Skip to main content

நாச்சியா....!


















ஏண்டா பொன்னப் பயலே........ஏண்டா பொம்பளப் புள்ளைய கூடவே வெளயாடுற பொம்பள சட்டி மாதிரி... இவ்ளோ கோபமா அப்பா கத்தி நான் பாத்தது இல்லை.......எனக்கு தூக்கி வாரிப்போட்டுருச்சு..... ! ஏண்டா ஆறாப்பு படிக்கிற கழுத எப்ப பாத்தாலும் என்னடா பொம்பளை புள்ளைக கூட...ம்ம்ம் .பயலுக கூட போய் விளையாடுடான்னு மறுபடியும் கத்துனாரு...!

நான் காத பொத்திகிட்டே.... சொன்னேன் ஏப்பா எனக்கு பயலுக கூட வெளயாட பயமா இருக்குப்பா கூச்சமா இருக்குப்பான்னு சொல்லவும் என்னைய இழுத்துட்டு போயி சாத்து சாத்துனு சாத்திட்டாரு....! அதான்.. இப்ப அழுதுகிட்டு படுத்து இருக்கேன்....!

முன்னாடி எல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க இப்பத்தான் என்னைய ரொம்ப அசிங்கபடுத்துறாக எனக்கும் என்ன நடக்குது எனக்குள்ளனு புரியவும் மாட்டேங்குது. மனசும் எப்பவும் திக்...திக்னு அடிச்சிக் கிட்டே இருக்கு. பள்ளிக்கூடத்துல கூட பயலுக பக்கதுல உக்காரயில ஒரு மாறி கூச்சமா இருக்கு. அவங்கள பாக்கும் போதே ஒரு கூச்சம் வருது...! ஒரு நாள் எங்க டீச்சர் கிட்ட சொன்னேன்....எனக்கு இங்க உக்கார பயமாருக்குன்னு....!

அட லூசுப் பயலேன்னு திட்டிட்டு.. நீ என்ன ஒன்போதான்னு கேட்டாக....? ஒம்போது அப்படீன்னா என்ன டீச்சர்னு கேட்டப்ப நீதான்டா லூசுப்பயலே முருகானு சொன்னது கூட பெரிசா தெரியலீங்க. கூடப்படிக்கிற பிரண்சுக எல்லாம் என்னைய சுத்தி சுத்தி வந்து.... ஏய்.. ஒம்போது முருகா... டொய்ங் டொய்ங் டொய்ங்னு கிண்டல் பண்ணினத என்னால மறக்கவே முடியல.... !

இப்போ எல்லாம் என் பொழப்பு நிதமும் அழுகறதாவே போச்சு? அம்மா மட்டும் சொல்லும் டே முருகேசு ஆம்பளைடா நீன்னு நிதானாமா தைரியமா இருடான்னு...எனக்கு அழுகையா வரும் அம்மா..ஒரு நாளு எனக்குப் பயலுக கூட உக்கார செரமமா இருக்குமான்னு சொன்னேன்... அதுக்கு அம்மா வெளக்கமாறு பிஞ்சி போகும்னு அதட்டவும் நான் போயி ஒரு மூலையில உக்காந்துகிட்டேன்.

இப்படி இருக்காத... இருக்காதன்னு எல்லோரும் சொன்னாங்களே தவிர ஏன் இப்டி இவனுக்கு தோணுதுன்னு யாருமே விளங்கிக்கல....எனக்கே விளங்கல..! எட்டாப்பு படிக்கிறப்பதான் வெளங்கிகிட்டேன் அதுவும் ப்ரண்சுக மூலமாத்தான்.. ஆமாங்க....எனக்கு உடம்பும் குரலும் மட்டும் ஆம்பிள மாதிரி இருக்கு ஆனா என் மனசுல நான் ஒரு பொண்ணாதான் இருக்கேன்....!

எனக்கும் இப்ப எல்லம் நல்லாவே வெளங்கிப் போயிருச்சுங்க...என்ன மாறி இருக்குற பொறப்பு எல்லாம் ஆம்பளையும் இல்லையாம் பொம்பளையும் இல்லையாம்...குறையா பொறந்துட்டோமாம்...அலியாம், ஒம்பாதாம், பொட்டையாம்... அரவாணியாம்.... நாகரீகமா இப்ப திருநங்கைனு சொல்றாங்களாம்....

குறையா பொறக்குறதுன்னா என்னனு ஒரு நாள் எனக்குள்ளேயே கேள்வி கேட்டு கேட்டு அழுதுட்டு இருந்தேன்..தனியாத்தான்..! எங்க வீட்ல என் அக்காளுங்க இருக்காளுக ஒத்தையில்ல ரெண்டு பேரு இருக்காளுக எனக்கும் நேர் கீழ தம்பிப் பய இருக்கான் ஒருத்தன்.... எனக்கு நல்ல பாசம்ங்க இவுங்க மேல எல்லாம்...ம்ம்ம்ம்ம் ஆனா நான் பக்கதுல போனாலேயே என்னிய அருவருப்பா பாப்பாங்க....என்கிட்ட பேசவே மாட்டங்க இவுங்க எல்லாம்....

கூடப்பொறந்த பொறப்புகளே புரிஞ்சுக்கல பெத்த தாய் தகப்பனே அறிஞ்சுக்கல..என் கதைய சாமியா கேக்கும்...? அது இருக்கா இல்லையான்னே தெரியலை அது எப்படி கேக்கும்.....! ஒரு நா ராத்திரி வீட்ல எல்லோரும் திருவிழாக்குப் போயிட்டாங்க பக்கத்து தெருவுலதான் கோயிலு! என்னவோ தெரியலை என்னிய கூட்டிட்டு போனா அசிங்கமா இருக்குன்னு விட்டுடு போய்ட்டாங்க. எனக்கு செத்துடலாமான்னு கூட தோணுச்சு ஆனா பயமாவும் இருந்சுச்சு.

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசங்க...அத இன்னிக்கு நெறவேத்திப் பாக்கலம்னு நினைச்சேன்....! உங்க கிட்ட சொல்லவா.....?

ஆருகிட்டயும் சொல்லக்கூடாது சரியா....? காதைக் கொடுங்களேன்.. அட நீங்களாச்சும் கிட்டவாங்க.. நான் என்ன கடிச்ச திங்கப் போறேன்....அச்ச்சோ....எனக்கு வெக்க வெக்கமா வருது...சொல்லட்டுமா? அது வந்து......அது....அது....

எங்க அக்கா பாவடை தாவணி கட்டிப் பாக்கபோறேன்.....? என் மனசறிய எஞ்சாமி சத்தியமா நான் பொண்ணுதானே...இருங்க.. இப்ப கட்டிகிட்டு வந்து காட்டுறேன்....
இந்த கத்திரிப் பூ கலரு தாவணின்னா எனக்கு அம்புட்டு இஷ்டம்....ம்ம்ம்ம் அந்த மஞ்சக்கலருபாவடை ஜிகினா நெறைய இருக்கும்....பூப்போட்ட டிசைன் எனக்கு உயிரு....அந்தக் கண்ணாடி வளைய.. ம்ம்ம் இன்னும் அவ வச்சு இருக்குற பூராத்தையும் எடுத்து போட்டுகிட்டேன்...பொம்பளை போடுற எல்லா ட்ரெசும்தான்..! பொட்டு வச்சிப்பாத்தேன்...கன்ணுக்கு லேசா மை போட்டுகிட்டேன்... !

எனக்கு கொலுசுன்னா உசுரு தெரியுமா? எனக்கு போடணும்னு கொள்ளை ஆசை....! முடி நல்லா வளர்த்துக்கணும் இனிமேன்னு நெனச்சுகிட்டே மெல்ல நடந்து பாக்கயில........என்னிய பாத்தா எனக்கே அழாகா தெரிஞ்சுச்சு........அச்சச்சோ... யாரோ வார சத்தம் கேக்குதே.....நான் பயத்துல ஓடிப்போயி ஹால்ல எட்டிப் பாத்தா....

திருவிழாவுக்க்கு போனவுங்க மழை வந்துடுச்சுன்னு திரும்பி வந்துட்டாங்க.......அம்மா, அப்பா, தம்பி, அக்காங்க....எல்லார் முன்னாடியும் நான்....

நடு ராத்திரி மணி பன்னென்ட தாண்டி போச்சு..தொடைல அம்மா போட்ட சூடும்....முதுகல அப்பா அடிச்ச அடியும் தம்பியும் அக்காவும் காறித்துப்புன எச்சியோடயும் படுத்த எனக்கு தூக்கம் வரலை. என்ன பொறப்புடா சாமி என்ன பொறக்கவச்சே.....? எல்லா மனுசங்களுக்கும்....மனசுதான் அவுங்கனு வாழ்றப்போ என்னப் போல பொறப்புகள ஏன் மனச வச்சி மதிக்காமாட்டேங்குது சனம்......

மனசுக்குள்ள பொண்ணா இருக்குற எங்களுக்கு உடம்பு ஆம்பளை மாறி இருக்கு.இதுல என்ன பெரிய தப்பு இருக்கு? எதுலயும் சேத்தி இல்லனு நீங்கதானடா சொல்றீங்க....? குறையோட பெத்து தொலைச்சுட்டேன்னு என்ன பெத்த அம்மாவே சொல்றாளே...? இது எந்த ஊரு கதடியம்மா?

இடையில வந்தாதானே கொற? பொறப்புலயே நாங்க இப்படி இருக்கறது எப்படி கொறையாகும்.. நாங்க முழுசுதான்....நாங்க இருக்குற மாறியே இருக்குறதுல நாங்க முழுசுதான். ஆண்டவனே ஆம்பளையும் பொம்பளையுமா நின்னு கையெடுத்து கும்புடுறீக....பெத்த புள்ளைய அப்டி இருந்தா அடிக்கிறீங்க....!

இனி அந்த வீட்ல இருக்கமாட்டேன்..! வீட்ல எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்கும் போதே முடிவு பண்ணினேன்...ஆமாம்.. நான் போறேங்க...! என்னால தூக்குப் போட்டு சாகப் போறேன்னு எங்கப்பா சொல்றாரு, எல்லாருக்கும் அவமானமா நான் ஏன் இருக்கணும்? அப்பா சட்டைப் பாக்கெட்ல இருட்ல கைவிட்டேன்.... கையில கிடச்ச 500 ரூவாயும்,,, நான் கட்டியிருந்த பாவடை தாவணியோடயும் போறேன்.....

என்ன கலங்கடிச்சுப் புட்டாங்க...நான் போறேன்...!

" பெத்தவ புள்ளையில்லேன்னு
என்ன வெறுத்து ஒதுக்கி புட்டா
மனசே இல்லாத மாருல
நான் குடிச்ச பாலெல்லாம் விசம்தான?
என்ன பெத்த அம்மாவே
உன்ன விட்டு நான் போறேன்....!

என்ன காத்து நீ வளப்பேன்னு
உன்ன அப்பான்னு நாஞ்சொன்னேன்..
என் கழுத்த நெறிச்சுக்
கொல்ல வந்த கொடுமையிலே
உன்ன விட்டு நான் போறேன்
என்ன பெத்த அப்பாவே...!

கூடபொறந்தியளே
என் கூட இருப்பியன்னு
நான் கண்டு வச்ச கனவெல்லாம்
எம் மேல எச்சி துப்பி
அழிச்சு போட்டியளே..
ஏன் கூட பொறந்த மக்கா
வெகு தூரம் நான் போறேன்..."

வாசல தாண்டி நான் வீதிக்கு வந்துட்டேன். வானத்துல நிலா இருந்துச்சு....? நீ ஆம்பளையா பொம்பளையான்னு பொச கெட்டத்தனமா கேட்டு நானே சிரிச்சுகிட்டேன்....அதுகளையெல்லாம் சனம் எந்த கேள்வியும் கேக்காம விட்டு வச்சிருக்கே? ஆதாயம் கொடுக்குற எல்லாத்தையும் கேள்வி கேக்காதுக சனங்க...! எனக்கு நான் கட்டியிருந்த தாவணி பாவடையும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு....உலகம் பெருசு...எப்படியாச்சும் பொழச்சுக்குறேன்....

நானா பேசி இருட்டுல நடக்கும் போது... எதித்தாப்பல யாரோ வர்ற மாதிரி தெரிஞ்சுச்சு...."ஏய் யார்றி நீ...." தூரத்துல இருந்து இருட்ல இருந்த என்னை கேள்வி கேட்டுகிட்டே கிட்டக்க வந்தாங்க...." நான் பஸ்ஸாண்டுக்கு போறேங்க...."ன்னு பதில கொஞ்ச வேகமாவே சொன்னேன்...." ஏய் இங்க பாருட..இங்க......அலி ஹி ஹி ஹி...." சிரிச்சுகிட்டே என் கைய புடிச்சு இழுக்கவும் எனக்கு பயமா போச்சு.....

"ஏய் இஞ்சேருங்க விடுங்கடா என்னைய நான் சின்னப்புள்ளடா." சொல்லிகிட்டு இருக்கும் போதே....ரெண்டு பேர்ல ஒருத்தன் அவன் முகத்த என்கிட்ட கொண்டு வர இன்னொருத்தன் என்னைய இடுப்போட சேத்து புடிச்சுகிட்டான்........அவனுக குடிச்சிருந்த சாராயம் நாத்தம் என்னால முடியலை. இருட்டு அவுங்களுக்கு ரொம்ப சாதகமா போச்சு..........டேய் விடுங்கடா. டேய்..........முதுகெல்லாம் வலிக்குதுடா.... டேய்....கால்ல சூடுடா..எரியுதுடா டேய்........டேய்....மயங்கிட்டேன்..............

கண்ண தொறந்து எந்திருக்கும் போது....உடம்பெல்லாம் ரணமா வலிச்சுது.ரெண்டு வெறி நாயும் என்ன பண்ணிச்சுங்கனு தெரியல.. என் தொடைல அம்மா சூடு வச்ச இடத்துல ரத்தம் வழிஞ்சு காயம் பயங்கர வலியா இருந்துச்சு...ஏதோ என்ன பண்ணிருக்காங்க புரிஞ்சும் புரியாம இருந்துச்சு....எனக்கும் 15 வயசு ஆச்சுல்ல.....

என்ன மாதிரி பொறப்பு எல்லாம் அலின்னும், ஒம்போதுன்னு கேலி பண்ற நல்ல மனுசங்களா? நீங்க சொல்ற மாறி நீங்க எல்லாம் நல்லாத்தானடா பொறந்திருக்கீங்க? ஏன்டா பொறம்போக்கு நாய்ங்களா என்னைய மாறி ஆளுகள சீண்டுறிங்க...
ஒழுங்கா பொழப்பு தலைப்பு கொடுத்தா ஏண்டா.. எங்கள மாறி ஆளுக எல்லாம் பாலியல் தொழில் செய்ய வர்றோம்..? போராடி போராடி குடியரசு ஆகி இம்புட்டு நாளு ஆகி இப்பத்தான எங்களுக்கு ஓட்டுரிமையே கொடுத்துச்சு அதுவும் தமிழ் நாட்ல மட்டும்...! அதுக்கும் ரேசன் காடு வேணும் குடும்பம் வேணும்னு சொல்றாங்களே... ஏய்யா ஓட்டுப் போட உசுரு இருந்தா போதாதா?

33% இட ஒதுக்கீடு கொடுக்குறதுக்கு மூக்கால அழுவுற அரசாங்கம் எங்கள மாறி ஆளுகளுக்கு 1% ஆச்சும் கொடுக்குமா .. தேர்தல்ல நிக்க? என்னைய மாறி இருக்குற அக்காங்க எல்லாம் வீட்டையும் விட்டுத் தொறத்தி நாட்லயும் மதிக்காம...ஏன் ஒரு ஈன எண்ணம் எல்லாருக்கும்....? ஆடு, மாடு நாய் எல்லாம் வாழ்ற பூமில எங்கள மாதிரி அரவாணிக வாழக்கூடாதா நிம்மதியா?

வீட்ட விட்டு வெளில வந்த பத்தாவது நிமிசமே கிண்டலும் கேலியும் பண்றவன எல்லாம் பெத்தது ஒரு பொம்பளைதானே?
மனசுக்குள்ள தீவரமா நான் யோசிக்க நான் டெய்லி படிக்கிற நியூஸ் பேப்பர் உதவி பண்ணிச்சு....! எந்திருச்சு நின்னேன்... நல்ல வேளை..கையில வச்சிருருந்த பணம் இருட்ல அப்படியே சுருண்டு கிடந்துச்சு...

என்னதான் செய்யுது இந்த வாழ்க்கைனு பாக்குறேன்... மெல்ல என் ட்ரெஸ்ஸ சரி செஞ்சுகிட்டு பஸ்டண்ட் வந்தேன்.... ! சென்னைனு போட்டிருந்த பஸ்ல ஏறி டிக்கட் வாங்கிட்டு உக்காந்தேன்...! வண்டி எடுக்க டைம் ஆகும் போல......அசதில அப்டியே தூங்கிட்டு இருந்த என்னை யாரோ தட்டி எழுப்பி...ஏத்தா எங்க போறன்னு யாரோ கேட்டது காதுல விழுந்துச்சு....
பக்கத்துல என்னிய மாதிரியே ஒரு அரவாணி அம்மா...என் முகத்தையும் ட்ரஸ்ஸயும் பாத்துட்டு....." ஏன்டா கண்ணு... " என்னாச்சுனு கேக்கவும்......அம்மானு அவுங்கள கட்டிப் பிடிச்சு அழுதேன்........!

என் தலைய கோதிவிட்டு.... நாச்சியா நீ நல்லா இருப்ப மெட்ராஸ்தான் வர்ற வா.. நான் உன்னை பாத்துக்குறேன்...! இனிமே நீ நாச்சியா.. யாருக்கும் பயப்படாத...தைரியமா இரு.....நான் ஒரு டெய்லரிங் கட வச்சு இருக்கேன்....அங்கயே வேல பாருன்னு சொன்னாங்க. அவுங்களுக்கு தெரிஞ்சுருக்கும்தானே... என்னிய மாறி கஷ்டப்பட்டுதானே பொழச்சு வந்து இருப்பாங்க....

கும்பகோணத்துல இருந்து பஸ் கிளம்பி மெட்ராஸ் பக்கம் போய்ட்டு இருந்துச்சு....! விடிய ஆரம்பிச்சுருச்சு...உடம்பு எல்லாம் வலி எனக்கு. அந்த அம்மா தோள்ல சாஞ்சுட்டு.....இருந்தேன்..என் மனசு அமைதியா இருந்துச்சு... நம்பிக்கையோட...

இப்ப நான் முருகன் இல்லை நாச்சியா.......!

தேவா. S


Comments

நாச்சி.... அஞ்சு ரூவா குடுத்தா கூட தலையில கையவச்சு வாழ்த்துவியே.... வேசம் போட்டுப் பழகுற இந்த மனுசங்களுக்கு மத்தியில நல்ல மனசுக்காரி நீ சொல்றதெல்லாம் பலிக்குமாமே... என்னைக் கொஞ்சம் வாழ்த்துறியா.. நான் நல்லா இருக்கேன்?
கஷ்ட்ட ஜீவிதம் ...ஆண்டவன் ஏன் இப்படி ஒரு வகை போறப்ப கொடுத்தான் ன்னு நினைப்பதுண்டு ...
என்ன சொல்லறதுன்னு தெரியாம டைப் பண்ணி டைப் பண்ணி அழிச்சிட்டு இருக்கேன். எனக்கு இன்னமும் நினைவு இருக்குண்ணா என்னுடன் படித்த மணி.. கெட்டிக்காரன்... ஆனா பசங்க எவ்வளவு சீண்டுநாளும் கோச்சுக்க மாட்டான். எப்போதும் சிரிச்ச முகம். கண்ணுக்கு மை வைக்காம பள்ளிக்கூடத்துக்கு வர மாட்டான். பரத நாட்டியம் நல்லா ஆடுவான்..வீட்டுக்குப்போன பாவடை தாவணி போட்டிருப்பான்...அவங்க வீட்ல அவனுக்கு முழு சப்போர்ட் இர்ந்துச்சு...இன்னை இஞ்சினியரிங்க் படிக்குறப்போதான் அவன் கவலப்பட்டு பார்த்திருக்கேன்..அதிகமான சீண்டல்களும்,கேளிக்களுக்கும் ஆளானான்..ஆனாலும் அவன் மன உறுதி மட்டும் குறையவே இல்ல..அதுக்கு காரணம் அவனுடைய நண்பர்களும்,குடும்பத்தாரும் தான்..அவங்களுக்கு வேண்டியது ஆதரவும்,அங்கிகாரமும்தான்.இது இருந்துச்சுன்னா சமுதயத்துல அவங்களும் நல்ல நிலைமைல தான் இருப்பாங்க. இவ்வளவும் சொல்லிப்புட்டேன் இந்தப் படைப்ப பத்தி சொல்லனுமே, மேல இருக்குறத சொல்ல வச்சதே நாச்சியாதான... நச்சியா ரொம்ப நல்லாருப்பா...
Radha said…
@தேவா,
அருமையான படைப்பு. திருநங்கை என்று சமீப காலமாக புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள்...பக்தி இலக்கியத்தில் பல ஆழ்வார்கள், சைவ சமயக் குரவர்கள், தியாகராஜர் முதலிய கீர்த்தன கர்த்தாக்கள்....எல்லாம் மனதளவில் தங்களை பெண்ணாக பாவித்து பாடி இருக்கிறார்கள்...இவர்கள் எல்லாம் திருநங்கைகள் தான். உடலில் என்ன இருக்கிறது ? காமம் என்னும் மலம் மனதில் இருந்து நீங்க வேண்டும்...
தேவை ஒரு சமூக அங்கீகாரம் .ஆதரவு அப்படிப் பிறந்ததுஅவர்கள் செய்த
தப்பா ? விளகக்மிலாத மனிதர்கள்.
//33% இட ஒதுக்கீடு கொடுக்குறதுக்கு மூக்கால அழுவுற அரசாங்கம் எங்கள மாறி ஆளுகளுக்கு 1% ஆச்சும் கொடுக்குமா .. தேர்தல்ல நிக்க? என்னைய மாறி இருக்குற அக்காங்க எல்லாம் வீட்டையும் விட்டுத் தொறத்தி நாட்லயும் மதிக்காம...ஏன் ஒரு ஈன எண்ணம் எல்லாருக்கும்....? ஆடு, மாடு நாய் எல்லாம் வாழ்ற பூமில எங்கள மாதிரி அரவாணிக வாழக்கூடாதா நிம்மதியா?
//

பிறக்கும் போது தெரியவில்லை வாழும் போது புரியவில்லை
சாகும் போதாவது கிடைக்குமா?

இந்த சொந்த பந்தங்களுக்கு மரியாதை!
உடல் ஊனத்தைப் போன்றதொரு பயாலாஜிக்கல் குறைபாடு தான் இந்தத் திருநங்கைகளின் நிலமை என்பது கூட புரியாத, புரிந்தும் கூட அதனைக் கேலி கிண்டல் செய்து அவர்களது மனதைப் புண்படுத்தும் மனிதர்கள் நம்மிடையே இருக்கும் வரையில் மனிதம் என்பது மறைந்து போன விஷயமாகத் தான் இருக்கும்.

எனக்குத் தெரிந்த திருநங்கை ஒருவர், வீட்டிலும் வேறு வழியில்லாமல் துரத்தப்பட்டு, செல்லும் இடம் தெரியாமல் அலைந்து திரிந்து எப்படியோ மும்பைக்குச் சென்று பிற திருநங்கைகள் கூட்டத்தோடு சேர்ந்து, விழாக்களில் ஆடி தனது பிழைப்பைப் பார்த்து வருகிறார். தன்னை வெறுத்து ஒதுக்கிய குடும்பத்தையும் அவரே இன்று ஆதரித்தும் வருகிறார்....!

“பார‌டா உன‌து மானிட‌ப் ப‌ர‌ப்பை!
பார‌டா உன்னுட‌ன்
பிற‌ந்த‌ ப‌ட்டாள‌ம்! 'என்குல‌ம்' என்றுனைத் த‌ன்னிட‌ம்
ஒட்டிய‌ ம‌க்க‌ட் பெருங்க‌ட‌ல் பார்த்து ம‌கிழ்ச்சிகொள்!

அறிவை விரிவுசெய்! அக‌ண்ட‌ மாக்கு!
விசால‌ப் பார்வையால் விழுங்கு ம‌க்க‌ளை!
மானிட‌ ச‌முத்திர‌ம் நானென்று கூவு! பிரிவிலை
எங்கும் பேத‌ மில்லை! உல‌க‌ம் உண்ணஉண்!
உடுத்த‌ உடுப்பாய்! புக‌ல்வேன்; 'உடைமை
ம‌க்க‌ளுக்குப் பொது' புவியை ந‌ட‌த்து பொதுவில் ந‌ட‌த்து!
வானைப் போல‌ ம‌க்களைத் தாவும் வெள்ளை அன்பால்
இத‌னைக் குள்ள‌ ம‌னித‌ர்க்கும் கூற‌டா தோழ‌னே!"
- பாவேந்தர் பாரதிதாசன்
Where did u pick the picture from? Awesome..
Chitra said…
இந்த அளவுக்கு அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொண்டதே இல்லை.... நம் சமூகம் அவர்களுக்கு இன்னும் சரியான அங்கீகாரத்தை - ஒரு சராசரி ஜீவனாக கூட மதித்து தந்ததில்லை - என்பதை நல்லா சொல்லி இருக்கீங்க....
இப்படி மாறுபவர்கள் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஏற்படும் சில மாற்றங்களால் தான் மாறுகிறார்கள். மற்றபடி அவர்களுக்கும் மற்றவர்களைப் போல் உணர்வுகள் உள்ளது. அதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை கேலிப்பொருளாய் நினைக்க வைப்பதில் ஊடகங்களுக்கும் மிக முக்கிய பங்குண்டு!
Anonymous said…
நல்ல பதிவு, பகிர்வு.
மிக நெகிழ்வான பதிவு தேவா. கண்ணில் நீர் துளிர்த்தது.
.
Radha said…
மருத்தவத் துறையில் சில நண்பர்கள் உள்ளனர்...அவர்கள் சொல்வது - "இது ஒரு குறைபாடே அல்ல...neither biological nor psycological...its purely natural. நம்மிடையே தான் புரிதல் குறைபாடு உள்ளது. we just have to come to terms with the fact that gender is in the mind rather than the body."
வித்தியாசமான பதிவு தேவா
தலைப்பை பார்த்து ஏதோ சாதிய பிரச்னை பற்றிய ஒரு பதிவு என வந்தேன்.ஆனால் சமூகத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய அதே போன்றதொரு அவலம்.நமக்குள்ளே தன்னம்பிக்கையும்,சுய மரியாதையும் உருவாகும் வரை இவை புரையோடிக்கொண்டுதான் இருக்கும்.காரணம் இன்று நம்மில் பெரும்பாலோருக்கு இவர்களுடன் பேசுவதற்கோ,சேர்ந்து அமர்வதற்கு தயக்கமோ[மனதளவில்] இல்லாமல் இருந்தாலும் சமுதாயம் நம்மை தவறாக பார்க்குமோ? என்றெண்ணியே அவர்களை புறக்கணிக்கிறோம்.இந்த தயக்கத்தை தவிர்த்தால் ஒரளவு இந்த சமுதாய நோயை சரியாக்கலாமே.
மிக அருமையான, மிக‌ நெகிழ்ச்சியான, ... இன்னும் என்னென்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனது உணர்வலைகள் ஜீவன் பென்னி,
ராஜாராம்,சித்ரா போன்றோரால் முன்பே பதிக்கப் பட்டு விட்டன.
தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.தேவா.

இப்பதிவில் உள்ளவை உண்மையா? இல்லையெனில் உண்மைக்கு புறம்பான திரிபா? கற்பனையா? கற்பனை எனில், எதற்கு இந்த தவறான கருத்துருவாக்கம்? மூளைச்சலவை?

இந்த பொன்னை/ஒம்போது/அலி/அரவாணி/திருநங்கை என்று தாங்கள் குறிப்பிட்ட "இவர்கள்" யார்? ஆணா?பெண்ணா?இரண்டுமா?இரண்டுமில்லையா?இடைப்பட்டவர்களா? அறிவியல்பூர்வமான விடை தர முடியுமா?

அப்புறம்...
//ரெண்டு வெறி நாயும் என்ன பண்ணிச்சுங்கனு தெரியல..//
இதற்கெல்லாம் நீங்கள் விளக்கம் தந்தே ஆகவேண்டும்... மழுப்பல் பதில்கள் சொல்ல வேண்டாம்.
-----------------------------------

"மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்"
http://pinnoottavaathi.blogspot.com/2011/02/blog-post_10.html
dheva said…
வலைக்கு அஸ்ஸலாம்...ஆசிக்!

உங்களின் கேள்வி விளங்கவில்லை....மழுப்புவேன் என்று ஏற்கனவே முடிவுசெய்த உங்களின் கூற்று தவறு என்று சொல்லவும் கடமைப் பட்டிருக்கிறேன்...!
சகோ.தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

//மழுப்பல் பதில்கள் சொல்ல வேண்டாம்//...என்றால்...
'விரசமாக... ஆபாசமாக... போய்விடக்கூடுமோ' என்று கூச்சப்பட்டு மழுப்பலாக பதில் சொல்லாமல், என்ன நடந்தது என்று தெளிவாக வாசகர்களுக்கு புரிய வைக்க, //இதற்கெல்லாம் நீங்கள் விளக்கம் தந்தே ஆகவேண்டும்...//--என்றுதான் தங்களை வேண்டுகிறேன்.

காரணம்...

//பயலே........ஏண்டா//--என்று 'ஆணாக' ஆரம்பித்த பதிவு...

//"ஏய் யார்றி நீ...."//--என்று 'பெண்ணாக' திரிந்து,

//33% இட ஒதுக்கீடு கொடுக்குறதுக்கு மூக்கால அழுவுற அரசாங்கம் எங்கள மாறி ஆளுகளுக்கு 1% ஆச்சும் கொடுக்குமா .. தேர்தல்ல நிக்க?// --என்றும் சைடில் '?'யாக குழப்பி

//இப்ப நான் முருகன் இல்லை நாச்சியா.......!//

என்று முடிந்திருக்கே சகோ.

உங்களின் பதிவில் நீங்கள் சொல்ல வருவது விளங்கவில்லை...

அதனால்தான், "திருப்புமுனையான" அந்த பாராவை தெளிவு படுத்தவும் மற்றும் அந்த கேள்விகளுக்கும் விடையளிக்க கேட்டுக்கொள்கிறேன் சகோ.

தங்கள் பதிலுக்கு அப்புறம் நன் என்ன தெளிவு பெற்றேன் என மீண்டும் பின்னூட்டமிடுகிறேன்.
dheva said…
அன்பி ஆசிக்.........

எனது பதிவுகளில் ஆதரவு கருத்துக்களை விட இது போன்ற கேள்விகள் கேட்கப்படும் கருத்துக்கள் மிக ஆரோக்கியமானவை......! பதில் சொல்வது கட்டுரையாளனின் பொறுப்பு...

சரி விசயத்துக்கு வருவோம்.....

1) இது அந்த தந்தையின் பார்வை அவனை ஆணாக உத்தேசித்து

மூன்றாம் பாலினமாக இருக்கும் ஒருவரை சிறுவயதில் அறிய முடியாத தந்தை புறத்தோற்றத்தை வைத்து அவரை பையனாக பாவித்து ஏன் பெண்களிடம் மட்டுமே போய் பழகுகிறாய் என்று அதட்டுகிறார்.

2) இருளில் பெண்ணின் உடையணிந்து வருவதைக் கண்ட இரு குடிகாரர்கள் அவரை பெண் என்று நினைக்கிறார்கள்.

மூன்றாம் பாலினம் என்று தெரிந்தவுடன் தொல்லைப்படுத்தும், தன்னால் துன்பப்படும் வீட்டை விட்டு வெளியேறி தான் உடுத்திய தாவணி பாவடையோடு வரும் முருகன் என்னும் நாச்சியா பாத்திரத்தை இருள் சூழ்ந்த இடத்தில் காணும் இரு குடிகாரர்கள் அவரைப் பெண் என்று நினைத்து அருகில் போய் கடையிசியில் மூன்றாம் பாலினம் என்றறிந்தும் தமது பாலியல் இச்சையை அந்த 15 வயது திருநங்கையிடம் தீர்த்துக் கொள்கிறார்கள். இதை உணரும் திரணியற்று மூர்ச்சையாகிறார் முருகன் என்னும் நாச்சிய. (பாலியல் பலாத்காரம் என்றுதான் விவரிக்கும்படி எனது சபை அறிவு சொல்கிறது இதற்கு மேல் இங்கே விளக்கம் கொடுங்கள் என்று நீங்கள் கேட்டாலும்...என் உள்முனைப்பு என்னைக் கொடுக்க விடாது).

3) திரு நங்கையின் ஆதங்கம்

தான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதை புரிந்தும் புரியாமலும் உணர்ந்த திருநங்கை தனது சமுதாய கோபத்தை காட்டி பேசுகிறார். அப்போது.... பெண்களுக்கு 33% கொடுப்பதற்கே மூக்கால் அழுகும் இந்த அரசு எங்களைப் போன்ற அரவாணிகளை எல்லாம் ஏறெடுத்து பார்க்குமா? என்று கேட்கிறார்.....

4) பெயர் மாற்றம்.

வீட்டில் துன்பப்பட்டு, வழியில் அசிங்கப்பட்டு புண்பட்டு எங்காவது சென்று பிழைத்துக் கொள்வோம் என்று செல்லும் இவர், பேருந்தில் ஒரு வயதான திருநங்கையை சந்திக்க அவர் ஆதரவு கொடுத்து என்னிடம் வா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பாசத்தில் நாச்சியா என்று அழைக்கிறார். அந்த பெயரே பிடித்து விட தான் இனி முருகன் இல்லை நாச்சியா என்று சொல்கிறது பாத்திரம்.

சரி இது எல்லாம் போக அரவாணிகள் குறைபாடுள்ளவர்கள் என்று எனது கதையில் சொல்லவில்லை இதை கதையின் நாயகி(!) நாச்சியாவே கூறுகிறார்.....

//இடையில வந்தாதானே கொற? பொறப்புலயே நாங்க இப்படி இருக்கறது எப்படி கொறையாகும்.. நாங்க முழுசுதான்....நாங்க இருக்குற மாறியே இருக்குறதுல நாங்க முழுசுதான்//

ஐ திங்க் யு மே கெட் த பாயிண்ட்.................! ஆழமாய் வாசித்ததுக்கு எனது நன்றிகள் சகோதரர்!
அன்பின் சகோ.தேவா..,
//(பாலியல் பலாத்காரம் என்றுதான் விவரிக்கும்படி எனது சபை அறிவு சொல்கிறது இதற்கு மேல் இங்கே விளக்கம் கொடுங்கள் என்று நீங்கள் கேட்டாலும்...என் உள்முனைப்பு என்னைக் கொடுக்க விடாது)//--இப்படித்தான் உங்கள் விளக்கம் இருக்கும் என்று மிகச்சரியாக ஊகித்துதான் 'மழுப்பலான' பதில் வேண்டாம் என்றேன்.

Atleast, 'ஒரு ஆண் ஆணை செய்ய முடிந்த பாலியல் பலாத்காரம்' என்று சொன்னால் கூட 'இந்த பதிவின் கருப்பொருள் ஒரு போலி' என பொல பொலவென உதிர்ந்துவிடும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள் என்பதை நன்கு நான் உணர்ந்து கொண்டேன். நன்றி.

அதாவது, 'நாச்சியா என்று அழைக்கப்பட்ட முருகன், ஆண் தான்' என்றும் 'அவன் பெண் அல்ல' என்றும் இதன் மூலம் தெளிவாக புரிந்து கொண்டேன்.


//சரி இது எல்லாம் போக அரவாணிகள் குறைபாடுள்ளவர்கள் என்று எனது கதையில் சொல்லவில்லை இதை கதையின் நாயகி(!) நாச்சியாவே கூறுகிறார்.....//--அடி சக்கை. இது ரொம்ப நல்லா இருக்கே சகோ.தேவா.

"திரைப்படத்தில் ஆபாசக்காட்சிகள் இருப்பதற்கு நான் பொறுப்பல்ல; கதாநாயகியும் கதானாயகனும்தான் காரணம்" என்று ஒரு கதை/திரைக்கதை/வசனம் எழுதி இயக்கிய ஒரு இயக்குனர் கூறினால் இப்படித்தான் இருக்கும்.

சரி, இனி நான் நாச்சியாவிடம்... இல்லை இல்லை... அந்த வேஷம் போட்டு உங்களையும் ஊரையும் ஏமாற்றும் முருகனிடமே கேட்கிறேன்.

மிஸ்டர்.முருகன்,
//இடையில வந்தாதானே கொற? பொறப்புலயே நாங்க இப்படி இருக்கறது எப்படி கொறையாகும்.. நாங்க முழுசுதான்....நாங்க இருக்குற மாறியே இருக்குறதுல நாங்க முழுசுதான்//---பிறந்தவுடன் உங்களைப்பார்த்து ஆண் குழந்தை என்றார்களா? அல்லது பெண்குழந்தை என்றார்களா?

நாச்சியா என்று பெயர்வைக்காமல் முருகன் என்று ஏன் பெயர்சூட்டினார்கள்? உங்களை ஆண் என்று அடையாளம் கண்டதானால்தானே?

உங்கள் birth certificate-ல் ஆண் என்று உள்ளதா, பெண் என்று உள்ளதா? 'ஆண் என்று உள்ளது' என்றால், அதான் ஏற்கனவே இருக்கே 67% அப்புறம் எதற்கு முட்டாள்த்தனமாய் 1% கேட்கிறீர்கள்?

பிறப்பிலேயே இப்படித்தான் என்றால், முருகன் என்ற நீங்கள் எதற்கு திடீரென ஒருநாள், பாவாடை தாவானி கொலுசு மாட்டி 'மாறினீர்கள்' ஏன் இனிய சகோதரன் முருகன்?

இங்கே பிறப்பிலேயே பெண் என்பது பொய்..! நீங்கள் பெண் வேஷம் போட்டதுதான் மெய் திரு.முருகன்.

டிஸ்கி: நான் இந்த "கிளீன் ஃபெல்டர் சிண்ட்ரோம்" மூலம் பிறவிக்குறையுடன் பிறந்த இந்த "XXY ஆண்களுக்கு"(இவர்களுக்கு இதுதான் சரியான பெயர்) முழு ஆதரவு அளிக்கிறேன். இவர்களுக்கு எதிரான வன்முறை, கேலி கிண்டல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

அதேநேரம் இவர்களை பெண்ணாக மாற்றும் கொடுமைக்கும், இவர்களை 'மூன்றாம் பாலினம்' என படு கேவலப்படுத்தும் அரசு உட்பட அனைவருக்கும் மிகக்கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கிறேன்.

இவர்களுக்கான உண்மையான மனிதநேய தீர்வாகத்தான் நான் ஒரு பதிவுத்தொடர் தற்போது எழுதிவருகிறேன்.

http://pinnoottavaathi.blogspot.com/2011/02/blog-post_10.html
Anonymous said…
@ முஹம்மத் ஆஷிக்
சகோ,

Klinefelter Syndrome இருக்குறவங்களுக்கு உடல் மற்றும் பழக்கவழக்கங்களில்(அரிதாக) ஆண் தன்மை குறைந்து காணப்படுவது உண்மை தான்...! அதற்காக Transgenders அனைவருக்குமே Klinefelter Syndrome இருப்பதாகக் கூறும் நீங்கள் உங்கள் Knowlege of the Subject-ஐ அப்டேட் செய்துகொண்டுவிட்டுப் பிறருக்குக் கருத்து சொல்வது நல்லது சகோ.

Androgen மற்றும் Oestrogen ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே சுரக்கும். ஆண்களுக்கு அதிக அளவில் Androgens-ம் பெண்களுக்கு அதிக அளவில் Oestrogens-ம் சுரக்கின்றன. இதில் மாறாக ஆணாக உடலமைப்பைக் கொண்டு பிறந்த ஒருவருக்கு நாளடைவில் Secondary Sexual Characteristics, develop ஆகும் சமயம் oestrogens அதிக அளவில் சுரந்ததானால் அவருக்குப் பெண்மைக் குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் தோன்றுகின்றன. அதனால் மனதளவில் பெண்ணாகவே மாறி வளரும் அவர்(குறிக்க: இதில் அவரது பங்கோ முயற்சியோ எதுவுமில்லை) ஒரு கட்டத்தில் தன் உடல் உருப்புகளை அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஒரு பெண்ணாகவே மாறிவிடுகிறார்.

இதே போல் தான் Androgen அதிக அளவில் சுரக்கும் பெண்கள் ஆணாக மாறுவதும்..!

Transgenders-ன் அடிப்படை இந்த ஹார்மோன்ஸ் கான்செப்ட் தான். Even, அடிப்படையில் Klinefelter syndrome இருப்பவர்கள் கூட low serum testosterone level ஆனால் high serum FSH (follicle stimulating hormone) level இருப்பதால் தான் ஆண் தன்மை குறைவாகக் கொண்டுள்ளார்கள்..!

மேலும் Klinefelter syndrome உள்ளவர்கள் societal pressures-னால் தான் பெண்ணாக மாற முடிவு செய்கிறார்களே அன்றி எவரும் ஆசைபட்டோ நடித்தோ இனத்தை மாற்றவேண்டிய அவசியம் என்ன?
ஆக “அவர்கள்” நடிக்கிறார்கள் என்னும் உங்கள் கூற்று....???!!!!!

So, Transgenders concept is more of Hormone-basis rather than what u mention as bcos of Klinefelter syndrome...!

அண்ணா, தவறுகள் உள்ள பதிவை போட்டதுமல்லாமல் அதனை விளம்பரம் செய்யும் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்தல் நன்று என்பது எனது தாழ்மையான கருத்து.

சுபத்ரா.
dheva said…
விரிவான பதிலுக்கு நன்றி சுபத்ரா....!
raji priya said…
இஸ்லாமிய தோழர்கள் பெரும்பாலும் திருநங்கைகளுக்கு எதிராகவே கருத்துகளை வேலிடுகிரர்கள், கரணம் இறைவன் ஆணும் பெண்ணும் தான் படைத்தார் எனவே மூன்றாம் பாலினம் என்று ஒன்று இல்லை என்பது அவர்கள் முதல் கருத்து... இவர்கள் இறைவனை அதிகம் அறிந்தவர்களாக தங்களை என்னிக்கொல்வதே முக்கிய கரணம்... இறைவன் நல்லவர் நாம் யாவரும் அவர் பிள்ளைகள். ஆணும் பெண்ணும் அவர் படைத்தார், ஆரோக்கியமாக படைத்தார்... ஊனமுற்றவர்கள் யாரால் படைக்க பட்டார்கள் ? இதற்க்கு தோழர் @ முஹம்மத் ஆஷிக் , மழுப்பாமல் தெளிவான பதில் தரவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நானும் பெண்வேஷம் போடுபவன் தான் ( உங்கள் பார்வையில் )

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த