Skip to main content

மிச்சமென்ன....?




















அலுத்துதான் போகிறது
சராசரி அன்றாட....
அட்டவணைகளுக்குள் சுழலும்...
இந்த இயந்திர வாழ்க்கை!

நேரங்களுக்குள் ஒளிந்து கொண்டு
கண்ணடித்து சிரிக்கும்..
வாழ்க்கையின் இதழோரங்களில்
படிந்திருக்கும் சோகத்தில்
தொலைந்து போய் கிடக்கிறது
என் சுயம்....!

யாருமற்ற வனமொன்றில்
ஒரு பேடைக்குயிலாய்
நான் கூவி கூவி
காற்றோடு சல்லாபித்து
தீரக்காதலோடு..
திக்குகளின்று பறக்க
ஆசைகள் கொண்டிருந்தேன்..!

ஆனால்..

அலார ஒலியோடு
அலறலாய் விடியும் பொழுதுகள்
சக்திகளை உறிஞ்சிக் கொன்டு
கசங்கலாய் என்னை
இரவுகளிடம் ஒப்படைக்கும்
வழமையில் அது கரைந்தே போனது..!

ஒரு மரத்தின் இலையாய்...
ஜனித்து காற்றில் ஆடி
அசைந்து விளையாடி
மனமற்ற திசுவாய் மழையில்
திளைத்து குதித்து,
வெயிலைக் காய்ந்து அனுபவித்து
தடமில்லாமல் மரமிலிருந்து
ஒரு நாள் சருகாய் கழன்று
மெளனமாய் மண்ணில்
மட்கி மடியும்
பெருங்கனவுகள் கொண்டிருந்தேன்...

ஆனால்...

இரைச்சலான மனிதர்களின்
புத்திகளிடம் இருந்து என்னைக்
காத்துக் கொள்ளும் முயற்சிகளில்
விழிப்பான நிலையில்தான்
ஏதேதோ எண்ணங்களோடு
நகர்ந்து, அவசரமாய் விடிகிறது
என் நீண்ட இரவுகள்!

ஒரு காற்றாய் நதியின்
மேனி தடவி மெல்ல நகர்ந்து
சிலிர்ப்பாய் அலைந்து திரிந்து
மானுட நாசிகளுக்குள் சென்று
எங்கே இருக்கிறது உயிரின்
உள் முடிச்சு என்றறியும்
ஆசைகள் கொண்டிருந்தேன்...

ஒரு வயல் வெளியில்
சிறு பூவாய் யாரும் கவனியாமல்
பூத்து சிரித்து....தலையசித்து
மடிய நினைத்திருந்தேன்..

ஆனால்...

விரிந்த விழிகளில் தேங்கிக்
கிடக்கும் கனவுகளோடு
வெளுத்த வானத்தை பார்ததபடி
நகரும் என் வார இறுதிகளோ
வரப்போகும் வாரத்திற்கான
திட்டமிடுதல்களாய் எப்போதும்
தொலைந்தேதான் போகிறது...!

மிச்சமாய் என்னவிருக்கும்
என்று உடைக்கும் கேள்விகளை
நித்தம் சுமந்து கொண்டு
தேடலாய் நகரும் பொழுதுகளின்
இலக்குகளில் எங்கோ
ஒளிந்து கிடக்கிறது கட்டுக்களை
உடைத்தெறிந்து ஒற்றைப் பாய்ச்சலில்...
மொத்தமாய் கரையப் போகும்
சுவடுகளற்ற எமது சுயம்...!


தேவா. S

Comments

இந்த இயந்திரதனமான வாழ்க்கையில், நாம் தொலைத்த விசயங்கள் பல.. மிச்சமிருப்பது என்ன என்ற தேடலில்....நாம்!!!
நல்ல கவிதை.
இன்றைய வாழ்க்கையில் நிறைய இழக்க வேண்டியிருக்கிறது.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...