Skip to main content

அற்புத நடனம்..!




















நிறைய நிறைய கனவுகளோடு கலர்க் கலரான ஆசைகளோடு ஒரு பட்டாம் பூச்சி மாதிரி இந்த பூமியில் பட படன்னு சிறகடிச்சு பறந்துட்டே போய்ட்டே இருக்கணும்னு இப்போ எல்லாம் தோணுது. வாழ்க்கையில் நமக்கு நிறைய சந்தோசமான நிகழ்வுகள் நடக்கிறது, சந்தோசமான நிகழ்வுகளை எல்லாம் நாம தள்ளி வச்சுட்டு அழுத்தி பிடிச்சு கஷ்டங்களையே நினைச்சுகிட்டு ஒரு வித சலிப்போடு வாழ்க்கைய நகர்த்திட்டு போய்கிட்டு இருக்கோம்.

கொஞ்சம் மாத்தி போட்டு கஷ்டங்களை எல்லாம் ஓரமா வச்சிக்கிட்டு ஒரு யூஸ் அண்ட் த்ரோ பொருளா நினைச்சு அனுபவிச்சுட்டு அப்புறமா தூக்கி கடாசிட்டு போய்கிட்டே இருக்கணும். வாழ்க்கையோட ஒவ்வொரு கணமும் மிக அற்புதமானது. வெயில் அடிக்குது, மழை பெய்யுது, இரவும் பகலும் சேர்ந்து ஒரு வித தாள கதியில எல்லாத்தையும் நகர்த்திக்கிட்டு போய்கிட்டே இருக்கு.

இதுல நான் நானா வாழறதுக்காக ரொம்ப சந்தோசப்படாம வேறு எதை எதையோ எல்லாம் எதுக்கு நினைச்சுகிட்டு ஒரு ஏக்கத்தோடயே, அது இல்லையே இது இல்லையேன்னு குற்ற உணர்ச்சியோட வாழணும்?

எனக்கு எது கிடைக்கணும் அப்டீன்னு முடிவு பண்றது நானாவே இருக்கணும். புறச் சூழலும் வேறு மனிதர்களுமா இருக்கவே கூடாதுன்னு தீர்மானமான ஒரு பாலிசி வச்சிகிட்டு இருக்கும் போது எது நம்மள என்ன பண்ணிடும்? என்கிட்ட இருக்குற பொருளையும் அந்தஸ்தையும் வச்சு இந்த சமூகம் என்ன மதிக்கணும்னா ஐ யம் வெரி சாரி.. ...அப்படிப்பட்ட சமூகத்துல வாழ்றத விட நான் காட்ல மிருகமாவே திரியறதுல ரொம்ப சந்தோசமா இருப்பேன்.

மரியாதை நமக்கு அடுத்தவங்க கொடுக்கணும் அப்டீன்னு எதிர்பார்த்து போலியான வேசத்தை வெளியில போட்டு கிட்டு தம் பிடிச்சு பிடிச்சு வாழ்றதுல என்ன திருப்தி இருக்கப்போகுது. 1000 பேர் வெளில நம்மள வாழ்த்தினாலும் நம்ம யோக்கியதை என்னனு நமக்கு தெரியுமே. மனித சிக்கல்களுக்குள்ளும், தர்க்கங்களுக்குள்ளும் சிக்கி சின்னா பின்னம் ஆகாமல் என் வானில் நானே நானாய் சிறகடிக்கிறேன்.

என்னோட கையை என்னோட முகத்தை மணிக்கணக்கா பாத்து ரசிச்ச பால்யமும் பதின்மமும் எனக்கு இப்ப ரொம்ப அழகா தெரியுது. பொருளாதாரம் என்று வரும் இடத்தில் கர்வங்களும், பித்தலாட்டங்களும், புகழ்ச்சிகளும், மேதாவித்தனங்களும் ஒண்ணா சேர்ந்து கிட்டு நம்ம தன் முனைப்பை ரொம்ப திடப்படுத்திப் போட்டுடுது.

இப்டி இருந்தா மரியாதை, அப்டி இருந்தா புகழ், அப்டீன்னு ஒரு போட்டி மனப்பான்மை வந்து என்னைய இந்த உலகம் ஒரு அந்தஸ்தோட பாக்கணும் நான் காலாட்டிக்கிட்டு கையை உயர்த்தி ச்சே...ச்ச்சே...நான் அப்டீ எல்லாம் நீங்க சொல்ற மாதிரி பெரிய ஆளு எல்லாம் இல்லங்க...சாதாரணமான ஆளுதான்.. நீங்க என்ன புகழாதீங்கன்னு ஒரு போதையில எல்லாத்தையும் உள் வாங்கி கிட்டு கண்கள் சொருக பதில் சொல்லணும்.... !

ச்ச்ச்சீ என்ன வாழ்க்கை இது....? எச்சில் பாத்திரத்தில் பிச்சை எடுத்து பிழைத்து விட்டு தெருவோர குப்பைத் தொட்டி நிழலில் நிம்மதியாக உறங்குவது இதற்கு எவ்வளவோ மேல் அல்லவா?

எது செய்தாலும் அது எனக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க வேண்டுமென்று நினைக்கும் போது செய்யும் செயலை நாம் செம்மையாக செய்வதை விட அங்கீகாரத்தை அடைவதற்கான குறுக்கு வழிகள்தான் நமக்கு அதிகம் தோன்றுகின்றன. பொருள் ஈட்டுவது வாழ்க்கையை வாழத்தான் என்பதை மறந்து விட்டு பொருள் ஈட்டுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாழ்க்கையை இழத்தல் எவ்வளவு மடமையான விடயம்.

இரண்டு துடுப்புக்கள் வேண்டும் படகை செலுத்த, சில சூழல்களில் ஒன்று கூட போதும். படகை செலுத்த வசதியாய் இருக்கிறதே என்று ஆயிரம் துடுப்புக்களை கையில் வைத்திருந்தால் படகையும் செலுத்த முடியாது. துடுப்புக்களின் கனத்தில் படகும் கவிழ்ந்து விடும்.

பணம் பொருள் எல்லாம் துடுப்பு போல, வாழ்க்கை படகு போல இங்கே நமது பயணமும் இலக்கும்தான் முக்கியமே தவிர துடுப்புதான் முக்கியம் என்பது போல எண்ணிக் கொண்டு துடுப்பு சேர்ப்பவர்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

இது ஒரு பக்கம் என்றால் எனக்கு இந்த ஆறு என்று ஒன்றில்லை, படகு என்றும் ஒன்றில்லை என்று எனக்குத் தெரியும் அதனால் துடுப்பே வேண்டாம் என்று படகில் ஏறி ஜலத்தில் மூழ்கி இறப்பவர்கள் ஒரு பக்கமும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை கடக்கத்தான் உயிர் ஜனித்தது. இதை எப்படி கடக்க வேண்டும் என்று அறிதல் ஒரு வித்தை. வித்தையை அறிந்தால் துடுப்பினை வேண்டுமென்றால் போடலாம்.. வேண்டாமென்றால் நிறுத்தலாம், படகினை எத்திசைக்கு வேண்டுமோ அத்திசைக்கு செலுத்தலாம்... ஒரு கட்டத்தில் படகையும் துடுப்பையும் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

பிடிச்ச மாதிரி வாழ்க்கைய வாழ்ந்துட்டு செத்து போகறதுக்கு எனக்கு எதுக்கு ஊர்ல இருக்குற ஓராயிரம் ஏச்சும் பேச்சுக்களும் அப்டீன்னு கூட சில நேரம் நினைக்கிறது உண்டு.

ஒரு பட்டாம் பூச்சியின்
சிறகடிப்பில் லயித்து லயித்து
இதோ முளைத்தே விட்டது
எனக்கான சிறகு....!

எங்கே செல்ல வேண்டும்
என்ற இலக்குகளற்று
நகரும் என் பயணங்களில்
விரிந்து கிடக்கிறது
என் உலகம்!

ஏதேனும் ஒரு பூ வரலாம்
கண நேரம் நான் களைப்பாரலாம்
பல நேரம் பறந்து திரியலாம்
ஏதோ ஒரு நாள் எதுவுமற்று
மரித்து மட்கி மண்ணாக
மாறவும் செய்யலாம்!

யாருக்கு என்ன கவலை...?

(அட கட்டுரை முடிய போகுதுங்க....கொஞ்சம் நடைய மாத்திக்கிறேன்...சீட் பெல்ட் போட்டுக்கோங்க...இப்போ உள்ளுக்குள்ளேயே நாம டேக் ஆஃப் ஆக போறோம். அதுக்கப்புறம் நீங்களே பறந்துக் கோங்க!)

நகரும் பொழுதுகள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. நடக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. ஜீசஸ் கூறியது போல உனது இன்றைய தினத்தைப் பற்றி நீ எண்ணி அதை முழுமையாக வாழக் கற்றுக் கொள். உனது நாளையை அந்த நாளே பார்த்துக் கொள்ளும்.

திட்டமிடுதல் என்பதை நாளையோடு தொடர்பு படுத்தாதே அதை இன்று செய்வதாய் மட்டும் எண்ணிக் கொள்... ஏனெனில் நாளை என்பது உறுதியில்லாத ஒரு சாத்தியமே..அது விடியலாம் விடியாமலேயும் போகலாம்...

நீ இன்றில் மூழ்கு; வாழ்வென்னும் அற்புத நடனத்தில் இன்றே உன்னைத் தொலை; இந்தக் கணத்து சந்தோசங்களே நிஜம்...! சிக்கல் இல்லாத மனித மனங்களை கொண்டவர்கள் சொர்க்கங்களில் வாழ்கிறார்கள்..!

வாழ்க்கையை ரசிப்போம் நித்தம் நம்மை சூழ்ந்திருக்கும் பெருங்கருணையின் பேரானந்தத்தில் லயிப்போம்..!


தேவா. S







Comments

//வாழ்க்கையை கடக்கத்தான் உயிர் ஜனித்தது. இதை எப்படி கடக்க வேண்டும் என்று அறிதல் ஒரு வித்தை. வித்தையை அறிந்தால் துடுப்பினை வேண்டுமென்றால் போடலாம்.. வேண்டாமென்றால் நிறுத்தலாம், படகினை எத்திசைக்கு வேண்டுமோ அத்திசைக்கு செலுத்தலாம்... ஒரு கட்டத்தில் படகையும் துடுப்பையும் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகரலாம்//

சூட்சுமம் நிறைந்த வார்த்தைகள்!

நான் நானாகவே இருப்பதில் தான் எவ்வளவு சுகம்..
நம்மை நாமே கட்டுப்படுத்த கஷ்டப்படும் போது, வேறொருவர் நம்மையும் நம் செயல்களையும் கட்டுப்படுத்துவதும், நாம் பிறரைக் கட்டுப்படுத்த நினைப்பதும் வியப்பாக இருக்கிறது!
ISR Selvakumar said…
உங்கள் பதிவுகள் அனைத்திலுமே ஒரு தேடல் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்தத் தேடல் ஒரு சுகானுபவம். உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது. வாழ்த்துகள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...