Skip to main content

ஆட்டம்...!


















சுற்றி சுற்றி வரும் ஒரு ராட்டினத்தின் பக்கவாட்டு காட்சிகள் மாறுவது போல இருந்தாலும் ஏற்கனெவே வந்த காட்சிகள்தான் எல்லாம். ஆட்கள் தவணை முறையில் சுற்றுவதாலும் பல வித எண்ணங்களை கொண்டு சுற்றியுள்ள பொருட்களை பார்ப்பதாலும் பார்ப்பவனின் எண்ணத்திற்கு ஏற்றபடி காட்சிகளில் இருந்து விளக்கங்களும் அது பற்றிய விஸ்தாரிப்புகளும் மாறி மாறி பார்ப்பவனின் மனதை ஆக்கிரமித்து, ஆச்சர்யம், கோபம், துக்கம், சிரிப்பு, காமம், காதல் என்று பலவிதமான உணர்வுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.

தோன்றும் உணர்வெல்லாம் காணும் பொருளில் இருந்துதான் என்ற மாயையிலும், தான் கண்ட ஆச்சர்யமே மிகப்பெரிய அதிசயம் என்றும் ஒரு வித மமதையில் ஒரு வித ஆளுமை கொண்ட எண்ணங்களைப் பரப்பி இன்னும் திடமாகி ஏதோ எல்லாம் தெரிந்து விட்டதைப் போல எப்போதும் ஒரு தலைக் கனத்தை கொடுக்கிறது மனது. ஆட்டத்தின் ஓட்டம் இடைவிடாமல் புதிது புதிதாய் வேசமிட்டு ஏற்கனவே ஏறியவர்கள் ஏறுவதும், ஏற்கனவே சுற்றியதை மறந்துவிட்டு மீண்டும் மிண்டும் சுற்றுவதுமாக மீண்டும் மீண்டும் எல்லா உணர்ச்சிகளையும் காட்டிக் கொண்டு செய்த செயலையே திருப்பி திருப்பி செய்து கொண்டு நடக்கும் இந்த ஆட்டம் எப்போது நிற்கும்?

சுற்றி சுற்றி ஒரு நாள் அந்த சுற்றலில் அலுப்பு வந்து ஏன் சுற்ற வேண்டும் என்றொரு கேள்வி பிறக்கும் சிலருக்கு முதல் சுற்றலில் சிலருக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது சிலருக்கு ஆயிரம் சுற்றுக்கள் என்று தொடர்ந்தாலும் கேள்வி பிறப்பதில்லை. கேள்விகள் பிறந்தும் விடை காணவே மேலும் சில சுற்றுக்கள் அவசியமாகிவிடுகிறது. கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லை என்று உணரும் தருணத்தில்தான் அந்த ஆச்சர்யம் நடந்து விடுகிறது....கேள்வியே உடைந்து, சுற்றும் ஆட்டமும் உடைந்து, ராட்டினமும் உடைந்து ஒன்றுமில்லாமல் சுக்கு நூறாகிப் போகிறது எல்லாம்.

" பார்வை தெரிந்ததது பார்ப்பதற்கு யாருமில்லை; பார்ப்பவனென்றும் யாருமில்லை...."

நிசப்தத்தில் எல்லாம் மறைய அனுபவம் என்று ஒன்றும் இல்லாமல் எல்லாம் நிகழ்வதாகவே அதாவது எல்லாம் செயல்களாகவே உணர்ந்து செயல்படுபவனை மறக்கும் கணங்கள் அவை.....! சூட்சுமமாய் எல்லாம் மூளைக்குள் உறைக்கிறது என்று சொல்லி முடிக்கும் போது அந்த சூட்சுமமே அனுபவமாய் மாறும் அற்புத கணங்கள் நோக்கி தான் ஒரு எதிர் நீச்சல் போட்டு வலிவு காட்டி எல்லாம் அகற்றி செல்ல வேண்டியிருக்கிறது.

சூட்சுமம் என்று சொல்லி முடித்தவுடன் எது சூட்சுமம் என்று கேள்வி எழுகிறது. இதை வாசிக்கும் கணினியும் எழுத்தும் பொருள் என்றால் என் மூளையில் உதித்த கருத்து சூட்சுமம், வாசிக்கும் மனதில் ஏற்படும் விவரிப்பு சூட்சுமம், ஒரு பொருளை பார்க்கும் கணத்தில் கண்ணிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு பார்க்கும் பொருளில் பட்டு பிரதிபலித்து மீண்டும் ஒரு வித கதிர்வீச்சை கண்களுக்குள் செலுத்தி படமாக்கி மூளைக்குள் செலுத்தி அந்த பொருளை அறிந்த போது பதியப்பட்ட பெயரோடு தொடர்பு படுத்தி ஓ..இது டம்ளர் என்று அறிகிறது.

பார்ப்பது நாம்தான் எப்படி பார்வை செயல்பட்டது?

சூட்சுமமாய்தானே...இப்படித்தான் பேசும் போதும் நமது வார்தைகள் ஒலி அலைகளாக சென்று கேட்பவரின் காதில் சப்தமாக விழுந்து மூளைக்குள் சென்று அங்கு இருக்கும் மொழிக்கான சேமிப்பு பகுதியில் போய்.....வார்தைகளை அந்த ஸ்டோரேஜில் நாம் கேட்ட வார்த்தையோடு ஒப்பிட்டு இன்னது பேசுகிறான் என்று அறியப்படுகிறது.....! ஸ்டோரஜில் இல்லாத வார்தைகளை மனிதர்கள் பேசும் போது நமக்கு அர்த்தம் விளங்குவது இல்லை.....

தொலைக்காட்சி, வானொலி, என்று ஏராளமான விசயங்கள் இயங்குவது சூட்சுமமாய்தான்...! இத்தனையையும் கண்டு பிடித்த மனிதன் ஏன் சூட்சுமமாய் இயங்கமுடியாது என்று அடுத்த கேள்வி மூளையில் கிளைத்து வெளிவருகிறது......இந்த கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன்....பதில் தெரிந்தால் சொல்லுங்கள்....

ஆட்டத்தின் ஓட்டத்தில் சுற்றி சுற்றி...கண்ட காட்சிகள் மட்டும் மாறி கிடைக்கும் அதே அனுபவதை எத்தனை தடவைதான் ஆச்சர்யமாய் ஏற்றுக் கொள்வது! குதிரை வண்டியில் போனவன் நடந்து போனால் என்ன உணர்வு கிடைக்குமோ அதே உணர்வுதான் சைக்கிள் வைத்திருப்பவன் சைக்கிளை விற்று விட்டு நடந்து போனாலும் ஏற்படும்...பொருள் மாற்றம்....ஆனால் உணர்வில் ஏது மாற்றம்?

எப்போதோ துவங்கிய ஆட்டம்.....சுழன்று கொண்டிருக்கிறது இன்னும்....! நானும் சுழன்று கொண்டிருக்கிறேன்.... பழகிப்போன ஆச்சர்யங்களோடும்....புளித்துப் போன சந்தோசங்களோடும்....

எனக்கான கேள்வி எப்போது எழும்.....? ஆட்டம் எப்போது நிற்கும்...?


தேவா. S

Comments

Chitra said…
எப்போதோ துவங்கிய ஆட்டம்.....சுழன்று கொண்டிருக்கிறது இன்னும்....! நானும் சுழன்று கொண்டிருக்கிறேன்.... பழகிப்போன ஆச்சர்யங்களோடும்....புளித்துப் போன சந்தோசங்களோடும்....

...... அடேங்கப்பா..... எத்தனை ஆழமான எதார்த்தத்தை, இந்த சில வார்த்தைகளில் அடக்கி விட்டீர்கள்! இதை உணர்ந்து எழுதுவதற்கு, மனதில் ஒரு பக்குவம் வேண்டும். பாராட்டுக்கள்!
Chitra said…
நிசப்தத்தில் எல்லாம் மறைய அனுபவம் என்று ஒன்றும் இல்லாமல் எல்லாம் நிகழ்வதாகவே அதாவது எல்லாம் செயல்கலாகவே உணர்ந்து செயல்படுபவனை மறக்கும் கணங்கள் அவை.....! சூட்சுமமாய் எல்லாம் மூளைக்குள் உறைக்கிறது என்று சொல்லி முடிக்கும் போது அந்த சூட்சுமமே அனுபவமாய் மாறும் அற்புத கணங்கள் நோக்கி தான் ஒரு எதிர் நீச்சல் போட்டு வலிவு காட்டி எல்லாம் அகற்றி செல்ல வேண்டியிருக்கிறது.

..... இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.... அருமையான தத்துவம்!
விஜய் said…
மனிதனின் உணர்வுகளை தெளிவாய், படம்பிடித்து காட்டியுள்ளது, மிக அருமை...

எழுத்துகளை அழகாக நயம் பட வடித்துவிட்டோம் என்று, கருத்தில் தெளிவை காட்டாமல், முரண்பட்ட கருத்தை உமிழ்ந்துவிட்டும் போகும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் , நுண்ணிய விளக்கத்தையும், அவற்றை அறிவியல் ரீதியாகவும் உண்மை தகவல்களை இணைத்து வடிவமைக்கும் உங்கள் எழுத்துகளில் கொஞ்சம் அசந்து தான் போகிறோம்..பதிவை படிக்கும் வாசகன் பதிவிலிருந்து எவற்றையாவது கற்று செல்ல வேண்டும் என்பதில் நீங்கள் எடுக்கும் முயற்சி , நீங்கள் வடித்துமுடித்த பதிவுகள் அனைத்திலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இந்த பதிவிலும் அழகாய் உண்மை ஆக்கியிருக்கிறீர்கள் அண்ணா ..


வாழ்த்துக்கள்
Unknown said…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ...
எப்போதோ துவங்கிய ஆட்டம்.....சுழன்று கொண்டிருக்கிறது இன்னும்....! நானும் சுழன்று கொண்டிருக்கிறேன்.... பழகிப்போன ஆச்சர்யங்களோடும்....புளித்துப் போன சந்தோசங்களோடும்....

//

இந்த வரிகளுக்கிடையில் சுழன்று கிடக்கிறேன் நான்...
vinthaimanithan said…
பிரபஞ்சம் முழுதும் பருத்துகள்களாலானது என்கிறது முரணியக்கப்பொருண்மை வாதம். நிரூபிக்கவும் பட்டிருக்கிறது.

எனக்கு ஹைசன்பர்க்கின் uncertainity theory நினைவுக்கு வருகிறது.

எனவே...
//ஆட்டத்தின் ஓட்டம் இடைவிடாமல் புதிது புதிதாய் வேசமிட்டு ஏற்கனவே ஏறியவர்கள் ஏறுவதும், ஏற்கனவே சுற்றியதை மறந்துவிட்டு மீண்டும் மிண்டும் சுற்றுவதுமாக மீண்டும் மீண்டும் எல்லா உணர்ச்சிகளையும் காட்டிக் கொண்டு செய்த செயலையே திருப்பி செய்து கொண்டு நடக்கும் இந்த ஆட்டம் எப்போது நிற்கும்?//


மாப்ள, உன்னோட பார்வை ரொம்ப விசாலமானதுடா...!! சிற்சில தருணங்களில் நானும்கூட இதுபோல் பலவாறு யோசித்திருக்கிறேன்... ஆனால் அவற்றை எழுத்தில் கொண்டுவரும் சாமர்த்தியம் உன்னிடம் அளவிற்கதிகமாகவே இருக்கிறது... வாழ்த்துக்கள்டா மாப்ஸ்..
சூட்சுமத்தில் சூட்சுமமா??
சிலருக்கு முதல் சுற்றலில் சிலருக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது சிலருக்கு ஆயிரம் சுற்றுக்கள் என்று தொடர்ந்தாலும் கேள்வி பிறப்பதில்லை. கேள்விகள் பிறந்தும் விடை காணவே மேலும் சில சுற்றுக்கள் அவசியமாகிவிடுகிறது.///

இந்த வரிகளை மறுபடி மறுபடி படித்து கொண்டு இருக்கிறேன்.....
Anonymous said…
//சுற்றி சுற்றி ஒரு நாள் அந்த சுற்றலில் அலுப்பு வந்து ஏன் சுற்ற வேண்டும் என்றொரு கேள்வி பிறக்கும் சிலருக்கு முதல் சுற்றலில் சிலருக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது சிலருக்கு ஆயிரம் சுற்றுக்கள் என்று தொடர்ந்தாலும் கேள்வி பிறப்பதில்லை. கேள்விகள் பிறந்தும் விடை காணவே மேலும் சில சுற்றுக்கள் அவசியமாகிவிடுகிறது. //
என்னை இதன் பின்னால் சுத்த விட்டுட்டீங்களே அண்ணே!

உங்கள் வருகைக்காய் காத்திருக்கும் அன்புத் தம்பி,

balajisaravana.blogspot.com
ஆட்டம் எப்போது நிற்கும்...?

Ur aattam?
எனக்கும் இந்த சூட்சுமம் புரிந்துவிட்டது. சூட்சுமம் என்ற வார்த்தைக்கான பொருள் இப்பொழுது எனக்குப் புரிகிறது. ஆனாலும் இந்த கட்டுரையின் சூட்சுமம் எனக்கு கொஞ்சம் விளக்கியதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன் ..
VELU.G said…
ஆடும் வரை ஆடிக்கொண்டே இருப்போம். ராட்டினத்தை(பூமி) விட்டு விட்டால் எல்லோரின் ஆட்டமும் குளோஸ். அதையும் பாதுகாக்க வேண்டுமே? நம் ஆட்டத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ஆட்டமே இல்லாமல் போய்விடுமே?
பிறப்பின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ளவே இந்த ஓட்டம். அது தெரிந்தால் ஓட்டம் நின்று விடும்
\\எப்போதோ துவங்கிய ஆட்டம்.....சுழன்று கொண்டிருக்கிறது இன்னும்....! நானும் சுழன்று கொண்டிருக்கிறேன்.... பழகிப்போன ஆச்சர்யங்களோடும்....புளித்துப் போன சந்தோசங்களோடும்....\\
நிதர்சனம். பகிர்வு அருமை.
///கேள்விகள் பிறந்தும் விடை காணவே மேலும் சில சுற்றுக்கள் அவசியமாகிவிடுகிறது///

சரியான வரி... இன்னமும் விடை தான் தெரிந்த பாடில்லை...
அழகா எழுதி இருக்கீங்க..
//இந்த கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன்....பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..//

நீங்க ரொம்ப இன்னைக்கு குழம்பி இருக்கீங்கன்னு தெரியுது பாஸ்.ஹி..ஹி..
//ஒரு பொருளை பார்க்கும் கணத்தில் கண்ணிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு பார்க்கும் பொருளில் பட்டு பிரதிபலித்து மீண்டும் ஒரு வித கதிர்வீச்சை கண்களுக்குள் செலுத்தி படமாக்கி மூளைக்குள் செலுத்தி அந்த பொருளை அறிந்த போது பதியப்பட்ட பெயரோடு தொடர்பு படுத்தி ஓ..இது டம்ளர் என்று அறிகிறது.//


வணக்கம்.... கட்டுரை, உள்ளுக்குள் இறங்கி சிந்தனைகளின் பிறப்பிடத்தை பார்த்திருக்கிறது. உங்கள் எழுத்துநடை நன்று மற்றும் ஆழமானதும்.

எனக்கு மிகவும் சந்தோசம். எழுதுபவர் யாரோ என்பதைவிட, அட நம்மவர் எனும்போது நமக்கு சந்தோசம்.

நம் மூளை ஏற்கனவே பதிவு செய்திருக்கிற செய்திகளோடு ஒரு விசாரணை நடத்தி உறுதி செய்கிறது எனும் நுட்பமான எழுத்து. மூளை விபரங்களை பலகோப்புகளில் பதிவுசெய்து வைத்திருக்கிறது. வேறோருகோப்பில் பதிவு செய்த ஏற்கனவே அறிமுகமான நபரை வேறொரு ஊரில், புதிய இடத்தில் அந்த மனிதரை கடந்து செல்லும்போது மூளை எளிதில் இனம் காண்பதில்லை. அந்த இடத்தில அவரை மூளை எதிர்பார்க்கவில்லை.

தேவா, ஊரில் அப்பா,அம்மா, சிங்கையில் அக்கா, அத்தான் அனைவரும் நலமா., இப்போது மதுக்கூரிலா? அல்லது அப்பாவின் ஓய்விற்கு பிறகு சொந்த ஊர் சென்றாகிவிட்டாச்சா?

நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு போயாச்சு.... இங்கு அனைவரும் நலம்.
இந்த பிரச்சனைகள் எப்போ தீரும்?..
இந்த பிரச்சனைகள் எப்போ தீரும்?..
Mohamed Faaique said…
"எப்போதோ துவங்கிய ஆட்டம்.....சுழன்று கொண்டிருக்கிறது இன்னும்....! நானும் சுழன்று கொண்டிருக்கிறேன்.... பழகிப்போன ஆச்சர்யங்களோடும்....புளித்துப் போன சந்தோசங்களோடும்...."
நல்லாயிருக்கு...
Unknown said…
அண்ணே பதிவு ரொம்ப கனமா இருக்கு. எனக்கு இதுலேர்ந்து என்ன புரிஞ்சிருக்குன்னு புரிஞ்சிருக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல