Skip to main content

உடையாரின் அதிர்வலைகள்...31.08.2011!





















அதிர்வு I

உடையாரை தொட்டு வாசித்து அதில் நுழைந்ததற்கு பின் மனதினுள் சென்று உட்கார்ந்து கொண்ட சொல் " கற்றளி ".

தஞ்சாவூருக்கு அடிக்கடி செல்லும் நான் காளையார்கோவிலுக்கும் செல்வேன். காளையார்கோவில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது. அந்த கோவிலின் ராஜ கோபுரம் கூட மிகப்பெரியதாய்தான் இருக்கும். கோபுரத்தின் கீழ் நின்று அண்ணாந்து பார்க்கும் போது மேகங்களின் நகர்வில் கோபுரம் கீழே விழுவது போல ஒரு பிரமை தோன்றும்.

காளையார் கோவிலுனுள் அங்குலம் அங்குலமாக சுற்றியிருக்கிறேன். தூண் தூணாக, சுவர் சுவராக தடவித் தடவி அந்தக் கோவிலின் பழைமை நிறைந்த வாசனைகளை என்னுள் ஆழ சுவாசித்து செலுத்தியபடி மருதிருவர் சிலைகளையும் வியந்து போய் பார்த்திருக்கிறேன். அவர்களின் புஜத்தில் அணியக்கூடிய தண்டை போன்ற இரும்பாலான ஒன்றையும் பார்த்திருக்கிறேன்.

அதன் தடிமனும் அகலமும் பார்த்து அதை எடையை அனுமானத்தில் கொண்டு வந்து நிறுத்தி இத்தனை உறுதியான வலுவான ஒரு அணிகலனைத் தம்மின் புஜத்தில் அணிந்திருப்பார்களெனில் அவர்களின் உடல் உறுதி எப்படி இருந்திருக்கும் என்று வியந்திருக்கிறேன்.

வீரம் என்பது வெறும் உடல் உறுதி மட்டுமல்ல அது விவேகத்தையும் விட்டுக் கொடுத்தலையும் உள்ளடக்கியது என்று என்று மருதிருவரின் கதைகளில் வரும் நிறைய சம்பவங்களை உணர்ந்திருக்கிறேன்.

திருவாங்கூர் மகராஜாவிடம் போய் தமது வீரதீர பராக்கிரமங்களைக் காட்டி வளறி வீசி, நேருக்கு நேராய் தனியாளாய் நின்று பெரிய மருது புலியோடு சண்டையிட்டு அதை கொன்று பல்வேறு அசாத்தியமான செயல்களைச் செய்து பரிசாய் சில பொருட்களையும் கடனாய் பெரும் பணத்தையும் பெற்று வந்தனர் என்று வரலாறு கூறுகிறது. அப்படியாக திரட்டி வந்த பணத்தை வைத்து சிவகங்கைச் சீமையை நிர்வாகம் செய்ய எத்தனிக்கையில் ஆற்காட்டு நவாப்பின் தூண்டுதலால் கும்பெனியர்கள் படையால் மீண்டும் ஒரு போர் வரும் சூழல் சீமைக்கு வருகிறது.

பெரிய மருது சீற்றமுடன் போரிட எத்தனித்திருக்கிறார், ஆனால் சின்ன மருதுவோ அதை தடுத்து, எட்டு ஆண்டுகளாக சீமையில் வாழும் மக்கள் பல்வேறு போர்கள் மற்றும் தலைமைகளின் மாற்றங்களால் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எனவே மக்களின் நலத்தை முன்னிருத்தி தற்சமயம் ராஜதந்திர உபாயமாக நாம் கர்னல் புல்லட்டனை சந்தித்து கப்பம் கட்டி விடுவோம் என்று கூறி, அதன் படியே தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு புரட்டிய பெரும் பணத்தை கப்பமாக கட்டி விட்டு அதன் பிறகு நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இங்கே ஒரு தலைவன் விட்டுக் கொடுத்து அடிபணிந்து போவது போலத் தெரிந்தாலும், இதுதான் மிகச்சரியான ஒரு தலைமைத்துவத்தின் இயல்பு. தான், தான் என்ற அகங்காரம் கொண்டு எந்த ஒரு தலைவனும் இருத்தல் ஆகாது என்பது மட்டுமல்ல.

ஒரு தலைவன் என்பவன் மிகைப்பட்ட மக்களுக்கு வழிகாட்டும் பெரும் பொறுப்பிலும் இருக்கிறான். அவனின் செயல்களின் முடிவு அமைதியையும் சந்தோசத்தையும், சுபிட்சத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். வழுக்கும் நிலத்தில் எதிர்த்து நின்று பார்ப்பவன் முட்டாள். வழுக்கும் நிலத்தில் சறுக்கிக் கொண்டு போகத் தெரிந்தவன் சமயோசிதவாதி.

இப்படியாக ஏராளமான நினைவுகளை இந்தக் கோவில் எனக்குள் விதைத்திருக்கிறது.

151 அடி கொண்ட ராஜகோபுரத்தை பார்த்து வியந்திருக்கிறேன். 216 அடிகள் உயரம் கொண்ட தஞ்சாவூர் கோவிலைப் பற்றியும் எனக்குத் தெரியும் என்றாலும் வெறுமனே நினைப்பேன்...ஏன் காளையார் கோவில் கூட உயரமான கோபுரம் கொண்டிருக்கிறது.

இது ஏன் தஞ்சாவூர் கோவில் அளவிற்கு பிரசித்தி பெறவில்லை. நிறைய சுற்றுலா பயணிகள் வருவதில்லை? ஒரு வேளை இதன் பின் புலத்தில் அரசியல் இருக்குமோ? ஒருவேளை இந்த பிராந்திய மக்கள் இதை சரியாக விளம்பரப்படுத்த வில்லையோ என்றெல்லாம் நினைத்து நிறைய பேரிடம் கேட்டும் இருக்கிறேன்....

ஆனால்...அதற்கான பதிலாய் தஞ்சை பெரிய கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது என்ற ஒற்றைக் காரணத்தைதான் மிகைப்பட்ட பேர்கள் கூறினார்கள். மேலும் பெரிய நந்தி உள்ளது என்றும் மொக்கையாய் சில விபரங்கள் அறியப் பெற்றேன். சரியானவர்களை நான் கேட்கவில்லை என்றும் கூட கூறலாம். தஞ்சாவூர் கோவிலுக்கும் செல்லும் போது எல்லாம் பக்தி என்னும் ஒரு உணர்வு மட்டுமே ஆட்கொண்டு இருந்ததால் அப்போதெல்லாம் கேள்விகள் நிறைய எனக்குள் எழவில்லை.

கோவிலைச் சுற்றிய பிரகாரங்களில் எல்லாம் அமர்ந்திருக்கும் காதலர்களையும் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் பரீட்சை நம்பர்களையும், மற்றும் அவரவர் வேண்டுதல்களையும் பார்த்து விட்டு வெகு நேரம் பிராகரத்தினுள் இருக்கும் புல் தரையில் அமர்ந்து வெற்று வானத்தைப் பார்த்து விட்டு....எதிர்காலம் பற்றிய ஏதோ ஒரு கனவினில் அந்த இடத்தின் உன்னதத்தைத் தொலைத்து விட்டு வந்திருக்கிறேன்.

ஆனால்..உடையாருக்குள் மூழ்கி, நான் மூச்சடைத்து நகர்ந்த பொழுதில் என்னால் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. இராஜ இராஜேச்வரம் என்ற அந்த பெரியகோவிலிடம் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, எனது பதின்மங்களில் ஏற்பட்ட எதிர்பாலின ஈர்ப்பில் ஏற்படும் ஒரு கவர்ச்சியினை ஒத்து இருந்தது. இந்த விசை என்னை இழுத்துப் பிடித்து கோவிலைப் பற்றிய என் எண்ணங்களை அதிகப்படுத்தி இந்தக் கோவிலையே பித்தனாய் சுற்றி வரச்செய்தது.

மேலும் புத்தகத்தின் பக்கங்களை நகர்த்த, நகர்த்த பெரும் காதலால் என்னை ஈர்த்துக் கொண்டது பெருவுடையார் இராஜ இராஜத்தேவரால் செய்யப்பட்ட இந்தக் கோயில். பசியற்று, மொழியற்று, பித்தனாய் தேடித் தேடி வெவ்வேறு புத்கங்களையும் இணையப்பக்கங்களையும், புகைப்படங்களையும் காணொளிகளையும் பார்த்துக் கொண்டே இருக்கும் என் மனம்....தஞ்சை கோவிலை விட்டு நகராமல் கெட்டியாய் அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, கண்களில் நீர் ததும்ப....

அருள்மொழி வர்மன் என்னும் கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடிசோழன், சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன், ஐயன் பெருவுடையத் தேவரை எண்ணி உருகத் தொடங்கியது....

" கற்றளிக் கோவில்...."

என் ஐயனே, பெரும் பராக்கிரமத்தால் பல தேசங்களை வென்ற பெருவுடையத்தேவனே....! உனக்குள் என்ன தோன்றியப்பா ஏழு பனை உயரத்தில் இப்படி ஒரு பெரும் கோவிலை கட்டினாய்? எல்லா சுகங்களையும் குறைவர கொண்டிருந்த சோழ தேசத்தின் பெரும் சக்கரவர்த்தி நீ....! கடல் கடந்து சென்றும் வெற்றிக் கொடிகளை நாட்டி வந்த வீரனை பிள்ளையாய் கொண்டிருந்த பெரும் தகப்பன் நீ....

எங்கே & எப்போது தொடங்கியதப்பா உனது சிவ பற்று...? ஈசனவன், இறைவனவன் எல்லாம் வல்லவன் என்று அந்த ஏக இறையை உன்னுள் நீ உணர்ந்து அந்த பிரமாண்டத்தை பொருளாக்கி காட்ட முயன்றாயா செல்வனே...?

என் மனம் இடைவிடாது பிதற்றிய படியே இருக்கிறது. காளையார் கோவில் வேறு. தஞ்சை கோவில் வேறு....மனம் கூவி கூவி சத்தியத்தை என்னுள் ஊற்றியது.

காளையார் கோவில் கட்டப்பட்டது 1780 களுக்குப் பிறகு அதுவும் செங்கற்களால் ஆனது ஆனால் தஞ்சாவூர் கோவில் பத்தாம் நூற்றாண்டில் உருவானது.....மட்டுமல்ல மலைகளே இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தில் முழுக்க முழுக்க கருங்கல்லால் செய்யப்பட்ட கோவில். சோழர்களின் காலத்தில் தமது ஆளுகையில் இருந்த மிகைப்பட்ட கோவில்கள் கற்றளிக் கோவில்களாய் மாற்றப்பட்டன.

மிகப்பெரிய பார வண்டிகளில் புதுக்கோட்டை திருச்சி பகுதிகளில் இருந்து நித்தமும் கருங்கற்களை கொண்டு வந்து குவித்து இவ்வளவு மிகப்பெரிய கோயிலை உருவாக்க முழுக்க முழுக்க பயன்பட்டது மக்கள் வளம்.

கருவறைக்கு மேலே இப்படி ஒரு ஏழு பனை உயரம் கொண்ட கோவிலைச் செய்ய பெருவுடையார் திட்டமிட்ட காலத்தோடு ஒப்பிட்டு நினைத்துப் பார்க்கையில் இது சாத்தியமே இல்லை என்ற எண்ணம்தான் நாம் அந்த காலத்தில் வாழ்ந்திருந்தால் நமக்குத் தோன்றியிருக்கும். பரந்து விரிந்து தனது ராஜ்யத்தை விரித்துப் போட்ட இராஜ இராஜ சோழனின் உள்நோக்கிய பார்வையால் ஏற்பட்ட தேடலில் உருவானதுதான் இராஜ இராஜேச்வரம் எனப்படும் பிரமாண்டம்.

ஏற்கனவே தலைமைத்துவத்தைப் பற்றி கூறினேன் தானே....? இதோ...இதோ...பெருவுடையத்தேவரை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்...! முழுக்க முழுக்க மனித உழைப்புகளாலும், ஒத்துழைப்புகளாலும் உருவான இந்த பெரிய கோவில் எத்தனை மனிதர்களை ஒன்றிணைத்ததால் நடந்தேறியிருக்கும்?

அதுவும் தமது சொந்த தேசத்து மக்களோடு வேற்று தேசத்தை வென்று அதனால் பிடித்து வந்த 10,000 சாளுக்கிய, பாண்டிய, சேர தேசத்து அடிமைகளையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தி, கருமார்கள், சிற்பிகள், தேவரடியார்கள், வண்டி ஒட்டுனர்கள், உணவு சமைப்பவர்கள், சுத்தம் செய்பவர்கள், அமைச்சர்கள், மந்திரிகள் என்று பெரும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து ஒரு செயலை வெற்றிக் கரமாக செய்து முடித்திருக்கிறார் எனில்...

எப்போது சீற்றமாயிருந்திருப்பார்? எப்போது விட்டுக் கொடுத்துப் போயிருப்பார்? எதைக் கண்டு தயங்கி இருப்பார்? எதைக் கண்டு வியந்திருப்பார்? யாரை எப்படி எல்லாம் கணித்திருப்பார்? நிதியைக் கையாள என்ன விதமான நிலைப்பாடுகள் கொண்டிருப்பார்? அதே சமயம் இவ்வளவு பெரிய அரும் பணியைச் செய்யும் போதே எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தேசத்தின் எல்லைகளில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்திருப்பார்?

சோழப் பேரரசில் எத்தனையோ ஒற்றர்கள் இருந்திருக்கிறார்கள். பஞ்சவன் மாதேவியின் கீழ் பல குழுக்களாய் ஒற்றர்கள், சேனாதிபதி பிரம்மராயர் கிருஷ்ணன் ராமரின் கீழ் பல ஒற்றர்கள், அவரின் மகன் அருண் மொழியின் கீழ் ஒற்றர்கள், இளவரசர் இராஜேந்திரச் சோழனின் ஒற்றர்கள், தனிப்படட் முறையில் பெருவுடையாருக்கென ஒற்றர்கள்......

என்று எத்தனையோ ஆயிரம் ஒற்றர்கள் தனித்தனியே தேசமெங்கும் வியாபித்து இருந்தாலும் அவர்களின் ஒற்றை நோக்கம் இராஜ இராஜ சோழன் என்னும் பெரும் தலைவனின் நலனையும் அவனின் எல்லா செயல்களுக்கும் உறுதுணையாய் இருந்தது என்பதும் மிக ஆச்சர்யமான விசயமென்றால்....இப்படியாக அத்தனை பேரையும் வசீகரித்து வைத்திருந்த ஐயன் இராஜ இராஜன் எவ்வளவு பேராற்றலும், பேரன்பும், பெருங்கருணையும்,பராக்கிரமும் கொண்டிருந்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள்.....!

கருவூர்த் தேவர் என்ற குருவின் ஆலோசனைகளை ஏற்குமிடத்தில் சிறு குழந்தையாய் இராஜ இராஜன் என்னும் பேரரரசன் கைகட்டி, வாய் பொத்தி நின்று விடயங்களை உள்வாங்கிக் கொள்ளும் இடத்தில் தமது செல்வமும், சக்தியும் பதவியும் வெறும் தூசு என்றுதானே நினைத்திருப்பார்.....

எழுத்துச் சித்தர், என்னை எப்போதும் சூட்சுமமாய் வழி நடத்தும் திரு. பால குமாரன் என்னை கை கூட்டி சிறு பிள்ளையாய் சோழ ராஜ்யத்துக்குள் கூட்டிச் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு இடமாய் எனக்குச் சுட்டிக் காட்டி இது இப்படியப்பா ....அது அப்படியப்பா என்று ஒரு தகப்பனாய் வழி காட்டுவதோடு மட்டுமில்லாமல் உள்நோக்கிய எனது ஆன்மீகப்பார்வைக்கு பேருதவியாயும் இருக்கிறார்.....

பிரமாண்டத்தை செய்தவர் ஒருவர்....அந்த பிரமாண்டத்தை பிரமாண்ட வார்த்தைகளாக்கி காட்டுபவர் ஒருவர்......ஒரு சிறுவனாய்....வாய் பிளந்து ஆச்சர்யங்களை உள்வாங்கி, ஏதேதோ அமானுஷ்ய விடயங்கள் என்னுள் பூத்துச் சிரிக்க...சலனமற்று வாசித்துக் கொண்டிருக்கிறேன்...நான்...!

சோழம்..! சோழம்...! சோழம்..!

(இன்னும் அதிரும்...)


தேவா. S

பின் குறிப்பு: "பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றுத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்,'' என்று, இப்பெரும் கோவிலைக் கட்டியதை பெருமிதத்தோடு கூறுகிறது கல்வெட்டு.

அடித்தளம் முதல் சிகரம் வரை கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இக்கோவில், "கற்றளி' என அழைக்கப்படுகிறது.



Comments

Prabu Krishna said…
ம்ம் நான் தஞ்சாவூர் இது வரை வந்தது இல்லை. மருதுபாண்டியர் குறித்து எனக்கு அதீத ஈர்ப்பு. இந்த பதிவு ஒரு புது விஷயத்தை சொல்லி உள்ளது. நன்றி அண்ணா.
பக்தியும்,பரவசமும் நிறைந்த உணர்வு..!!
//பிரமாண்டத்தை செய்தவர் ஒருவர்....அந்த பிரமாண்டத்தை பிரமாண்ட வார்த்தைகளாக்கி காட்டுபவர் ஒருவர்......//

கோவில் கட்டியவரை விட... அதை வார்த்தைகளாக்கியவரை விட....

உணர்ச்சி பூர்வமாய்.. உள் மன ஏக்கங்களையும் சேர்த்து நீங்கள் பகிர்ந்த விதம் உங்கள் பற்றையும்.. பக்தியையும்... காட்டுகிறது.

ஆரம்பம் முதல்... இறுதி வரை.. ஏதோ அமானுஷ்ய உலகில் சஞ்சரித்து வந்த உணர்வில் வாசித்தேன். உங்கள் உணர்வுபூர்வ படைப்பிற்கு தலை வணங்குகிறேன்.

தொடரட்டும் உங்கள் பணி...!! :)
//வழுக்கும் நிலத்தில் எதிர்த்து நின்று பார்ப்பவன் முட்டாள். வழுக்கும் நிலத்தில் சறுக்கிக் கொண்டு போகத் தெரிந்தவன் சமயோசிதவாதி. //


...வாவ்.. இது செம!!! :)
நாம் எடுப்பிச்ச //


இதுதான் இராஜராஜனின் பண்பு !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த