அது ஒரு மாலை நேரம்..... என் கிராமத்து வீட்டின் கொல்லைப் புறத்தில் அமர்ந்திருக்கிறேன். மாலை வெயில் மெலிதான சிரிப்புடன் விடைபெற எத்தனிக்கையில் மேற்கிலிருந்து சூரியக் கதிரின் ஆரஞ்சுப் பழ ஒளியை மேனியில் வாங்கிய படி வரும் ஆடு மாடுகளின் கூட்டம்....
காராம் பசுக்களின் கழுத்து மணிகள் ஆடிக் கொண்டிருக்கும் சப்தம் தூரத்திலிருந்து ஏதோ ஒரு கிறக்கத்தை உண்டு பண்ண, கூடவே அந்த மேய்ப்பன் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர எழுப்பும் ஒலியும் அதன் உடன் சேர்ந்து கிறக்கத்தை அதிகமாக்க மெல்ல அரைக்கண்கள் சொருகிய படி....சொக்கிப் போய் கிடக்கிறேன்...!
கோழிகள், சேவல்கள், குஞ்சுகள் எல்லாம் ஒரு கெக்கரிப்போடு மெல்ல நிலம் கிளறியும், கால்களை சிரண்டி சிரண்டி எதையோ தேடிய படி என் வீட்டு பஞ்சாரத்தை நோக்கி வருகின்றன...
காலையில் வயலுக்குப் போன மாரிமுத்து தாத்தா ஏர்க் கலப்பையோடு...மாடுகளை ஓட்டிக் கொண்டு என் வீட்டு புஞ்சையை கடந்து நடந்து போய்க்கொண்டிருக்கிறார். காலில் முழங்கால் வரை சேறு....இருந்ததைப் பார்த்த நான் "...ஏன் தாத்தா வயக்காட்ல தானா சேத்த கழுவிட்டு வந்தா என்ன...? " என்று கேட்க நினைப்பதற்குள் அவரின் இறுக்கி கட்டிய பழுப்படைந்த வேட்டி தாண்டி வெளியே தெரிந்த கோவணத்தை பார்த்து சிரித்தே விட்டேன்...பிறகு எங்கே கேள்வி கேட்பது...!!
அந்தி வானம் எவ்வளவு அழகாய் மிருதுவாய் இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இந்த வானத்தை தொட்டுவிடவேண்டும் என்ற என் கனவெல்லாம் நொறுங்கிப் போன அந்த நாளில் வானம் என்ற ஒன்றே கிடையாது என்று அறிந்த அந்த நொடி கலக்கமானதுதான்.. வானம் மட்டும் என்று சொல்ல முடியாது...நிலாவிற்கு கூட ஒரு நாள் போவேன் என்று திடமாய் நம்பியிருக்கிறேன்...காரணம் என் செல்ல அம்மாதான்...
எப்போது பார்த்தாலும் வானத்தைக் காட்டி, காட்டி சோறு ஊட்டுகிறேன் என்று சொல்லி சொல்லி என் நம்பிக்கையை வளர்த்து விட்டாள். அம்மா சோறூட்டும் போது அந்த நிலவின் கிரகணத்தில் மின்னும்.... கையிலிருக்கும் கிண்ணமும் அழகு.... என் அம்மாவும் அழகுதான். அம்மா எவ்வளவு பாசக்காரி....உச்சி மோந்து எனக்கு உண்ண கொடுக்கும் போது நான் உண்ணா விட்டால் " இரவில் சங்கிலிக் கருப்பன் வருவான் உன்னைத் தூங்கவிடமாட்டான் கண்ணா..." என்று பயமுறுத்தியே சாப்பிட வைப்பாள்.
வயிறு முட்ட ஊட்டி விட்டு நான் போட்டிருக்கும் வெள்ளை முண்டா பனியனைத் தூக்கி விட்டு வயிற்றில் கை வைத்து பார்த்து என் சாமிக்கு போதுமாய்யா...? என்று கேட்கும் போது நான் கெக்கபிக்க என்று பல நாள்கள் விபரம் தெரிந்தே சிரித்திருக்கிறேன்....அப்போது எனக்கு வாணி (வாயில் ஒழுகும் எச்சில்) ஊற்றும்....ங் ங்..ங் என்று ஒரு மாதிரி சிரித்து வைப்பேன்...வாயை அம்மா முந்தானையில் துடைக்கும் போது அம்மாவின் வாசம் ஒரு விதமாய் என் மூக்கினுள் செல்ல...
தோளோடு அவளைக் கட்டிக் கொண்டு கழுத்துச் சூட்டில் என் முகம் புதைத்துக் கொள்வேன். அப்படி முகத்தை பாதி மூடிக் கொண்டு ஓரவிழியால் நிலாவைப் பார்ப்பேன்...குளு குளுவென்று என்னை பார்த்து சிரிக்கும்.....நானும் நிலா உள்ளே இருக்கும் அந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே உறங்கி விடுவேன்.
காலங்கள் எப்போதும் பிள்ளைப் பருவத்தில் அட்டகாசமாய் இருந்திருக்கின்றன.... என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இருள் போர்வையை பூமி மீது இயற்கை அழகாய் போர்த்தி விட தொடங்கியிருந்தது... ! என்னைக் கடந்து சென்ற ஆடு மாடுகளின் ஓசைகள் தூரத்தில் இன்னமும் கேட்க....என் வலது பக்கத்தில் இருந்த ஒற்றைப் பனைமரத்தோடு தன் சல்லாபத்தை ஆரம்பித்திருந்தது வாடைக்காற்று...
அடிக்கடி இப்படித்தான்..இந்த கரியன் இருக்கிறானே..(ஒத்தப் பனையை இப்படித்தான் நான் அழைப்பேன்) மிகவும் சந்தோசமாகவே இருப்பான்...! சலசலவென்று காற்றினை தன்னுள் வாங்கி அவனெழுப்பும் ஒலி அலாதியாய் இருக்கும்....! அவனின் உயரத்தைப் பார்த்து எப்போதும் பிரமித்துக் கொண்டே இருப்பேன்...! இப்போதும் சலசலத்துக் கொண்டிருக்கிறான் கரியன்...
கரியனுக்கு நேர் எதிரே இருக்கும் எங்க பெரியாச்சி...(புளிய மரம்) இப்போது மிக உற்சாகமாய் இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டேன். ஆமாம் காலையில் எழுந்து வெளியே சென்ற அவளின் பிள்ளைகள் எல்லாம் அவளின் மடிக்கு திரும்பி வந்து அமர்ந்து கொண்டு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் தருணம் அவள் முழு நிறைவோடுதானே இருப்பாள். எல்லா பறவைகளும் ...அதை நான் பார்த்தேன், இதை நான் தின்றேன்...நீ இன்னிக்கு எங்க போன.. நான் அங்க போனேன்....என்று பேசிச் சிரித்துக் கொண்டிருக்கையில் .... எனக்கு வந்த பொறாமை இருக்கிறதே....
என்ன பொறாமை என்று கேட்கிறீர்களா...அட...என்னையும் கூட சேத்துகிட்டா என்ன? மாட்டேன்னா சொல்றேன்....என்று எண்ணியபடியே வானத்தை எட்டிப் பிடித்திருந்தது என் பார்வை..
ஆமாம் இரவு ஆகட்டும் உடனே....இந்த வானம் பண்ணும் அலங்காரம்.. இருக்கிறதே... அதை நான் சொல்ல மாட்டேன்....நீங்களே பாருங்கள்....அலங்கார நட்சத்திரங்களோடு அவள்(து) எப்படி ஜொலிக்கிறது என்று....
மையல் கொண்டு நான் நின்றிருந்த நேரம் எவ்வளவு என்று உணரும் முன்பு....
வீட்டிக்குள்ளிருந்து அப்பத்தாவின் குரல்..." ஏப்பு இருட்டுல நிக்கிறியே...காத்து கருப்பு ஏதாச்சும் வந்து அடிச்சிரப் போவுது...உள்ள வாய்யா..." என்னை எட்டிப்பிடிக்க....
என் ஏகாந்தத்தை அங்கேயே கலைத்து விட்டு "........இந்த வந்துடனப்பத்தோவ்.. " என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றே விட்டேன்...!
அப்போ....வர்ர்ர்ட்டா.....!
தேவா. S
PS: Next shot .... " கழுகு என்னும் போர்வாள்...!
Comments