Skip to main content

ரஜினி என்னும் வசீகரம்...!



















என் அன்புள்ள ரஜினி,

காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. எந்த கணத்தில் என் வாழ்க்கையினுள் நீ நுழைந்தாய் என்று இது வரை என்னால் கணக்குகள் கூட்டி அறிய முடியவில்லை. சுவாசத்தைப் போல என்னுள் நீ நுழைந்தாய் என்பது மட்டும் உண்மை. ஏதோ ஒரு உன் சினிமாவை பால்யத்தில் நான் கண்டிருக்கலாம், அப்போது உன் வசீகரத்தின் வல்லமை என்னுள் நுழைந்திருக்கலாம். எதைச் சொல்ல ரஜினி ? உன்னிடம் எனக்கு என்ன பிடிக்குமென்று....

மிகச் சிறிய கண்கள்தான் அதில் இவ்வளவு வசீகரம் இருக்கமுடியுமா என்ன? அன்பையும், கோபத்தையும், ஆக்ரோஷத்தையும், காதலையும், அந்த இருவிழிகளுக்குள் கணத்துக்கு கணம் நீ கொண்டு வருவாயே...? எல்லோருக்கும் கண்களையும்... உனக்கு மட்டும் நெருப்பையும் வைத்து படைத்து விட்டானா இறைவன் என்று பல முறை நான் ஆச்சர்யப்பட்டதும் உண்டு.

எப்படித்தான் வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது நீ நடித்த நடிப்பையும்.....நடந்த நடையையும்....!

ரஜினி.....உனது மறுபெயர் அட்டிட்யூட் எனப்படும் மனப்பாங்கு. உன்னை வெறுமனே ஒரு நடிகனாய் உன் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று இந்த உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது......அல்ல...ரஜினி அல்ல...

உன் வாழ்க்கையும், நீ சென்ற உயரமும், உன்னை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு உத்வேகம், வாழ்க்கையின் உயரத்தை தொட உள்ளுக்குள் இருண்டு கிடக்கும் ஒவ்வொரு மனதிற்கும் ஏற்றி வைக்கும் வெளிச்சம். சினிமா என்பது ஒரு வசீகரம் அந்த வசீகரத்தின் மூலம் உன்னை ரசித்தவர்களுக்கு எல்லாம் ஒரு உற்சாக உள்ளம் வெகு எளிதாக புகுந்தது என்பதை எப்படி மறுக்க ரஜினி...?

எது இருக்கிறதோ அதை நீ அழகாக செய்தாய், உலகம் உன்னைச் சுற்றி சுழன்றது. வார்த்தைகளை யாரோ கோர்த்துக் கொடுக்க அதை நீ உச்சரிப்பாய்...உன் ரசிகர் கூட்டம் நீ உச்சரித்த வார்த்தைகளை ஓராயிரம் முறை திரும்ப திரும்ப உச்சரித்து ஒரு மந்திர உச்சாடனமே நடத்தும்....!

வெள்ளை நாயகர்கள் வெள்ளித்திரையில் வெற்றி வாகைகள் சூடிய போது கறுப்பு மனிதர்களுக்கு எல்லாம் கொஞ்சம் அல்ல நிறையவே மனதில் கஷ்டங்களோடு நாமெல்லாம் அப்படி வர முடியுமா என்ற கனவு மட்டும் இல்லை ரஜினி....அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையும் கூடவே இருக்கத்தான் செய்தது......

நீ சினிமாவுக்குள் வரும் வரை.....!!!!!

நீ திரைக்குள் வந்தாய் வெண்மை இருண்டது.....! வெள்ளையாய் இருந்த மனிதர்கள் நானும் ரஜினி மாதிரி கருப்பாய் ஆக முடியாதா என்று புலம்ப ஆரம்பித்தார்கள். கருப்பு என்னும் நிறம் அன்று ஏறியது அரியணையில்.....நீ சராசரியை சாய்த்துப் போட்ட சரித்திர புருசன் என்பதை நீ ஒத்துக் கொள்ளமாட்டாய்...எங்களைப் போன்ற ரசிகர்களையும் சொல்ல விடமாட்டாய்...நீ எப்போதும் சிகரம்தான் ரஜினி....!

முப்பது நாள் படம் சேர்ந்தாற் போல ஓடி விட்டால் முதலமைச்சர் கனவு காணும் தமிழ் சினிமா உலகமே உன்னைப் பார்த்து மூர்ச்சையாகித்தான் நிற்கிறது. நீ......ஒரு வியாபார நடிகன் என்று எல்லோரும் சொன்னாலும், நீ எத்தனையோ மனிதர்களுக்கு வாழ்க்கை கொடுத்த கடவுள் என்றுதான் நாங்கள் சொல்வோம்....

படத்தை எடுத்த தயாரிப்பாளர், டைரக்டர் மட்டுமல்ல...தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் மனிதன் முதல் போஸ்டர் ஒட்டும் வரை....கட் அவுட் வைப்பவன், பேனர் வைப்பவன் என்று எல்லோரின் வாழ்க்கைக்கும் நீ ஒரு வரப்பிரசாதி என்பதை நீ அறிவாயா ரஜினி..! நீ அறிந்தாலும் அதை ஒத்துக் கொள்ள மாட்டாய்....நீங்கள் படம் பார்க்கிறீர்கள் நான் உயர்ந்தேன் என்று சொல்லிவிட்டுப் போக உனக்கு மட்டும்தான் தெரியும் ரஜினி....

நீ அரசியலுக்கு வந்திருக்கலாம் என்று உன்னைச் சுற்றியிருந்த கோடாணு கோடி பேர் ஆசை பட்ட போதிலும்,நீ அதையும் அனாயாசமாகத்தான் தாண்டி வந்தாய்.....நீ அரசியலுக்கு வரவில்லை என்றவுடன் உன்னை விட்டு நகர்ந்தா போய்விட்டது உன் ரசிகர் கூட்டம்...? இல்லையே....ஒவ்வொரு ரஜினி ரசிகனும் இடைப்பட்ட வயதில் கண்டிப்பாய் உனக்கு ரசிகனாய் ஆகியிருக்க மாட்டான்...அப்படி ஆகி இருந்தால் அவன் உனக்கு ரசிகனாயிருக்கமாட்டான்....

உன்னை ரசிக்கும் அத்தனை கோடி பேரும் சிறுவயதில் இருந்து உனக்கு ரசிகர்கள் ரஜினி...! நீ அரசியலுக்கு வா....வராமல் போ...அதுவெல்லாம் இரண்டாம் பட்சம்...உன் ரசிகன் உன் ரசிகன் தான்..! உன்னை ஆதரித்தும் விமர்சித்தும் பல பேரின் கல்லாக்கள் களை கட்டியிருக்கிறது ரஜினி. உனக்கு பிடிக்கும் என்பதைப் பார்த்து பல கடவுள்கள் எங்களுக்குப் பரிட்சையப்பட்டுப் போனார்கள்....பல வழிமுறைகள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போனது...

நீ இமயமலைக்குச் சென்றாய்....கோடாணு கோடி ரசிகர்கள் இமயமலையை நோக்கி திரும்பினார்கள். நீ தியானம் என்று உச்சரித்தாய்...உன் ரசிகன் தியானம் என்றால் என்ன என்று தேடி ஓடினான்....! எனக்காக வந்து வேலை செய் என்று ஒரு நாளாவது நீ உன் ரசிகனைக் கேட்டு இருக்கிறாயா.....? இல்லையே.....உன் பிறந்த நாளுக்கு கூட வரவேண்டாம் உங்கள் வேலைகளை செவ்வனே செய்யுங்கள்....உங்கள் தாய் தகப்பனை பாருங்கள் என்றுதானே சொல்லியிருக்கிறாய்....

நான் நடிகன், நடிக்கிறேன் அவ்வளவுதான் எனது தெளிவுகளை அவ்வப்போது நான் கூறுவேன்..உங்களுக்குப் பிடித்து இருந்தால் செய்யுங்கள் என்றுதான் நீ அடிக்கடி கூறுவாய். வாழ்க்கையின் ஓட்டத்தில் நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாது... என்று நீ அடிக்கடி சொல்வாய்....உலகம் குழம்பும் ஆனால் அதுதான் உண்மை என்று தெரியாமல் புலம்பும். நாளை எதுவும் நடக்கலாம்...என்று நீ கூறுவது சத்திய வார்த்தை என்று உன்னை உயிராய் நேசிக்கும் எங்களைப் போன்ற ரசிகர்களுக்குத் தெரியும்.

வாழ்கையில் ஜனனம், மரணம் என்ற இரண்டும் நியதி. உனக்கு உடல் நலன் சரியில்லை என்றவுடன் ஒரு சினிமா நடிகன், மற்றும் ரசிகனுக்கும் உள்ள உறவையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு அழுத்த ஒரு நாளாவது உனக்காக வருந்தாமல், நீ நலம் பெற வேண்டும் என்று எண்ணாமல் ஒரு ரசிகன் கூட இருந்திருக்க முடியாது.....வெறும் சினிமா என்னும் செல்லுலாய்டு தாண்டி.....எல்லோரின் மனதிலும் இரத்தமும் சதையுமாய் நிறைந்தவன் நீ....!

அடிக்கடி உன்னை விமர்சிப்பார்கள்...ஏதேதோ சொல்லி! ஆனால் அவை எல்லாம் உன்னை விமர்சிக்கும் சக்தி அல்ல ரஜினி...., அப்படி விமர்சித்து விமர்சித்து அவர்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் யுத்தி....! நீ அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்றில்லை ரஜினி..ஆனால் ஒரு வேளை நீ வந்தாலும் அன்றும் உன் பின் தான் நாங்கள் அணிவகுத்து நிற்போம்....!

உனக்கு 62 வது பிறந்தநாள்....!!! கோடாணு கோடி ரசிகர்கள் ஏதேதோ செய்து கொண்டாடி வருகிறார்கள்...! ஏதேதோ விழாக்கள்.....பட்டி மன்றங்கள்.....தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்..தலைவர்கள் வாழ்த்துக்கள்....! தமிழ்நாடு திமிறிக் கொண்டு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது...உனக்கு வாழ்த்துச் சொல்ல....

நீயோ எங்கோ ஒரு மூலையில் அமைதியாய் இந்த நாளையும் கடந்து போய்க் கொண்டிருப்பாய்....! நீ என்ன செய்தாய் எங்களுக்கு என்று ஒரு கூட்டம் கேள்விகள் கேட்கும் அவர்களுக்கு எல்லாம் தெரியாது சூட்சுமமாய்....என்ன என்ன மாற்றங்கள் நீ செய்தாய் என்று...! அது மட்டுமல்ல ரஜினி நீ செய்யும் உதவிகளையும் அருட் கொடைகளையும் சொல்லிவிட்டா நீ செய்கிறாய்.....யாரிடமும் சொல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டுத்தானே நீ செய்கிறாய்,....

எது எப்படியோ ரஜினி, இந்த உன் பிறந்த நாளுக்கு என்னால் முடிந்தவரை எழுத்துக்களை உனக்காக கோர்த்து இருக்கிறேன்...வாழ்த்துக்களாக...அவ்வளவுதான்....

மற்றபடி உன்னை தெய்வம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்......ஆனால் நீ ஒரு மிகச்சிறந்த மனிதன் என்று மார்தட்டிச் சொல்வேன்.....!

வாழ்த்துக்கள் ரஜினி....!!!!!

ப்ரியமுள்ள ஒரு
ரசிகன்

தேவா. S

பின்குறிப்பு: அன்பின் மிகுதியால் ஒருமையில் எழுத வேண்டியதாயிற்று...!



Comments

Anonymous said…
Super post. Happy birthday rajini

By
Annamalai murugan
Rajnikanth fan
Bangalore

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல