உன்னைத் தவிர வேறு யாரும் என்னை இப்படி புரட்டிப் போட்டதில்லை. தொடாமல் அணைக்கிறாய், பார்க்காமல் இதயம் உடைக்கிறாய், சிரிக்காமல் என்னை சிலிர்க்க வைக்கிறாய்.... மொத்தத்தில் காதலின் கன பரிமாணங்களை என்னுள் நிறைத்துப் போட்டு விட்டு நீ கை வீசி நடக்கிறாய் பெண்ணே!
நீ கடவுளின் மாதிரியா? இல்லை கடவுள் உன்னை மாதிரியா?
நான் கனவுகளில் எங்கேயோ பறக்கிறேன். .. நீ என் சட்டையைப் பிடித்து இழுந்து வந்து எதார்த்த வாழ்க்கையைப் பார் என்று சாராசரிக்குள் என்னை புகுத்தி விடுகிறாய். புயலைப் போலத்தான் என்னுள் வீசிக்கொண்டிருக்கிறாய் ஒரு தென்றலின் தன்மையோடு... ! உன்னை கணிக்கத் தெரியமால் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்தே நகர்ந்து கொண்டிருக்கிறேன. கடைசி நிமிடத்தின் முடிவு வரையிலும் இந்த நிமிடத்தின் ஆரம்பம் வரையிலும்........
காதல் என்றால் அடிக்கடி சந்தித்தல், காதல் என்றால் தொலைபேசியில் தொங்குதல், காதல் என்றால் கட்டியணைத்தல், காதல் என்றால் தொட்டு நடத்தல், காதல் என்றால் காமத்தினை பதுக்கி வைத்து பாயும் தருணம் நோக்குதல், காதல் என்றால் திருமணம் செய்தல், காதல் என்றால் பித்துப் பிடித்து அலைதல், காதல் என்றால்... என்ன என்னவோ என்று கற்பிதங்கள் கொண்டிருக்கும் சமுதாயத்தில்....
" காதல் என்றால் மகிழ்ச்சி "
என்று சொல்லாமல் சொல்லிக் கொடுத்தவள் நீ. கற்றுக் கொடுப்பவள் கற்றுக் கொள்பவனை குரு என்று சொல்லும் ஆச்சர்யமும் இங்கேதான் நிகழ்ந்திருக்கிறது. நீ காலங்கள்தோறும் கற்றுக் கொடுத்திருக்கிறாய், கை பிடித்து வழி நடத்தியிருக்கிறாய்.. கடைசியில் எல்லாம் நீங்கள்தான் என்று சத்தமாய் சொல்லியிருக்கிறாய்....
உன்னை என்னசெய்வது என்று தெரியாமல், எப்படி சீராட்டுவது என்று புரியாமல் மெளனத்தின் ஆழத்தில் உனக்காக வாழ்த்துப்பாக்கள் இயற்றியும் எப்போதும் உன்னைப் பிரியாத வரங்கள் கேட்டும் ஏதோ ஒரு சக்தியிடம் துதித்துக் கொண்டிருக்கிறேன். இன்னதென்று அறியாமல் ஏதேதோ உணர்வுகளை எனக்குள் குவித்துப் போடும் ஒரு சக்தியாய் நீ எப்படி இருக்கிறாய் என்ற பிரமிப்பில் இருந்து வெளிவர முடியாமல் நான் தவித்துக் கிடக்கிறேன்.
காதல் என்ற வார்த்தைக்கு கற்பிதங்கள் கொடுக்கும் எந்த ஒரு வழக்கமான நிகழ்வுகளும் நமக்குள் நடந்தேறியதில்லை. அன்றாட இரவுகளில் இரவு வணக்கத்தையும், விடியலில் காலை வணக்கத்தையும் தாங்கி வரும் குறுஞ்செய்திகள் என்றால் என்னவென்று நமக்குத்தெரியாது. எப்போதாவது நாம் பேசும் அந்த நிமிடங்கள் எப்போதும் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கும். எனது பெரும்பாலான தனிமைகள் எல்லாம் தனிமைகள் அல்ல... என்பது யாருக்கும் தெரியாதது மட்டும் அல்ல அவை எப்போதும் உன் நினைவுகளால் நிரப்பப்பட்டிருப்பதும் எளிதில் புரியாது....
நீ இல்லாவிட்டாலும் பரவயில்லை.......
ஒரு மழை பெய்யும் அல்லது நல்ல வெயிலடிக்கும்
எங்கேனும்...ஒற்றைக் குயில் கீதமிசைக்கும்....
எப்போதும் வயல்வெளியின் பசுமைகள்
எனக்காய் காத்திருக்கும்.....
வெட்டவெளி இடைவெளிகளில் அசைவற்ற
தூரங்கள் அருகாமையாய் இருக்கும்....
தேய்ந்தாலும் மீண்டும் நிலவு வரும்....
என்னுள் சுகமான சோகமிருக்கும்...
கட்டுக்கள் அறுத்து கவிதை சீறிப்பாயும்..
நீ இல்லா விட்டால் என்ன.......
உன் நினைவுகள் போதுமெனக்கு.....!
நீ போவென்று சொல்வாய்
உனக்கே தெரியாமல்
உன் நினைவுகளை திருடிச் செல்வேன்...
வா வென்று சொல்வாய்....
பிடித்தே வரமாட்டேன் என்று சொல்வேன்..
என் ஆசைகளின் அளவுகள்..
என்ன அவ்வளவு அற்பமனாதா..
அளவுகள் கோல் வைத்து அளந்து விட...?
ஒரு முறை உன்னிடம் பேச்சுவாக்கில் இதை சொன்ன பிறகு....பதிலுக்கு நீ புன்னைகத்தாயே.. அப்போதுதான் என் கவிதை உயிர் பெற்றது என்பது உனக்குத் தெரியுமா? வாழ்க்கைக்கும் வாழ்வுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னிடம் இருந்து கற்று எனக்குத் தெரிந்தது போல நான் எழுதுகிறேன்.
எப்போதும் இருப்பது வாழ்க்கை அதை அர்த்தமுள்ளதாய் மாற்றுவது என்பது வாழ்வு...! வாழ்க்கை என்பது எப்போதும் இறந்தகாலமாய்த்தான் படுகிறது ஆனால் வாழ்வு என்பது இந்த கணத்தில் ஜனித்து இந்த கணத்தில் நிலைத்து நிற்பது....
' நீ என் வாழ்வு.....'
உன் கோபங்கள் எல்லாம் எனக்குள் எப்போதும் கோபமூட்டியது கிடையாது மாறாக கவிதைகளைத்தான் மூட்டியிருக்கின்றன. ஏதோ ஒரு நாளில் என்னிடம், எல்லோரையும் போலத்தான் நீ என்று நீ சொல்லி முடிக்கும் முன்பு என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விழுந்த வார்த்தை தொடுப்புகளை நீ கவிதை என்றாய்.. நான் கலக்கம் என்றேன்....
வானத்தின் தூரங்களை
என் எண்ணங்களால் அளந்துவிடுவேன்...
கற்பனையில் வரும் வார்த்தைகளுக்கு
அலங்காரம் செய்து கவிதைகள் என்பேன்....
தனிமையில் இருந்து கொண்டே...
உற்சாக ஊர்வலங்கள் செல்வேன்....
கனவுகளில் எனக்கான காதலியின்
கைப் பிடித்து போகாத தூரங்கள் போய் வருவேன்...
இறை என்ற விசயத்தை....என்னுள்ளே
தேக்கி வைத்து நான் ஏகாந்த புருஷனென்பேன்.....
புல்லோடு சர்ச்சைகள் செய்வேன்...
புயலோடு காதல் செய்வேன்...
கடலோடு காவியம் பேசுவேன்..........
மெல்ல நடக்கையில் சிறகுவிரித்து பறந்தே போய்விடுவேன்.........
ஆமாம்.......நானும் எல்லோர் மாதிரியும் தான்........!
கட்டுக்கள் நிறைந்த வாழ்க்கையில் கட்டுப்பாடுகளின்றி காதலிக்க கற்றுக் கொண்டுவிட்டு.... நாம் பிரிந்து விட்டோம். யார் சொன்னது சேர்ந்து இருத்தல்தான் காதலென்று? அது சராசரி மானுடரின் இச்சைகள் பெற்றுப் போட்ட கூற்று... ! காதல் என்பது சேர்தலில் மட்டுமல்ல, காதல் என்பது வாழ்தல்......! கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய பழக்கப்படாத உணர்வுகளைத் தாங்கிய ஒரு விவரிக்க முடியாத வரம்...
நீ நீயாகவே இருக்கிறாய்......நான் நானகவே இருக்கிறேன்......நம் காதலும் அதுவாகவே இருக்கிறது.
சிக்கல்களும் சீண்டல்களும் இல்லாமல் லயித்துப் போய்விட்ட சுகத்தினை...... அசை போட்டு, அசை போட்டு வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து .எழுத்துக்களுக்குள் பரவவிட்டு.......எடுத்து வாசிக்கும் போது......ஏதோ சொல்ல வந்து சொல்லாமலேயே திரும்பி விட்டதாய் உணர்கிறேன்.
எப்படி இருந்தால் என்ன.......!
நீ இருக்கிறாய்.........நான் இருக்கிறேன்...........நம் காதலும் இருக்கிறது.......!
அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!
தேவா. S
பின் குறிப்பு: பொங்கல் வாழ்த்து சொல்லாமல் காதலை பற்றி என்ன எழுத வேண்டி கிடக்குன்னு கேக்குறீங்களா........? அதான் எல்லொரும் போதும் போதும்ன்ற அளவு வாழ்த்துறாங்களே.......அப்புறம் இன்னொரு விசயம், பொங்கல் நாளை கழிச்சு போயிடும் ஆனா காதல் எப்பவுமே இருக்குமே.........!
Comments
உன் நினைவுகள் போதுமெனக்கு.....!///
நினைவுகளே ஞாபகங்களில் நிறைந்திருக்கும்! நம்மை மகிழ்விக்கும்!
இந்த வார்த்தையில் காதல் முடிந்து மீண்டு அதைவிட இரண்டு மடங்கு உறுதியுடன் காதல் வளர்கிறது...
அப்புறம் இன்னொரு விசயம், பொங்கல் நாளை கழிச்சு போயிடும் ஆனா காதல் எப்பவுமே இருக்குமே.........!////
ஆமா ஆமா காதல் நம் மனதில் காதல் எப்போதும் பொங்கி கொண்டு இருக்கும்
(ஆனா இதுகூட ஒரு தூது போலவும் இருக்கு)
உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...
புயலோடு காதல் செய்வேன்...//
புல்லோடு சர்ச்சை
புயலோடு காதல்
இதுதான் ஆங்கிலத்தில் சொல்லப்படும் Oxymoron?? :))
//மெல்ல நடக்கையில் சிறகுவிரித்து பறந்தே போய்விடுவேன்.........//
இது செம :))) நான் அடிக்கடி கனவிலும் கற்பனையிலும் காணும் ஒன்று....!
சுவாசமே காதலாக எல்லாத் தொகுப்புகளுமே அருமை!
காதலிப்பவன் மட்டுமல்லாது
அழகை ரசிப்பவனையும் கவிதை எழுத வைப்பது காதல் மட்டுமே ......
ரொம்ப அருமையா வார்ப்பு அண்ணா ....
இத படிச்சா காதலிக்காதவங்க கூட காதலா உணர்வாங்க அண்ணா
Ahaaa... Anna thaththuvam anna.
///நீ இருக்கிறாய்.........நான் இருக்கிறேன்...........நம் காதலும் இருக்கிறது.......!///
ஆனா அந்த "நீ" ,"காதலும்" அமைதியாக இருக்கிறது ........... ஆனால் "நான்" மட்டும் இங்கே ஏங்கிப் போய் இருக்கிறது
இந்த லைன் கொஞ்சம் உதைக்கிதே ??????
இங்கு பிரிவு எனபது எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது .????
அவ்ளோதான்.....தல...!
பொங்கல் அடுத்த வருஷம் திரும்பவும் வருமே......
ஆனால் காதல் எப்போதும் இருக்குமே.......(இது எப்டி இருக்கு...!!!!!!)
//காதல் என்பது சேர்தலில் மட்டுமல்ல, காதல் என்பது வாழ்தல்......!//
படிக்க சுவாரசியமான பல இடங்களில் இந்த வரியும் ஓன்று.
பிரிதலில் புரிதல் அதிகரிக்கும் தான்.
வருடங்கள் கடந்தாலும் காதலின் இனிமை அன்று போல் இன்றும் இனிக்கவே செய்யும், வெறும் நினைவுகளால் !
காதல் காதலாகவே இருக்கிறது !
தொகுப்புகள் பல தொடரட்டும்...
நல்ல காதலை நானும் படித்து(கற்று) தெரிந்து கொள்கிறேன்.
தமிழ்மணம் விருதிற்கு என் வாழ்த்துகள்.
தமிழ்மண விருதுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் தேவா.உங்கள் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்.