Skip to main content

காட்டுப் பூக்கள்...!



















சுத்த சரீரங்களை
சுரமாகக் கொண்ட
வாசகன் விரும்பும்
மெல்லிசையல்ல எமது எழுத்துக்கள்...!
அவை கர்ண கொடூரமான
கரடு முரடுகளைச் சுமந்த
கேட்கவொண்ணா சப்தங்களால் ஆனா
முரட்டு ராட்சசனின் கர்ஜனைகள்!

நளினங்களை கூட்டிக் கழித்து
விழிகளுக்கு விருந்து கொடுக்கும்
ஓவியங்களை எப்போதும்
நாம் சமைப்பதில்லை....,
மாறாக...
புலன்களைக் கடந்த
புத்திகளுக்குள் ஜனிக்கும்
கோணல் மாணல் கோடுகளை
கோரமாய் வெகுண்டெழச் செய்து
விரும்பத்தகா பிரமாண்டங்களாக்கவே
முயன்று கொண்டிருக்கிறோம்..!

அழகியலைப் பட்டியலிடும்
கூட்டத்தில் யாம் எப்போதும்
வரிசையில் நிற்பதும் கிடையாது
உயரங்களில் இருப்பதாலேயே
எல்லோரையும் அண்ணாந்து
பார்ப்பதும் கிடையாது...!

வாழ்க்கையை எழுத்தாக்கையில்
வசீகரம் எதற்கு...
வசீகரமாகவே எல்லாம் இருந்து விட்டால்
வாழ்க்கைதான் எதற்கு...?

ஆமாம்...

இது கரடு முரடான பாதைதான்
காட்டருவி கொட்டும்
கடக்க முடியா வழிமுறைதான்
ஆனால் மறுத்து நகர்ந்தாலும்
இயற்கை என்பது இயல்புதானே?
இல்லை என்றாலும்
இருப்பு என்பது நிஜம்தானே...?

அதனால்....

அக்னியில் கோடுகள் கிழித்து
முற்கள் தைத்த வார்த்தைகளால்
எமது முதுகெலும்பின் நீட்சிகளை
உடைத்து எப்போதும்
இராட்சச வடிவங்களில்
வார்த்தைகளை கோர்க்கிறோம்...
காட்டுப்பூக்கள் எல்லாம்
என்ன கடவுளுக்காகவா பிறக்கின்றன...?
அவை பூக்கின்றன.... மடிகின்றன...
அவ்வளவே...!


தேவா. S




Comments

ரசிப்பவர் யாரும் இல்லை என்றாலும் அழகழகாய் பூக்கும் "காட்டுப் பூக்களை" கவிதைக்கு தலைப்பாக்கியது இன்னும் அழகு
Unknown said…
'காட்டுப்பூக்கள் ' நல்ல தலைப்பூ
ஹேமா said…
தேவா...அருமை அழகு.உங்கள் தளத்தில் பூக்கும் பூக்கள் எல்லாமே எப்போதும் அழகு.சிலசமயம் முட்களோடும் வாசனையோடும் வண்ணங்கள் மாறி மாறி !
காட்டு பூக்கள் மனம் வீசுகிறது.
Anonymous said…
simply super
//அக்னியில் கோடுகள் கிழித்து//

அக்னிகுஞ்சு தம்பி நீங்க :)
dheva said…
ருஃபினா, ஹேமா, சாய் பிரசாத், கருணாகரசு & அட்சயா... - நன்றிகள்!

கிருஷ்ணா @ உங்க கூட சேர்ந்துதான் அண்ணே!
///கிருஷ்ணா @ உங்க கூட சேர்ந்துதான் அண்ணே! ///

:))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...