கருப்பையில் ஜீவனாய் நான் நிறையும் முன்பு ஜடமாய், உயிராய் எங்கெங்கெல்லாம் விரவிக் கிடந்தது எனது பிண்டத்தின் மூலங்கள்? தாயின் கருமுட்டையோடு, தந்தையின் உயிரணு கலந்து ஒரு தசைக் கோளமாய் கிடந்த என் உடலுக்குள் உயிர் ஊற்றிய பிரமாண்டம் எது?
அங்கும் இங்கும் ஒரு சருகைப் போல நான் பறந்து பறந்து என்ன கொண்டு செல்லப் போகிறேன்? எல்லாம் நிறையும், எல்லாம் குறையும் என்றறிந்த மாத்திரத்தில் நான் எல்லாம் விட்டு போகாமல் உழல காரணமான உறவுகளும் என்னை இங்கு கொண்டு வந்த சூத்திரதாரியின் நிகழ்வுதானே?
எங்கே தொடங்கியது எனது பயணம்? எப்போது முடியும்? எனக்கு முன்னும் பின்னும் காலம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்.. சிற்றின்பத்தால் நிறைந்து கிடக்கும் வாழ்க்கையை ஒரு நாய்க்கு போடும் சிறு ரொட்டியைப் போல போட்டு விட்டு பேரின்பத்தை மறைத்து வைத்து அதை அடைய மனமற்று போகும் போது அடையும் சூத்திரத்தை சூசகமாய் பிரபஞ்சத்துக்குள் கரைத்துப் போட்டது யார்?
அங்கிங்கெனாதபடி ஆடிக் கொண்டிருக்கும் சக்தி துகள்களின் ஆட்டமே நடராஜ தத்துவமென்று முத்திரை பதித்து சூசக கருத்தை உட்பொருளாய் வைத்து சென்ற மானுடர்களின் மனக்கூட்டு பிரபஞ்சத்தோடு இயைந்தேதான் இருந்ததா?
உடையப் போகும் குமிழியைப் போல, சிதறப் போகும் கண்ணாடி போல தன்னின் இயல்பு கொண்ட மானுடக் கூட்டம் தொடை தட்டி கொக்கரிக்கும் அறியாமை நீங்க ஜென்மங்களாய் பிறந்து பிறந்துதான் பிணி தீர்க்க வேண்டுமா?
காதலையும் காமத்தையும் இன்ன பிற இன்ப துன்பங்களையும் தானே தன்னில் தோன்றவிட்டு மறைந்து கிடக்கும் சக்தியை கடவுளென்று சொல்லி ஒரு சிலைக்குள்ளோ அல்லது ஒரு கட்டிடத்துக்குள்ளோ அல்லது ஒரு வேதத்துக்குள்ளோ மட்டுப் படுத்தி விட முடியுமா?
சூட்சுமத்தில், எதுவுமற்ற சூன்யத்தில் இருந்து எல்லாம் ஜனித்தது என்றால் இன்றும் சூட்சுமத்திலிருந்து பொருள்களையும் பொருளற்ற விதிகளையும் மனமற்று பேரியக்கத்தோடு ஒன்றிய ஒரு நிகழ்வாய் நாம் சமைத்து விட முடியாதா?
கலைகளும் கலைகளின் மூலங்களும், படைப்புகளும் படைப்புகளின் மூலமும் மனித மூளையின் எந்த இடத்திலிருந்து ஜனித்தாலும் ஒரு படைப்பாளி வெறுமையிலிருந்துதானே எல்லாம் படைக்கிறான். வெறுமையிலிருந்து அவன் படைப்பதாலேயே அவன் சூன்யத்திலிருந்து எல்லாவற்றையும் ஜனிப்பித்த பெருங்கருணையின் செயலை ஒத்துதானே செயல் படுகிறான்?
ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு படைப்பாளியும் மனித மூளைகளில் கனவிலும் உதித்திராத ஒரு இசையையும், ஒரு கவிதையையும் ஒரு ஓவியத்தையும் ஒரு கதையையும் கட்டுரையையும் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தி தீரும் போது அவனின் ஆழமும் மூலமும் இறையை ஒத்ததுதானே?
இந்த ரகசிய நாடகத்தினை உணர முடியாமல் இந்த கட்டுரையையும் உணர முடியாமல் மெல்ல விலகி சென்று உள்ளே எழும் நேர், எதிர் மறை எண்ணங்களின் சூத்திரதாரியும் நாம் தானே...!!!!
விளக்கம் கொடுத்தலும், கேட்டலும் தாண்டி ஆழமாய் தன்னை அறியும் பொழுதில் தோன்றும் கடவுளை யாருக்கு காட்ட? மெய்பித்தலுக்கு உட்படா ஒன்றை மெய்பிக்க சொல்லுவதும், மெய்பிப்பேன் என்பதும் சத்தியத்தில் பொய்தானே...!!!
அது இருக்கிறது...காலங்கள் கடந்தும் வெவ்வேறாய் ஜனிக்கிறது...நகர்கிறது...!
அவ்வளவே....!
தேவா. S
Comments
கலைஞன், படைப்பாளி பற்றிய உளவியற் கருத்துக்கள், மெய் ஞானம் தேடும் மனிதனது உள்ளக்கருத்துக்கள் எனப் பல விடயங்களைத் தாங்கி வந்திருக்கிறது இந்தப் பதிவு.
அருமை சகோதரா.
பகிர்வுக்கு நன்றி.