Skip to main content

வேங்கைகளின் மண்....6!




திருப்பா…. நமது காளையார்கோயில் வருகை ரகசியமாகத்தானே வைக்கப்பட்டிருக்கிறது… மீண்டுமொருமுறை கேட்டு மன்னர் முத்துவடுகநாதர் உறுதி செய்து கொண்டார்.

ஏன் தேவரே யாருக்கும் உங்கள் வருகை தெரியக்கூடாது என்பதில் இவ்வளவு உறுதியாய் இருக்கிறீர்கள்…? கெளரி நாச்சியாரைத் திரும்பிப் பார்த்தார் மன்னர் முத்துவடுக நாதர். சிறிது நேரம் மெளனமாயிருந்த மன்னர்…. கெளரி இப்போதுதான் ராமநாதபுரத்தில் கும்பினியர்களோடு நமது சீமை மறவர்கள் மோதி அவர்களைத் தோற்கடித்து விரட்டினார்கள். எல்லா பாளையக்காரர்களையும் அடக்கி ஒடுக்கி கட்டுக்குள் கொண்டு வந்த கும்பினியர்களுக்கு இது ஒரு பெரிய பின்னடைவுதான். இந்தத் தோல்வியை மனதில் வைத்துக் கொண்டு இனி வரும் நாட்களில் யாதொரு அசம்பாவிதத்தையும் வெள்ளைக்காரர்கள் நம் சீமைக்குள் நடத்தி விடக்கூடாது என்றுதான் அவர்கள் கூறிய சமரசத் திட்டதிற்கு நானும் ஒத்துக் கொண்டேன். இனி அவர்கள் சீமையை ஆக்கிரமிக்க முயலமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆக்கிரமிப்பு செய்வதும் அடுத்தவர் பொருளைக் கவர்தலும் திருப்தியின்மையிலிருந்து கிளைக்கும் நச்சு இயல்புகள். வெள்ளையர்கள் இந்த பூமியில் வாழும் வரை இந்த பூமி பிரிவினைவாதத்தாலும், சூழ்ச்சிகளாலும், அடக்குமுறையாலும் சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்…

அவர்களிடம் வீரமும் கிடையாது விவேகமும் கிடையாது. குறுக்கு வழியில் வெற்றி பெறுவது எப்படி என்று பயின்றே வெற்றியைச் சுவைத்த சோம்பேறிகள் அவர்கள். நாம் காளையார்கோயிலுக்கு இப்போது செல்வது என் அப்பன் காளீஸ்வரனைத் தரிசிக்கவும், போரினால் ஏற்பட்ட மன உளைச்சலை குறைத்து அமைதி பெறவும்தான் என்றாலும் நமது ஆன்மீகப் பார்வைகளும் தேடல்களும் இன்னதென்று வெள்ளையர்களுக்குப் புரியாது. வெள்ளையர்களைச் சுற்றி இருக்கும் நமது மண்ணைச் சேர்ந்த ஆட்காட்டிகள், கோள்மூட்டிகள், அடிவருடிகள் இதை வேறு விதமாக அவர்களுக்குத் தெரிவித்து நாம் வெள்ளையர்களை விரட்டியதற்காய் கொண்டாடும் வெற்றி விழாவாய் அவர்களுக்கு உணர்த்துவார்கள். முன் யோசனை இல்லாத கும்பினியர்கள் மேலும் வலு சேர்த்துக் கொண்டு நம்மிடம் மூர்க்கமாய் மீண்டும் போர் தொடுக்கக் கூடும்…..

ஒரு நாட்டு மன்னனின் பொறுப்பு என்பது படை நடத்தி வெல்வது மட்டும் கிடையாது. குடிமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு சுமூகமான இயங்கு தன்மைக்கு எதுவெல்லாம் சாத்தியமோ அதை எல்லாம் உருவாக்கிக் கொடுப்பதும்தான்…அதனால்தான் இந்த முறை நாம் காளையார்கோயிலுக்குச் செல்வதை எல்லோரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டாம் என்று திரும்ப திரும்ப வலியுறுத்தினேன்…

அப்படியானால் உங்களுக்குக் கூட கும்பினிப் படைகளைக் கண்டு பயம் உண்டு என்று கருதலாமா அரசே….கெளரி நாச்சியார் முத்துவடுகநாதரைக் கேட்க….

அல்ல….தேவி…அல்ல…பயம் ஒன்றும் கிடையாது. வெள்ளையரிடம் மிகக் கடுமையான பேரழிவு போர்க்கருவிகள் இருக்கின்றன. அவர்களின் முறைப்படி நாமும் அவற்றை எல்லாம் விலைக்கு வாங்கியோ அல்லது உருவாக்கியோ அவர்களை எதிர்கொள்ள இயலும் ஆனாலும் நமது வீரம் என்பது வேலும் வாளும் தானே….கண்ணே….

வேலும் வாளும் ஏந்திப் போர்களத்தில் கும்பினிப்படைகள் நம்மை எதிர்கொள்ள வந்தால்…. போர்க்களம் முழுதும் கும்பினியர்களின் தலைகளாகத்தான் உருண்டு கொண்டிருக்கும்…. ஹா…ஹா…ஹா... மன்னர் சப்தமாய் சிரித்ததைக் கேட்டு முன்னால் சென்று கொண்டிருந்த திருப்பனும், உதயணனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்….

பனங்காட்டிற்குள் குதிரைகள் செம்மண் புழுதி பறக்க சென்று கொண்டிருக்க……ஒரு பெரும் பனமரத்தின் பின்னால் அமர்ந்திருந்த குருக்கத்திச் சித்தர்……..அவர்கள் செல்வதைப் பார்த்து…. 

போய் வாரும் வேந்தரே….சென்று வாரும் அரசியாரே…..என்று சப்தமாய் கூறிவிட்டு…நிலை குத்திய பார்வையோடு வெளுத்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்….

                                                                    ***

திருக்கானப்பேர் என்னும் காளையார்கோயில் சீமையின் மிகமுக்கியமான நகரம். காளையார்கோயிலை அடுத்த கொல்லன்குடியில் தயார் செய்யப்படும் அத்தனை போர்க்கருவிகளும் காளையார்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சரிபார்க்கப்பட்டு கருவிகளின் கொட்டாரத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பது அன்றாடம் அங்கே நிகழும் ஒரு செயல். காளையார்கோயில் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கும் மிகப்பெரிய வணிக நகரமும் கூட. காளையார்கோயிலைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை வியாபாரம் செய்யும் சந்தை மிகப்பெரிய பரப்பளவில் காளீஸ்வரர் கோயிலுக்கு நேர் பின்னால் அமைக்கப்பட்டிருந்தது. சிறு சிறு நகரங்களில் வாரம் ஒரு முறை கூடும் சந்தை காளையார்கோயிலில் எல்லா நாட்களிலும் இயங்கிக் கொண்டிருக்குமென்பதுதான் இன்னொரு தனிச்சிறப்பு. காய்கறிகளுக்கென்று ஒரு தனிப்பகுதி, பழங்களுக்கு தனி வரிசை, மளிகைப் பொருட்கள் விற்கும் அங்காடிகளுக்கென்று ஒரு தனி வரிசை, மீன்கள், இறைச்சிகள், கருவாடுகள் விற்க ஒரு தனிப்பகுதி என்று பரந்து விரிந்த அந்த சந்தையின் இன்னொரு பகுதியில் குதிரைகள், ஆடுகள், மாடுகள், கோழிகள், என்று பெரிய மற்றும் சிறிய விலங்குகளை விற்கவும் வாங்கவும் என்று மிகப்பெரிய பரபரப்போடு அந்த சந்தை எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்தது. இன்ன பிற சீமைகள் மற்றும் சோழ, சேர, தொண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் கூட வியாபார நிமித்தம் காளையார்கோயிலை வருடந்தோறும் முற்றுகையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தொண்டி துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வேற்று நாட்டுக் குதிரைகளும் இன்னபிற வாசனைப் பொருட்களும் உடனடியாக காளையார்கோயிலை அடைந்து வியாபாரமாகித் தீர்ந்து போயின. நிறைய வியாபாரிகள் வந்து செல்வதால் நிறைய நிறைய தங்கும் விடுதிகளும், உணவு வியாபாரம் செய்யும் உணவகங்களும், என்று காளையார்கோயில் இரவில் கூட உறங்குவதில்லை. காளையார்கோயிலுக்கு வரும் வெளியூர்க்காரர்கள் பருக கற்கண்டாய் இனிக்கும் குடிநீர்க் குளங்கள் காளையார்கோயிலைச் சுற்றிலும் நிறைய வெட்டப்பட்டிருந்தன. வந்தவர்கள் அத்தனை பேரும் காளையார்கோயிலை வாயாரப் புகழ்ந்து சிவகங்கைச் சீமையின் செழிப்பினைப் பற்றி பேசிய படியே சென்று கொண்டிருந்தார்கள்.


போரில் இறந்து போனவர்களின் சமாதிக்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மாலையத்தம் ஊருணியில் கைகால்கள் கழுவிக் கொண்டு மன்னர் முத்துவடுகநாதர் கெளரி நாச்சியாரோடு..... காளையார்கோயில் சன்னதிக்குள் நுழைந்தார்.....

யாருக்கும் அறிவிப்பு கொடுத்திராத காரணத்தால் மன்னரின் வருகை சீமையின் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.. ஆனால் மன்னர் வரும் செய்தியை ஒரு நாள் முன்னதாகவே கும்பினியர்களுக்கு தெரிவித்திருந்தனர் சீமைக்குள் தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு திரிந்த சில பிணந்திண்ணிக் கழுகுகள். வியாபாரிகளோடு வியாபாரிகளாய் கும்பினிப் படை காளையார்கோயிலுக்குள் ஊடுருவி காளீஸ்வரர் சன்னதியை சுற்றி வளைத்ததை அந்த பரபரப்பான நகரத்து இயக்கத்துக்கு நடுவே யாரும் உணர்ந்திருக்க வில்லை. கும்பினியர்களின் இன்னொரு படை மருதுபாண்டியர்களின் படையை மையமாய் வைத்து சிவகங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. காளீஸ்வரர் கோயிலை சுற்றி வளைத்த கும்பினிப் படைகளை வழி நடத்திச் சென்ற கர்னல் பான்சோர் என்ற குள்ளநரி கோயிலுக்கு வெளியே காத்திருந்தது.

காளீஸ்வரா....அங்கிங்கினாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே....!!! வாழ்க்கை என்ற ஒரு பொய்த்தோற்றத்தை அளித்து அந்த பொய்க்குள் மனிதர்களை உலவவிட்டு போலியான தேவைகளை உருவாக்கி ஆக்கி அழிக்கும் தீராத விளையாட்டு கொண்ட பெருங்கருணையே....!!! ஏன் இத்தனை அல்லல்கள்....இது எதுவுமே இல்லாமல் எப்போது நான் உன்னடி சேர்வது? எப்போது இந்தப் பிணி நிறை வாழ்வறுப்பது...? இந்த சிவகங்கைச் சீமையிலிருந்து உருவான வித்து நான்.....

நான் சுவாசிக்கும் இந்த காற்றும், என்னை உருவாக்கிய இந்த பூமியும், என்னை வளர்த்தெடுத்த என் சமூகமும், இன்று ஒரு அன்னியர்களால் ஒரு அசாதரணச் சூழலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது... என் அப்பனே....என் ஈசா....சம்போ மகாதேவா.....

எல்லா சூழ்ச்சிகளையும் அறுத்தெறிந்து எம் சீமை மக்களைக் காத்தருளும் வல்லமையை எனக்கு அருள்வாய்...! எப்போதும் வற்றிப்போகாத கண்மாய்களையும், நிமிர்ந்து நிற்கும் பயிர்களையும், பசியற்ற வயிறுகளைக் கொண்ட மனிதர்களையும் சீமை முழுதும் இருக்கச் செய்வாய்....

மன்னர் முத்துவடுகநாதர் கண்ணீர் மல்க...கெளரீ சிவபுராணம் சொல் என்று கெளரிநாச்சியாரைப் பார்த்து மென்மையாய்ச் சொன்னார்....

நமசிவாய வாழ்க....என்று தனது கணீர்க் குரலில் மன்னரோடு சேர்ந்துப் பாடத் தொடங்கினார் ராணி கெளரி நாச்சியார்....

கோயிலுக்கு வெளியே கும்பினியர் கூட்டம் கழுகாய் காத்திருந்தது. பான்சோர் என்னும் வெறிபிடித்த வெள்ளை நாய் கோயிலை ஒட்டி நின்று கொண்டிருந்த சிறு தேருக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தான்.....



(புரட்சி இன்னும் வெடிக்கும்...)




தேவா சுப்பையா...









Comments

தொடருங்கள் அண்ணா...
இணையப் பிரச்சினை காரணமாக கருத்து இடமுடியவில்லை....

பதிவிட்ட அன்றே வாசித்தேன்...
இப்போ கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களும் வேலு நாச்சியார் பற்றி எழுதி வருகிறார்...



Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல