Skip to main content

இசையோடு இசையாக..தொகுப்பு 2 !




பிறப்பு மனித வாழ்வின் முதல் முடிச்சு. தாய் அந்த முதல் முடிச்சை சுமக்கும் ஜீவன். படைக்கும் சக்தியைக் கொண்டிருப்பவன் யாரென்ற விவாதத்தை தள்ளி வைத்து விட்டு படைப்புக்களை சுமக்கும் வரம் பெற்ற ஜீவன் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட மேன்மையானது, உன்னதமானது, புனிதமானது, நிறைவானது, கருணை நிறைந்தது...இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்....

அம்மா...

எத்தனை இரும்பு மனம் படைத்தவர்களும் ஒரு முறை உதடு பிரித்து உச்சரித்துப் பார்க்கட்டும் அம்மா என்ற ஒற்றை வார்த்தையை அந்த வார்த்தைக்குப் பின் இருக்கும் கருணை என்னவென்று தெரியும், ப்ரியம் என்னவென்று புரியும், நேசம் என்னவென்று  விளங்கும். பிரதிபலன் பார்க்காமல் ஒவ்வொரு உயிரையும் சுமக்கத் தொடங்கும் தாய்மை எப்போதும் போற்றுதற்குரியது.

என் அம்மா எனக்காய் என்னென்ன கஷ்டங்கள் பட்டிருப்பாள் என்பதை வார்த்தைகளாய் நான் அறிந்திருந்தாலும், என் பெரியம்மா மகளான என் அக்காவின் பேறு காலத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன். 7 மாதத்தில் வளைகாப்பு முடிந்து வந்ததிலிருந்து அவளின் அன்றாடங்களை நான் கவனித்து இருந்திருக்கிறேன். நடக்க முடியாது, ஒருபக்கம் ஒருக்களித்துதான் படுக்க முடியும், சட்டென்று எழ முடியாது வலது கையை ஊன்றி மெல்ல தடுமாறி எழ வேண்டும், வெளியே சொல்ல முடியாத வலிகளோடு, இயற்கை உபாதைகளை கழிப்பதும் மிக மிகக் கடினம் என்று அவள் கூறுவதை வலியாய் எனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்....

குறு குறுப்பாய் வயிற்றுக்குள் ஒரு குட்டி உயிர் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன் அசைவுகளைப் பார்த்து மிரண்டு போய் பெண்ணின் வலுவினையும், தைரியத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். ஒரு நடு இரவில் உண்ட உணவு செரிக்காமல் அவள் நெஞ்சை தடவிக் கொண்டிருக்கையில்,  மெல்ல எழுந்து போய் ஆச்சரியமாய் பார்த்திருக்கிறேன்..! அவள் யாரையும் எழுப்ப விரும்பவில்லை இது அவளின் வலி...அவளின் தேவை, அவளின் சுமை, அவளே சுமக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஆரம்ப நிலைகளில் தாயே எப்போதும் உடனிருக்கிறாள்.

அவ்வப்போது அவளுக்கு விக்கல் கூட வரும் ஒவ்வொரு விக்கலிலும் வயிறு இழுத்துக் கொண்டு மேலெழும்பி கீழே வரும், உள்ளே இருக்கும் குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாது என்று அவள் பயந்திருக்கிறாள்...

வலி, வலி, வலி....இந்த வலியை எல்லாம் தாங்கிக் கொண்டு தன்னுள் ஒரு உயிரினைச் சுமந்து மெளனமாய் எல்லாம் தாங்கி ஒவ்வொரு பெண்ணும் இந்த இடத்தை கடக்கிறாள். பிரசவ வலி என்னவென்று ஒரு பெண்ணாய் உணராத வரைக்கும் ஒரு ஆணுக்கு அதைப் பற்றிய புரிதல் கண்டிப்பாய் வர முடியாது. 

இடுப்பு வலி எடுத்து, தண்ணீர் குடம் உடைந்து, இடுப்பெலும்புகள் மெல்ல விரிந்து கொடுக்க ஒரு பிரசவம் நிகழும் கணம் இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம்.....எத்தனை வலியோடு, எத்தனை சிரத்தையோடு ஒரு பிள்ளையை தவமிருந்து பெற்றெடுக்கிறாள் ஒரு தாய், அவளின் நிறைவுதான் என்ன? என்று ஒரு சிறு கேள்வியை ஒரு தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

பிள்ளை பிறந்த நொடியில் மயக்கமாயிருந்தாலும், மயக்கம் தெளிந்து தன் மகனையோ அல்லது மகளையோ காணும் அந்த நொடியில் அவளின் வலிகள் எல்லாம் மறைந்து உலகத்தில் எந்த ஜீவராசிகளும் பெறமுடியாத ஒரு திருப்தியை முழுமையை ஒரு பெண் பெறுகிறாள். தாய்மை என்னும் உன்னத நிலையை அடைகிறாள்.

ஆன்மீக வரலாற்றில் கூட பெண்கள் தனியே தியானம் என்றோ, முக்தி என்றோ, முழுமை என்றோ, ஞானி என்றோ அதிகம் தனித்து விவரிக்கப்படுவது இல்லை. காரணம்....ஒரு ஆணுக்குத்தான் முழுமையடைய ஓராயிரம் வழிமுறைகளும், தேடல்களும் தேவைப்படுகின்றன ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடைந்து தன்பிள்ளையை பிரசவிக்கும் கணத்தில் பிரபஞ்சப் புரிதலை தன்னையறியாமலேயே புரிந்து அவள் தன்னிச்சையான முக்தி நிலையை,ஞான நிலையை எய்தி விடுகிறாள். 

தாய்மை என்பது உணர்வு நிலை. இளகு தன்மை. நேசிப்பின் உச்சம். வலிகளை தாங்கும் உத்வேகம். பிரபஞ்ச சுற்றினை முழுமையடைய வைக்க இந்த குணங்கள் உதவுகின்றன. ஒரு குழந்தையை சுமந்து வலிகளை தாங்கி அதைக் கடந்து வருகையில் ஒரு பெண் அதை எளிதில் எட்டி விடுகிறாள். இது இல்லாமலும் தாய்மை என்னும் உணர்வு நிலையை எல்லோராலும் அடைய முடியும்...ஆனால் அதற்கு உயரிய புரிதலும், அனுபவமும், தெளிவும் வேண்டும்.

மரணத்தின் உச்சம் தொட்டு ஒரு பிறப்பைக் கொடுக்கும் போது அது மிகப்பெரிய அனுபவமாகி அது தாயாகிறது. காலப்போக்கில் புறச்சூழல்கள் இவற்றை மறக்கடித்தாலும் இதன் மையத்தை எப்போதும் ஏந்திக் கொண்டுதான் ஒவ்வொரு பெண்ணும் இருக்கிறாள்.

ராஜா சாரின் இந்தப்பாடல் கூட தாய்மை நிரம்பியதுதான். புரிதலும் தெளிவும் கொண்ட அதிர்வுகளைப் நாதப் பெருவெளியில் இருந்து பிரித்து எடுத்து ஸ்வரங்களாக்கி, ஏற்ற இறங்களை கூட்டிக்குறைத்து அற்புதமான இசையைப் பிறப்பித்திருக்கும் ராஜாசார் தாய்மை நிரம்பியவர்தான். தாய்மை என்பது உருவமல்ல அது அனுபவங்களும் புரிதலும் கொண்ட உணர்வு நிலை என்று இந்தப்பாடல் தெளிவாகவே சொல்லும்..

வார்த்தைகளைக் கடந்து, ஜேசுதாஸின் தெய்வீகக் குரலோடு இந்த இசை கூட்டிச் செல்லும் தூரத்திற்கு கண்களை மூடிக் கொண்டு பயணித்துப் பாருங்கள்...நீங்களும் தாய்மை என்னும் உணர்வு நிலையை உணரக் கூடும்..!



தேவா. S


Comments

மனதை நெகிழ வைத்த அற்புதாமன பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
அருமையான பதிவு........அனுபவ வரிகள் .தொடருங்கள்.......
ta.ma.5
ஹேமா said…
ஒரு ஆணாலும் நிச்சயமாய் உணரமுடிகிறது தாய்மையின் உணர்வை வலியை.அற்புதம் தேவா !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல