Skip to main content

பசி...!















கலைந்து கிடக்கும்...
மணல்வெளியில் பரவிக்கிடக்கும்
மனிதர்கள் விட்டுச் சென்ற....
காலடிகளோடும் கதைகளோடும்..
மெளனமாய் ஓய்ந்து கிடக்கிறது
நள்ளிரவு மெரீனா...!

ஒற்றை உடைமையை...
தலைக்கு கொடுத்துவிட்ட
திருப்தியில் கடந்து போன
நாளின் கஷ்டங்களை காற்றில்...
பறக்கவிட்டு....தொடர்கிறது
ஒரு தெருவோர பிச்சைக்காரனின்
கனவுகள் நிறைந்த தூக்கம்....!

சிலையான தலைவர்கள்...
அமைதியாக நிற்கிறார்கள்...
நெஞ்சு நிமித்தி வந்து அமரப்போகும்
காக்கை குருவிகளுக்காக.....!

காக்கிச்சட்டைகளின் கைகளில்...
அவசரமாய் திணிக்கப்ப்டும்
இந்திய ரூபாய்கள் அனுமதிக்கிறது...
காமத்தை காசாக்கும் கவர்ச்சியான
வாழ்வின் சோகங்களை....!

அரவமற்ற நடு நிசியில்.....
ஆனந்தமாய் சாலை கடக்கும்
தெரு நாய் சுதந்திரத்தின் உச்சத்தில்...
வெறித்துப் பார்க்கிறது அவ்வப்போது...
சாலை கடக்கும் வாகனங்களை...!

நகரம் காக்க நகரும்
காவல்துறை வாகனங்கள்...
எங்கேயாவது டீ குடிக்கவேண்டும்.....
கொட்டாவியோடு வண்டியோட்டும்.
காவல்காரரின் கண்கள் ஏக்கமாய்...
சுழல விடுகிறது தூக்கத்தை..!

எல்லா கடவுளர்களும்....
பூட்டுக்களோடு பாதுகாப்பாய்..
தத்தம் ஆலயங்களில்....
வீடுகளற்ற குடித்தனங்கள்...
நடைபாதை ஓரங்களில்....!

அடைக்கப்பட்ட டாஸ்மாக்கை
திட்டிய படி....போதையில்...
அரசியல் பேசும்...குடிமகனின்
குரல் கேட்டு நகர்ந்து செல்லும் மாடுகள்!

சுவர்களில் கட்சித் தலைவர்கள்
சிரிப்போடும்....கை குவித்தலோடும்...
தெருவெங்கும்..பட்டொளி வீசும்
பல கட்சிக் கொடிகள்...சொல்கிறது...
ஒரு குழப்பமான நாட்டின் சூழலை....!

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்....
தேங்கியே கிடக்கிறது....
விடியாமலேயே.. இன்னும்..
அதன் கோரப்பற்களுக்குள்...

இன்னும் சற்று நேரத்தில்..
விடியப் போகும் விடியலோ...
அரிதார மனிதர்களை களமிறக்கும்...
கூவி கூவி புத்தி விற்க....
தாவி தாவி பெருமை பேச....

சாக்கடைகளில் நெளியும்...
எமது தேசத்து வாழ்க்கையில்
புதுமைகள் புகுத்த முனையும்.....
புத்திகளுக்குத் தெரியுமா
காலங்களாய் பசித்திருக்கும்...
எமது ஒட்டிய வயிறுகளைப் பற்றி...?



தேவா. S



Comments

Anonymous said…
மீ த பர்ஸ்ட் :)
Anonymous said…
சென்னையின் இரவுக் காட்சி கண்முன் விரிகிறது உங்கள் வரிகளால் அண்ணா!
அறுபது ஆண்டு கடந்த சுதந்திரத்தில் அவலம் மட்டும் இன்னும் கடக்காமல்.. :(
சென்னை இரவு மெரீனா....போய் வந்திங்களா.....

சாக்கடைகளில் நெளியும்...
எமது தேசத்து வாழ்க்கையில்
புதுமைகள் புகுத்த முனையும்.....
புத்திகளுக்குத் தெரியுமா
காலங்களாய் பசித்திருக்கும்...
எமது ஒட்டிய வயிறுகளைப் பற்றி...?//////

!!!!!!!!!!! கூவம் பக்கமும் போய் வந்து இருக்கார்
ரைட்டு! கிளம்புங்க காத்து வரட்டும்....


@ செள்ந்தர்
//கூவம் பக்கமும் போய் வந்து இருக்கார்//
உங்க ஏரியா பத்திதான் சொல்லி இருக்கார்
க ரா said…
என்னத்த சொல்ல..
Chitra said…
எமது தேசத்தின் உடனடி தேவை அடிப்படை வாழ்வாதாரம், நேர்மையான அரசியல்.....முழுமையான கல்வி........


.....இதுல, நேர்மையான அரசியல்னா என்னங்கண்ணா ? :-(
உண்மையிலேயே சூப்பர்...நல்ல எழுதியிருக்கீங்க...
dheva said…
சித்ரா......@

1) இப்போ நடக்கும் அரசியலுக்கும் முரணாணது...

2) வாக்குகளுக்கு காசுகள் இறைக்காதது....

3) கக்கனும், காமராஜராஜரும் செய்தது....

4) அறிஞர் அண்ணா கனவு கண்டது

5) தந்தை பெரியாரின் ஆசையில் இருந்தது...

6) மகாத்மாவுக்க் நிராசையாகிப் போனது.....

அச்சோ...பெரிய லிஸ்ட் இருக்கே...எப்டி சொல்லி முடிக்கிறது....!
dheva said…
பாலாஜி சரவணா...@ விழிக்க வேண்டியது இளைய பாரதம்தான் தம்பி.....!!!!!!!
dheva said…
செளந்தர்...@ நன்றிகள் தம்பி....!


சம்பத்..@ நன்றி சம்பத்!
dheva said…
இராமசாமி கண்ணன்...@ நன்றி தம்பி!
//எமது தேசத்தின் உடனடி தேவை அடிப்படை வாழ்வாதாரம், நேர்மையான அரசியல்,முழுமையான கல்வி........//

சரியாக சொல்லி இருக்குறீங்க அண்ணா
Unknown said…
கவிதை மட்டுமே போதுமே .. கீழேயுள்ள விளக்கம் கவிதையின் கனத்தை குறைக்கிறதே ...
//எல்லா கடவுளர்களும்....
பூட்டுக்களோடு பாதுகாப்பாய்..
தத்தம் ஆலயங்களில்....
வீடுகளற்ற குடித்தனங்கள்...
நடைபாதை ஓரங்களில்....!//
எல்லா வரிகளுமே உண்மையை உரக்கச் சொல்லும் வரிகள்.

உங்கள் கவிதை சென்னையில் விரிந்தாலும் எல்லா இடங்களிலும் இப்படித்தான் போகிறது இரவு.

கவிதையின் வலியைவிட உங்கள் விளக்கத்தின் வலி அதிகமாகிவிடுகிறது. செந்தில் அண்ணா சொன்னது போல் விளக்கம் கவிதையின் அடர்த்தியைக் குறைத்துவிடுகிறது.
அனைத்துமே, மிகவும் அருமையான வரிகள் மாப்ள... நான் ரொம்ப ஆழ்ந்து படித்தேன்...ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது, ஒவ்வொன்றும் காட்சிகளாய் என் கண்முன்னே விரிந்தன.. ரொம்ப பிரமாதமாய் சிந்த்தித்திருக்கிறாய், சிந்தித்ததை எழுதியுமிருக்கிறாய், எழுதியதை புரியவும் வைத்திருக்கிறாய்... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இதற்கு தேவையான தீர்வுக்கு, என்போன்ற தனிமனிதன் என்ன செய்யவேண்டுமென்று அடுத்த பதிவில் பதியவும்..
(நன்கு எனக்கு உறைக்கும்படி!!!)
VELU.G said…
//எமது தேசத்தின் உடனடி தேவை அடிப்படை வாழ்வாதாரம், நேர்மையான அரசியல்,முழுமையான கல்வி........

இது பற்றி பேச வாய்களற்று வசதியாய் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்...வாழ்வின் நாகரீக பக்கங்கள் பற்றி....!
//

உண்மைதான் தேவா
இக்கவிதைக்கு ஏதுவான படம்...
dheva said…
கே.ஆர்.பி. செந்தில் & சே. குமார்

@ உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி விளக்கம் நீக்கப்பட்டது.
dheva said…
சிறுகுடி ராமு...@ நிச்சயமாய் எழுதுகிறேன்.. மாப்ள!
dheva said…
வேலு....@ உரைக்க வேண்டிய உண்மை வேலு....!
dheva said…
தேசத்தின் தலையெழுத்தை தீர்மானிக்க இளைய இந்தியா சாதிக்க வேண்டியது நிறைய இருக்கும் அதே நேரத்தில், நாம் எழுத்துக்களை வலைப்பூக்களில் பரவ விட்டு...ஹிட்ஸ்களை எதிர் நோக்கும் வியாபாரிகள் அல்ல....

எதார்த்த மண்ணில் நின்று கேள்விகள் கேட்டு அறிவை விருத்தி செய்ய....ஆர்வம் கொண்டுள்ள...வேங்கைகள்....எமக்கு தேவை ஒரு சமத்துவ பூமி....அதற்கென்ன வழி.....

விடை தேடி பயணிக்குமா.....அறிவுள்ள சமுதாயம்....அல்ல.....வியாக்கியாங்களிலேயே முடங்குமா?
dheva said…
வலைப்பூக்களில் தற்போது கோலேச்சிக் கொண்டிருப்பது...இளைஞர்கள்....

அவர்களின் மூளைகளில் பதியப்படவேண்டியது.....ஒரு பாஸிட்டிவான....நம்பிக்கை....!!!!!! கடந்த காலங்களில் நடந்த தவறுகளைப் பேசி பேசி மேலும் மழுங்க அடிக்கப்படக்கூடாது..எம் இளைஞர் கூட்டத்தின் மூளைகள்....
நாட்டு நிலைய அழகா வயிற்றெரிச்சலோட சொல்லியிருக்கீங்க.
Ramesh said…
அருமையா எழுதியிருக்கீங்க தேவா.
//எல்லா கடவுளர்களும்....
பூட்டுக்களோடு பாதுகாப்பாய்..
தத்தம் ஆலயங்களில்....
வீடுகளற்ற குடித்தனங்கள்...
நடைபாதை ஓரங்களில்....!//

அருமையான கவிதைகள் அண்ணா
//சிலையான தலைவர்கள்...
அமைதியாக நிற்கிறார்கள்...
நெஞ்சு நிமித்தி வந்து அமரப்போகும்
காக்கை குருவிகளுக்காக.....!///

இந்த வரிகள் செம அண்ணா ..!!
//அடைக்கப்பட்ட டாஸ்மாக்கை
திட்டிய படி....போதையில்...
அரசியல் பேசும்...குடிமகனின்
குரல் கேட்டு நகர்ந்து செல்லும் மாடுகள்!//

இந்த மாதிரியான ஆளுக எப்பத்தான் மாறுவாங்களோ ., இல்ல எப்பத்தான் மாற்றம் வருமோ ..?
//எல்லா கடவுளர்களும்....
பூட்டுக்களோடு பாதுகாப்பாய்..
தத்தம் ஆலயங்களில்....
வீடுகளற்ற குடித்தனங்கள்...
நடைபாதை ஓரங்களில்....!//


//புதுமைகள் புகுத்த முனையும்.....
புத்திகளுக்குத் தெரியுமா
காலங்களாய் பசித்திருக்கும்...
எமது ஒட்டிய வயிறுகளைப் பற்றி...?
//

அருமையான வரிகள் அண்ணா..
எமக்கு தேவை ஒரு சமத்துவ பூமி....அதற்கென்ன வழி.....//

கவலை படாதீங்க..நாங்க இருக்கோம்..
வினோ said…
அண்ணா என்ன சொல்லறதுன்னு தெரியல?
sakthi said…
எல்லா கடவுளர்களும்....
பூட்டுக்களோடு பாதுகாப்பாய்..
தத்தம் ஆலயங்களில்....
வீடுகளற்ற குடித்தனங்கள்...
நடைபாதை ஓரங்களில்....!

நிதர்சனமான வரி!!!
ஹாய் தேவா...
ரொம்ப அழகான வரிகள்.. (ப்ளாக் ஸ்டான்ட்டடுக்கு போட்டாச்சு)

இனி நம்ம பேசலாமா...

இந்த பசி வயிற்றுக்கு
வந்த மாதிரி தெரியவில்லை..
அக்கறை இன்றி சர்க்கரையாகப்
பேசும் அரசியல் மத்தியில்
என் மக்கள் தமக்கு
நித்திரையிலும் புத்தியில்
உரைக்கும் வண்ணமாய்
பசியைக் கொடு இறைவா....!

........என்று சொல்வது போல் இருக்குங்க... ரொம்ப நல்லா இருக்கு..
பகிர்வுக்கு நன்றி..!

(பை தி பை.. கவிதையில் இடையில் ஒரு டீ வந்துசுங்கோ...
அதை கொஞ்சம் இந்த பக்கம் அனுப்பி வைக்கிறீங்களா?? :-)))
இத ஏன் கேக்குறேன்னா.... எல்லா பதிவுலயும் ஒரு டீ வருது...
எங்களுக்கு தான் ஒன்னியும் காணோம்..... :-) )
Bibiliobibuli said…
உண்மை

நாங்கள் சாகடிக்கப்படுவது
பயங்கரவாதிகள்
என்பதால் அல்ல
தமிழர்கள் என்பதால்.

- கவிஞர் காசிஆனந்தன்

உண்மை என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி வரைந்த ஈழ ஓவியம் தான் பசியை விளக்கும் படமா?
dheva said…
ரதி...@ புகழேந்தி அவர்களின் ஓவியம்....

ஈழத்தமிழர்களின் நிலையை சித்தரிக்கும் வகையில்......எப்படி உணர்வுகளை பகிர்கிறதோ...

அதே போலத்தான்.. தமிழ் நாட்டு மக்களின் வறுமை என்னும் அவலத்தையும் பகிர்வதாக உணர்ந்தேன்...

ஒரு படம்...அதில் உள்ள உணர்வு....கோபம் கலந்த இயலாமை + அநீதியில் ஏற்பட்டுள்ல எரிச்சல்...

தமிழ் நாடு மட்டும் விதிவிலக்கல்ல சகோதரி....காலங்கள் இதே தொனியில் உருண்டு கொண்டிருந்தால்....உள்ளேயே கனன்று கொண்டிருக்கும் ஈழத்தை ஒத்த கதைகள் வெளிவரும்.....

நன்றிகள்!
Bibiliobibuli said…
//ஒரு படம்...அதில் உள்ள உணர்வு....கோபம் கலந்த இயலாமை + அநீதியில் ஏற்பட்டுள்ல எரிச்சல்..//

உங்கள் உணர்வுகளை காயப்படுத்துவது என் நோக்கமல்ல, தேவா. அந்தப்படம் பார்த்தவுடன் ஓர் சொல்லமுடியாத வலி. பொறுமையாக உங்கள் உணர்வுகளை விளக்கியதற்கு நன்றி.
நீண்ட நாட்களுக்குப் பின், நான் ஆழ்ந்து வாசித்து உள் வாங்கிய பொக்கிசக் கவிதை! வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த