Skip to main content

வார்த்தைகளற்ற மொழிகள்!


















மொழி - I


மூச்சுக் காற்றின் ஓசை
கேட்கும் தருணங்கள்;
காதோரம் காற்று சொல்லிச்
செல்லும் ரகசியத்தின் கூச்சங்கள்;
கடும் காய்ச்சல் ஓய்ந்து
போன தினத்தின் அயற்சியான
எண்ணமற்ற நினைவுகள்;
விடியலில் எழுந்து மீண்டும்
போர்வை போர்த்திக் கொண்டு
உறங்கத் தொடங்கும் அதிகாலை
பகுதி விழிப்பு நிலையின் ஓரங்கள்;
கூச்சலற்று தனித்தமரும்
தருணங்கள் கொடுக்கும் ஞானங்கள்;

அவள் விழிகளிலிருந்து புறப்பட்டு
என் விழி சேர்கையில் காதலாய்
உருமாறி சிறகு முளைக்க வைக்கும்
பார்வை வீச்சுக்களின் தாக்கங்கள்;
நிலை குலைத்துப் போடும் வாழ்க்கையின்
வலிகள் அழுந்தப் பதிக்கும் தடங்கள்;
கெட்ட சொப்னங்கள் கிழித்து
தாயின் மடி தேடி எழுந்து
கண்ணீரோடு நெஞ்சு கட்டிக் கொண்டு
பால்யத்தை கனவு காணும் இரவுகள்;
லெளகீக துரத்தல்களில் பணத்திற்காய்
பிசாசாய் வேலை செய்யும்
அலுவலக அயற்சிகள் ஏற்றி வைக்கும்
மனச் சுமைகள்; மூளை அழுத்தங்கள்.....

என்று

என் அனுபவித்தல்களின் ஆழங்களில்
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!

***

மொழி - II

கடந்து போன
ரயிலொன்றின்
தூரத்து சத்தம் சுமந்து
வந்த காற்று..
விட்டுச் செல்கிறது
அடர்த்தியான நிசப்தத்தை!

வெறித்த விழிகளில்
வழிந்தோடும்
தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!


தேவா. S


Comments

என் அனுபவித்தல்களின் ஆழங்களில்
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!


தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!

இரண்டு கவிதைகளையுமே முடித்த விதம் மிகவும் பிடித்திருந்தது!
இரண்டும் அருமை....

இரண்டாவது ரசிக்க வைத்த்து.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த