Skip to main content

கோதை...!


வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே...

என்று சடாரென்று சொன்னாளாம் கோதை. கேட்ட விஷ்ணு சித்தருக்கு தலை சுற்றியே போய்விட்டதாம், பெருமாளைப் போய் எப்படியம்மா என்று கலங்கி நின்ற பொழுதியில் கோதை உறுதியாய் சொல்லி விட்டாளாம். நான் மணமுடித்தேன் என்றால் அது அந்த அரங்கனைத்தான் மணமுடித்தேன் என்று அவள் சொன்ன போது அரங்கனே விஷ்ணு சித்தரின் கனவில் வந்து கோதை சூடி பார்த்த மாலைதான் வேண்டும் என்று கேட்டதும் அவரின் நினைவுக்கு வந்ததாம். 

ரங்கநாதன் மீது கொண்ட காதலின் காரணமாய் கோதை  என்னும் ஆண்டாள் எழுதித் தீர்த்த பாசுரங்களில் செந்தமிழ் மீதேறி காதலும் பக்தியும் விளையாடும் பேரனுபவத்தை வாசிக்கும் போது நம்மாலும் உணர முடியும். ஆண்டாளை அரங்கனே ஆட்கொண்டு மணமுடித்தான் என்று ஆண்டாளின் கதையை மனதிற்குள் அசை போட்டபடி அமர்ந்திரந்தேன். இன்னும் சரியாய் ஒன்றரை மணி நேரம் இருந்தது எனது அதிகாலை மூன்றரை மணி விமானத்திற்கு....

தூக்கத்தோடு எல்லோரும் விழிப்பாய் இருந்த அந்த நேரத்தில் நான் கண் மூடி ஆண்டாளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பிரேமை இந்த ஆண்டாளுக்கு கண்ணன் மீது அவளின் காதலை உடல் சார்ந்தே மிகையாய் அவள் வெளிப்படித்தியிருக்கும் அழகில் கொஞ்சமும் மிகாத இளம் பெண்ணிற்குரிய தேவையும் தேடலும் சேர்ந்தேதானே இருந்திருக்கிறது. வெறும் பக்தி என்று விபூதியும் குங்குமமும் பூசிக் கொண்டு ஊரை ஏமாற்றவில்லை கோதை என்னும் அந்த ஆண்டாள். அவள் காதலை தன் பருவத்திற்கேற்ற மனோநிலையில் எவ்வளவு அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறாள். சுத்த பிரேமையில் இருந்திருப்பாள் போலும் என்று ஆண்டாளாய் மாறி அந்த பிரேம நிலையிலிருந்து பார்த்தால் இந்த உலக நியதிகள் எல்லாம் எவ்வளவு மட்டுப்பட்டதாய் தோன்றும் என்று யோசித்துப் பார்த்தேன்....

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா...."

என்றெல்லாம் எழுதி கிறங்கி கிடந்த பெண் எப்படி சராசரியான மானுட வாழ்வில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும்? முக்தியைத் தேடிய மனதின் பிம்பவடிவம் கண்ணன், பிரபஞ்சத்தில் இல்லாத  தன்மையோடு புணர்ந்து அழிக்க நினைத்த பெருங்காதலி ஆண்டாள் என்று யோசித்தபடி நானிருந்த இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் பாஸ்போர்ட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்த போது மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று காதுக்குள் ஆண்டாளே பாடுவது போல எனக்குத் தோன்றியது....

சென்னை விமானநிலையத்தின் கூரைகள்தான் அடிக்கடி பெயர்ந்து விழுந்து விடுகின்றன ஆனால் சென்ட்ரலைஸ்டு ஏர்கண்டிஷன் எல்லாம் தரமானதாய்தான் இருக்கிறது.... மார்கழி குளிர் போலவே அவ்வளவு குளிர். நான் டீ சர்ட்டை இறக்கி விட்டு கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு கண்கள் மூடி தூங்கும் தூங்காமலும் எனது விமானத்தின் அழைப்பிற்காக காத்திருந்தேன் ஆண்டாளின் நினைவோடு...

எக்ஸ் க்யூஸ்மீ ப்ளீஸ் என்று அழைத்த பெண் குரலைக் கேட்டு ஒரு வேளை ஆண்டாளாயிருக்குமோ என்று எனக்குள்ளிருந்த ஆண்டாளின் பிரேமை சுவாரஸ்யப்படுத்த மெல்ல கண் விழித்துப் பார்த்தேன்...

பக்கத்து இருக்கையிலிருந்த பெண்... ட்யூ ஹேவ் எ லைட்டர் ப்ளீஸ் என்று கேட்டாள்...

நோ என்று நான் சொல்வதற்கு முன் என் பக்கத்து இருக்கையிலிருந்தவன் லைட்டரை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவள்... டூ யூ ஸ்மோக் என்று மறுபடி கொஸ்டினாள்..., எப்போதாவது புகைக்கும் பழக்கம் கொண்ட எனக்கு அப்போது புகைக்க வேண்டும் என்று தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று குளிர் இன்னொன்று அப்போதைய மனோநிலை...

பரஸ்பரம் எங்கு செல்கிறோம் என்று தகவல்களை பார்மாலிட்டியபடி இருவரும் புகைக்க ஆரம்பித்தோம். தமிழ் மீது பற்று அதிகம் என்று சொன்னபடி தன் கையிலிருந்த  ஏதோ ஒரு கவிதைத் தொகுப்பினை என்னிடம்  கொடுத்தாள் அவள்...

வாங்கி புரட்டிக் கொண்டிருந்த எனக்குள்....

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்...

என்று ஆண்டாள் பாடியது மட்டுமே கேட்டது.... எதிரில் புகைத்துக் கொண்டிருந்தவளை பற்றிய யாதொரு யோசனைகளுமற்று....கண்களை மூடி சாய்ந்து சரிந்தேன்.

ஆண்டாள்களும் அவ்வப்போது வந்து போவர்கள் போலும் இந்த பூமிக்கு....!




தேவா சுப்பையா...










Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...