சம் விலகி நின்னு அப்டி நடக்குற விசயங்களுக்குள்ள இருக்குற புதிர் தன்மைய, குழப்பத்த, கோணல் மாணல்களை ரசிக்கிறப்ப....வாழ்க்கை ரொம்பவே அழகாயிடுது....!

அப்படி ஒரு கோணல் மாணலுக்குள்ள போலாம் வாங்க......

அன்னிக்கு எனக்கு நைட் ஷிப்ட். 9மணிக்கு ரிஷப்சன் கவுண்டர் உள்ள போன உடனேயே....ஆப்பரேட்டர் கேபின்ல போன்.........கொய்ய்ய்ய்ய்ய்ங்ன்னு கத்த ஆரம்பிச்சுடுச்சு.  குட் ஈவினிங் மே ஐ ஹெல்ப்ப்யூன்னு கேட்ட எனக்கு அதுக்கப்புறம் தலை சுத்தாதது ஒண்ணுதான் குறை....

யார்கிட்ட பேசணும்னு கேட்டா மறுமுனையில இருக்கவன் என்கிட்டதான் பேசணும்னு சொல்றான்....நான் தான் பேசுறேன்னு சொன்ன உடனேயே....செருப்பால அடிக்கிற மாதிரி கேட்டான் பாருங்க....என் பொண்டாட்டி உங்க போட்டோவ எதுக்கு சார் அவ பர்ஸ்ல வச்சு இருக்கான்னு....

எனக்கு திகீர்னு தூக்கிப் போட்டுச்சு.......! எக்ஸ் க்யூஸ் மீ....யார்பேசுறீங்கன்னு எச்சிலை முழுங்க முடியாம முழுங்கிக்கிட்டே கேட்டேன்....

ஐயம் ரமேஷ்...உங்க கூட ப்ரண்ட் ஆஃபிஸ்ல வேலை பாக்குறாளே சுமதி அவளோட ஹஸ்பண்ட்ன்னு அவன் சொன்னப்ப...கிட்ட தட்ட எனக்கு  ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு....

ரமேஷுக்கும் சுமதிக்கும் லவ் மேரேஜ்தான்னு எனக்குத் தெரியும். எட்டாவது படிக்கிறப்ப லவ் பண்ண ஆரம்பிச்சவங்க ப்ளஸ் டூ படிக்கிறப்ப வீட்டை எதித்துக் கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்து வாழ ஆரம்பிச்சாங்க. சரண்யாவுக்கு மூணு வயசு ஆகும் போது ரெண்டு பேரு வீட்லயும் காம்ப்ரமைஸ் ஆகி இவுங்கள ஏத்துக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் நிஜப் பிரச்சினை ஆரம்பிச்சுச்சு  அவுங்க வாழ்க்கையில!  சுமதி மாநிறமா இருந்தாலும் பார்க்க லட்சணமா இருக்க பொண்ணுதான் தெலுங்கு பேசுற மாதிரி தமிழையும், தமிழ் பேசுற மாதிரி இங்கிலீசையும் தடால் படால்னு பேசுற கேரக்டர். ரெண்டு பேரும் ஒரே ஷிப்டல வேலை பாக்குறப்ப அவ சொந்தக் கதை சோகக்கதை எல்லாம் சொல்லி புலம்பித் தீத்துடுவா....

ரமேஷ்தான் டெய்லி அவளக் கொண்டு வந்து ட்ராப் பண்ணுவான், கூட்டிக்கிட்டுப் போவான். சுமதி டூட்டில இருக்கப்பவே நூறு கால் பண்ணிடுவான் ரமேஷ். என்ன பண்ற சாப்டியா? அது என்னாச்சு இது என்னாச்சுன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருப்பான்...இப்போ எக்ஸாக்ட்டா என்ன பண்றன்னு கேட்டுட்டே இருப்பான். 

எப்பவும் செக்கியூரிட்டி ஆபிசர் மாதிரியே சுத்தி சுத்தி வர்ராண்டா.... செம்ம கடுப்பாகுது....ஒரு சுதந்திரமே கிடையாது. காலையில இருந்து வேலை பாக்குறோம்....டெய்லி கூட படுத்துக்கன்னு சொல்றது கூட தப்பு இல்லடா...ஆனா அலுத்து சலிச்சு ஒரு நாள் ரெண்டு நாள் படுக்க போகலேன்னு வச்சுக்க.... அவ்ளோதான்...

உனக்கு என்னைப் பிடிக்கலையாடி....?ன்னு கேட்டு லபோ திபோன்னு கத்த ஆரம்பிச்சுடுவான். வேலைக்கு போகாம வீட்ல இருந்து தொலக்கிறேன்னு சொன்னா வருமானம் பத்தல... யுரேகா ஃபோர்ப்ஸ்ல சேல்ஸ் எக்ஸியூட்டிவா வேல பாத்து  கோட்டையா கட்ட முடியும்....? டேய் நான் ஒரு ஸ்டார் ஹோட்டல் ரிஷப்சனிஸ்ட்டுடா... நான் ப்ரஸண்ட்டப்ளா இருக்கணும்...இல்லை என்ன வேலைய விட்டுத் தூக்கிடுவாங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும் கண் மைய கொறச்சுப் போட்டுக்க....லிப்ஸ்டிக் எதுக்கு அடிக்கிற மாதிரி? பேசியல் எதுக்கு? த்ரட்டிங் எதுக்குன்னு அவன் கேக்குற கேள்விகளுக்கு நடுவுல வாழ்ந்து வாழ்ந்து அலுத்துப் போச்சுன்னு அவ புலம்புறத கேக்குறதே எனக்கு வாடிக்கையாப் ஆயிடுச்சு...

ஒரு நாள் எங்க ரெண்டு பேருக்குமே டூட்டி நாலு மணிக்கு முடிஞ்சு போச்சு வெளில வந்து பைக்க நான் உதைஞ்சுட்டு இருந்தப்ப....என்னைக் கொஞ்சம் சுமதி கேட்டப்ப மணி ஈவினிங் நாலே முக்கால். ரமேஷ்க்கு மீட்டிங் இருக்காம்... மீட்டிங் முடிச்சுட்டு வர ஏழு மணி ஆகுமாம் அதுவரைக்கும் ஹோட்டல்லயே வெயிட் பண்ண சொல்றாண்டா....என்னால முடியாது என்றாள்...

சரி வான்னு சொல்லி அவளை வண்டில ஏற்றிக் கொண்டு கிளம்பினேன்...


ரொம்ப குளிருதுடா... கேன் வீ கேவ் சம்திங்க் என்று சுமதி கேட்டதற்காக நான் வண்டியை கிண்டியில் ஒரு ரெஸ்ட்டாரண்டில் நிறுத்திய போது தூற ஆரம்பித்த மழை சோ.....ன்னு அடித்துப் பெய்ய ஆரம்பித்திருந்தது.  மழையும் ஒரு பெண்ணோட அருகாமையும் என்னை எதுவும் செய்யலேன்னு சொன்னா அது சுத்தப் பொய். சுமதி பேசிக் கொண்டே இருந்தாள். டீக்குடிக்கிறது எப்பவுமே அலாதியான சுகம்தான் எனக்கு. சுட சுட ஆவி பறக்க டீய  கையில வச்சுக்கிட்டு எங்கயோ எதையோ யோசிச்சுக்கிட்டே ஊதி ஊதி பொறுக்குற சூட்டோட வாய்க்கு கொண்டு வந்து ஆற அமர நிதானமா மிடறு மிடறா டீயை விழுங்குறப்ப சூடான டீ நெஞ்சுக்குள்ள போய் வயித்தைத் தொட்டு பரவுறத பொறுமையா நான் வேடிக்கைப் பாக்குறதும் உண்டு.

ஏதோ ஒரு நிம்மதிய, ஏதோ ஒரு ஏக்கத்தை, எப்டி எப்டியோ ஆன சில கனவுகள, பல நேர இனம் புரியாத ஒரு மகிழ்ச்சிய, சில நேரம் கண்ணீர் சிந்துற அளவுக்கான சோகங்களை நான் அந்த கணத்துல அனுபவிச்சுகறதும் உண்டு. நீரின்றி அமையாது உலகுன்ற மாதிரி எனக்கு டீ இன்றி அமையாதுன்னு வச்சுக்கோங்களேன்... சுமதியின் பேச்சு நட்போட எட்ஜ்ல நின்னுகிட்டு இருந்துச்சு அதுக்கு அந்தப்பக்கம் ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் நவுந்துச்சுன்னா... தட்ஸ் ஆல்....

ஏதேதோ  விபரீதங்கள் நடக்க ஆரம்பிச்சுடும்னு எனக்கு தோணிச்சு. 

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா...ஏன்னா எதா இருந்தாலும் பொறுமையா கேட்டுக்குற நீன்னு அவ சொன்னப்ப அவளை உத்துப் பாத்தேன்..சுமதி உணர்ச்சிப் பெருக்கில் இருந்தாள். வெளியே பெய்ற மழையும், அந்த ஒரு மச மசப்பான சாயந்திர நேரத்தின் இருளும், அவளுக்குள்ள டன் டன்னா கொட்டிக் கிடந்த சமகாலத்தோட அதிருப்திகளும் கையில ஈட்டியோட என்னை குறிப்பாத்துட்டு இருந்த மாதிரி எனக்குத் தோணிச்சு. அந்த சூழல் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு ஆனா ரொம்பவே பயமாவும் இருந்துச்சு. 22 வயசுல 21வயசு பொண்ணுக்கிட்ட உக்காந்து பேசுற அப்டி ஒரு சூழல் எல்லோருக்கும் வரணும். வந்தாத்தான் அது என்ன மாதிரியான சந்தோசம், அல்லது பயம் அல்லது விபரீதம் அப்டீன்றது புரியும். 

ரமேஷ் உன்னைத் தேடுவானே....சுமதி....கிளம்பலாமா....?

நான் கேட்ட போது மழை இன்னும் ஆக்ரோஷமாய் நீங்க முடிவு பண்றப்ப எல்லாம் நான் எப்டிடா சட்டுன்னு விட்டுப் போறது... எனக்கு எப்பத் தோணுதோ அப்போ போவேன்னு சொல்லாம சொல்லிட்டு இருந்துச்சு. ராமவரத்துல விட்டாப் போதும்ல....

கேட்டுக் கொண்டே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன்.......

அடப்பாவி சிகரெட் எல்லாம் குடிப்பியா....? பொய் கோபம் காட்டினாள் சுமதி....

புகை உள்ளுக்குள் சென்று நிக்கோடினை ரத்தத்தில் கலக்கத் தொடங்கியபோது சுமதி எனக்கு அழகாகத் தெரிந்தாள். அவளை பார்த்து புன்னகைக்கத் தோன்றியது. புன்னகைத்தேன். வெட்கப்பட்டாள்....

ப்ரியங்களைப் போர்த்திக் கொண்டு விட்டால்...அப்போதுதான் வெட்கக் குளிர் நமக்குள் எடுக்க ஆரம்பிக்கிறது....யோசித்துக் கொண்டே.... வா சுமதி.... கிளம்பலாம் என்று சொன்ன போது....

அச்சச்ச்சோ... ரமேஷ் வர்ராண்டா....., வாசலில் பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தவனைக் காட்டி பதறினாள் சுமதி....



(இன்னும் கோணலாகும்......)



தேவா சுப்பையா....


Comments

கோண்ல் மாணலாய் பயணிக்கும் கதை சூப்பராய் இருக்கு அண்ணா.
Angel said…
கதை !!நல்லா இருக்கு !!
எதுவும் அளவுக்கு மீறினால் விபரீதம் தான் அது அன்பாக இருந்தாலும் ஆபத்துதான்
அடுத்த பாகம் எப்போ வரும்னு ஆவலா இருக்கு
Mahi_Granny said…
எழுது ராசா எழுது . டீ குடிக்கிறதில் இவ்வளவு ரசனையா கோணல் எல்லாம் நேராகி விடும் உன்னால்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த