Skip to main content

எழுத்து....!

















" அ " என்று கைப்பிடித்து எழுத என்று என் அன்னை பயிற்றுவித்தாளோ அன்றிலிருந்து இன்றுவரை எழுத்தினை நேசிக்கிறேன். ஏதோ ஒன்றைக் கிறுக்கும் மனோபாவம் இன்று தொடங்கியது அல்ல. காலத்தின் போக்கில் அவை கரும் பலகையாகவும், நோட்டுப் புத்தகங்களாகவும், இன்று இணையத்தில் தட்டச்சாகவும் பரிணமித்திருக்கிறது.

சிலேட்டில் எழுதிப் பழகிய காலங்களில் சிலேட் குச்சிதான் எனது நண்பன். சாக்பீசை எப்போதும் நான் நேசித்தது கிடையாது. ஏனென்றால் அது எப்போதும் ஆசானின் கையிலிருந்து மிரட்டும் ஒரு வஸ்தாகவே எனது மூளையில் இன்னமும் பதிந்து போயிருக்கிறது. அதுமட்டுமில்லாது அதன் தடிமனான அச்சு வெளியாக்கத்தை விட மெலிதான சிலேட்டுக் குச்சியின் அச்சு விரும்பத் தக்க வகையில் இருக்கும்.

ஆசிரியருக்குத் தெரியாமல் சாக்பீஸ் எடுத்து சிலேட்டில் அவர்கள் இடும் மதிப்பெண்ணை திருத்தி 100க்கு 79 எடுத்த மார்க்கினை 99 என்று மாற்றம் செய்து வீட்டில் காண்பிக்கையில் பால பருவத்தின் கையெழுத்து அதிர்வினை விளங்கிக் கொண்டு அடி வாங்கிய நாளும் சரி....

பள்ளியில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் இங்க் ரீமூவர் வைத்து ஆசிரியர் கொடுத்த மார்க்கை மாற்றி கூடுதல் மார்க் இட்டு அப்பாவிடம் கையெழுத்து வாங்கி விட்டு மீண்டும் அழிக்க முற்படுகையில் இங்க் ரிமூவரின் ஆசிட் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை மெலிதாய் ஒரு ஓட்டை போட்டு விட மிஸ்டர் பீன் மாதிரி பதறிப்போய் வேறு வழியில்லாமல் ஆசிரியரிடம் கொடுத்து அடி வாங்கிக் கொண்ட போதும் சரி..

எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்.

பேனா பிடித்து அழுத்தி எழுதும் போது கிடைக்கும் உணர்வை விட தட்டச்சு செய்யும் போது மென்மையாய் இன்னும் வேகமாய் உணர்வுகள் பீறிட்டு வருவது எனக்கு மட்டுமே தோன்றுகிறதா அல்லது எல்லோருக்குமே அப்படித்தானா என்று எனக்குத் தெரியவில்லை.

எழுத்து என் நேசம். நான் எழுத்தாளன் என்ற எந்த ஒரு அடையாளத்துக்குள்ளும் வராமால் என் காகித ராஜ்யத்துக்குள் எப்போது நினைத்தாலும் படையெடுத்து சென்று எழுத்து வீரர்களை ஆக்கிரமிக்கச் செய்து வெள்ளைத் தாள்களை வென்றெடுப்பது என் வழமையில் ஒன்று....! அன்று வெள்ளைத் தாள்...இன்று இணையம் மற்றும் வலைப்பூ...

ஏதோ ஒன்று சொல்லத் தோன்றிக் கொண்டே இருக்கும் ஆனால் இன்னது என்று தெரியாது. அந்த உத்வேகத்தின் உயிர் முடிச்சு நேரடியாய் தட்டச்சில் ஏறும் போது நானும் உடன் இருந்து வாசித்திருக்கிறேன். இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக கூட தோன்றலாம்.. ஆனால் இதுதான் உண்மை....!

எழுத்துக்களை வாசித்து மட்டுமல்ல எழுதியும் நாம் பயிலலாம். எழுதி, எழுதி எல்லாம் இறைத்து விட்டு வெறுமையாய் இருப்பது எழுதுவதை விட இன்னமும் அழகானது என்று இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். புறம் நோக்கிய நகர்தலுக்கு சில எழுத்துக்கள் பயன்படும்...! சமூக பிரச்சினைகளையும் தீர்வுகளையும், எழுதும் போது உள்ளமையில் மூழ்கிக் கிடந்து அதை விட்டு வெளியே வந்து அவற்றைப் பற்றி பேசவேண்டும்.

அதாவது... நமது வீட்டினுள் ஆழமாய் தனிமையில், நமது விருப்பப்படி இருக்கும் போது யாரேனும் நம்மை பார்க்க வந்து விட்டால், பதறி எழுந்து உடை உடுத்திக் கொண்டு...சட்டை பட்டனை போட்ட படி கலைந்து இருக்கும் தலையை கையால் வாரிக் கொண்டு....என்ன சார் எப்டி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டு வந்து நலம் விசாரிப்போம். வந்திருப்பவர் ஏதேதோ பேச நாமும் பேச முழுக்க முழுக்க லெளகீகம் என்னும் கடலுக்குள் விழுந்திருப்போம்.

வந்த விருந்தினர் போனவுடன் மீண்டும் நம் பழைய நிலையை அவ்வளவு எளிதாய் அடைய முடியாது, ஏனென்றால் வந்தவர் விதைத்துப் போனவை எல்லாம் நம்முள் எண்ணங்களாய் ஓடிக் கொண்டிருக்கும் மீண்டும் நமது ஓய்வு நிலைக்குச் செல்ல சில மணி கூட நேரங்கள் ஆகலாம்....

இப்படித்தான் பொது பிரச்சினைகளை எழுதும் போது மனமற்ற மையத்திலிருந்து வெளியில் வந்து எழுத வேண்டியிருக்கிறது. அப்படி எழுதும் போது வாழ்க்கையை மட்டும் வாழ்ந்துகொண்டு பொருளாதய உலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீமான்கள் நம்மை எளிதாய் சீண்டிப்பார்த்தும் விடுகிறார்கள்..., அதே நிலையில் இருந்து நாம் கொடுக்கும் பதில்கள் கண்டிப்பாய் அவர்களை புரிதலுக்கு கொண்டு வந்து விடுவதில்லை.

" சப்தங்கள்...சப்தங்களின் முன் தோற்கும் "

என்பதை நாம் அறியாமலில்லை. ஸ்தூலத்தின் தீர்வுகளை நான் பெரும்பாலும் தீர்க்குமிடம் சூட்சுமம். ஆயிரம் வார்த்தைகள் செய்யாத விசயத்தை ஆழமான மெளனங்கள் சாதித்து விடும் என்பது உறுதியான விடயம்.

சப்தமில்லாத எழுத்துக்கள் ஒரு வகை தியானம்தான். வாழ்க்கையில் தியானம் என்பது ஒரு வித தனிப்பட்ட செயலாக மனிதர்கள் பார்க்கும் படியான ஒரு சூழலை மனிதனை திருத்த வந்த மதங்கள் போதித்து விட்டன. உண்மையில் முழுமயாக வாழ்வதுதான் தியானம். வாழ்க்கையின் இந்த தருணத்தை நான் முழுமையான ஒரு சந்தோச நிகழ்வாய் அல்லது ஏதோ ஒரு துக்க நிகழ்வாய் எதிர் கொள்ளும் போது அதை முழுமையாக அனுபவித்தல்தான் தியானம்.

மனிதர்களுக்கு எப்போதும் மரணம் பற்றிய பயம். இதுதான் ஆழமாய் உள்ளே இருந்து எல்லா செயல்களையும் செய்ய வைக்கிறது. முழுமையாய் வாழ்க்கையை வாழ்பவனுக்கு பயம் ஏதும் இல்லை. எந்த உறுத்தலும் இல்லாமல் இறக்க தயாராகவே இருக்கிறான். சாக்ரடீஸ் கூறியது போல

" வாழ்க்கையை நான் முழுமையாக வாழ்ந்து விட்டேன். எனவே இறப்பு பற்றி எனக்கு யாதொரு கவலையும் இல்லை. ஒரு வேளை மரணத்துக்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்குமெனில் அதையும் நான் முழுமையாக வாழத்தான் செய்வேன்..."

என்ற எண்ணம் கொண்டவர்களே வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொண்டு இந்த கொண்டாட்டதை அனுபவித்து வாழ்கிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்க உயரிய புரிதல் தேவை, உயரிய புரிதலை சூழ்நிலைகளும், மனிதர்களும், நல்ல புத்தகங்களும் அளிக்கின்றன...இவற்றை கிரகித்த மூளை சமப்பட்டு போய்...

கிரகாசாரத்தை அனுபவமாக்கிக் கொண்டு ஆழமான எழுத்தாய் வெளிப்படுகிறது. எழுத்து ஆத்மாவை சுத்தப்படுத்துகிறது. பரிபூரணத்தை நோக்கி நகரவைக்கிறது. ஒரு தவத்தைப் போல ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்றினை எழுதி முடிக்கையில் திருப்தி கிடைக்கிறது. இந்த திருப்தி பூர்வாங்க நிலையை ஒத்திருக்கிறது. சமநிலை ஆன மனது சலனமின்றி அங்கிங்கெனாதபடி விரிகிறது....

இப்படியாகத்தான் எழுத்தினை நானும், என்னை எழுத்தும் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வெளிப் பார்வைகளுக்கு கிறுக்கலாய், கேலியாய், சராசரியாய் தென்பட்டாலும் எழுதுவதை இந்த ஒரு அணுகுமுறையோடு தொடரும் போது கிடைக்கும் அலாதியான பரவசத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.....?

காலத்தோடு ஒத்திசைந்து தொடரும் இந்த பயணம் என்று முடியும் என்று அறிய முடியாமலேயே....அதன் வேகத்தில் ஒரு நாள் நின்று போகும்.....!

அன்று முழுமையில் நானே நானாய் இருப்பேன்...!


தேவா. S

Comments

எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்



அருமையான பதிவு.
மனந்திறந்து கொட்டுகிறீர்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
மனம் விரும்பிச் செய்யும் ஒவ்வொரு செயலுமே வழிபாடுக்கு இணையானதுதான்.

எழுத்து தவம்
என்றால் உங்களைப் போல எழுதுவது

வரம் நண்பா!

ஆழமான,
கருத்துச் சிதைவில்லாத,
எளிய நடை உங்கள் எழுத்துத்தவத்துக்குக் கிடைத்த வரம் என்றே நான் கருதுகிறேன்.
முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்த போது..

என் விரல்களுக்கு கண்கள் தோன்றியதை உணர்ந்தேன்!
எழுத்துக்களை வாசித்து மட்டுமல்ல எழுதியும் நாம் பயிலலாம். எழுதி, எழுதி எல்லாம் இறைத்து விட்டு வெறுமையாய் இருப்பது எழுதுவதை விட இன்னமும் அழகானது என்று இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன்

ஆழமான உண்மை நண்பா.
இடைவிடாமல் படித்தேன்
(தவம் செய்தேன்)

படித்த பின்னும் தங்கள் சிந்தனைகளை மனம் அசைபோடுகிறது
(வரம் பெற்றேன்)

தொடர்ந்து எழுதுங்க நண்பா.
////இப்படித்தான் பொது பிரச்சினைகளை எழுதும் போது மனமற்ற மையத்திலிருந்து வெளியில் வந்து எழுத வேண்டியிருக்கிறது. அப்படி எழுதும் போது வாழ்க்கையை மட்டும் வாழ்ந்துகொண்டு பொருளாதய உலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீமான்கள் நம்மை எளிதாய் சீண்டிப்பார்த்தும் விடுகிறார்கள்..., அதே நிலையில் இருந்து நாம் கொடுக்கும் பதில்கள் கண்டிப்பாய் அவர்களை புரிதலுக்கு கொண்டு வந்து விடுவதில்லை.////

இப்படிதான்னே பொது பிரச்சினைகளை நேத்து ஒரு friend கிட்ட பேசிட்டு இருக்கும் போது கிள்ளி வெச்சுட்டான்...ராஸ்கல் :)
//அன்று முழுமையில் நானே நானாய் இருப்பேன்...!//

சம்பவாமி யுகே யுகே!
Harini Resh said…
அருமையான பதிவு தேவா அண்ணா
வாழ்த்துக்கள்
எழுத்தை சுவாசமாக கொண்டுள்ளீர்கள்..!! உங்களோடு நட்பு கொண்டிருப்பது பெருமையாக உள்ளது.
Chitra said…
கிரகாசாரத்தை அனுபவமாக்கிக் கொண்டு ஆழமான எழுத்தாய் வெளிப்படுகிறது. எழுத்து ஆத்மாவை சுத்தப்படுத்துகிறது. பரிபூரணத்தை நோக்கி நகரவைக்கிறது. ஒரு தவத்தைப் போல ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்றினை எழுதி முடிக்கையில் திருப்தி கிடைக்கிறது. இந்த திருப்தி பூர்வாங்க நிலையை ஒத்திருக்கிறது. சமநிலை ஆன மனது சலனமின்றி அங்கிங்கெனாதபடி விரிகிறது....


...... ஒரு இலக்கியவாதியாக மாறி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!
எழுத்து மெருகேறியபடி வருகிறது நண்பா !
//எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்//


அண்ணா அருமையான பகிர்வு... அதுவும் உங்களது இலக்கிய எழுத்தில் படிக்கும் போது மனசு சந்தோஷிக்கிறது... எனக்கும் எழுத்து ரொம்ப பிடிக்கும். முன்பெல்லாம் பக்கம் பக்கமாக பேப்பர்... இப்போது கணிப்பொறி.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நம்ம பக்கம் வந்து நாளாச்சே... மறந்துட்டிங்களா?

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த