Skip to main content

விலாசம்....!



















வற்றிப் போன விவசாயம்...
காய்ந்து கிடக்கும் நிலங்களின்..
கண்ணீரில் மரித்துக் கிடக்கும்...
மனிதர்களின் நூற்றாண்டு கலாச்சாரம்!
எப்போதும் போல கூவும்...
அந்த ஒற்றைக்குயிலின் ஒப்பாரியில்
ஒளிந்து கிடக்கும் மனிதர்களின் சோகம்...
கிராமங்களில் தொலைத்த வாழ்க்கையை
மீட்டெடுக்கும் ஆசையில்... நகரம் நோக்கி
நகரும் மனிதர்களின் நகரல்களில்
மேலும் மேலும் நிறைக்கப்படும் வெறுமை!

வழக்குகள் ஏதுமின்றி வறுமையோடு
முட்டு திண்ணைகளில் கடந்த
கால பஞ்சாயத்துகளை...
கனவுகாணும் வெள்ளை மீசைகள்!
பயில வழியில்லாதா வேளாண்மையை
கணிணி கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்
காண்வென்ட்டுக்கு செல்லும் குழந்தைகள்...
வறண்டுதான் கொண்டிருக்கிறது கிராமங்கள்..
வருங்காலத்து மியூசியங்களில்...
இடம் பெறும் பெரு முயற்சியோடு!


ஒரு வரலாற்று பிழையை சமகாலத்தில் காணும் தலைமுறையாக நாமிருப்பது ஒரு வருத்தம் தோய்ந்த செய்திதான்.....! என்னவெல்லாம் செய்து கிராமங்களை காப்பாற்றுவது அல்லது என்னவெல்லாம் செய்து மனித கட்டமைப்பை சுத்திகரிப்பது என்று விளங்க முடியாத அளவிற்கு சிக்குப் பிடித்துப்போய் கிராமங்களின் சுயதன்மை அழிய எத்தனித்திருக்கிறது.

நாகரீக வளர்ச்சி என்ற ஒரு தவிர்க்க முடியாத மாற்றத்துக்குள் உற்சாகமாய் நுழையும் அதே நேரத்தில் நமது இயல்புகள் அல்லது அடையாளங்கள் என்று சொல்லக்கூடிய சில விசயங்களை நாம் இழந்து கொண்டிருப்பதுதான் ஒரு ஜீரணிக்க முடியாத விசயம்.

நவீனத்தை உட்புகுத்தி ஏன் நாம் விவாசாயம் செய்யக்கூடாது என்று கேள்விக்கு பதிலாய் விவசாயம் என்பது ஒரு பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் இப்படிப்பட்ட கேள்விகளையே பழைய பஞ்சாங்கமாக்கி ஒதுக்கும் ஒரு நிலை இருக்கிறது.

அமைதியும் ஒருவித எதார்த்த கூட்டமைப்பு வாழ்க்கையும், விழாக்களும், விவாதங்களும், ஆடு, மாடு, கோழி, எருமை, நாய், என்ற சிறு மிருகங்களோடு சேர்ந்து வாழும் ஒரு அன்றாடமும் மாறவேண்டும் என்பதில் எனக்கு நவீனமும் தெரியவில்லை நாகரீகமும் தெரியவில்லை.

டீசல் கலாச்சாரம் தவிர்க்க முடியாத நிர்பந்திக்கப்பட்டதாய் இருக்கும் நகர வாழ்க்கையிலிருந்து மனிதனை அரவணைத்து சுத்திகரிக்கும் ஒரு சொர்க்கமாக அவரவரின் கிராமங்கள் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. கிராமங்களின் தனித்தன்மைகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும் அதே சமயத்தில் உயிர்களின் இயல்பு தப்பி பிழைக்க வேண்டும்...

" தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் "

என்ற சர்வைவல் தியரி படி மனிதன் பிழைப்பு தேடி நகரத்துக்கு நகர்வது தவிர்க்க முடியாததாய் போனதின் பின் புலத்தில் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளையும், உயிர் நாடியான விவசாயத்தை பற்றிய ஊக்குவிப்புகளையும் மெலும் படித்த இளைஞர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்ச்சியையும் கொடுக்க தவறிய அரசின் பங்குதான் மிகையாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

இந்தியாவின் உயிர் நாடி கிராமங்கள் என்று தேசப்பிதா சொன்னதை மறந்துவிட்டு ஏதோ ஒரு இலக்கு நோக்கி பயணிக்காமல்... நவீனத்தை பயன்படுத்தும், நாகரீகத்தை வரவேற்கும் அதே நேரத்தில்....

இந்தியாவின் இதயதுடிப்பு நிற்கும் தருவாயில் இருக்கிறது என்பதை சுதந்திரத்தை போற்றும் ஒரு தேசத்தின் அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!

தேவா. S

Comments

Unknown said…
நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள். நன்று
vinthaimanithan said…
நகரமயமாக்கல் என்பதன் அடிப்படை தீவிரமாய் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். காலவெள்ளத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே. எந்திரமயமான வாழ்க்கையின் பின்னணியை நுகர்வுக்கலாச்சாரத்தோடு இணைத்து அணுக வேண்டும்.

கிராமப்புறங்களில் நுகர்வுக்கலாச்சாரம் எப்போது நுழைந்தது என்பது சுவாரஸ்யமான அலசலாக இருக்கும். சாஷேக்களில் ஷாம்பு எப்போதில் இருந்து கிராமப்புறப் பெட்டிக்கடைகளில் தொங்க ஆரம்பித்தது என்று ஞாபகமிருக்கின்றதா?
Jey said…
//நாகரீக வளர்ச்சி என்ற ஒரு தவிர்க்க முடியாத மாற்றத்துக்குள் உற்சாகமாய் நுழையும் அதே நேரத்தில் நமது இயல்புகள் அல்லது அடையாளங்கள் என்று சொல்லக்கூடிய சில விசயங்களை நாம் இழந்து கொண்டிருப்பதுதான் ஒரு ஜீரணிக்க முடியாத விசயம்.//

நல்லா சொன்னீங்க தேவா.
Mohamed Faaique said…
"நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள்"
இந்திய மட்டுமல்ல. எல்லா நாடுகளின் நிலைமையும் இதுதான்
அண்ணே நான் ஒரு முறை விருதுநகர் மாவட்டதுல இருக்கக்கூடிய ஒரு கிராமத்துக்கு போயிருந்தேன் அங்க எங்கப்பாத்தாலும் விவசாய நிலமும் கிணறும் நிறைய இருந்துச்சு ஆனா விவசாயம் பண்ணுறதுக்கு ஆள்தான் இல்லை. அந்த ஊர்ல முக்கால்வாசிப்பேர் படிச்சுபுட்டு வெளிநாட்ல வேலைக்கு போய்ட்டாங்க. அதுதான் பேரும்பாலனா கிராமங்களின் நிலைமையா இருக்கு.
//இந்தியாவின் இதயதுடிப்பு நிற்கும் தருவாயில் இருக்கிறது என்பதை சுதந்திரத்தை போற்றும் ஒரு தேசத்தின் அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!//

ஆமாம்
விவசாயம் என்பது ஒரு பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் இப்படிப்பட்ட கேள்விகளையே பழைய பஞ்சாங்கமாக்கி ஒதுக்கும் ஒரு நிலை இருக்கிறது///

இது ரொம்ப ரொம்ப உண்மை அண்ணா
Kousalya Raj said…
முன்பு வருட முழுமைக்கும் தங்களது உணவு தேவைக்கு வேண்டும் என்று தங்களுக்கு இருக்கும் சிறு நிலத்தில் விவசாயம் செய்து நெல்லை உற்பத்தி செய்து சேர்த்து வைத்து கொள்வார்கள். கிராமத்தில் எந்த வீட்டிற்கு போனாலும் நெல் மூட்டைகளை காண முடியும். ஆனால் இப்போது அரசாங்கத்தின் ஒரு ரூபாய் அரிசி புண்ணியத்தில் வீணா எதுக்கு நிலத்தில் மல்லு கட்டணும் என்று ஒரேஅடியாக நிறுத்திவிட்டார்கள்.

பலரும் வேலை தேடி நகரம் போனதும், 100 நாள் வேலை என்று வேறு ஒரு திட்டம் போட்டு அதில் மிச்ச கொஞ்ச பேரும் சென்று விடுவதாலும் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் போனதும் ஒரு காரணம். அந்த 100 நாள் வேலை திட்டமாவது முறைப்படி நடக்கிறதா என்றால் அதுவும் கேலி கூத்தான ஒன்றாக போய்விட்டது...சும்மா போய் இரண்டு சட்டி மண் அள்ளி போட்டு விட்டு மரத்தடி நிழலில் தூங்கி விட்டு , சம்பளம் பெற்று கொண்டு வருவது போல் தான் இருக்கிறது. இதை அந்த தொழிலாளர்களே சொல்லி நகைப்பதுதான் கொடுமை.
விஜய் said…
மிகச் சரியான உண்மைங்க அண்ணா, இதற்க்கு தீர்வு காணும் நிலையில் அரசும் இல்லை, அவர்களுக்கு அவர் புகழ் பாட நடத்தும் செம்மொழி மாநாட்டை கவனிக்கவே நேரம் இல்லை.இதுல எப்படி நாட்ட பத்தி யோசிக்க?,,,படிச்சவனக்கு வேலை வாங்குறதுக்கே நேரம் சரியா இருக்கு, வேலை வாங்கினவனுக்கு சம்பளம் அதிகமா வாங்க வழியை யோசிக்கவே நேரம் சரியா இருக்கு, பணக்காரங்களுக்கு இன்னும் கொள்ளை அடிச்சு பணம் சேர்ப்பதிலே குறி இருக்கு, கொஞ்சம் சமூக அக்கறை இருக்குறவனக்கு இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே நேரம் சரியா இருக்கு, வேலை இல்லாம தறுதலையா சுத்துரவனுக்கு,விழிப்புணர்வு ஏற்படுத்தரவனோட பதிவ பார்த்து கெட்ட , தகாத வார்த்தைகள ,பெயர் போடாம பின்னோட்டம் போடறதுக்கே நேரம் சரியா இருக்கு ...அப்புறம் எப்படி
விஜய் said…
கோபபடாதீங்க, மேல சொன்ன ஏதோ ஒரு பிரிவை சார்ந்த மக்களில் தான் நானு ஒருவனாய் இருக்கேன், நானும் இதுவரைக்கு எதுவும் பெரிசா பண்ணிடல , ஆனா ஏதாவது பண்ணுவேன் என் தேசத்திற்கு, என் உடல் மண்ணில் சாயும் முன் என நம்பிக்கை இருக்கிறது அண்ணா ...
dheva said…
//நகரமயமாக்கல் என்பதன் அடிப்படை தீவிரமாய் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். காலவெள்ளத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே. எந்திரமயமான வாழ்க்கையின் பின்னணியை நுகர்வுக்கலாச்சாரத்தோடு இணைத்து அணுக வேண்டும்.///

விந்தை மனிதன்...@ என்ன சொல்றீங்கனு புரியலையே தம்பி...!

கிராமப்புறங்களில் நுகர்வுக்கலாச்சாரம் எப்போது நுழைந்தது என்பது சுவாரஸ்யமான அலசலாக இருக்கும். சாஷேக்களில் ஷாம்பு எப்போதில் இருந்து கிராமப்புறப் பெட்டிக்கடைகளில் தொங்க ஆரம்பித்தது என்று ஞாபகமிருக்கின்றதா...//
vasu balaji said…
நல்ல அலசல்.
@@@Kousalya ஒரு ரூபாய் அரிசி போட்டாலும் குறை சொல்கிறார்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொடுத்தாலும் குறை சொல்கிறார்கள் எப்போதும் அரசு மீது மட்டும் குறை சொல்ல கூடாது...
உண்மை அண்ணா...
நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள்
@விஜய்
//கோபபடாதீங்க, மேல சொன்ன ஏதோ ஒரு பிரிவை சார்ந்த மக்களில் தான் நானு ஒருவனாய் இருக்கேன், நானும் இதுவரைக்கு எதுவும் பெரிசா பண்ணிடல , ஆனா ஏதாவது பண்ணுவேன் என் தேசத்திற்கு, என் உடல் மண்ணில் சாயும் முன் என நம்பிக்கை இருக்கிறது் ...
//

நேர்மையான கருத்து... நானும் வழிமொழிகிரேன்... :)
Kousalya Raj said…
@@சௌந்தர்...
குறை சொல்லனும் என்பதற்காக சொல்லவில்லை. விவசாயம் ஏன் இந்த வருடம் பண்ணவில்லை என்று கேட்டதற்கு அம்மக்களின் பதில் தான், நான் சொன்னது. கஷ்டப்பட்டு பாடுபட்டு அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் போனது போக நெல்லை வீட்டுக்கு கொண்டுவருவதற்கு சிரமப்படவேண்டி இருக்கிறது. அப்படி பார்த்தாலும் லாபம் என்று பெரிதாக இல்லை. பட்ட பாட்டிற்கு பலன் இல்லை அதுக்கு ஒரு ரூபாய் அரிசி வாங்கிட்டு சும்மா இருக்கலாம் என்பதாகத்தான் பதில் இருந்தது.

//100 நாள் வேலை வாய்ப்பு //

திட்டங்கள் மக்களை ஊக்கபடுத்துவதாக இருக்கவேண்டுமே தவிர சோம்பேறிகளாக மாற்ற கூடாது...

விவசாயத்தை ஊக்குவிக்க ஏதாவது சரியான திட்டங்கள் போடட்டுமே.... இலவச மின்சாரம் மட்டும் வழங்கினால் போதாது...எந்த ஒன்றும் நேரடியாக மக்களை சென்று அடைகிறதா என்று கவனித்தாலே போதும்.
மாப்ள, ஒற்றைக்குயிலின் ஒப்பாரி என்று சொன்னதிலேயே, இந்தக்கட்டுரை எந்தெந்த அவலத்தை எடுத்துவைக்கப்போகிறதோ என்று தோன்றியது.. நான் நினைத்ததுபோலவே, சரியான சாட்டையடி...

//அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!//
அந்த மக்களில் நானும் ஒருவன்; என்னாலான காரியத்தைச் செய்ய விழைகிறேன்...

அருமையான, இத்தருணத்திற்கு மிகவும் அவசியமான பதிவு. தொடரட்டும் உனது பணி. வாழ்த்துக்கள்!
அண்ணா! ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! படிக்கும் போது மனசுல "ஐயோன்னு" ஒரு வலி, வருத்தம் வருது. காலத்தின் கோலம் இது. தேர் நகர ஆரம்பிச்சாச்சு. அதன் சக்கரத்தின் கீழ் விழாமல் தப்பிக்கத்தான் எல்லோரும் போராடுறாங்க. நம்ம காந்திஜி கனவு கண்ட "கிராமிய சுயராஜியம்" நாம சுத்தமா மறந்தாச்சு. இன்னும் பாருங்க, நாடு என்னவெல்லாம் ஆகப்போகுதுன்னு. கற்பனை செய்யவே பயமா இருக்கு!

அண்ணா! புதுசா எழுத வந்திருக்கேன். நம்ப வலை பக்கம் வந்து எப்படி எழுதறேன்னு சொல்லுங்க. உங்க வரவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

மற்ற நண்பர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். என் எழுத்துக்களுக்கு உங்களின் ஆசியை எதிர்நோக்குகிறேன்.

நன்றி!
உங்க உறவுகாரன் அப்பு
//கிராமங்களில் தொலைத்த வாழ்க்கையை
மீட்டெடுக்கும் ஆசையில்... நகரம் நோக்கி
நகரும் மனிதர்களின் நகரல்களில்
மேலும் மேலும் நிறைக்கப்படும் வெறுமை!///

//பயில வழியில்லாதா வேளாண்மையை
கணிணி கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்
காண்வென்ட்டுக்கு செல்லும் குழந்தைகள்...
வறண்டுதான் கொண்டிருக்கிறது கிராமங்கள்..
வருங்காலத்து மியூசியங்களில்...
இடம் பெறும் பெரு முயற்சியோடு!//
ஹய்யோ .. எப்படி அண்ணா இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது உங்களால் மட்டும்..?
//பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் ///
விவசாயத்தை வளர்க்காவிட்டால் கம்ப்யூட்டர் கூட நம்மை காப்பாற்றாது.
எது எப்படியோ நான் கிராமத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது ..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த