
அலுத்துதான் போகிறது
சராசரி அன்றாட....
அட்டவணைகளுக்குள் சுழலும்...
இந்த இயந்திர வாழ்க்கை!
நேரங்களுக்குள் ஒளிந்து கொண்டு
கண்ணடித்து சிரிக்கும்..
வாழ்க்கையின் இதழோரங்களில்
படிந்திருக்கும் சோகத்தில்
தொலைந்து போய் கிடக்கிறது
என் சுயம்....!
யாருமற்ற வனமொன்றில்
ஒரு பேடைக்குயிலாய்
நான் கூவி கூவி
காற்றோடு சல்லாபித்து
தீரக்காதலோடு..
திக்குகளின்று பறக்க
ஆசைகள் கொண்டிருந்தேன்..!
ஆனால்..
அலார ஒலியோடு
அலறலாய் விடியும் பொழுதுகள்
சக்திகளை உறிஞ்சிக் கொன்டு
கசங்கலாய் என்னை
இரவுகளிடம் ஒப்படைக்கும்
வழமையில் அது கரைந்தே போனது..!
ஒரு மரத்தின் இலையாய்...
ஜனித்து காற்றில் ஆடி
அசைந்து விளையாடி
மனமற்ற திசுவாய் மழையில்
திளைத்து குதித்து,
வெயிலைக் காய்ந்து அனுபவித்து
தடமில்லாமல் மரமிலிருந்து
ஒரு நாள் சருகாய் கழன்று
மெளனமாய் மண்ணில்
மட்கி மடியும்
பெருங்கனவுகள் கொண்டிருந்தேன்...
ஆனால்...
இரைச்சலான மனிதர்களின்
புத்திகளிடம் இருந்து என்னைக்
காத்துக் கொள்ளும் முயற்சிகளில்
விழிப்பான நிலையில்தான்
ஏதேதோ எண்ணங்களோடு
நகர்ந்து, அவசரமாய் விடிகிறது
என் நீண்ட இரவுகள்!
ஒரு காற்றாய் நதியின்
மேனி தடவி மெல்ல நகர்ந்து
சிலிர்ப்பாய் அலைந்து திரிந்து
மானுட நாசிகளுக்குள் சென்று
எங்கே இருக்கிறது உயிரின்
உள் முடிச்சு என்றறியும்
ஆசைகள் கொண்டிருந்தேன்...
ஒரு வயல் வெளியில்
சிறு பூவாய் யாரும் கவனியாமல்
பூத்து சிரித்து....தலையசித்து
மடிய நினைத்திருந்தேன்..
ஆனால்...
விரிந்த விழிகளில் தேங்கிக்
கிடக்கும் கனவுகளோடு
வெளுத்த வானத்தை பார்ததபடி
நகரும் என் வார இறுதிகளோ
வரப்போகும் வாரத்திற்கான
திட்டமிடுதல்களாய் எப்போதும்
தொலைந்தேதான் போகிறது...!
மிச்சமாய் என்னவிருக்கும்
என்று உடைக்கும் கேள்விகளை
நித்தம் சுமந்து கொண்டு
தேடலாய் நகரும் பொழுதுகளின்
இலக்குகளில் எங்கோ
ஒளிந்து கிடக்கிறது கட்டுக்களை
உடைத்தெறிந்து ஒற்றைப் பாய்ச்சலில்...
மொத்தமாய் கரையப் போகும்
சுவடுகளற்ற எமது சுயம்...!
தேவா. S
Comments
இன்றைய வாழ்க்கையில் நிறைய இழக்க வேண்டியிருக்கிறது.