Skip to main content

எதுவாய் இருந்தாய் நீ...?!


அந்த நதிக்கரையில் யாருமில்லை என்றுதான் வெகு நேரம் நான் நின்றிருந்தேன். ஆமாம் அது அந்தி நேரம்தான். வழக்கப்படி அந்தி நேரம் ஏதோ ஒரு செய்தியை மெளனமாய் பகிர்ந்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது. பலவீனப்பட்ட பகல், வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் இரவு இவையிரண்டுக்கும் இடையே....

நகர்ந்து கொண்டிருந்த நதியை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன் நான். கரையோர நாணலொன்று நதிக்குள் வளைந்து  மெதுவாய் தடவி ஏதோ எழுத முயன்று கொண்டிருந்தது. பறவைகள் எல்லாம் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. வானத்தில் மிதந்து கொண்டிருந்த மேகங்களை பார்த்த போது யாரோ ஒரு தேர்ந்த ஓவியன் மனமற்ற நிலையில் வரைந்திருப்பானோ என்று தோன்றியது எனக்கு....

சிறு சிறு நீர்ப்பூச்சிகள் நதியில் பாடிக் கொண்டே மிதந்து கொண்டிருந்தன. எதற்காகவாவது காத்திருக்கிறாயா என்று அந்தி வேளையில் தலை சீவி பொட்டு வைத்து தலை பின்னலை சரி செய்த படி கேட்குமொரு இளம் பெண்ணாய் எட்டிப் பார்த்து கேள்வி கேட்ட நிலாவிடம் உன்னைத்தான் காதலிக்கிறேன்... உனக்காகவே காத்திருக்கிறேன் என்று நான் சொல்ல நினைத்தது அதற்கு தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அருகருகே இருந்தோம் நானும் நதியும்.... ஆனாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை....

மெளனமாய் நகர்ந்து கொண்டிருந்த அந்த நதியிடம் ஒரு அவசரமும் இல்லை. மெல்ல நதியோரம் அமர்ந்து ஒற்றை கை விரலை  வைத்து வருடிக் கொடுத்தேன். நதியின் நடுவில் விழுந்து கிடந்த நிலவை கொஞ்சித் தூக்கி முத்தமிடவேண்டும் என்று தோன்றிய என் ஆவலை எப்படி நிறைவேற்றுவேன்....? என்ற ஆயாசம் வேறு எனக்கு.... தூரத்தில் ஒரு ஆட்டு மந்தை நகர்ந்து கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. ஆடுகளின் சப்தமும் மேய்ப்பவனின் சப்தமும் மெலிதாய் என் செவிகளைத் தடவி மெஸ்மரிசம் செய்யத் தொடங்கி இருந்தன....

இருளத் தொடங்கியவுடன் கூடடைய வேண்டும் இல்லை வீடடைய வேண்டும் என்றுதான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன, ஆனாலும் பாம்புகள் இரவில்தான் தன் இருப்பிடத்திலிருந்து வெளியே எட்டிப்பார்க்குமாம். எல்லா விலங்குகளும் இரவில் ஓய்வெடுத்துக் கொள்வதில்லையாம். பல இரவில்தான் வேட்டையாடவே கிளம்புமாம். எங்கிருந்தோ யாரோ யாரையோ கூவி அழைத்ததை சுற்றிலும் இருந்த மலைகள் மீண்டும் சொல்லிக் காட்டின.

இந்த வனத்திற்குள், இந்த மலைகளுக்கு நடுவே இருக்கும் சமவெளியில், நகரும் இந்த நதியில், தொடர்பில்லாத ஏதேதோ இரைச்சல்களில், எதுவுமே யோசிக்கத் தெரியாமல் சுற்றி இயங்கும் சூழலில் மூழ்கிக் கிடக்கும் நிதானத்தில்....

ஏதோ ஒரு ரகசியமொன்று இருப்பதாய்த்தான்  எனக்குத் தோன்றுகிறது.

நட்சத்திரங்கள் கண் சிமிட்ட ஆரம்பித்த அந்த இருளான வானத்தை தலையுயர்த்தி பார்த்தபடியே கண்கள் விரித்து வானம் குடிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு பெரியது இது. எவ்வளவு ஆச்சர்யம் இது. எத்தனை பிரம்மாண்டம் இது. கோடாணு கோடி நட்சத்திரங்களும் அடர்ந்து கிடக்கும் இந்த பிரபஞ்சம் என்னதான் சொல்ல முயலுகிறது..? அது கூற முயலும் ஏதோ ஒன்றாகவோ அல்லது கூற முயலாத ஒரு உன்மத்தமான அடர் நகர்வாகவோ நானும் தானிருக்கிறேன். நினைத்துப் பார்க்கவே உடல் கூசியது....

நதிக்கரையோரமிருந்த புல்வெளியில் மல்லாந்த படியே தாயின் முலை பற்றி பாலருந்தும் குழந்தையாய்....வான் பற்றி உறிஞ்சத் தொடங்கியிருந்தேன் நான்....

எதுவாய் இருந்தாய் நீ...
எங்கே தோன்றியது உனது கனவுகள்...?
யார் தீட்டியது இந்த வர்ணங்கள் நிறைந்த ஒவியத்தை?
பட்டாம் பூச்சியையும்... கற்பாறைகளையும்...
அதிர்ந்து திரியும் வக்கிர மிருகங்களையும்
நீதானா படைத்தாய்...?
ப்ரியங்களாய் பூக்கிறாய்...
எரிமலையாய் நெருப்பை  உமிழ்கிறாய்...
எப்படிப் பார்த்தாலும் 
என் ப்ரியம் நீதான்...
என் காதல் நீதான்....

கை விரித்து வானை கட்டித் தழுவிக் கொண்டேன். நகர்ந்து கொண்டிருந்த நதியோடு நகர்ந்து கொண்டிருந்த பொழுதினைப் பற்றி எனக்கென்ன கவலை...?




தேவா சுப்பையா...



Photo Courtesy: வெண்முரசு








Comments

யாதுமில்லா நதிக்கரை என்னுள் எதுவாகவோ இருக்கவோ செய்தது படித்து முடிக்கும் வேளையில்...
தன்னந்தனியாக நதிக்கரையில் நின்று நிலவை ரசிக்க வைத்தது தங்கள் பகிர்வு...

எப்பவும் போல் நதிக்கரைக்கே இழுத்துச் செல்லும் அழகிய எழுத்து...

வாழ்த்துக்கள் தேவா அண்ணா...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த