Skip to main content

உன்னால் முடியும் தம்பி....!



















ஒரு கட்டுரை எழுதி அதன் தாக்கம் மனசு முழுக்க இருக்கும் போது டக்குன்னு இன்னொரு டாப்பிக்குள்ள தாவிப் போறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. கொஞ்சமா பொட்டுக் கடலை வாங்கி வீட்டு வாசல்ல உட்கார்ந்து சாப்டாலும் அனுபவிச்சு சாப்பிடணும்.... பரக்கா வெட்டி மாதிரி லபக் லபக்க்னு அள்ளி வாய்ல போட்டுட்டும் போகலாம்... ஆனா அனுபவித்தல் அப்டீன்றதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யமே இருக்கு...

சந்தோசத்தை மட்டும் அனுபவிக்கணும் அப்டீன்னு ஒரு வரைமுறை எல்லாம் கிடையாதுங்க. கஷ்டத்தைக் கூட அணு அணுவா அனுபவிச்சுக்கிட்டே ஒரு சிங்கம் மாதிரி வரப்போற பிரச்சினைகளை எதிர் நோக்கி நேருக்கு நேரா.......அதை நாம சந்திக்கிற இடமே ரொம்ப தில்லான இடம்தான். வலிக்கும்தான்.... ஆனாலும்....பரவாயில்லைன்னு சொல்லிட்டு வா....பிரச்சினையே வா....நான் ரெடின்னு பிடறி மயிர் சிலிர்க்க நிக்கணும்....

கல்லூரி முடிச்சு அடுத்த கட்டம் அதாவது ஒரு வேலைக்கு போறதுக்கு முன் இருக்கும் காலங்கள் எவ்வளவு வலியானதுன்னு அதை அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும். நூறு பேருல இருபது பேர் நல்லா படிச்சு மெரிட்ல மார்க் வாங்கி சப்ஜக்ட் நாலேஜோட வேலைக்கு சேர்ந்துடுறாங்கன்றத ஒரு உதாரணமா வச்சுக்கிட்டு மிச்ச இருக்குற 80 பேர்களை பத்தி கவலைப்படாம இருந்துடாதீங்க....

அதுவும் என்னைய மாதிரி கிராமப்புற மாணவர்கள் பிளஸ் டூ வரைக்கும் தமிழ் மீடியம் படிச்சுட்டு, கிரமாப்புறத்துல இருக்குற ஒரு கல்லூரிக்குள்ள அடி எடுத்து வச்சு....நானும் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்டான்னு திமிரா ஒரு டெஸ்க்ல உட்கார்ந்து தலை நிமிர்ந்து பார்க்கும் போதுதான் எதித்தாப்ல புரபசர் ஆங்கிலத்திலேயே காச் மூச்சுனு ஒரு மாதிரியான தமிங்கிலீஸ்ல பாடம் நடத்தி அப்புறமா ஆங்கிலத்துல நோட்ஸ் கொடுக்கும் போது அதை எழுதக் கூட கை வராம தடுமாறி நிக்க வேண்டியிருக்கும்....! எழுதும் போதே ஒண்ணும் புரியாம இருக்கும் போது அதை புரிஞ்சு எப்டி படிக்கிறது?

பொட்ட தட்டுன்னு சொல்லுவாங்கள்ள அது மாதிரி பொட்டை தட்டு தட்டி வார்த்தை வார்த்தையா மனசுல வச்சி, பக்கத்துல இருக்குற பேப்பர பாத்து காப்பி அடிச்சு, பிராக்டிகல்ல பாஸ் பண்ண டிப்பார்ட்மெண்ட் எச்.ஓ.டில இருந்து அட்டென்டர் வரைக்கும் பயந்து பயந்து வழிஞ்சு வழிஞ்சு ஒரு வழியா பட்டப் படிப்பை முடிச்சுட்டு வெளில வந்தா...

மிடில் கிளாஸ் மாணவர்களுக்கு எதிரா காலம் பொருளாதாரத் தேவையா விஸ்வரூபமெடுத்து நிற்கும். வீட்ல இருக்க பெரியவங்க எல்லாம் ஏதாச்சும் ஒரு வேலை வெட்டிக்குப் போப்பான்னு சொல்லிடுவாங்க அப்டி அவுங்க சொல்றதுக்கு காரணம் பையன் டிகிரி படிச்சுட்டான்ல.... எம்புட்டோ கஷ்டப்பட்டு நாம படிக்க வச்சுட்டோம்னு ஒரு மலைப்பு அவுங்களுக்கு....

ஒரு கிராமப்புற மாணவனுக்கு இங்க ஆரம்பிக்குதுங்க வாழ்க்கையோட சவால்..! நல்ல நேரத்துக்கு சரியா வழிகாட்ட ஆள் இருந்தா சரி அடிச்சு பிடிச்சு அவன் ஏதோ ஒரு கரையை அடைஞ்சுடுவான். இல்லையின்னா ஏதோ ஒரு வேலையை பக்கத்துல இருக்குர கடை கண்ணியில சேந்து பாத்து அவன் படிச்ச படிப்பை எல்லாம் மாசம் வாங்கப் போற அந்த வருமானத்துக்கிட்ட அடகு வச்சுட்டு கேரியர் அப்டீன்ற தன்னோட வாழ்க்கைத் தரத்தையும் அப்புடியே பொசுக்கிக்கிடுவான்...! உதாரணமா என் கூட காலேஜ்ல படிச்ச பசங்க நிறைய பேரு ஒரு குறிப்பிட்ட வேலைகளையே தேடிக்கிட்டு ஒரு மட்டத்துக்குள்ளேயே ஒரு வட்டத்துல மாட்டிகிட பெரிய காரணமா இருந்தது என்னனு தெரியுங்களா?

நகரத்து வாழ்க்கையில் வந்து ஒரு பேப்பரை பார்த்து ஒரு வேலைக்கு அப்ளை பண்ணி இன்டர்வியூக்கு போயி அதுல ஜெயிச்சு மேல வர்ற அளவுக்கு அவனுக்கு தன்னம்பிக்கையை அவன் படிச்ச கிராமப்புற சூழலும், கல்லூரிகளும் கொடுக்காததும் ஒரு காரணம்... நகரத்துல இயங்கிக்கிட்டு இருக்குற கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தேவையான நுனிநாக்கு ஆங்கிலம் தெரியாததும் ஒரு காரணம்.

சென்னை மாதிரி ஊர்ல வளரக்கூடிய பிள்ளைகளின் சூழலும், பெற்றோர்களின் வசதியும் எப்டியோ அவர்களை ஒரு மாதிரியான சம கால வாழ்க்கைக்குப் பயிற்றுவித்து கொஞ்சம் தன்னம்பிக்கையாவே வச்சுதான் இருக்கு. கிராமப்புற கல்லூரியில படிச்சு முடிச்சுட்டு நகரத்துக்கு வர்ற பையன்கள் நகரத்துல இருக்குறவங்கள முதல்ல மனோதத்துவ ரீதியாவே எதிர் கொள்ள முடியறது கிடையாது.

இதுக்கு முக்கிய காரணமா எனக்கு ஆங்கிலம் சரியா பேச வராது அப்டீன்ற ஒரு குற்ற உணர்ச்சியும், படிச்சு வளரும் போதே வறுமையையும் வீட்டுச் சூழலையும் மனசுக்குள்ள ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுக்கிட்டு அந்த மனோநிலையிலேயே தங்களின் படிப்புக்களை முடிப்பதுன்ற மாதிரி காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ப்ரஷ் கேன்டிடேட்டா சென்னைக்கு வேலை தேடி வர்றவங்கள அவுங்கள மாதிரியே வேலை தேடி வந்து கொஞ்சம் கஷ்டம் நஷ்டம் பட்டு ஒரு வேலையில இருக்கவங்க ஆதரிச்சு தானே அவுங்களை மோட்டிவேட் செய்யணும்...? ஆனா பெரும்பாலும் அப்டிசெய்ய மாட்டாங்க,

....எவ்வளவு மட்டம் தட்டணுமோ அவ்வளவு மட்டம் தட்டி, அவுங்க கத்துக்கிட்ட ஆங்கில அறிவையும் நகரத்து பகட்டையும் வச்சுக்கிட்டு அவுங்க மேல பாய்வாங்க..., நீ ஏன் இது படிச்ச? அது படிச்சு இருக்கலாம்ல? ரொம்ப கஷ்டம்டா உனக்கு வேலைக்கிடைக்கிறதுன்னு எல்லாம் சொல்லி ஏற்கெனவெ நொந்து நூடுல்ஸா இருக்கவன இன்னும் டேமேஜ் பண்ணுவாங்க...

இந்த உலகத்துல ஜெயிச்சவங்க அத்தனை பேரும் தன்னை மாதிரியே இன்னொருத்தன் வர்றதுதான் வெற்றின்னு நினைச்சு அவுங்க என்ன வழிமுறைகளைப் பின்பற்றினாங்களோ அதையே அடுத்தவன் செய்யாமல் இருந்திருந்தா..... நீ வேஸ்ட்டுடான்னு ஒத்தை வார்த்தையில் சொல்லிட்டுப் போய்டுவாங்க. இப்டி சொல்றவங்களாச்சும் பரவாயில்லை ஒரு வகையில் சேத்துக் கிடலாம் ஆனா இன்னும் சில பேர் புதுசா வேலை தேடுறவங்க கிட்ட பேசக் கூட மாட்டாங்க, ஏதாச்சும் அறிவுரை சொல்லி நல்லதா வழிகாட்டிட்டா அவுங்க பேங்க் பேலன்ஸ் கொறைஞ்சு போயி அவுங்க கவுரமும் போயிடும் பாருங்க..

நான் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்ப, கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் படிச்சுட்டு சிங்கப்பூர்ல நல்ல வேலை பார்த்துகிட்டு இருந்த சொந்தக்கார புண்ணியவான் ஒருத்தர் எங்க அப்பாகிட்ட சொல்லி, ஒங்க பையனையும் சேத்து விடுங்க..... ஒழுங்கா கம்ப்யூட்டர் படிச்சு முன்னுக்கு வரட்டும்னு சொன்னதுக்காக என்னையை கொண்டு போய் தி.நகர்ல இருக்குற கம்ப்யூட்டர் சாப்ட்வேர் காலேஜ்ல பிஜிடிசிஏன்னு ஒரு கோர்ஸ் இருக்கு இதை படின்னு சேத்து விட்டுட்டாங்க...

கெமிஸ்ட்ரி படிச்ச கழுதை அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம அந்த ஏசி ரூமும், கூட படிக்கிற பட்டணத்து நாகரீக பொம்பளைப் புள்ளைகளையும் பெருசா நினைச்சுகிட்டு கம்ப்யூட்டர் படிக்க ஆரம்பிச்சுது.....! படிச்சு முடிச்சுருச்சு கழுதை என்ன பண்ணும் அடுத்து? கம்ப்யூட்டர் படிக்க சேத்து விட்டப்ப அது கேள்வி கேட்டு இருக்கணும்? இல்லை யாரச்சும் புத்தி சாலிங்க கேள்வி கேட்டு இருக்கணும்.... கெமிஸ்ட்ரில பட்டம் வாங்கினவன் ஏன் கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணனும்னு ......கேக்கலையே...கேக்கவும் தோணலையே!!!?

கம்ப்யூட்டர் கோர்ஸ்ல டிப்ளமோ வாங்கிட்டு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம சென்னை மெளன்ட்ரோட்ல வேலை தேடி அலைஞ்சு இருக்கேன்.! எத்தனையோ பேரு மட்டம் தட்டி பேசி இருப்பாங்க...? எத்தனை இன்டர்வியூல கம்யூனிகேசன் ஸ்கில் சரி இல்லைனு சொல்லி திரும்ப விரட்டி இருப்பாங்க....தெரியுமா?

திமிரா காலேஜ் முடிச்சுட்டு என்னைய மாதிரி வெளில வர்ற எல்லாப் பயலுகளையும் வாழ்க்கை சட்டைய பிடிச்சு தர தரன்னு இழுத்துட்டுதாங்க போகும்....! யாராச்சும் ஒருத்தன் இல்ல ரெண்டு பேரு கண்ணுக்கு எட்டுன தூரத்துல இருப்பாங்க அவுங்க நமக்கு ஆறுதலா பேசி மோட்டி வேட் பண்ணுவாங்க..அப்டி இருக்கவங்களை நாம சந்திக்கிறது கூட நம்ம லக்குதானுங்க...

உலகம் கைய மடக்கிக்கிட்டு நம்ம மொகரைக்கட்டையில குத்துறப்ப நாம நம்ம வீட்டை பாத்து அழுகமாட்டாம நின்னமுன்னா, வீடு சொல்லும் நீதான் டிகிரி படிச்சு இருக்கேல்ல.......அப்புறம் என்ன பயம்..? வேற என்னாத்த நீ படிச்சு கிழிச்ச? ஒனக்கு தண்டக்கருமாந்திரமாத்தான் நான் மூணு வருசமா அழுதிருக்கேனான்னு சொல்லும்....

நமக்கு பிடிச்சதை எதையும் செய்ய விடாம அவுங்களுக்குப் பிடிச்சதையா நமக்கு சொல்லிக் கொடுத்துட்டு.....நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வியும் கேப்பாங்க...! ஆக மொத்தம் எல்லா சூழலும் சேந்து நையப்புடைக்க....

சராசரியா ஒரு பி.ஏ, பி.எஸ்ஸி, பி.பி.ஏ, பிகாம் படிச்சுட்டு சென்னை மாதிரி ஊருகளுக்கு வர்ற கிராமப்புற பட்டதாரிகள் எல்லாம் திருவல்லிக்கேனியில ஏதாச்சும் ஒரு மான்சன்லயோ இல்லை தி.நகர்க்குள்ள ஏதாசு ஒரு வீட்டுல சைட் போர்சன்லயோ உக்காந்து கிட்டு ஹிண்டு பேப்பர்ல மார்க் பண்ணி பண்ணி ஒவ்வொரு இன்டர்வியுலயா போயி ....சாரி யுவர் கம்யூனிகேசன் ஸ்கில் ஹேஸ் டு பி இம்ப்ரூவ்ட்னு ஒரு பச்சை தமிழன் அங்க லாடு லபக்தாஸ்னு ஒரு போஸ்ட்ல ஒக்காந்து கிட்டு நம்மகிட்ட சொல்லி செம்படிச்சு திருப்பி விடுவான்....

காலக்கெரகம்தானே.....ஓரளவுக்கு இங்கிலீஷ் பேசுனா போதாதா துரைமாருகளா? இன்டர்வியூக்கு வர்ற பையன எப்டி மோல்ட் பண்ணலாம், அவன் புத்திசாலித்தனம் எப்டி இருக்கும்? எந்த ஊர்ல இருந்து வர்றான், அவனுக்கு கேப்பபிளிட்டி இருக்கான்னு எல்லாம் பாக்குறது கிடையாது. வெளிநாட்டுக்காரங்க வந்து போற இடங்களுக்கு ஆங்கிலம் தெரிஞ்சு இருக்கணும்னு ஒரு கட்டாயம் வச்சிக்கிடலாம் ஆனா....நம்மூர்ல இருக்க லண்டன்காரய்ங்க எல்லாம் நெல்லு அரைக்கிற மில்லுக்கு வேலைக்குப் போகணும்னா கூட.....ஸ்ட்ராங்க் கம்யூனிகேசன் ஸ்கில் வேணும்னு கேட்டுத்தொலைக்கிறாய்ங்க...

டெக்னிக்கலா படிச்சுட்டு அதுவும் ஐ.டில ஃபீல்ட்ல இருக்குற புள்ளைங்க எல்லாம் சீக்கிரமே சம்பாரிக்க வேற ஆரம்பிச்சு நல்ல நிலைக்கு டக்குனு போயி பீட்டர் மாமா, பீட்டர் மாமி ஆயிடுறாங்க... இவுங்களை பாத்து வேற நம்ம கிராமத்துப் புள்ளைங்க கடுமையா மெரண்டு போக ஆரம்பிக்குதுங்க... ஆரம்பத்துல மெரண்டு மெரண்டு தனக்குன்னு ஒரு பிளாட்பார்ம் கிடைச்ச உடனே இவுங்களூம் பீட்டர் மாமா ஆயிடுறாங்க....

ஆங்கிலம் என்பது அறிவு அல்ல அது ஒரு மொழி. சூழலின் அடிப்படையில், பழக்கத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற உண்மையை ஒவ்வொரு நிறுவனமும் உணர்ந்து அதற்காக இளைஞர்களை நிராகரித்தலை உடனே நிறுத்துதல் வேண்டும்.

நகரத்தில் படித்து, படித்த பெற்றோர்கள் மற்றும் விவராமான சூழலில் வளரும் பிள்ளைகளோடு போட்டி போட வரும் கிராமத்து இளைஞர்களை தொழில் நிறுவனம் நடத்துபவர்களும், கன்சல்டன்ஸி வைத்திருப்பவர்களும் பார்க்கும் கண்ணோட்டத்தில் மாறுபாடுகள் வேண்டும். ஒரு நகரத்து மாணவனோடு எந்த விதத்திலும் பொருத்திப் பார்த்து ஒரு சமமற்ற போட்டியை நடத்துதலை தவிர்க்க வேண்டும்.

நகர்ப்புற சூழலில் வாழும் பணக்கார யுவன்களூம் யுவதிகளும் தங்களின் வாழ்க்கை மிகவும் மேம்பட்டது என்ற ஒரு தலைக்கனத்தோடு தன்னோடு உடன் பயில வரும் அல்லது வேலை செய்யவரும் கிராமப்புற இளைஞர்களை அணுகும் போக்கை விட்டு விடத்தான் வேண்டும். எல்லாமே சுகமாய் எளிதாய் கிடைத்து நீங்கள் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறீர்கள்... ஆனால்

ஒரு கிராமப்புற மாணவன், வயலில் தன் தகப்பனுக்கு சோறு கொடுத்து விட்டு, வீட்டில் அம்மா பீய்ச்சிய பாலை பால் பண்ணையில் கொடுத்து விட்டு, வெறும் காலோடு ஓடி சோ கால்ட் நீங்கள் நாகரீகம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய வாழ்க்கை தளத்திற்கு வருகிறான் என்பதை உணருங்கள்.

ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலில் அரை குறை ஆங்கில அறிவோடு வேலைக்குச் சேர்ந்த என்னை அந்த பிரமாண்ட வரவேற்பரை பணி ஆரம்பத்தில் ஒரு ரவுடியாய் மிரட்டியது, உன் உச்சரிப்பு சரி இல்லை, உன் ஆங்கிலம் கேவலமாய் இருக்கிறது? நீ எந்த கான்வென்ட்டில் படித்தாய்? உன்னை யார் வேலைக்குச் சேர்த்தது? என்பது மட்டுமில்லாமல்....

யூ ஆர் நாட் பிட் பார் திஸ் ப்ரண்ட் ஆபிஸ் ஜாப்.......நாட் ஒன்லி திஸ்... அன்ட் தேர் இஸ் நோ அதர் ஜாப் அவைலபிள் இன் திஸ் ஹோட்டல்னு லாக் புக்கிலேயே எழுதி விட்டுச் சென்றது இந்த உலகம். காலத்தின் போக்கில் எல்லாம் மாறிப் போக அப்படி பேசியவர்களை எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக என் கண் முன்னாலேயே துரத்தப்பட்டார்கள். அறிவு என்பது நமது தெளிவேயன்றி அது ஒருக்காலமும் அகந்தை ஆகக்கூடாது...., அந்த தெளிவைக் கொண்டு நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் தெளிவைத்தான் காட்ட வேண்டும்.

வாழ்க்கையின் எல்லா காலக்கட்டங்களிலும் ஒருவருக்கு வழிகாட்டும் போது கர்வமற்று அதைச் செய்யுங்கள், தவறுகளை அன்பாய் சுட்டிக் காட்டுங்கள், இந்த பூமியில் எந்த மனிதரையும் காயப்படுத்தி விடாமல் கவனமாய் ஒரு விலை உயர்ந்த கண்ணாடிக் குடுவையைப் போல அவர்களைப் பாவியுங்கள்..

...என்று கேட்பதோடு மட்டுமில்லாமல் வேலை வாய்ப்புக்களுக்காய் நகரம் நோக்கி வரும் கிராமப்புற மாணவர்களை ஆங்கில அறிவில்லை என்று ஒதுக்கி விடாமல் அவர்களின் திறமை மற்றும் புரிந்து கொள் தன்மை, மற்றும் புத்திசாலித்தனம் போன்றவற்றின் அடிப்படையில் வணிக நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....என்ற வேண்டுகோளையும் இந்தக் கட்டுரை வைக்கிறது!

நாளைய இந்தியாவை ஊக்குவிப்புக்களால் உருவாக்குவோம்....!
தெளிவான சமுதாயத்தின் சரியான வழிகாட்டிகளாவோம்...!

எழுக எம் இளைய இந்தியா...!

தேவா. S

Comments

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரை.. ஆங்கில உச்சரிப்பை ஆதாரமாகக் கொண்டு.. அவர்களை அலைக்களிக்காமல்.. அவர்களிடத்து உள்ள ஆற்றலை கண்டு, அவர்கள் முன்னேற வழி செய்வீர்..ன்னு நீங்க முழங்கியிருக்கும் கட்டுரை அருமை.

பதிவியில் இருக்கும் பலரும் உற்று நோக்க வேண்டிய விஷயப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
சரியா சொன்னீங்க தேவா!! ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமேன்னு நிறைய பேரு நினைக்கறதில்லை. அடுத்தவங்களுக்கு சொல்லி புரிய வெக்கிற அளவு மொழிப் புலமை இருந்தா போதும். பதவியில் இருப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டால் நல்லா இருக்கும்.
வைகை said…
நைஸ் தேவா.. ஆரம்பத்துல என்னோட தடுமாற்றத்துக்கும் இதுதான் காரணம். இப்பவரை என்னோட கேரியர்னு பார்த்தா அது மறைந்துவிட்டது. ஆனாலும் விடாப்பிடியா எழுதுநின்னேன். எததனை பேருக்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகள் கிடைக்கும்? சொந்த விருப்பங்களை பொருளாதாரத்துகிட்ட அடகு வச்சிட்டு இன்னும் எததனை தலைமுறைகள் வரப்போகுதோ? கிராமத்துல கல்லூரி முடிச்சிட்டு முதன் முதலில் சென்னை வந்தப்ப நேர்முகத்தேர்வுல அவங்களோட ஆங்கில புலமைய காண்பிக்க என்னைப்போல கிராமத்து மாணவர்கள்தான் சோதனை எலிகள். ஏன்னா அவங்க தப்பா பேசினாலும் நமக்கு தெரியாது பாருங்க. ஆனாலும் அத விட்டு வெளில வந்தா மனசுல வரும் பாருங்க.. ஒரு தாழ்வு மனப்பான்மை, கழிவிரக்கம்.. இதையெல்லாம் சொல்லி ஆறுதல் படகூட தோள் இல்லாம.. எந்த கடைல சாப்பாடு ஒரு ரூபாய் கம்மியா இருக்கும்னு மனச உடனே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தனும். வாழ்க்கையோட கோரப்பற்களுக்கு முதலில் இரையாவது என்னமோ நம்மைப்போல கிராமத்து மாணவர்கள்தான். சூப்பர்ப் தேவா.. என்னோட பிளாஸ்பேக் பார்த்த மாதிரி இருந்தது.
Bibiliobibuli said…
நட்சத்திர வாழ்த்துக்கள் :)
dheva said…
ஆனந்தி @ நன்றிங்க...!
dheva said…
தெய்வ சுகந்தி..@ இந்த நிலை மாறித்தான் ஆகவேண்டும் ! நன்றிகள்!
dheva said…
வைகை @ உண்மைதான் வைகை. மிகைப்பட்ட கிராமப்புற மாணவர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

நன்றிகள்!
dheva said…
ரதி @ நன்றிகள் அக்கா!
///தி.நகர்ல இருக்குற கம்ப்யூட்டர் சாப்ட்வேர் காலேஜ்ல////

தி.நகர்ல இப்படி ஒரு காலெஜ்ஜா ?? :)

கிராமபுற வேலை வாய்ப்பை விரிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.....

அதற்கு பதிலாக கிராமம் குறுகி நகரம் தான் விரிவடைகிறது.......

நகரம் எங்கும் போட்டி அதன் பின் விளைவுகளாக இயலாமை,பொறமை,etc...

நல்ல பதிவு....வாழ்த்துக்கள் :)
Riyas said…
உங்கள் கட்டுரையிலே பிடித்தது அந்த தன்னம்பிக்கை வரிகள்தான்..

கட்டுரை பிரமாதம்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த