Skip to main content

எழுத்துக்களால் ஒரு போர்....!



















ஆழமான எண்ணங்களும், தீராத வேட்கைகளும் கருத்து வடிவத்தில் இருந்து வெளிப்பட்டு எழுத்தாகிறது, வாய்ப்புக்களின் அடிப்படையில் பேச்சாகவும் அது உருக்கொள்கிறது. சக்தி வடிவமான எழுத்துக்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தை வரலாறு எப்போதும் தகர்த்தெறிந்து கொண்டே தனது நகர்வினை ஆக்கப்பூர்வமான விளைவுகளாய் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

சமூகம் என்ற கட்டமைப்பில் சேவைகள் அல்லது வழிகாட்டுதல்கள் காலம், காலமாக பல்வேறு தரப்பட்ட சமூகச் சூழல்களில், பல பரிமாணங்களில் மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. சமூக இயங்கு நிலையில் அறிவூட்டும் மனிதர்கள் எல்லோருமே ஒரு மேல் தளத்தில் நின்று கொண்டு தனக்கு கீழிருக்கும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு போதனையைச் செய்வதையும், சமூக விழிப்புணர்வு மற்றும் சேவை என்ற பெயரில் புறத்தில் செயல்கள் செய்து, மனிதர்களே...! பின்பற்றுங்கள் என்று அறைகூவல் விடுப்பதையும் தனது வழமையாக கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி காலம் கடந்து நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம். அவலங்கள் தீர்ந்து விட்டதா? நாம் பேசிய வார்த்தைகள் எல்லாம் மனிதர்களுக்குப் புரிந்து விட்டதா? அன்பையும் சகிப்புத்தன்மையும் போதிக்கும் தேசங்கள் கொன்றழித்த மனித உயிர்கள் எத்தனை கோடிகள்?

பின்பற்று என்று சொன்னவன்...முதலில் பின்பற்றினானா?

அயலானை நேசி, அயலானை நேசி, என்று கூறி மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன புனிதனை பின்பற்றுகிறேன் என்று கூறிக் கொள்ளும் ஏகாதிபத்திய அமெரிக்காதான் இன்று உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முதல் பயங்கரவாதி என்பதை நீங்களும் நானும் மறுக்க முடியுமா? அன்பைப் போதித்த புத்தனையும், அகிம்சையைப் போதித்த மகாத்மாவையும் பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் இந்தியாவும், இலங்கையும் ஈழத்தில் போட்டிப் போட்டு அழித்த உயிர்கள் எத்தனை ஆயிரங்கள்...?

ஏன் இவர்கள் மன்னிக்கவும், மறக்கவும் அன்பைப் போதிக்கவும் அறியப் பெறாதவர்களா என்ன? தர்மம் என்று மானுடர்கள் கூறிக் கொள்வது யாதுமே தங்களின் வசதிகளைத்தானே அன்றி பொதுவான உண்மைகளை அல்ல...! ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மனிதனும் தங்களின் தர்மங்களை தாங்களே வரையறுத்துக் கொண்டு அவற்றுக்கு சட்டமென்ற பெயரிட்டுக் கொண்டு அவற்றை நிலை நாட்டவே முயன்று கொண்டிருக்கின்றன.

மனிதர்களிடம் கட்டளைகள் பிறப்பிப்பதும், இப்படி நீங்கள் இருக்க வேண்டும், அப்படி நீங்கள் இருக்க வேண்டும் என்று போதிப்பதற்குப் பெயர்தான் விழிப்புணர்வா? அல்லது மனிதர்களுக்கு அறிவுரைச் சொல்வதும் தன்னையே பின்பற்ற வேண்டும் என்பன போன்ற கண்ணுக்குத் தெரியாதா மனோவசியக் கட்டுக்களைக் கொண்டு கட்டுவதுதான் விழிப்புணர்வா..?

உண்மையிலேயே சமூகத்துக்கு சொல்லும் கருத்துக்களை முதல் நாம் பின்பற்றுகிறோமா?

...என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, எம்மைச் சுற்றி வாழ்க, ஒழிக கோசங்களும் நீங்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி செய்யக் கூடாது, இவர்தான் பின்பற்றப்பட வேண்டியவர், அறிவியல் உண்மை இது, ஆன்மீக உண்மை இது, இப்படியான பயன்பாடுகளை பின்பற்றுங்கள், அவர் தவறு செய்து விட்டார், இவர் இப்படி இயங்குகிறார்? உலகம் கெட்டு விட்டது வாருங்கள் போராடுவோம்....

என்றெல்லாம் இடைவிடாத சப்தங்கள், சப்தங்கள்....ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படியான கவனித்தல்களில் எமது மூளையின் செல்களை உலுப்பி விட்டு ஆழமாய் யோசித்து பார்க்கையில் " எல்லோருமே நல்லவர்களாய் இருக்கிறார்களே....? எல்லோருமே மனித நேயத்தைப் பற்றியும், சத்தியத்தையும், உண்மையைப் பற்றியும் பேசுகிறார்களே...? யார்தான் கெட்டவர்கள்" என்று எம்முள் எழுந்த கேள்விக்கு பதில்கள் கிடைக்காமல்...திணறத்தான் வேண்டியிருந்தது.

புறத்தில் மனிதத்தேவைகளை நாம் பூர்த்திச் செய்ய முயல்வதும், சமூக சேவைகள் மூலம் மனிதர்கள் ஒரு நல்ல நிலையை எய்தவேண்டும் எண்ணுவதும் நிஜமான புறத்தேவை அல்ல....அது ஒவ்வொரு மனிதனும் தனது தன்முனைப்பை (ஈகோ) சரி செய்து கொள்ள, தான் நல்லவன் என்று காட்டிக் கொள்ள, மேலும் தன்னை தானே திருப்திக் கொள்ளச் செய்யும் ஒரு நிகழ்வாகவே இன்றைய சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களும், இயக்கங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன என்பதை மனோதத்துவ ரீதியாக அறியவும் முடிந்தது.

கோடணு கோடி சூரியக் குடும்பங்களைக் கொண்ட இந்த அண்ட சராசரத்தில் இந்த எழுத்துக்களை எழுதிக் கொண்டிருப்பவன் ஒரு தூசு. தூசினை விட மிக நுணுக்கமான ஒரு துரும்பு. நான் என்னை திருப்தி செய்து கொள்வதற்காக உங்களுக்குப் போதிக்கிறேன் என்பதுதான் ஆழமான உண்மை என்றாலும் கூட....

மனிதர்களுக்கு புறத்தில் புகட்டும் பாடங்களால் மட்டுமே எந்த விதமாற்றத்தையும் உருவாக்கி விட முடியாது. மாற்றம் என்பது மனித மனங்களுக்குள் தன்னிச்சையாக நிகழ வேண்டிய ஒன்று. நாம் செய்யவேண்டியது எல்லாம் அப்படியான நிகழ்வு நிகழ எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் செய்வது. அப்படிச் செய்ய "தான்" என்ற அகங்காரம் தேவையில்லை, நான் திருத்தி விட்டேன் அல்லது திருந்த கூறிவிட்டேன் என்ற மமதை தேவையில்லை....மெளனமாய் மனிதர்களை சிந்திக்கவைக்க...உண்மைப் பொருளை உணரவைக்க, மனிதர்களின் உணர்வுகளை உள்நோக்கித் திருப்பி விட்டு....

தன்னைப் பற்றியும், தனது வாழ்க்கையைப் பற்றியும், எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்கிறோம்...? இடையில் ஏன் இவ்வளவு அல்லகள் என்பன போன்ற கேள்விகளை ஒவ்வொருவரும் தத்தம் புத்திகளுக்குள் தானே கேட்டுக் கொள்ளவேண்டும்...! இப்படி கேட்டு கேட்டு கேள்விகள் எல்லாம் மொத்தமாய் மறையும் போது பதிலாய் இவர்களுக்குள் பிறக்கும் உண்மையே ஒரு சரியான வழிகாட்டி.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது புத்திக்குள் ஒரு பறவை ஒன்று அக்னிக் குஞ்சாய் மெல்ல கண்விழித்து, பின் சிறகசைத்து, மெல்ல தத்தித் தத்தி வெளியே வந்து தடுமாறி நடந்து, பின் மெல்லச் மெல்ல சிறகடித்து எல்லைகளில்லா வானத்தில் பறக்க ஆரம்பித்தது.....

அந்தப் பறவைதான் கழுகு

கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு வலைத்தளமும் கழுகு குழுமமும் உருவாக்கப்பட்டதின் அடிப்படை நோக்கமே இதுதான். யாரும், யாருக்கும் நல்லது சொல்லி விட முடியாது. சூழலின் அடிப்படையில் நன்மை, தீமைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன....பொதுவான உண்மைகளை தத்தம் மனசாட்சிகளின் படி விளங்கிக்கொண்டு உதவுதலையும், தெளிவுகளை நோக்கி நகர்தலையும் உங்களின் இயல்பாக்கிக் கொண்டு சாட்சியாக நில்லுங்கள்....என்பதே கழுகின் கூற்றாக இருக்கிறது.

சமுதாயச் சிக்கல்களைத் தீர்க்க இந்தக் கணத்தில் நீங்களும் நானும் பொறுப்பான மனிதர்களாக மாறுவது இன்றியமையாததாகிறது. பொருள் இல்லாமல் அல்லல்படும் ஏழைகளுக்கு பொருளால் உதவுதல் என்பது ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை நாம் அறிந்திருக்கும் அதே நேரத்தில் அவர்களின் ஏழ்மைக்கு, தன்னைப் பற்றியும் தனது சமூக சூழல்கள் பற்றியும், கால ஓட்டத்தில் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் எப்படி தங்களை நிலை நிறுத்திக் கொள்வது என்பது பற்றியும் சரியான புரிதல் இல்லாமையே காரணம் என்பதையும் நாம் உணராமலில்லை...

நெப்போலியன் ஹில் என்னும் ஆங்கில எழுத்தாளர் தனது சக்ஸஸ் த்ரூ எ பாஸிட்டிவ் மென்ட்டல் அட்டிடியூட் என்ன்னும் புத்தகதில் ஒரு ஏழைத்தாய் தன் மகனான சிறுவனிடம் சொல்வது போலச் சொல்வார்....

" நாம் ஏழைகளாக இப்போது இருப்பதற்கு காரணம் கடவுள் அல்ல, நாம் இப்படி இருப்பதற்கு காரணம் நமது முன்னோர்கள் ஒரு போதும் செல்வந்தராய் வாழ ஆசையையும் அதற்கான உழைப்பையும் செய்ததே இல்லை. அதனால் இன்று நீ அப்படி ஆசை பட்டு உழைத்தால்....நாளை நாம் ஏழைகளாக இருக்க மாட்டோம்...."

இந்தப் புரிதலை தான் நாம் விழிப்புணர்வு என்கிறோம். செயல்களை செம்மையாக செய்யாமல் விதியை நொந்து என்ன பயன் என்று யோசித்துப் பாருங்கள்?

கல்வி இல்லாதா வீடு இருண்ட வீடு என்ற பாவேந்தர் கூறியிருக்கும் விடயத்தை கழுகு தனது மையக்கருத்தாய் கொண்டிருப்பதோடு கல்வி என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து படித்து காகிதங்களில் பட்டயம் பெரும் ஒரு நிகழ்வல்ல...கல்வி என்பது வாழ்க்கையினூடே நின்று எல்லா சூழல்களையும் கவனித்து உள்வாங்குதல் மற்றும் புதுப் புது விடயங்களைத் தேடி அறிதல் என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருக்கிறது.

கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு தளம் மற்றும் இதன் குழும உறுப்பினர்கள் யாரும் யாரையும் வலுக்கட்டாயப்படுத்தும் நிகழ்வுகள் இல்லாமல் அறிவுத் திணிப்புசெய்யாமல், ஆரவாரம் இல்லாமல் எம்மைச் சுற்றிலும் ஓராயிரம் மனிதர்களைச் மெளனமாய் சிந்திக்க வைத்திருக்கிறோம். இணையத்தை வாசிக்கும் எத்தனையோ மனிதர்களை நோக்கி எமது கருத்துக்கள் சென்று புத்திகளில் படிந்து கொண்டே இருக்கின்றன. இதன் மாற்றங்களையும் நாம் கவனிக்காமல் இல்லை...

கழுகு என்பது ஒரு அடையாளமே அன்றி அது ஒரு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் நிறைந்த ஒரு அடைபட்ட இடம் அல்ல. வெட்டவெளி வானில் எப்படி ஏகாந்தமாய் சிறகடித்து கழுகு பறக்கிறதோ அப்படியாக கழுகின் கருத்துக்களை பல்வேறு வடிவங்களின், பல்வேறு பெயர்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு மனிதர்கள் வழங்கலாம்...! அவர்கள் அனைவரையும் சேர்த்து உள்ளடக்கிய ஒரு உணர்வு திரட்சிதான் கழுகு...!

கழுகின் பக்கங்களை ஒரு முறை கண்களால் உரசிவிட்டுச் செல்பவர்களின் மூளைகளை எல்லாம் நெருப்பாய் கழுகு பற்றிக் கொள்ளத்தான் செய்யும். ஒன்று நாங்கள் செல்லும் வழிமுறை சரி என்று ஆதரித்து அதை பின்பற்றச் செய்யும் அல்லது இம்முறை தவறு என்று கூறி வேறு ஏதேனும் புதிய வடிவங்களில் சமூக விழிப்புணர்வையும் சேவைகளையும் மனிதர்களைச் செய்ய வைக்கும், செய்ய வைத்திருக்கிறோம்.

அறிவின் மாற்றங்களை யாராலும் சுட்டிக்காட்ட முடியாது அவை உணர்வுப் பூர்வமானவை. மாற்றங்கள உருவாவதற்கான காரணிகளை எம்மைச் சுற்றிலும் எதிர்ப்படும் மனிதர்களிடம் தவறாமல் நாம் விதைத்துக் கொண்டே இருக்கிறோம். செயலினைச் செய்து விட்டு விளம்பர பலகைப் பிடிக்கும் ஒரு மரபினை கழுகு கொண்டிருக்கவில்லை. நான் செய்தேன் என்று கூறுவதில் இருக்கும் அறியாமையை நாம் தெளிவாக உணர்ந்தே இருக்கிறோம்.

மாற்றங்களினால் விளையும் நன்மைகளின் பலன்களால் விடியப்போவது எமது சமுதாயத்தின் விடியல், பெறப்போவது எமது மக்களின் இன்னலில்லா வாழ்வு... என்ற மிகப் பரந்த நோக்கோடு சிறகு விரித்திருக்கும் கழுகு மற்றும் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களை, மனிதர்களை மற்றும் அமைப்புக்களை யாராலும் எக்காலமும் அழிக்க முடியாது.

சமூக நீதிக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் கழுகின் பிம்பங்களே...! கழுகு என்னும் உணர்வு குழுமமாக நின்றும், குழுமத்திற்கு வெளியேயும் பரவிக் கொண்டுதான் இருக்கும், இது தனிமனித விருப்பமில்லை....நன்மமையை விரும்பும், ஒட்டு மொத்த சமுதாயத்தின் தேடல்...!

நாம் விதைக்க நினைக்கும் விதை சில நேரங்களில் வாங்கும் நிலத்திற்கு ஏற்றார் போல பல நேரம் முளைத்து செழித்தும், சில நேரம் கருகி வளராமலும் போய் விடும். வளர்ந்த செடிகளுக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு, முளைத்து வராத நிலங்களை நாம் சப்தமில்லாமல் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறோம்...

காலங்கள் கடந்தும் எம் மனிதர்கள் இச்செயலை இப்புவியெங்கும் செய்து கொண்டேதான் இருப்பார்கள்....என்பது மட்டும் உறுதி.....!

பல முறை கழுகு பற்றி பேசியிருந்தாலும், மீண்டுமொருமுறை கழுகு பற்றி பேச இந்த தமிழ்மண மேடை எனக்கு உதவியிருக்கிறது...அதற்கு எனது பிரத்தியோகமான நன்றிகளைத் தெரித்துக் கொள்வதோடு ....

நெஞ்சார்ந்த என் உறவுகளுக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்...!

கழுகு பற்றி அறிய இங்கே அழுத்தவும்...!

கழுகு விவாதக் குழுவில் இணைய இங்கே அழுத்தவும்...!


தேவா. S


Comments

Greetings from Finland. A blog is nice to get to know people from other countries, culture and nature. Come and see the pictures you Teuvo kuvat- Teuvo images of my blog and tell all your friends to my blog. Will be the same with your country's flag to higher flag collection in my blog Teuvo Vehkalahti Finland
தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துகள் ஊர்ஸ்...!
ஹேமா said…
வாழ்த்துகள் தேவா.இதுதான் உங்கள் மேடை.அசத்துங்க தோழரே !
சூப்பர் அண்ணா செம போஸ்ட்....
நட்சத்திர பதிவரா மின்னுறீங்க வாழ்த்துக்கள் அண்ணா... :))
dheva said…
நன்றிகள் ஊர்ஸ்..!
dheva said…
ஹேமா @ நன்றிகள் ஹேமா!
dheva said…
செளந்தர் @ தேங்க்ஸ் தம்பி!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த