Skip to main content

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 11


















உனக்குத் தெரியாது என்ன விதமான கிரியா ஊக்கியாய் நீ இருக்கிறாய் என்று.... உன்னை பின் தொடர்ந்து நான் வந்த நாட்களில் எல்லாம் ஒரு வித பட படப்போடுதான் நடந்திருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் மெலிதாய் உன் இரட்டைப் பின்னலை சரி செய்தபடி ஓரக்கண்ணால் நீ பார்க்கும் அந்த நிமிடத்தில் என் இரத்தமெல்லாம் வேகமாய் இதயத்துக்குள் சென்று அங்கிருந்து அவசரமாய் சுத்திகரிக்கப்பட்டு பம்ப் செய்பட்டு உடலெல்லாம் அதீத கதியில் பரவும் பொழுதில் என்னுள் பெருமூச்சாய் நிறைந்து கிடக்கும் உன்னிடம் சொல்லாத என் காதல்....

ஒரு பேப்பரில் ஐ லவ் யூ என்று நான் கிறுக்கலாய் எழுதி எழுதிப் பார்த்து எழுதியதில் சிறந்ததை கையில் வியர்வை நனைய உன்னிடம் கொடுக்க ஓராயிரம் முறை முயன்று, முயன்று கடைசியில் கொடுக்காமலேயே கிழிந்து போனது எல்லாம் மேலும் மேலும் என்னுள் ஆழமாய் உன் நினைவுகளை ஊடுருவத்தான் செய்தது பெண்ணே...!!!

நண்பர்கள் கூட்டத்துக்கு நடுவேயான அரட்டையில் உன்னைப் பற்றிய பேச்சுக்களில் அவர்களின் ஆலோசனைகளை நம் காதலுக்கு வள்ளல்களாக அவர்கள் வாரி வளங்கும் கணங்களில் என் புத்தியில் மட்டும் எதுவுமே சிக்காமல் உன் இரு துறு துறு விழிகள் மட்டுமே நிறைந்து நின்றிருக்கிறது.

உன் நினைவுகளோடு ஒவ்வொரு முறையும் நான் கேட்கும் ஏதோ ஒரு பாடலில் பரவிக் கிடக்கும் காதலில் தவறாமல் அங்கும் இங்கும் நீ நடந்து கொண்டிருக்கும் அழகை நான் விழித்துக் கொண்டே கனாக் கண்டிருக்கிறேன்...! உன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் என்னுள் கருக் கொண்ட காதல் எப்போதேனும் வெளிப்பட்டுத்தானே ஆகவேண்டும்...

உனக்காக என்னுள் சூழ் கொண்ட காதல் குழந்தையை எந்த சூழலிலும் வேறு யாருக்கேனும் நான் கொடுத்து விடாமல் இருக்க வேண்டும் என்பதில் நானும் கற்புக்ரசனாகத்தான் பெண்ணே இருக்கிறேன்.....

அறிவியலின் மூலத்தையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும், புவியின் தன்மையையும், காலங்கள் கடந்து பரவிக் கிடக்கும் உலக வரலாற்றினை விரல் நுனியில் அறிந்து வைத்தும், கவிதைகளின் மூலத்தில் ஒரு காம உச்சத்தினை ஒத்த நளினத்தை மறைக்கத் தெரிந்தும், கோபங்களில் ஒரு வரிப்புலியாய் வெஞ்சினம் கொள்ள அறிந்தும்....

என்னுள் நிறைந்து கிடக்கும் காதலை உன்னிடம் சொல்ல ஒரு வார்த்தையை கொடுக்காமல் தமிழ்த்தாயும், உன்னருகில் வந்தவுடன் என் வலுவிழந்து போகும் மாயத்தை நீயும்... கொண்டிருப்பது ஒரு வஞ்சிப்புதானே?

ஓராயிரம் முறை என் தலை கலைத்து வாருகிறேன்......!!! பழைய பைக்தான் இருந்தாலும் மீண்டும் மீண்டும் துடைக்கிறேன்....இரவில் வரும் நிலாவோடு சண்டையிடுகிறேன்.... நீ அழகில்லை என்று...!!! ஒரு தென்றல் என்னைச் தீண்டிச் செல்லும் போது எத்தனை தடிமன் உனக்கு என்று சிடு சிடுக்கிறேன், ஒரு மேகம் மலை முகட்டில் தத்தி தத்தி ஏறும் காட்சியைக் கண்டு ஏளனம் செய்கிறேன்...எதுவுமே உன் போல அழகு இல்லைதானே பெண்ணே....

நீ எப்போதும் என் நினைவுகளில் இருக்கிறாய், தினமும் என்னைக் கடக்கிறாய்...! என்னைச் சுற்றியிருக்கும் சூழலே உன்னால் அழகாகிப் போனது......நானோ ஒரு கர்ப்பிணியைப் போல கவனமாய் காதலை என்னுள் தேக்கி வைத்து கற்பனையாய் கொட்டி வைத்திருக்கிறேன் எனக்குள் காதலை...

அது எப்போதும் உன்னை பற்றிய அதிர்வுகளை எனக்குள் சுகமாக பரப்பிக் கொண்டே இருக்கிறது. என் ஏகாந்த கனவுகளுக்கு சிறகு கொடுக்கும் உன் கவிதைகளும் என்னோடான உனது ஆரோக்கியமான வாதங்களும் என்னை ஏதோ ஒரு கிரகத்து வாசி போல ஆக்கித்தான் விடுகிறது.

கவிதைகளும் இலக்கியங்களும் நமது விவாதத்துக்குள் வந்து விழும் பொழுதில் எப்போதும் அதை நான் விவரிக்க நீ எதிர்க் கொள்ளும் எதார்த்தமே தனிதான். பெண்ணோடான ஒரு உறவு ஏதேதோ காரணங்களுக்காக தொடரும் லெளகீக உலகில் உன் அறிவோடு கூடிக் களித்ததில் என் அகங்காரம் அடங்கித்தான் போனது. பேசி பேசி உனக்கு விளக்க வேண்டும் என்று நான் நினைத்த எல்லாவற்றையும் உன் மெளனத்தால் அழித்து தெளிவுகளைப் பற்றிய தீட்சை கொடுத்த குரு நீ.

எதுவுமே உன்னிடம் மிகுந்து போய் நான் இதுவரை கண்டதில்லை உன் அழகு உள்பட. திருத்தமாய் உன்னை தீட்டிய தூரிகைக்கு சொந்தகாரனின் ஜீன்களும், புறச்சூழலும் எவ்வளவு செம்மையாய் இருந்திருக்கும்? என்று என் மூளை கணக்குகள் போட்டிருக்கிறது. இயல்பிலேயே நளினம் கொண்ட உன் பெண்மைக்கு மெருக்கூட்டும் உன் அறிவு என் முதற்பார்வையில் சிக்கி அதன் பின் உன் புற அழகை இலவசமாய் எனக்கு கொடுத்தது.

நினைவுகளில் உன் கரம் பற்றிக் கொள்கிறேன்..எங்கெங்கோ கூட்டிச் செல்கிறாய்...நான் அதிசயத்து நடக்கிறேன்....!!!! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்குள் மூண்டுவிட்ட காதலை என்னால் சொல்ல முடியவில்லை என்று உன்னிடம் சொன்ன போது காதல் என்பது சொல்லி விடுவதால் மற்றும் நிறைந்து விடாது அது புரிந்து கொள்ளப்பட வேண்டியது, வெறும் வார்த்தைகளை உமிழ்ந்து விட்டே வேறு கற்பிதங்கள் கொள்ளும் சராசரி நிகழ்வுகள் நமக்கு வேண்டாமே என்றாய்...

இதோ தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது உனக்கும் எனக்குமான காதல், எந்த வலியுறுத்தலும் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி ஒரு வாசம் பரப்பும் ஒரு மலரின் இயல்போடு தொடர்ந்து...ஆமாம்... காதலின் வலுவை சப்தமின்றி சொல்லிக் கொடுத்த நீ கூட ஒரு மெளன குருதான்....!

என் மெளனங்கள் சூழ்ந்த பொழுதுகளில் எல்லாம் உருவங்களற்று பரந்து விரிந்து கிடக்கிறது உன் நினைவுகள் ஒரு வெட்ட வெளி வானமாய்....

இதோ நீ இன்று இல்லை...இருந்தாலும் வானத்தில் பரவிக் கிடக்கும் நட்சத்திரங்களைப் போல நானும் காதலால் நிரம்பித்தான் கிடக்கிறேன்!



தேவா. S


Comments

///உனக்காக என்னுள் சூழ் கொண்ட காதல் குழந்தையை எந்த சூழலிலும் வேறு யாருக்கேனும் நான் கொடுத்து விடாமல் இருக்க வேண்டும் என்பதில் நானும் கற்புக்ரசனாகத்தான் பெண்ணே இருக்கிறேன்...///

...அடடா.. இந்த வார்த்தை அமைப்பே ஒரு கவிதை போல இருக்குங்க. இப்படி ஒரு காதலன் கிடைக்க அப்பெண் தவம் செய்திருக்க வேண்டும்...! :)


///அது எப்போதும் உன்னை பற்றிய அதிர்வுகளை எனக்குள் சுகமாக பரப்பிக் கொண்டே இருக்கிறது.///

...பரப்பி, நிறைந்து கிடக்கும் காதல் சுகமாய் தொடரட்டும்..! :)
ezhilan said…
கவிதை மனத்துடன் கூடிய அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
வரிக்கு வரி காதல் வடிகிறது. அற்புதமான எழுத்து நடை. சகோதரி ஆனந்தி சொன்னது போல் நிரம்பிக்கிடக்கும் காதல் சுகமாய் தொடரட்டும்.
காதலே சுவாசமாகக்...கட்டுரையில்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த