Skip to main content

கிணற்றடி...!


வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...

பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைத்தது அந்தக் கொல்லைப்புறக் கிணறுதான். விடியற்காலையில் ஓட ஆரம்பிக்கும் சகடை பின்னிரவு வரை ஓடித் தீர்த்து விட்டு ஒரு சில மணி நேரம் மட்டுமே கொஞ்சம் ஓய்ந்து கிடக்குமாம். பிரம்ம முகூர்த்தத்தில் மனிதர்கள் விழிக்கும் முன்பு சகடை விழித்துக் கொண்டு காத்திருக்குமாம்...

காலை நாலு மணிக்கு கர்ர்ர்க்ரர்க்க்க்ர்ரகரவென்று அந்த கிராமத்து வீடுகளின் எல்லா வீட்டுக் கிணறுகளிலும் சகடைகள் உருள ஆரம்பித்து விடுமாம்.
நான் வளர்ந்த பின்பு கிணற்றுக்கு மோட்டர் போட்டு வீட்டுக்குள் பைப் இழுத்த போது சகடையை கழட்டி ஒரு மூலையில் என் கடைசி மாமன் வீசிய போது...
அதை ஒரு கைக்குழந்தையைப் போல எடுத்து தன் கண்டாங்கிச் சேலைக்குள் பொத்தி எடுத்துச் சென்றாள் பாட்டி...! கொல்லைக் கடவிலிருந்த பெரும்புளியமரத்தூரினடியில் உட்கார்ந்து சகடையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளை யாரும் கவனிக்கவில்லை என்னைப் போலவே...

நேற்று பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது உருண்டு விழுந்த தரையில் ஓடிய சகடையைப் பார்த்த போதுதான் படக்கென்று நினைப்பு வந்தது....
இப்போதெல்லாம் எங்கே கேட்கிறது சகடைச் சத்தம்...?

மோட்டார் பொருத்திய கிணற்றடி பக்கம் யாருமே செல்வதில்லை இப்போதெல்லாம்....

ஆனால்...

முன்பெல்லாம் வீடு தோறும் கிணறு இருந்தது, ஊர் ஊருக்கு ஒரு பொதுக் கிணறும் இருந்தது... அங்கெல்லாம் இடைவிடாமல் இந்த சகடைச் சப்தத்தோடு சேர்த்து எல்லோருடைய வாழ்க்கைகளும் உருண்டோடிக் கொண்டிருந்தது தானே?




தேவா சுப்பையா...







Comments

நானும் அந்த கிரிச்ச்ச்... கிரிச்ச்ச்ச் சப்தத்தை ரசித்து இருக்கிறேன் அண்ணா... இதேபோல்தான் அடிபைப்பும்... எனக்கெல்லாம் அதனோடு ஒரு அழகான காலை நேரம் இருந்தது... இப்போது அதற்குள்ளும் பைப் இறங்கி மின்சாரத்தில் இயங்கும்படி செய்து விட்டார்கள்....

மீண்டும் சகடைச் சத்தம் கேட்கமுடியுமா என்ன? அதெல்லாம் இனி கானாக் காலமே...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல