ஒத்த கருத்தோடு கூடிய, சித்தாந்தத்தோடு கூடிய ஒருவரை சந்திக்கும் போது கிடைக்கும் உணர்வு பரவசத்தின் உச்சம். ஆமாம் ஒரு புத்தகம் படித்து முடித்த திருப்தியை அப்படி வாசித்து முடித்தவரிடம் பகின்றால்தான் அவருக்கு அது புரியும். சமகாலத்தில் நிகழும் எல்லா முரணான நிகழ்வுகளும் கோபமாய் மட்டும் பதியவில்லை பாடமாயும் மனதில் பதிந்து, ஏன் இப்படி? என்ற கேள்விகளை என்னுள் இரைத்துப் போட்டு குப்பைகளுக்கு நடுவே இருக்கும் மனிதன் போல கேள்விகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டு விழிக்கும் தருணத்தில் ஏன் நான் ம்ட்டும் இப்படி என்ற கேள்விக்கு பதிலாய் கிடைத்ததுதான் மெளனம்!
பதிலாய் கிடைத்த மெளனமும் பின் கேள்வியாய் ஆகிப் போகுமா என்று எழுந்த கேள்வியும் எனது அறியாமையிலிருந்துதான் கிளைத்தது.
மொத்தத்தில் கேள்விகளே அறியாமை என்ற தெளிவு கிடைத்ததின் பின் புலத்தில் எழுந்த கேள்விதான் எதை நோக்கி நகர்கிறாய் என்ற ஆதாரா ஸ்ருதியான ஒரு கேள்வி. சரி எதை நோக்கி நான் நகர்கிறேன்.........? ஒரு முறை என்னுள் கேள்வியை கேட்டு விட்டு மெளனமாய் வானத்தை வெறித்து பார்த்த பொழுதில் கவனித்த போதுதான்..........எனக்குள் அந்த கேள்வி விடைதேடி அங்கும் இங்கும் பசிக்கு அலையும் பிச்சைக்காரானாய் அலைந்தது தெரிந்தது
என்னின் நகர்வுகள் எல்லாம் ஏதோ ஒரு நிம்மதியை நோக்கி என்ற பொழுதில் மறக்காமல் மூளை விதைத்த கேள்விதான்.......எது நிம்மதி என்று? கூடலா? காதலா? தேடலா? கற்பித்த கடவுளா? இல்லை கடவுளையும் விலைக்கு வாங்கும் பணமா? அந்த நதிக்கரையா? இந்த மர நிழலா? இதை வாசிக்கும் நீங்களா? அந்த கோவிலா? இல்லை..........எப்போதும் என் வயிற்றுப் பசி தீர்க்கும் உணவா?
எல்லாம் ஒரு கட்டத்தில் தேவையாகி தற்காலிகமாய் நிம்மதியை கொடுப்பது போல தோன்றினாலும் மீண்டும் மீண்டும் இவற்றை தேடித் தேடி பெற்று இழந்து, இழந்து பெற்று என்று ஒரு இடைவிடா விளையாட்டாய் தொடரும் இந்த பயணத்தில் அறிந்ததே இவை யாவும் நிம்மதி இல்லை என்று..., ஆமாம் நிரந்தரமாய் இருப்பதுதானே நிம்மதி?
தோன்றி மறையும் இடைக்கால திருப்திகள் எல்லாம் நிம்மதி என்ற வாசகம் பொறிக்கபட்ட பொய்கள்தானே?
மனிதக்கூட்டங்கள் எப்போதும் வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் ஆனால் வாழ்வின் மூலத்தையும் வாழ்வின் போக்கையும் வாழ்வு தாண்டிய நிகழ்வுகளையும் சொல்லிக் கொடுக்காது. இங்கே திருமணங்கள் நிகழ்த்தப்பெறும் ஆனால்...........ஏன் திருமணம் என்ற கேள்விக்கு விடை பகிர ஆட்கள் இல்லை? இங்கே குழந்தைகள் வினாடிகள் தோறும் பிறக்கும் ஆனால் ஏன் பிறக்க வேண்டும் என்ற கேள்விகளை விளைவிக்கும் மூளைகள் ஒன்று ஒதுக்கப்படும் அல்லது ஆச்சர்யமாக பார்க்கப்படும்
இங்கேதான் நான் கேள்விகள் கேட்டு பதிலாய் ஏதோ பொய்யைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.கேள்விகளே இல்லா பிரபஞ்சத்தில் பதில்கள் என்பவை எந்த அளவு உண்மையானவை?
நானும் நீங்களும் வெறுமனே நகரும் வெற்று பிம்பங்கள் இங்கே கேள்விகளை விட, பதில்களை விட கோபங்களை விட உறவுகளை விட ஆராய்ச்சிகளை விட சிறந்தது கிடத்தல். அது என்ன கிடத்தல்........? தண்ணீரிலே எறியப்பட்ட கல் நீருக்குள் கிடக்கும் அது எந்த முயற்சிகளும் செய்யாது. நகராது, அசையாது அது போல நாமும் ஆழமாய் நமக்குள் கிடந்துதான் ஆகவேண்டும்.
புறத்தில் இயக்கங்கள் கொண்ட ஒரு உலகத்தில் கிடத்தல் சாத்தியமா? என்ற கேள்வியை வியாக்கியானம் செய்யும் மூளைகளை இந்த நேரம் எட்டிப் பிடித்து இருக்கும் சரியா? புறத்தில் இயங்கி...........அகத்தில் கிடக்கும் கலையறியத்தான்.......கோவிலும், கோவிலில் கல்லாய் இறைவன் என்ற கற்பிதங்களும்......! பெரும்பாலும் கிடந்து பாருங்கள் பிரச்சினைகளின் மூலம் புரியும். கிடந்து பாருங்கள் உங்களுக்கே தெரியாமல் தியானம் உங்களை ஆட்கொள்ளும். கிடந்து பாருங்கள் சப்தமில்லா வாழ்வின் தாத்பரியங்கள் புரியும்.
எந்த விசயத்தோடும் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ளும்போது அங்கே பிரச்சினைகள் வெடிக்கிறது. காதல் கொண்டிருக்கலாம், அதோடு யாரையும் தொடர்பு படுத்தி விடாதீர்கள். காதல் என்பது ஓடிக் கொண்டிருக்கும் நதி போன்றது அதை யாருக்கேனும் நிறுத்த நினைத்தால் அது நதியல்ல.....!
மனிதனின் எல்லா உணர்வுகளும் இயங்கிக் கொண்டே இருப்பது அதை தொடர்புபடுத்தி நிறுத்தி வைக்க அல்லது கட்டுக்குள் வைக்க முயலும் போது அதன் அழகு தொலைந்து போகிறது. உறவுகள் கூட, நம் நேசம் எதிர்பார்ப்பாய் மாறி நமது கட்டுக்குள் உறவுகள் வரவேண்டும் என்று பார்க்கும் இடத்தில் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றமாய் மாறி தேவையில்லாத மனச்சங்கடங்களை கொடுக்கிறது.
ஒரு கவிதையின்
உணர்வுகளோடு
ஒன்றிப் போன
ஒரு மாலையில்
என் உடலைவிட்டு
சட்டென்று வெளியில்
நழுவியே விழுந்து விட்டேன்...!
அங்குமிங்கும் அலைந்து
அப்போதுதான் பெய்த
ஒரு மழைத்துளிக்குள்
ஓடியே ஒளிந்து கொண்டேன்!
தண்ணீராய் தரை தொட்டு
ஒரு திவலையாய்..
மண்ணில் புரண்டு புரண்டு
என் உடலின் நினைவுகள்
எல்லாம் மொத்தமாய்
கழுவி.. மோகத்தில்
திளைக்கையில் ஒரு
காற்று என்னை..
காதலோடு கட்டிப் பிடித்து
தன்னுள் அடைத்துக் கொண்டது....!
சிலீரென்று இறக்கைகள் இன்றி..
சீறிப்பாய்ந்த வேகத்தில்
சிக்கிக் கொண்டேன் ஒரு
பூவின் இதழ்களுக்குள்....!
வண்டுகளின் ரீங்காரத்தில்
விழிந்தெழுந்த நான்..
சற்றைக்கெல்லாம்...
எப்படி அவற்றின்
இரையாகிப் போனேன்?
சுகமாய் வண்டுகளின்...
வயிற்றுக்குள் நான்...
இளம் சூடாய் இருந்த
பொழுதில் நினைவுகளற்று
என் உடலுக்குள்
வெறுமனேதான் கிடந்தேன்..
கிடத்தலிலே எல்லாமாய் நிறைந்தேன்..!
பெரும்பாலும் கிடந்து பாருங்கள்...........
உங்களின் உலகம் பற்றிய பார்வை வேறாகும்...........உங்களைப் பற்றிய உலகின் பார்வையும் வேறாகும்......!
தேவா. S
Comments
//உங்களின் உலகம் பற்றிய பார்வை வேறாகும்...........உங்களைப் பற்றிய உலகின் பார்வையும் வேறாகும்......!//
பார்வையின் கோணத்தை மாற்றுங்கள், சத்தியம் வெளிப்படும் :-)
......He says, “Be still, and know that I am God;...." Psalm 46:10
என்ற பைபிள் வசனம் உண்டு.
மேலும், "Be still now and know that you are all that is" என்றும் சொல்வார்கள்.
You may like to check out this website:
http://www.bestillnow.com/
.......ரொம்ப தீர்க்கமான பார்வை / நோக்கு.... காதலெனும் உணர்வு.... ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் நிம்மதி... என்பதை அழகா சொல்லிட்டீங்க.. :-))
///எல்லாம் ஒரு கட்டத்தில் தேவையாகி தற்காலிகமாய் நிம்மதியை கொடுப்பது போல தோன்றினாலும் மீண்டும் மீண்டும் இவற்றை தேடித் தேடி பெற்று இழந்து, இழந்து பெற்று என்று ஒரு இடைவிடா விளையாட்டாய் தொடரும் இந்த பயணத்தில் அறிந்ததே இவை யாவும் நிம்மதி இல்லை என்று..., ஆமாம் நிரந்தரமாய் இருப்பதுதானே நிம்மதி? ////
.....ஹ்ம்ம்ம்.. எப்படிங்க இவ்வளவு எளிமையா... அதே நேரம் வலுவா உங்க கருத்தை வைக்கிறீங்க.. ஓடும் வரையில் தான் நதி..... தேடும் வரையில் தான் வாழ்க்கை...........!!
எப்போது தேடல் நின்று போகுதோ..... அப்போ வாழ்வின் சுவாரஸ்யமும் குறைந்து போகும்...!
உங்கள் கருத்துப்படி நிரந்தரமான நிம்மதிக்கு..... உள்ளுணர்வாய் காதலை மட்டும் கொண்டு... கலையாமல் ஓடும் நதியாய்... வாழ்வில் கடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானா???
சுவாமி விவேகனந்தரின் கூற்று நினைவிற்கு வருகிறது. "Do not merely endure; be unattached !"
// காதல் கொண்டிருக்கலாம், அதோடு யாரையும் தொடர்பு படுத்தி விடாதீர்கள். காதல் என்பது ஓடிக் கொண்டிருக்கும் நதி போன்றது அதை யாருக்கேனும் நிறுத்த நினைத்தால் அது நதியல்ல.....!
மனிதனின் எல்லா உணர்வுகளும் இயங்கிக் கொண்டே இருப்பது அதை தொடர்புபடுத்தி நிறுத்தி வைக்க அல்லது கட்டுக்குள் வைக்க முயலும் போது அதன் அழகு தொலைந்து போகிறது.//
எல்லா உணர்வுகளையும் இறைவனுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. இறைவனோடு கொள்ளும் காதல் மிகுந்த அழகு வாய்ந்தது...என்பதை ஆண்டாள், மீரா, பாரதி போன்றோரின் பாடல்கள் பறைசாற்றுகின்றனவே.
***********
மேற்சொன்னவை விவாதத்திற்கு அல்ல. பதிவிற்கு சம்பந்தமா கருத்து சொல்றேன் என்று மட்டும் எடுத்துக் கொள்ளவும். :-)
Ordinary human love results in mystery. Love for God brings blessedness.
- Holy Mother, Sri Saradha Devi :-)