Skip to main content

Posts

ஏதேனும் ஒரு ஜென்மத்தில்.....!

கடக்க முடியாத தூரங்களை உடைத்துப் போடும் முயற்சிகளில் தெறித்து விழும் கண்ணீர் துளிகள் உன்னை தேடியே வருகின்றன. கனவுகளை கொடுத்தவள் என்னை நினைவற்றவனாய் போவதற்கு சபித்து விட்டு பொய்யாய் தொலைகிறேன் என்றாள்... மெய்யாய் என்னைச் சுற்றிக் கொண்டு! மெளனத்தால் மெளனத்தை மோதவிட்டு நிசப்தங்களில் கலவரத்தை பரவ விட்டு நெஞ்சுக்குள் அமிலமாய் சுரக்கிறது கடந்த கால நினைவுகளில் கரைந்து கிடக்கும் ஒரு தோற்றுப் போன காதல்! நமது நேசிப்புகளை அழித்துப் போட்ட சூழலை எரித்துப் போட பதத்துப் போன என் உணர்வுகளை உரசி உரசி உயிரைக் கரைக்கும் முயற்சிகளில் கழிந்து கொண்டிருக்கிறது சம காலப் பொழுதுகள்! அகண்ட வெளியின் நாக்குகளில் பரவிக் கிடக்கும் மதுரசமென வழிந்து பெருகும் காதலை ஏடன் தோட்டத்து ஆப்பிளென நான் சுவைக்க நினைக்கையில் ஒரு சாத்தானாய் காலம் உடைகளை பிடுங்கிய நம் பிரிவின் வெற்றியில் நகைத்து நகர்கிறது! ஒரு தண்ணீரில்லா கிணறின் விளிம்பு வரை பயணித்த ஒரு சொறித்தவளையின் தோல்வி போல உன்னை மறக்க முயலும் விளிம்புகளில் சறுக்கி சறுக்கி விழுகிறேன் உன் நினைவுக் கேணிக்குள்! வாராய் என்றறிந்தும்; உனை காணேன் என்றுணர்ந்தும்; ஐந்தெழுத்து மந்திரத...

நானிருக்கிறேன்...!

வெறிச்சோடி கிடக்கும் நீயில்லாத மனதில் ஒரு பெரு மழைக்குப் பின்னான தெருவோர நீர்த்தேக்கமாய் தேங்கிக் கிடக்கிறது உன் நினைவுகள்! கரையைத் தொடும் அலைகளின் வாடிக்கையான நிகழ்வைப் போல மீண்டும் மீண்டும் வரும் உன் நினைவுகளை எல்லாம் எரித்து போட்ட இடத்திலிருந்து சிரிக்கிறது என் இயலாமை. ஒற்றைப் பாறையில் உரிமைகளற்ற ஒரு பந்தத்தில் ஒன்றிக் கிடக்கிறேன் ஒரு பேடைக் குயிலின் குரலோடு... ஒரு ஈரக் காற்றின் துணையோடு! விடியும் பொழுதே பெய்யும் மழையாய் நச நசக்கும் உன் ஞாபகங்களை எல்லாம் எழுத்துக்களாக்கும் அளவில் இருக்கிறது என் முயற்சிகள்! ஒரு நெல் பிடித்த நாற்று மெல்ல தலையசைத்து என்னை வா என்கிறதா இல்லை போ என்கிறதா என்ற குழப்பத்திலேயே வரப்புகளில் வழியறியாமல் பறப்பதைப் போலவே நடக்கிறேன்! வழக்கம் போலவே சில சிட்டுக்குருவிகளின் வரப்போர வாய்க்கால் நீரோடான சில்மிசங்களும் உச்சி வானில் ஒரு கழுகின் சிறகடிப்பும் புற்களைக் கடிக்கும் பசுக்களின் பின்னால் மோகித்து நிற்கும் காளைகளும் என்று வாழ்க்கை மட்டும் வாழ்க்கையாகவே இருக்கிறது ஒரு ஓரத்தில் என்னையும் கூட சேர்த்துக் கொண்டு.... நானிருக்கிறேன்...! தேவா. S

கிறுக்கல்....!

கண்களால் பற்ற வைத்து உச்சரிக்காமல் உதடுகளுக்குள் மடங்கிக் கிடக்கும் வார்த்தைகளில் முடங்கியே போய் விடுமா நம் காதல்? நீண்டு கிடக்கும் வானத்தின் ஆழ மடிப்புகளில் ஆளரவமற்ற வெளிகளுக்குள் கரைந்திருக்கும் உப்பின் மிகுதிகள் நிறைந்திருக்கும் என் கண்ணீரின் படிமங்களை நான் காதலென்கிறேன்... நீ கரிப்பு என்கிறாய்! கீறிக் கிழித்த முள்ளின் ஆழாமான கூர்களுக்குள் படிந்திருக்கும் திசுக்கள் கூட மரணிக்கும் முன்பு நான் கொண்ட காதலை சொல்லி மடிகிறதென்கிறேன் நீ மருந்தில் மாறா காயமுண்டா என்கிறாய்! ஒர் உறைக்கும் வெயிலின் காந்தலில் எரியும் எனது ரணங்கள் எல்லாம் உன் மெளனக் கத்திகளால் கிழிக்கப் பட்டவை என்றேன் மெளனத்தால் மேலும் கீறல்களை வரங்களாய்த் சபித்தாய்! முடவனாய் ஒரு கொடும் விலங்கிடமிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் உன் கரம் பிடிக்க எட்டி எட்டி..முயன்ற என் தோல்விகளில் நீயும் நானும் சொல்லாத காதல் ஒன்று செத்துப்போய் எரிந்து போன சாம்பாலாய் சிதறுண்டு கிடக்கிறது இன்னமும் ஏதோ ஒன்றின் நினைவாக! தேவா. S

காலம் கொடுத்த ஓய்வும் கலைஞர் கருணாநிதியும்!

தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. இவரா? அவரா என்ற கணிப்புக்களுடனும், கற்பனைகளுடனும் இருந்த எல்லோருக்கும் ஒரு விடை கிடைத்தாகி விட்டது. அ.தி.மு.க அட்டகாசமான ஒரு பெரும்பான்மையினைப் பெற்று ஆட்சிப் பொறுப்பிலேறி விட்டது. அ.தி.மு.க என்னும் ஒரு அரசியல் கட்சியின் சிறப்புக்களைக் கைக்கொண்டு அது மேலே வந்து விட்டது என்று கூறுவதை விட நடைமுறையில் இருந்த தி.மு.கழக அரசின் திருப்தியில்லாத செயல்பாடுகளாலும், கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்த முரண்பாடுகளாலும் வெறுப்புற்ற மக்கள் மாற்று அரசியலுக்கு வேறு ஆளின்றி, வேறு வழியின்றி இவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. எதேச்சதிகாரமான மனப்போக்கும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்த சிரமங்களைப் பற்றிய சிரத்தையுமின்றி, இலவசங்களை கொடுத்ததாலேயே மக்களின் ஆதரவு தமக்குத்தான் என்று கணித்திருந்த தி.மு.கவின் எண்ணம் சுக்கு நூறாகிப் போனதின் பின் புலத்தில் மக்களின் தெளிந்த பார்வைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தான் மட்டும் கனவில் இல்லாது மீடியாக்களின் மூலம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் கனவில் வாழ வைத்து, மனிதர்களின் மூளைகளை மைண்ட் இலுசன் என்னும் வித்தையை காட...

நீ எனக்கு யாராம்...?

கிழக்கும் மேற்கும் திசைகளென்றேன் நீ திசைகளென்ற ஒன்றே இல்லையென்றாய், வானம் முழுதும் நட்சத்திரம் என்றேன்.. வானம் என்பதே பொய் என்றாய்.... பூமியின் சுழற்சி இடமிலிருந்து வலமென்றேன் அதுவும் ஒரு நாள் மாறுமென்றாய், பகலில் அத்தனையும் அழகு என்றேன் பகலென்பதும் மட்டுமன்றி பகலவனே பொய்யென்றாய்! நான், நேரென்பேன், நீ கோணலென்பாய் நான் சந்தோசமென்பேன் நீ துக்கமென்பாய் நான் காதல் என்பேன் அது மாயை என்பாய் நான் வாழ்க்கை என்பேன் நீ மரணமென்பாய் எல்லாம் முரண்களாக கொண்டு எப்படி இயங்குகிறோம் ஒன்றாய் என்பேன்? இயக்கம் என்பதில் முரணில்லை என்பாய் நான் உன்னிடம் நெருங்கி வருவேன் என் நெஞ்சினில் கூராய் கத்தியைச் சொருகுவாய் உன்னை விட்டு தூரப் போவேன்... தாயாய் என்னைக் கட்டியணைப்பாய்..! நட்புமில்லை என்றாய், காதலுமில்லையென்றாய் உறவுகளற்ற உணர்வென்றாய் தளிர்களற்ற செடி என்றாய் கனவுகளற்ற உறக்கமென்றாய் கவிதைகள் இல்லா காதல் என்றாய் சொல்லும் போதே செத்து விடும் வார்த்தைகளை நீ மதியேனென்றாய்; நான் இருக்கிறேன் என்றாய் உடனேயே நான் இல்லை என்றாய்; சோகம் என்றாய் ஆனால்... அதில் சந்தோசம் என்றாய்! எப்படி உன்னை கணிப்பதென்றேன்? என்னை ஏன் கணிக்...

மஞ்சு....!

வண்டி ஓட்டுவதே ஒரு அலாதியான விசயம். காலேஜ் செகண்ட் இயர் படிக்கிற வரைக்கும் அப்பா பைக் வாங்கிக் கொடுக்கல....வண்டி வாங்கி கொடுக்க அவருக்கு பிரச்சினை இருந்த மாதிரி தெரியலை ஆனா நான் வண்டி ஓட்டும் போது கண்ட குரங்குச் சேட்டை எல்லாம் செய்வேனாம். அட... நீங்க வேற நான் அப்டி ஆளு இல்லங்க... ஆனால் அப்பாவோட நம்பிக்கை அப்டி.... அதுக்கு ஒரே ஒரு காரணம் இருக்கலாம் அது என்னனு உங்ககிட்ட சொல்லிடுறேன் இல்லனா படிச்சு முடிக்கிற வரைக்கும் நீங்களும் சந்தேகமாவே படிப்பீங்க... புடிச்சு வச்ச புள்ளையாரு மாதிரி ஒரே இடத்துல உக்கார்ந்து இருந்தா என்னங்க சுவாரஸ்யம் இருக்கு. நான் சும்மா இருக்க மாட்டேன் எதாச்சும் செஞ்சுகிட்டே இருப்பேன்....ஒரு தடவை அப்பாவோட டி.வி.எஸ் 50 -ஐ எடுத்துட்டு போயி அதை ஒரு ரேஞ்சுல ஓட்றேன்னு ஓட்டி அந்த வண்டியோட சேர்ந்து விழுந்து கால் முட்டிய பேத்துகிட்டு வந்தது... இவருக்கு பெரிய விசயம் இல்லங்க...வண்டி முன்னாடி மெர்காட் பெண்ட்டா போச்சுன்னு மனுசன் மொண மொணன்னு மொணங்கித் தள்ளிட்டாரு....இது நடந்தது நான் +2 படிக்கிறப்ப.... குமார் சின்ன பையங்க... பக்கத்து வீடுதான் 4வது படிக்கிறான். ஒரு நாள் அவனை கூட்டிட...

ஏக்கங்களாய்...சில கனவுகள்...!

கனவுகளைக் கொல்லும் நிஜங்கள், நிஜங்களை கெஞ்சும் கனவுகள், எல்லாம் ஒழித்து எனக்கொரு தனிமை தேவை, ஆமாம் நானே இல்லாத தனிமை! எதார்த்தங்கள் தொலைந்த நிகழ்வுகள், என் சுயத்தை சுடும் நெருப்புகள், இவை எல்லாம் கழிந்து... எனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் ஆமாம் முழுமையான ஆளுமை கொண்ட மாற்றம்! விவரிக்க முடியாத நேசிப்புகள், வெறுமையை உமிழும் மெளனங்கள், என்று வெறுப்பை தூண்டும் காதலை நான் எரித்தே போட வேன்டும் ஆமாம், காதலோடு எரித்தே போட வேண்டும்! கொன்று போடும் உறவுகள் உரிமைகளோடான அத்து மீறல்கள்; கூச்சல்கள் எல்லாம் நகர்ந்த ஒரு பேரமைதி வேண்டும் ஆமாம்... சூன்யத்தில் சுகமாய் நான் கிடக்கும் பேரமைதி! எல்லாம் தொலைந்து நானிருக்க என்னுள் எல்லாமாயிருக்கும் எல்லாம் கலைய..., என்னை நிறைத்துப் போட்டு வெறுமையாய் ரசிக்க எனக்கு , ஒரு காதல் வேண்டும் ஆமாம், எண்ணங்களும் எதிர்பார்ப்புகளுமற்ற... ஒரு ஏகாந்தக் காதல்...! தேவா. S