Skip to main content

ரயில் சினேகம்....!


















எதார்த்தமான உறவுகள் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. வருகிறார்கள் சந்திக்கிறார்கள் பிரிகிறார்கள் சந்தித்தலும் பிரிதலுமல்ல இங்கே பிரதானம் ஆனால் இடைப்பட்ட தருணத்தில் இருந்த அர்த்தம் பொதிந்த நிமிடங்கள் தான் பிரதானம்.

நான் ஒருவரை சந்திக்கிறேன்... அறிமுகம் செய்து கொள்கிறோம். அருகிலிருக்கும் ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீரை இரு கோப்பையிலே வாங்கி அர்த்தங்கள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறி கொள்கிறோம். அவரைப் பற்றி விசாரிக்கிறேன் அவரும் என்னைப் பற்றி விசாரிக்கிறார். எங்களின் விசாரிப்பு பரஸ்பரம் என்ன என்று அறிவதில் ஒரு எல்லைக்கோட்டிற்கு அப்பாலே நிற்கிறது.

நான் எங்கிருந்து வருகிறேனென்று அவரும் கேட்கவில்லை அவர் எங்கே செல்லப் போகிறார் என்று நானும் கேட்கவில்லை. அந்த சந்திப்பில் அவரின் இருப்பும் என்னுடைய இருப்பும் இங்கே மிகவும் அவசியமானதாக இருந்து விடுகிறது.

அந்த மரநிழல் அப்போது கரைந்த காகம், வானில் மிதக்கின்ற மேகங்கள், மெலிதாய் வீசும் ஒரு காற்று, காற்றில் பறக்கும் சருகுகளும் வானில் பறக்கும் சில பறவைகளும், டீக்கடையில் டீ ஆற்றுபவரின் திறமையும், எம்மைச் சுற்றி இருந்த மனிதர்களின் சல சலப்பும் இங்கே மிக முக்கியமாய்ப் போகிறது.

ஏதேதோ பேசுகிறோம், எதற்காகவோ சிரிக்கிறோம், திடீரென்று நான் சொன்ன ஒரு விசயத்திற்கு அவர் கோபம் கொள்கிறார், சற்றைகெல்லாம் கோபம் மறைந்து அந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்.

மீண்டும் சிரிக்கிறோம். அப்போது தூறல் போட ஆரம்பித்த வானைப் பார்த்து மழையைப் பற்றி கொஞ்சம் பேசுகிறோம் அப்போது அவர் படித்த கவிதை வரிகளை சொல்லி சிலாகித்துப் போகிறார்..நானும் எனக்குப் பிடித்த ஒரு பாடலின் வரிகளை பதிலுக்குச் சொல்ல அவரும் புளகாங்கிதம் அடைகிறார்.

இருவரின் ப்ரிய நாவலாசிரியர்கள், நடிகர்கள், இசையமைபாளர்கள் என்று பேசிக் கொன்டே இருக்க தேநீர் கோப்பை காலியாகிறது. ஒரு சந்தோசம் எனக்குப் பிடித்த மனிதரை நான் சந்தித்தேனென்று எனக்கும் அவருக்கும் இருக்கும் போதே இருவரும் இரு திசையில் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

எங்களுக்குத் தெரியும் நாங்கள் சேரும் போதே பிரிவோமென்று.....புன்முறுவலோடு அவரின் கையைப் பற்றி குலுக்குகிறேன்....பரஸ்பரம் இருவரும் கண்களால் ஏதோ ஒன்றை பரிமாறிக் கொள்ள எந்த வலியுறுத்தலுமின்றி பிரிகிறோம்.....எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல், எந்த வாக்குறுதியையும் பெறாமல் எந்த அடையாளங்களையும் விட்டுச் செல்லாமல் புன் சிரிப்போடு அவர் கிழக்கே நடக்கிறார் நான் மேற்கே நடக்கிறேன்.....

ஒரே ஒரு முறை திரும்பிப் பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டோம்.

இப்படியாக ஒவ்வொரு உறவையும் வைத்துக் கொள்ளுமென் முயற்சிகளில் திணிக்கப்படுவது எல்லாம் உறவென்ற பெயரில் அத்து மீறல்தான் தோழர்காள். அழுத்தம் கொடுக்காத உறவுகள் எல்லாம் எப்போதும் நெஞ்சின் ஓரத்தில் அலாதியான நினைவுகளாய் நிறைந்து நிற்கிறார்கள் தித்திப்பாய்...

வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எதிர்பார்ப்பு இல்லாமல் நம்மிடம் வந்து நம்க்கு சுகமான நினைவுகளை விதைத்துச் செல்லும் அத்தனை பேரும் கடவுளர்தாம்...! நெருங்கிய உறவென்று கூறி ஏற்றுக் கொள்ளும் சுமைகளை விட அவ்வப்போது வந்து நம் நெஞ்சு நிறைக்கும் இந்த சினேகங்கள்...எல்லாம் ஒவ்வொரு குட்டிக் கவிதைகள் போலத்தான்.....

நிறைய பேசிட்டேங்க........கிளம்புறேன்.....வில் கேட்ச் யூ ஆல் லேட்டர்!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!


தேவா. S

பின் குறிப்பு: கட்டுரையில் வரும் அவர் அவளாகவும் இருக்கலாம், அவனாகவும் இருக்கலாம்.

Comments

//நெருங்கிய உறவென்று கூறி ஏற்றுக் கொள்ளும் சுமைகளை விட அவ்வப்போது வந்து நம் நெஞ்சு நிறைக்கும் இந்த சினேகங்கள்...எல்லாம் ஒவ்வொரு குட்டிக் கவிதைகள் போலத்தான்.....//

...நெருங்கிய உறவெல்லாம் சுமையா???
Anbe Sivam said…
nimadhiya irukanumna thamarai ilai mel ulla thanneer pol pattum padamal irukanum. nalla ezhudhirukeenga. vaazhthukkal.
கோவி said…
வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எதிர்பார்ப்பு இல்லாமல் நம்மிடம் வந்து நம்க்கு சுகமான நினைவுகளை விதைத்துச் செல்லும் அத்தனை பேரும் கடவுளர்தாம்...!

கடவுளை தேடுபவர்கள் படிக்கட்டும் இந்த வரிகளை..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...