சற்றே ஒதுங்கி நில்லுங்கள்...
எம் ஏகாந்தக் கனவுகளே....!
நிரந்தரமாய் ஓய்வெடுங்கள்
புத்தி உலுக்கும் மாயைகளே...!
நிஜத்தில் எம் முன்...
ஒரு களம் உண்டு...
அங்கே எம் தலை கொய்யும்
தீரத்துடன் சுடும் அக்னியாய்
பல உண்மைகளுமுண்டு...
தூர நில்லுங்கள் வார்த்தைகளே
அவசரமாய் தாளிட்டுக் கொள்ளுங்கள்
எம் எழுதுகோல்களே..
ஏகாந்த உணர்விற்கு என்னை
எடுத்துச் செல்லாதீர் எம் கனவுகளே
என்னை கொஞ்சம்
எதார்த்ததில் நகர விடுங்கள்..!
முழு நிலவினை பார்க்காதீர்
எம் கண்களே...
சுவாசம் நிரப்ப கொஞ்சம்
பிராணன் கொடுத்து
என் மேனி தொடாமல்
ஒதுங்கிச் செல் காற்றே
நான் என் நிதர்சன
போர்க்களத்தில் வாள் வீச வேண்டும்!
சிலாகித்து சிலாகித்து
புல்லரித்து போன உடலைத்
தவிர என்ன கொடுத்து விட்டாய்
மழையே நீ?
நினைவுகளை புரட்டிப் போட்டு
கனவுப் பக்கங்களில்
குதிரையேறி உலகை வலம்
வரச் செய்ததில் என்ன
நிதர்சனத்தைப் படைத்து விட்டாய்
எம் நினைவுகளே...!
என்னை மறந்தே போ..
என் காதலே...!
மயக்கத்தைக் கொடுத்து
தனிமையில் பல நினைவுகள் கொடுத்து
உன்னால் விளைந்தது
சில, பல கவிதைகளும்
உறவென்ற சில சுமைகளும்தானே...
நிஜம் சுட்டெரிக்கும் பொழுதில்
உடன் வரா நீ...
எனைவிட்டு நகர்ந்தே நில்
எப்போதும்..!
என் வியர்வையில்...
நான் குளிக்கிறேன்...
சூட்டில் என் பாதங்களுக்கு
வலுவூட்டுகிறேன்...!
என் இரப்பை சுருங்கிக் கிடக்கையில்
புத்தி எப்படி சிறகு விரிக்கும்...?
அதனால்...
சற்றே ஒதுங்கி நில்லுங்கள்...
எம் ஏகாந்தக் கனவுகளே....!
நிரந்தரமாய் ஓய்வெடுங்கள்
புத்தி உலுக்கும் மாயைகளே...!
நிஜத்தில் எம் முன்...
ஒரு களம் உண்டு...
அங்கே எம் தலை கொய்யும்
தீரத்துடன் சுடும் அக்னியாய்
பல உண்மைகளுமுண்டு...
தேவா. S
Comments