Skip to main content

வார்த்தைகளற்ற மொழிகள்!


















மொழி - I


மூச்சுக் காற்றின் ஓசை
கேட்கும் தருணங்கள்;
காதோரம் காற்று சொல்லிச்
செல்லும் ரகசியத்தின் கூச்சங்கள்;
கடும் காய்ச்சல் ஓய்ந்து
போன தினத்தின் அயற்சியான
எண்ணமற்ற நினைவுகள்;
விடியலில் எழுந்து மீண்டும்
போர்வை போர்த்திக் கொண்டு
உறங்கத் தொடங்கும் அதிகாலை
பகுதி விழிப்பு நிலையின் ஓரங்கள்;
கூச்சலற்று தனித்தமரும்
தருணங்கள் கொடுக்கும் ஞானங்கள்;

அவள் விழிகளிலிருந்து புறப்பட்டு
என் விழி சேர்கையில் காதலாய்
உருமாறி சிறகு முளைக்க வைக்கும்
பார்வை வீச்சுக்களின் தாக்கங்கள்;
நிலை குலைத்துப் போடும் வாழ்க்கையின்
வலிகள் அழுந்தப் பதிக்கும் தடங்கள்;
கெட்ட சொப்னங்கள் கிழித்து
தாயின் மடி தேடி எழுந்து
கண்ணீரோடு நெஞ்சு கட்டிக் கொண்டு
பால்யத்தை கனவு காணும் இரவுகள்;
லெளகீக துரத்தல்களில் பணத்திற்காய்
பிசாசாய் வேலை செய்யும்
அலுவலக அயற்சிகள் ஏற்றி வைக்கும்
மனச் சுமைகள்; மூளை அழுத்தங்கள்.....

என்று

என் அனுபவித்தல்களின் ஆழங்களில்
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!

***

மொழி - II

கடந்து போன
ரயிலொன்றின்
தூரத்து சத்தம் சுமந்து
வந்த காற்று..
விட்டுச் செல்கிறது
அடர்த்தியான நிசப்தத்தை!

வெறித்த விழிகளில்
வழிந்தோடும்
தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!


தேவா. S


Comments

என் அனுபவித்தல்களின் ஆழங்களில்
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!


தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!

இரண்டு கவிதைகளையுமே முடித்த விதம் மிகவும் பிடித்திருந்தது!
இரண்டும் அருமை....

இரண்டாவது ரசிக்க வைத்த்து.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...