மொழி - I
மூச்சுக் காற்றின் ஓசை
கேட்கும் தருணங்கள்;
காதோரம் காற்று சொல்லிச்
செல்லும் ரகசியத்தின் கூச்சங்கள்;
கடும் காய்ச்சல் ஓய்ந்து
போன தினத்தின் அயற்சியான
எண்ணமற்ற நினைவுகள்;
விடியலில் எழுந்து மீண்டும்
போர்வை போர்த்திக் கொண்டு
உறங்கத் தொடங்கும் அதிகாலை
பகுதி விழிப்பு நிலையின் ஓரங்கள்;
கூச்சலற்று தனித்தமரும்
தருணங்கள் கொடுக்கும் ஞானங்கள்;
அவள் விழிகளிலிருந்து புறப்பட்டு
என் விழி சேர்கையில் காதலாய்
உருமாறி சிறகு முளைக்க வைக்கும்
பார்வை வீச்சுக்களின் தாக்கங்கள்;
நிலை குலைத்துப் போடும் வாழ்க்கையின்
வலிகள் அழுந்தப் பதிக்கும் தடங்கள்;
கெட்ட சொப்னங்கள் கிழித்து
தாயின் மடி தேடி எழுந்து
கண்ணீரோடு நெஞ்சு கட்டிக் கொண்டு
பால்யத்தை கனவு காணும் இரவுகள்;
லெளகீக துரத்தல்களில் பணத்திற்காய்
பிசாசாய் வேலை செய்யும்
அலுவலக அயற்சிகள் ஏற்றி வைக்கும்
மனச் சுமைகள்; மூளை அழுத்தங்கள்.....
என்று
என் அனுபவித்தல்களின் ஆழங்களில்
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!
***
மொழி - II
கடந்து போன
ரயிலொன்றின்
தூரத்து சத்தம் சுமந்து
வந்த காற்று..
விட்டுச் செல்கிறது
அடர்த்தியான நிசப்தத்தை!
வெறித்த விழிகளில்
வழிந்தோடும்
தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!
தேவா. S
Comments
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!
தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!
இரண்டு கவிதைகளையுமே முடித்த விதம் மிகவும் பிடித்திருந்தது!
இரண்டாவது ரசிக்க வைத்த்து.