Skip to main content

கிணற்றடி...!


வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...

பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைத்தது அந்தக் கொல்லைப்புறக் கிணறுதான். விடியற்காலையில் ஓட ஆரம்பிக்கும் சகடை பின்னிரவு வரை ஓடித் தீர்த்து விட்டு ஒரு சில மணி நேரம் மட்டுமே கொஞ்சம் ஓய்ந்து கிடக்குமாம். பிரம்ம முகூர்த்தத்தில் மனிதர்கள் விழிக்கும் முன்பு சகடை விழித்துக் கொண்டு காத்திருக்குமாம்...

காலை நாலு மணிக்கு கர்ர்ர்க்ரர்க்க்க்ர்ரகரவென்று அந்த கிராமத்து வீடுகளின் எல்லா வீட்டுக் கிணறுகளிலும் சகடைகள் உருள ஆரம்பித்து விடுமாம்.
நான் வளர்ந்த பின்பு கிணற்றுக்கு மோட்டர் போட்டு வீட்டுக்குள் பைப் இழுத்த போது சகடையை கழட்டி ஒரு மூலையில் என் கடைசி மாமன் வீசிய போது...
அதை ஒரு கைக்குழந்தையைப் போல எடுத்து தன் கண்டாங்கிச் சேலைக்குள் பொத்தி எடுத்துச் சென்றாள் பாட்டி...! கொல்லைக் கடவிலிருந்த பெரும்புளியமரத்தூரினடியில் உட்கார்ந்து சகடையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளை யாரும் கவனிக்கவில்லை என்னைப் போலவே...

நேற்று பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது உருண்டு விழுந்த தரையில் ஓடிய சகடையைப் பார்த்த போதுதான் படக்கென்று நினைப்பு வந்தது....
இப்போதெல்லாம் எங்கே கேட்கிறது சகடைச் சத்தம்...?

மோட்டார் பொருத்திய கிணற்றடி பக்கம் யாருமே செல்வதில்லை இப்போதெல்லாம்....

ஆனால்...

முன்பெல்லாம் வீடு தோறும் கிணறு இருந்தது, ஊர் ஊருக்கு ஒரு பொதுக் கிணறும் இருந்தது... அங்கெல்லாம் இடைவிடாமல் இந்த சகடைச் சப்தத்தோடு சேர்த்து எல்லோருடைய வாழ்க்கைகளும் உருண்டோடிக் கொண்டிருந்தது தானே?




தேவா சுப்பையா...







Comments

நானும் அந்த கிரிச்ச்ச்... கிரிச்ச்ச்ச் சப்தத்தை ரசித்து இருக்கிறேன் அண்ணா... இதேபோல்தான் அடிபைப்பும்... எனக்கெல்லாம் அதனோடு ஒரு அழகான காலை நேரம் இருந்தது... இப்போது அதற்குள்ளும் பைப் இறங்கி மின்சாரத்தில் இயங்கும்படி செய்து விட்டார்கள்....

மீண்டும் சகடைச் சத்தம் கேட்கமுடியுமா என்ன? அதெல்லாம் இனி கானாக் காலமே...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...