Skip to main content

ரயில் சினேகம்....!


















எதார்த்தமான உறவுகள் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. வருகிறார்கள் சந்திக்கிறார்கள் பிரிகிறார்கள் சந்தித்தலும் பிரிதலுமல்ல இங்கே பிரதானம் ஆனால் இடைப்பட்ட தருணத்தில் இருந்த அர்த்தம் பொதிந்த நிமிடங்கள் தான் பிரதானம்.

நான் ஒருவரை சந்திக்கிறேன்... அறிமுகம் செய்து கொள்கிறோம். அருகிலிருக்கும் ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீரை இரு கோப்பையிலே வாங்கி அர்த்தங்கள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறி கொள்கிறோம். அவரைப் பற்றி விசாரிக்கிறேன் அவரும் என்னைப் பற்றி விசாரிக்கிறார். எங்களின் விசாரிப்பு பரஸ்பரம் என்ன என்று அறிவதில் ஒரு எல்லைக்கோட்டிற்கு அப்பாலே நிற்கிறது.

நான் எங்கிருந்து வருகிறேனென்று அவரும் கேட்கவில்லை அவர் எங்கே செல்லப் போகிறார் என்று நானும் கேட்கவில்லை. அந்த சந்திப்பில் அவரின் இருப்பும் என்னுடைய இருப்பும் இங்கே மிகவும் அவசியமானதாக இருந்து விடுகிறது.

அந்த மரநிழல் அப்போது கரைந்த காகம், வானில் மிதக்கின்ற மேகங்கள், மெலிதாய் வீசும் ஒரு காற்று, காற்றில் பறக்கும் சருகுகளும் வானில் பறக்கும் சில பறவைகளும், டீக்கடையில் டீ ஆற்றுபவரின் திறமையும், எம்மைச் சுற்றி இருந்த மனிதர்களின் சல சலப்பும் இங்கே மிக முக்கியமாய்ப் போகிறது.

ஏதேதோ பேசுகிறோம், எதற்காகவோ சிரிக்கிறோம், திடீரென்று நான் சொன்ன ஒரு விசயத்திற்கு அவர் கோபம் கொள்கிறார், சற்றைகெல்லாம் கோபம் மறைந்து அந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்.

மீண்டும் சிரிக்கிறோம். அப்போது தூறல் போட ஆரம்பித்த வானைப் பார்த்து மழையைப் பற்றி கொஞ்சம் பேசுகிறோம் அப்போது அவர் படித்த கவிதை வரிகளை சொல்லி சிலாகித்துப் போகிறார்..நானும் எனக்குப் பிடித்த ஒரு பாடலின் வரிகளை பதிலுக்குச் சொல்ல அவரும் புளகாங்கிதம் அடைகிறார்.

இருவரின் ப்ரிய நாவலாசிரியர்கள், நடிகர்கள், இசையமைபாளர்கள் என்று பேசிக் கொன்டே இருக்க தேநீர் கோப்பை காலியாகிறது. ஒரு சந்தோசம் எனக்குப் பிடித்த மனிதரை நான் சந்தித்தேனென்று எனக்கும் அவருக்கும் இருக்கும் போதே இருவரும் இரு திசையில் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

எங்களுக்குத் தெரியும் நாங்கள் சேரும் போதே பிரிவோமென்று.....புன்முறுவலோடு அவரின் கையைப் பற்றி குலுக்குகிறேன்....பரஸ்பரம் இருவரும் கண்களால் ஏதோ ஒன்றை பரிமாறிக் கொள்ள எந்த வலியுறுத்தலுமின்றி பிரிகிறோம்.....எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல், எந்த வாக்குறுதியையும் பெறாமல் எந்த அடையாளங்களையும் விட்டுச் செல்லாமல் புன் சிரிப்போடு அவர் கிழக்கே நடக்கிறார் நான் மேற்கே நடக்கிறேன்.....

ஒரே ஒரு முறை திரும்பிப் பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டோம்.

இப்படியாக ஒவ்வொரு உறவையும் வைத்துக் கொள்ளுமென் முயற்சிகளில் திணிக்கப்படுவது எல்லாம் உறவென்ற பெயரில் அத்து மீறல்தான் தோழர்காள். அழுத்தம் கொடுக்காத உறவுகள் எல்லாம் எப்போதும் நெஞ்சின் ஓரத்தில் அலாதியான நினைவுகளாய் நிறைந்து நிற்கிறார்கள் தித்திப்பாய்...

வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எதிர்பார்ப்பு இல்லாமல் நம்மிடம் வந்து நம்க்கு சுகமான நினைவுகளை விதைத்துச் செல்லும் அத்தனை பேரும் கடவுளர்தாம்...! நெருங்கிய உறவென்று கூறி ஏற்றுக் கொள்ளும் சுமைகளை விட அவ்வப்போது வந்து நம் நெஞ்சு நிறைக்கும் இந்த சினேகங்கள்...எல்லாம் ஒவ்வொரு குட்டிக் கவிதைகள் போலத்தான்.....

நிறைய பேசிட்டேங்க........கிளம்புறேன்.....வில் கேட்ச் யூ ஆல் லேட்டர்!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!


தேவா. S

பின் குறிப்பு: கட்டுரையில் வரும் அவர் அவளாகவும் இருக்கலாம், அவனாகவும் இருக்கலாம்.

Comments

//நெருங்கிய உறவென்று கூறி ஏற்றுக் கொள்ளும் சுமைகளை விட அவ்வப்போது வந்து நம் நெஞ்சு நிறைக்கும் இந்த சினேகங்கள்...எல்லாம் ஒவ்வொரு குட்டிக் கவிதைகள் போலத்தான்.....//

...நெருங்கிய உறவெல்லாம் சுமையா???
Anbe Sivam said…
nimadhiya irukanumna thamarai ilai mel ulla thanneer pol pattum padamal irukanum. nalla ezhudhirukeenga. vaazhthukkal.
கோவி said…
வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எதிர்பார்ப்பு இல்லாமல் நம்மிடம் வந்து நம்க்கு சுகமான நினைவுகளை விதைத்துச் செல்லும் அத்தனை பேரும் கடவுளர்தாம்...!

கடவுளை தேடுபவர்கள் படிக்கட்டும் இந்த வரிகளை..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல