Skip to main content

வாழ்வே தவம்....!



சுமக்க முடியாமல் புத்தகக் கட்டை சுமந்து பள்ளி சென்ற பாதைகள், வெறிச்சோடி கிடக்கும் திருவிழா சமயங்களில் வள்ளி திருமணம் நடக்கும் அந்த  மிகப்பெரிய பொட்டல், காய்ந்து தேய்ந்து கிடக்கும் கண்மாய், முதுகு பிடித்து இழுக்கும் கருவேலஞ் செடிகளுக்கு நடுவே ஊர்ந்து செல்லும் ஒற்றையடிப் பாதை, மூன்று குச்சிகளை ஊன்றி வைத்து தடித்த விறகினை மட்டையாக்கி நெருஞ்சி முள் குத்த ஓடி விளையாடிய சலசலக்கும் அந்தப் பனங்காடு, இன்னமும் உச்சி பொழுதினில் ஆங்காங்கே நிழலை விரித்து வைத்தபடி வெறுங்காலோடு சூடு பொறுக்க முடியாமல் வரும் மனிதர்களை நேசமுடன் எதிர் நோக்கும் கருவேல மரங்கள்........

பொட்டல் காட்டில் காய்ந்து போன புல்லினை இழுக்க முடியாமல் ஆங்காங்கே இழுத்து பசி தீர்த்துக் கொள்ள முயலும் ஆடு, மாடுகள், அதை இன்னமும் மேய்த்துக் கொண்டிருக்கும் அரைஞான் கொடியால் டவுசரை இழுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் பையன்கள், பாவாடையை வயிற்றுக்கு மேல் இழுத்து கட்டி சுருங்கிப் போன மேல் சட்டையை மறைக்க முயலும் சிறுமிகள்...., தொள தொள முண்டா பனியனோடு மடித்துக் கட்டிய லுங்கியோடு கண்கள் சுறுக்கி எதிரே வருபவர்களை வெள்ளந்தியாய் பார்த்துச்  சிரிக்கும் பெரிசுகள், வாயில் அதக்கிய புகையிலையோடு திண்ணைகளில் பிற்பகலில் மூடிய அரை இமைகளோடு கடந்த கால நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கும் அப்பத்தாக்கள், ஆள் அரவமற்ற தெருக்களில் சுதந்திரமாய் சுற்றித் திரியும் கோழிகள், எதைப் பற்றிய பிரக்ஞையுமின்றி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தெரு நாய்கள்...

என்று என் கிராமத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் ததும்பிக் கொண்டிருக்கும் என் பால்ய கால நினைவுகளை நான் என்ன செய்வது...? 

இந்த நினைவுகளை எல்லாம் விட்டு விட்டு மீண்டுமொரு பொருளீட்டும் நாடக வாழ்க்கைக்குள் என்னை தள்ளி விடக் காத்திருக்கும் என் நிகழ் காலத்தை நான் என்ன செய்வது...?

ப்ரியத்தைப் பூசிக் கொண்டு நிற்கிறது என் கிராமம், பதின்மத்தில் இரட்டை ஜடை போட்டு, வசீகர கண்மை பூசி, பாண்ட்ஸ் பவுடர் பூச்சோடு காற்றில் அலைந்து கொண்டிருக்கும் ஜிமிக்கிகளோடு, போட்ட ரெட்டை ஜடை இரண்டில் ஒன்றைத் தூக்கி மார்பில் போட்டபடி, இடுப்பில் சொருகிய தாவணியை நொடிக்கொரு முறை அவிழ்த்துச் சொருகும் பரிமளாவைப் போலவே தளதளவென்று இன்னமும் அதே வசீகரத்துடன்....,

நகரத்து வாழ்க்கையிலொன்றும் குறைகளில்லைதான் என்றாலும் அதன் செயற்கை மணத்தை நுகர்ந்து நுகர்ந்து அலுத்துப் போய் விட்டதெனக்கு. பெண்கள் எல்லாம் பெண்கள்தான், ஆண்கள் என்றால் ஆண்கள்தான், பிள்ளைகள் என்றால் பிள்ளைகள்தான் என்றாலும் பிழைத்தலுக்காய்  வாழும் வாழ்க்கை வேறு, வாழ்தலுக்காய் வாழும் வாழ்க்கை வேறுதான். நகரம் பிழைக்க மட்டுமே ஓடிக்  கொண்டிருக்கிறது. கிராமம் வாழ்வதற்க்காக மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கிராமத்து முலாம் பூசப்பட்ட தங்கங்கள் எல்லாம் நகரத்தில் வந்து தங்கள் மேல் ஈயம் பூசிக் கொள்ளக் காட்டும் ஆர்வம்தான்...,

திட்டம் போடுகிறார்கள், பணம் சேர்க்கிறார்கள், கடன் வாங்குகிறார்கள், பளீச்சென்று உடுத்திக் கொண்டு பளபளக்கும் ஆபரணங்களோடு தவணை முறையில் வாங்கிய வாகனத்திலேறி அங்குமிங்கும் ஆளாய்ப் பறக்கிறார்கள்....ம்ம்ம்ம். என்னதான் இருந்தாலும் கிராமத்து மொளக்கூட்டுத் திண்ணையில் வேலை எதுவுமே இல்லாவிட்டாலும் தலைக்கு கை வைத்து உறங்கும் ஒரு கிராமத்தானின் சுகம் அதில் கிடைக்குமா என்ன...? வாழ்க்கை வளர்க்க பட்டணம் வந்தவர்கள் வயிறு வளர்த்துத் தொந்தியோடு திரிகிறார்கள், நிறையவே வசதிகளோடு நோய்களையும் வாங்கிக் கொள்கிறார்கள்....

ஆடிப்பாடி விளையாடிச் சிரித்த கிராமங்களெல்லாம் சோர்ந்து போய் விட்டன இப்போதெல்லாம், முன்பெல்லாம் சொல்லி வைத்தாற் போல பெய்த மழை கூட இப்போது வேண்டா வெறுப்பாய் பூமி நனைத்து விட்டு நள்ளிரவில் திருட வந்த திருடனைப் போல ஓடிப் போய் விடுகிறது. இல்லையென்றால் விசேசத்துக்கு வந்து விட்டு வெகு நாள் தங்கிச் செல்லும் விருந்தாளியைப் போல தேவைக்கு அதிகமாகவே மழையைக் கொட்டி நிரப்பி பயிர்களை துவம்சம் செய்கிறது. அளவோடு காலமிருந்த காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையும், எதிர்பார்ப்புகளும், தேவைகளும், அளவோடு இருந்தது. மனிதர்கள் எல்லை மீற இயற்கையும் எல்லை மீற ஆரம்பித்து விட்டது. மனிதர்களின் குண நலன்களும், சக மனிதர்களை, சூழலை எதிர் கொள்ளும் விதத்தின் சாயலே மீண்டும் மனிதர்கள் மீது வாழ்க்கையாய் வந்து விழுகிறது. நன்றியுணர்ச்சி குறைந்து போய் இதை செய்தால் எனக்கு என்ன கிடைக்கும், அதை செய்தால் எனக்கு என்ன கிடைக்கும், என் வேலை முடிந்தால் சரி, என் வயிறு நிரம்பினால் சரி... என்று பிழைத்து வாழும் வாழ்க்கையை மட்டுமே மனிதர்கள் மிருகங்களைப் போல வாழத் தொடங்கி விட்டதால் வாழ்தல் என்றால் என்ன என்ற புரிதல் யாருக்கும் இல்லாமல் போய் விட்டது.


முழுமையாய் இந்த வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக் கொடுக்க யாருமே இங்கு தயாராகவே இல்லை. எல்லோரிடமும் ஒரு திட்ட வரையறை இருக்கிறது. இதைச் செய்தால் இப்படி ஆகும் அதைச் செய்தால் அப்படி ஆகும் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள், ஆனால் காலம் ஒரு திட்ட வரையறை வைத்திருப்பதைப் பற்றி யாரும் யோசிப்பதே இல்லை. எழுதி வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்க அங்காடிக்கு சென்று பட்டியலைப் பார்த்துப் பார்த்து பட்டியலின் படி பொருட்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு வருவதைப் போல காலம் மனிதர்களைத் தன் திட்டத்தின்படி சட் சட் என்று மாற்றிக் கொண்டே வருகிறது. வாழ்தல் பற்றிய புரிதல் வந்தால்தான் காலத்தின் பட்டியலோடு நம் பட்டியல் ஒத்துப் போகும். அதற்கு நிறையவே ஒத்துக் கொள்ள வேண்டும். என்னால் எல்லாம் நிகழ்ந்தது என்ற கர்வம் ஒடிந்து விழ, இது வாழ்வால் நிகழ்ந்தது,  நான் இங்கு ஒன்றும் செய்யவே இல்லை, நான் செய்தது எல்லாம் காலத்திடம் ஒரு வெள்ளைக் காகிதத்தைப் போல என்னைக் கொடுத்தது மட்டுமே என்ற தெளிவு வரும்.

கிராமங்களின் இயற்கைசார் வாழ்வு அந்தத் தெளிவினை எம் மூதாதையர்களுக்கு தடபுடல் விருந்தாய் வைத்து மகிழ்ந்தது. அந்த தடபுடல் விருந்தில் ஒரு கை சோறு என் மூதாதையர்களால் எனக்கும் ஊட்டப்பட்டிருக்கிறது. அந்த ஒரு கை சோறு கொடுத்திருக்கும் அளவிடமுடியாத அதிர்வுகளின் எச்சம் தான் என்னை இது போன்ற கட்டுரைகளை என்னை எழுத வைக்கிறது. சமகாலத்தின் மிகப்பெரிய அவலமாய் நான் நினைப்பது என்ன தெரியுமா? இயற்கையோடு மல்லுக்கட்டிக் கொண்டு நீயா நானா என்று நிலத்தை உழுது விதைத்து தண்ணீர் பாய்ச்சி, பயிர் பச்சைகள் வளர்ந்ததா இல்லையா..? நன்றாய் நெல் கட்டி வளர்ந்திருந்தால்....பெரிய கருப்பா, காளியாத்தா, மாரியாத்தா, முனியாண்டி, அய்யனாரே உன்னை கையெடுத்து கும்புடுறோமப்பு....எஞ்சாமியளா நல்லா வெள்ளாமை வெளையணும் என்று வயக்காட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வதும் விளையாவிட்டால், அடப்பாவி பெரிய கருப்பா, ஏன்டி மாரியாயி, காளி என்ன கொறை வச்சேன் ஒங்களுக்கு நான், பொங்கல்  வைக்கலையா, கடா வெட்டலையா, என்ன மொறை செய்யல நான், மருவாதையா பொட்டுத் தண்ணிய தூத்தலா போட்டு எம் பயிருகள காப்பத்து இல்லேன்னாக்க பாத்துக்க....

என்று வெள்ளந்தியாய் மறைமுகமாய் இயற்கையோடு பேசிக் கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் இன்று இயற்கையையும், மூதாதையர்களால் சமைந்தது இந்த வாழ்க்கை என்ற சத்தியத்தையும் மறந்து விட்டு திணிக்கப்பட்ட தெய்வங்கள் வானிலிருந்து இறங்கி வந்து வாழ்க்கையை மாற்றிப் போடுவார்கள் என்று நம்பிக் கொண்டும், எல்லாமே என்னால் நடந்தது, இந்த வாழ்க்கையில் நன்றி சொல்ல ஒன்றுமே இல்லை, இதைச் செய்தால் அது நிகழும், அதைச் செய்தால் இது நிகழும் என்று ஸ்தூலமாய் தங்களின் வாழ்க்கைக்குள் நின்று பகுத்தறிவுவாதம் பேசுவதுமாய் நின்று கொண்டிருப்பதும்தான்.

நன்றியோடு இருப்பது மட்டுமே வாழ்க்கை. என் தாய் மண்ணின் ஜீவநாடியான கிராமங்களில்தான் இன்னமும் ஆங்காங்கே இந்த நன்றியுணர்ச்சியும், தன் முனைப்பு இல்லாத இயற்கை சார்ந்த வாழ்வும் கொஞ்சமேனும் எஞ்சிக் கிடக்கிறது. தொன்மையான நமது பாரம்பரிய வாழ்க்கையை மீட்டெடுத்து இயற்கை சார் வாழ்விலிருக்கும் மனோதத்துவம் சார்ந்த உளவியல் மேம்பாட்டினை புரிந்துணர்வு கொண்டவர்கள் நமது அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் சொன்னால் மட்டுமே தெளிவான திடமான அடுத்த தலை முறையினரை நம்மால் உருவாக்க முடியும்.


கண்மாயில் குளிப்பதன் சுகமென்பது.. 
சுதந்திரத்தோடு மட்டுமா தொடர்புடையது...?
அது மண்ணோடு, மக்களோடு, உணர்வுகளோடு, இயற்கையோடு...
சேர்ந்து வாழும் பேற்றின் ஒரு பேரின்பக் குறீயிடு அல்லவா...!?
நட்சத்திர விடுதியின் நீச்சல் குளத்தில் குளிக்கிறோமென்று
பெருமிதப் பட்டுக் கொள்ளுங்கள்...
ஆனால்.... 
வாழ்க்கை என்னவோ எங்கள் வயக்கட்டு சகதிக்குள் தான்
வெகு காலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறதென்பதையும்
 அறிந்து கொள்ளுங்கள்...!



ப்ரியங்களுடன்
தேவா சுப்பையா...







Comments

இன்றுதான் வாசித்தேன்...
நானும் கண்மாய்க்குள் குளிக்கப் போயிட்டேன்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல