Skip to main content

வழிப்போக்கனின்...வழியில்!



















நிலவின் அழகில் தடுமாறி...
தளும்பி கிறங்கிக் கிடந்த...
ஒரு குளக்கரை இராத்திரியின்..
நிசப்த நிமிடங்களுக்குள் நான்
ஊறியே கிடந்தேன்...!

மொழிகளின்றி இரைச்சலாய்
மெளனத்தை பகிர்ந்து கொண்டிருந்த
தூரத்து மலைகளை
ஒற்றிக் எடுத்துக் கொண்டிருந்த
வாடைக் காற்றின் ஓரத்தில்
ஒட்டிக் கொண்டு பறந்த
ஒற்றைக் குயிலின் சப்தம்
என் காதுகளை தடவிச் செல்கையில்
கிறங்கிக் கிடந்த என் விழிகளை
அடைத்து மூடி எங்கோ
ஒரு கனவு வெளிக்கு
இழுத்துச் செல்ல காத்திருந்த
இமைகளை மெல்ல பிரித்தெடுத்து
மீண்டும் மூழ்குகிறேன்...
அந்த மோன நிலைக்குள்...!

கேட்கவும் சொல்லவும்
யாருமற்று...
தேவைகள் எல்லாம்
தொலைந்து போன
பூமியின் அந்த சொர்க்க
இராத்திரியின் நிமிடங்களில்
மானுட ஜனித்தலின்
அர்த்தங்களை எல்லாம்
கை குவித்து நீர்பருகும்
ஒரு தாகக்காரனாய்...
விழி குவித்து காட்சிகளாய்...
பருகிக் கொண்டிருந்தேன்..!

சந்தோசங்களின் உச்சங்களுக்கு
துணை தேவையில்லை...,
சரித்திரத்தின் பக்கங்களுக்குத்தான்
நிகழ்வுகளின் அழுத்தங்களும்
மனிதர்களின் நகர்வுகளும்
அவசியமாகின்றன...!

கருக் கூடி ஜனிக்கையில்...
உரு மறைந்து மரிக்கையில்...
அற்றுப் போகும் வாழ்க்கையில்
இடையில் துளிர்க்கும்..
சங்கடங்களை எல்லாம்
வாழ்க்கையென்று கூறும்
மானுடர் விட்டு
நான் தூரமாய் நகர்கிறேன்...!

எட்டிய வரை வானமுண்டு
கிட்டிய வரை வாழ்க்கை உண்டு
தொட்டுத் தழுவிச் செல்ல
தென்றல் உண்டு...
ரகசியம் பேசிச் செல்ல
படர்ந்து கிடக்கும் பூமியின்
அடர்ந்த பக்கங்களுமுண்டு...!

விடியலில் சூரியன் வரும்
மனமில்லாத மேகங்கள் வரும்...
பறப்பன ஊர்வன எல்லாம்
என்னைக் கடந்து செல்லும்...
பசிக்கையில் கிடைப்பதை
புசிக்கையில் மறந்தே போகும்
அந்த உடலின் தேவை...!

மானுடரில்லா வாழ்க்கையில்
யாருமற்ற நினைவுகளில்
என் இருத்தலின் லயித்தலில்
பிரபஞ்ச நகர்தலின்
தாளத்தில் தப்பாமல்
ஆடும் சிவ தாண்டவத்திற்கு
உடலெதற்கு? மனமெதற்கு....
மக்கள்தான் எனக்கெதற்கு...
நானே நானாய்.....
ஒரு வழிப்போக்கனாய் நகர்கிறேன்..
நானே யாவுமாகிறேன்...!

தேவா. S


Comments

வினோ said…
/ எட்டிய வரை வானமுண்டு
கிட்டிய வரை வாழ்க்கை உண்டு
தொட்டுத் தழுவிச் செல்ல /

இந்த மாதிரி கவிதைகளும் உண்டு...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...