Skip to main content

முதல் நாள்...அன்று...!





















அவள் கவிதையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் படையிழந்த அரசனாய், மொழி மறந்த புலவனாய், நடை மறந்த முடவனாய் உணர்வுக்கும் மூர்ச்சைக்கும் இடையே ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தேன். வழக்கமாய் கண்கள் காண்பதற்காக பயன்படும் ஒரு உபகரணம் என்று அறிவு ஏற்றி வைத்திருந்த கருத்துச் சாரத்தினை நம்பி அவளை நேருக்கு நேராய் பார்த்ததின் அவஸ்தையைத்தான் இப்போது பகிர திக்கித் திணறிக் கொண்டிருக்கிறேன்.

இன்னுமொரு ஆச்சர்யமும் என்னை மொய்த்துக் கொண்டிருந்தது...ஆமாம்...! இவளின் விழிகளே எல்லா செய்திகளையும் பகிர்ந்து விடுகிறதே....என்று வார்த்தைகளின்றி உணர்வுகளை பரிமாறும் யுத்தியறிந்த சித்தியோடு இவளைப் படைத்து விட்ட கடவுளின் மீது கண நேரம் கோபமும், அவள் மீது பொறாமையும் ஒன்றாய் வந்து சென்றது.

மிரட்சியாய் என்னுள் ஆழச் சென்று கொண்டிருந்த அவளின் விழி வீச்சில் சுவாசத்தின் ஏற்ற இறக்கம் மாறிப் போனதில் ஆக்ஸிஜனின் வரத்து சட்டென்று அதிகரித்ததில் இதயத்தின் துடிப்பு அதிகமாகி....

அது உந்தித் தள்ளிய இரத்தம் உடலெல்லாம் பரவ ஜிவ்வென்ற ஏதோ ஒரு உணர்வில் நான் இருக்கிறேனா? இல்லை பறக்கிறேனா என்று மூளையை சரிப்பார்க்க சொன்ன போது அது வெவ்வ வெவ்வே...என்று என்னிடம் பழிப்புக் காட்டி விட்டு அவளை பார்த்த செய்தியைப் பகிர்ந்த விழியிடமிருந்து பிம்பங்களைத் திருடி திருடி அச்சேற்றி கொண்டிருந்தத அவசரத்தில் என்னை நினைவற்று சும்மா கிட என்று அதட்டி விட்டு அதன் வேலையைத் தொடந்து கொண்டிருந்தது.

விழிகளோடு மோதிச் சிதறிப்போய்க் கிடந்த என்னை கொஞ்சமேனும் இரக்கப்பட்டு அப்போது வீசிய காற்றாவது பேசாமல் சென்றிருக்கலாம். சட்டென்று வீசிய காற்று ஒரு ஓவியத்தின் மீது பரவிச் சென்ற கோபத்தில் நானிருக்க, பரவி மட்டுமா செல்வேன்.....என்று என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்றே ஒதுங்கிக் கிடந்த அவளின் தலை கேசத்தை கலைத்து கலைத்து விளையாடியாது கூட பரவாயில்லை....

அவ்வொரு முறையும் காற்றில் கலையும் கேசத்தினை அவள் சரி செய்து கொண்டிருந்த போதும், பட படப்பாய் இமைத்த போதும் அதைத்தான் என்னால் எதிர் கொள்ள் முடியவில்லை. ஒப்பனை கலைந்த சித்திரம் தானே தன்னை சரி செய்து கொண்டிந்தது.

அட இது என்ன இது....? எனக்குள் மூன்றாம் உலகப் போரை துவக்கி விட்டு விட்டு இவள் மெளனித்து இருக்கிறாள் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது அவள் அந்த கோப்பையிலிருந்த காபியை வாஞ்சையாய் உறிஞ்சிக்கொண்டே என்னை உற்று நோக்கிய நொடியில்...

மோட்சத்தை அடைந்த சந்தோசத்தில் காலியாகியிருந்த கோப்பைக்குள் நிறைந்து கிடந்தது என் மனது. காதலென்ற உணர்வின் மூலம் எது..? என்று வேகமாய் கணக்குப் போட்ட என் மூளை இவளிடம் என்ன பேசுவது என்று உள்ளே ஒரு ஒத்திகையையும் நடத்திக் கொண்டிருந்தது.

கவிதையிடம் கவிதை பேசினாள் புரியுமா? என்று தெரியவில்லை அதே நேரத்தில் விக்கிரகத்திடம் பேசினாலே வீண்தானே என்று கூட ஒரு எண்ணம் தோன்றிய போது மூளை சொன்னது அட...நீயும் விழியாலே பேசிவிடு என்று...

அட விழியால் பேசும் வித்தை அறிந்தவனா நான்...? அவளை எதிர் கொண்டு பார்க்க முடியாமல் கீழிறங்கிக் கிடக்கும் எனது விழிகள் மேலேறி அவளை பார்க்குமா? என்ற எண்ணத்தை முயற்சியாக்கி இதோ... இதோ முயல்கிறேன்...மெல்ல அவளின் விழிகளை சந்தித்த மூன்றாவது நிமிடம் அது நழுவி அவள் அப்போது வெளியிட்ட சிறு கவிதையை வாசிக்க உதடுகளுக்குச் செல்கிறதே...

எத்தனை முறை முயன்றாலும் தோல்வியில் அவளின் கவிதையை மீண்டும், மீண்டும் என் விழிகள் வாசிக்க அந்த கவிதை புன்னகை என்ற நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து சிரிப்பாய் மாறி

அதுவரையில் கண்கள் பட்டு வந்த அவஸ்தையை செவிகளுக்கு மாற்றி செப்புக் காசுகளின் சிதறுதலாய் செவிகளுக்குள் ஊடுருவி செவிப்பறையை அறைந்து....ஒலி வடிவில் மீண்டும் ஒரு படையெடுப்பு நடத்த தொடங்கியிருந்தது மூளையை நோக்கி...

ஏற்கனவே போரில் அழித்தொழிக்கப்பட்ட ஒரு நகரமாய் குற்றுயிரும் குலை உயிருமாய் சிதைந்து கிடந்த என் மூளை அடுத்த தாக்குதலின் அவஸ்தைகளை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்க....

உன் முகம் பார்த்து
ஆழமாய் உன் கண்களுக்குள்
ஊடுருவித் தொலைந்து
உன் இதயத்தின் சப்தங்களோடு
கலந்து துடிக்கத்தான்..
அனுமதியேன்...!

என்று கூட என் மெளனத்தால் இயன்ற வரை அவளுக்குக் கெஞ்சலாய் செய்தியனுப்பிக் கூடப் பார்த்ததிலும் தோல்வியே என்னைத் தழுவியது. அவள் என் தடுமாற்றத்தை ரசிக்க, ரசிக்க நான் தொலைந்து கொண்டிருந்தேன். மொத்தத்தில் அவள் எனக்கானவள் என்று அவள் சொன்ன முதல் நொடியிலிருந்து...

என்னை சந்தித்து என்னைக் கொன்று கொண்டிருக்கும் இந்த நொடி வரையிலும் அவளின் அருகாமை என்னும் பிரமிப்பில் நான் வீழ்ந்து கிடந்த காலம்...ஐன்ஸ்டீனீன் ரிலேட்டிவிட்டி தியரியை மெய்ப்பித்துப் போட்டது. ஆமாம் கண நேரம் போல எங்களுக்குத் தோன்றினாலும்....வெகு நேரமாயிருந்ததை நாங்கள் உணரத்தான் வில்லை.

அந்த அந்தி நேரத்து வானம் மழை என்ற கவிதையை எழுத ஆயத்தமானதற்கு சாட்சியாய் சில மழைத்துளிகளையும் அனுப்பி வைத்தது. அந்த திறந்தவெளி காஃபி சாப்பின் ஊழியர்களும் பொறுமையற்றுப் போய் எங்களின் மெளன நாடகத்தை கண்டும் காணாததும் போல நாற்காலி மேசைகளை நகர்த்திக் கொண்டிருந்த போதும்...நான் அவளிடமிருந்த் மீளவில்லை.

அபோது ஓவியம் தனது கை மணிக்கடை நகர்த்தி நேரம் பார்த்து 6:15 என்று சொன்ன கடிகாரத்தோடு..அவள் தலை நிமிர்ந்து இசைத்தாள்...

" என்ன ப்ரசன்னா...ஒரு மணி நேரத்துக்கு மேல மெளனமாவே இருந்துட்ட......அச்சச்சோ...மழை வேற வரப் போகுது இன்னுமொரு 15 மினிட்ஸ் 23C வந்துடும்டா...முதல் நாள் உன்கிட்ட எவ்ளோ பேசணும்னு ஆசையா வந்தேன். இப்டி போயிடுச்சே நேரம் .நான் கிளம்புறேன்டா....நாளைக்குப் பேசலாம்.....ப்ளீஸ் ப்ளீஸ்..........ப்ளீஸ்.......ப்ளீஸ்...!பை டா........நீ எனக்கு காத்தால போன் பண்ணு ஒரு 11 மணிக்கு...ஆபீஸ்ல கொஞ்சம் ஃப்ரியா இருப்பேன்டா......பாய்ட கண்ணா....நாளைக்கு பார்ப்போம் சரியா....! "

அவள் ஓடிவிட்டாள் கட கடவென்று......! மழை இப்போது வலுக்கத் தொடங்கியிருக்க...நான் என் முதல் காதல் சந்திப்பினை நெஞ்சுக்குள் தேக்கியபடி வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தேன்...என்று யோசித்து..யோசித்து பார்க்கிறேன்...ம்ம்ம்ஹூம்..........தோணவே இல்லை....!

நாளைக்காவது பேச வேண்டும் என்று ஏதேதோ மூளை கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது..ம்ம்ம்ம் ...சரியாய் அவளின் அருகாமையில் எப்படி அறுந்து போகிறது எனது நினைவுகள்...? ம்ம்ம்ம்ம்...எனக்குள் நானே சிரித்துக் கொண்டு வெள்ளைப் பேப்பரில் கிறுக்கிக் கொண்டிருந்தேன்.....ஆனால்...

வெற்று மையை
காகிதத்தில் பரவவிட்டு
வார்த்தைகள் ஓடி
ஒளிந்து கொண்டன..
அவளின் நினைவுகளுக்குப் பின்னால்!

பேனாவைத் தூக்கி எறிந்து விட்டு படுக்கையில் சாய்ந்தேன்..!!!

வெளியே பெய்து கொண்டிருந்த மழை தாழ்வாரத்தின் வழியாய் ஜன்னலில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.........திறந்த விழிகளோடு அன்றைய மாலையை மீண்டும் ரீவைண்ட் செய்து கொண்டிருந்த போதே அடுத்த நாள் பற்றிய நான் கனவுகளோடு உறங்கியே போனேன்....!


தேவா. S

Comments

சொக்கவைக்கும் சொல்லாட்சி என்று ஆராதிக்க ஆசையிருந்தாலும் 'கூடாது' என்ற கருத்துரைக்கிணங்கி என் சந்தேகம் மட்டும் இங்கே..
//மொழி மறந்த புலவனாய்// => மொழியில் சிறந்த புலவன் அதை மறந்தாற்போல்.. இதனைத் தொடர்ந்து
//நடை மறந்த முடவனாய்// என்று வரும் போது நடையில் சிறந்த முடவன் அதை மறந்தாற்போல் என் பொருள் தரும் போல் உள்ளதோ..?
// கண நேரம் போல எங்களுக்குத் தோன்றினாலும்....வெகு நேரமாயிருந்ததை நாங்கள் உணரத்தான் வில்லை.///

...ஹம்ம்ம்ம்.. காதலில் கால நேரம் தெரிவதில்லை. ரசித்து படித்தேன். :))
dheva said…
ரசிகன் @ இதை இருவகையில் எடுக்கலாம்...

1) மொழியே மறந்து போன புலவனுக்கு அந்த மொழியின் மூலம் கிளர்ந்தெழும் நடையும் (மொழி நடை)மறந்து போனால் அவன் முடவன் தானே...(இது தான் நான் எடுத்துக் கொண்ட படிமம்)

2) நன்றாக நடக்கக் கூடிய ஒரு மனிதன் தான் எப்படி நடப்பது என்று மறந்து போய்விட்டால் அவன் அப்போது முடவன் தானே....

ஸ்தம்பித்து நின்றவனின் ஒரு நிலைப்பாட்டினை விளக்க கொண்ட உவமைகள் இவை.

எழுத்துக்களை எழுதும் போது இருக்கும் சந்துஷ்டியை விட...இப்படியான ஆழம் விளங்கிய கருத்துரைகள் கொடுக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளுக்குள் கொண்டு வர இய்லாது.

நமஸ்கரிக்கிறேன்...தோழமை!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த